புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 February 2020

புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா பெப்ரவரி 08

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 8)

✠ புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா ✠
(St. Josephine Margaret Bakhita)

சூடானில் பிறந்த முன்னாள் அடிமைப்பெண்/ கனோஸ்ஸியன் சபை அருட்சகோதரி:
(Sudanese-born Former Slave/ Canossian Religious Sister)

பிறப்பு: கி.பி. 1869
ஒல்கொஸ்ஸா, டர்ஃபுர், சூடான்
(Olgossa, Darfur, Sudan)

இறப்பு: ஃபெப்ரவரி 8, 1947
ஸ்ச்சியோ, வெனேடோ, இத்தாலி குடியரசு
(Schio, Veneto, Republic of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: மே 17, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 8

பாதுகாவல்:
சூடான்
(Sudan)

புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, சூடான் நாட்டில் பிறந்த ஒரு முன்னாள் அடிமைப்பெண்ணும், பின்னர், "கனோஸ்ஸியன் அருட்சகோதரிகள்" (Canossian Religious Sister) சபையின் உறுப்பினராக இத்தாலியில் வாழ்ந்து, பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை:
கி.பி. 1869ம் ஆண்டு, “மேற்கத்திய சூடான்” (Western Sudanese Region) நாட்டின் "டர்ஃபுர்" (Darfur) பிராந்தியத்தின் “ஒல்கொஸ்ஸா” (Olgossa) கிராமத்தில் பிறந்த ஜோசஃபின், ஒரு வசதியான - கௌரவமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அன்புமிக்க மூன்று சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் பிறந்த இவர், கஷ்டம் என்றாலே என்னவென்று அறியாமல் வளர்ந்தார்.

இவருக்கு சுமார் எட்டு வயதாகையில், கி.பி. 1877ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இவர் அரேபிய அடிமை வர்த்தகர்களால் கடத்தப்பட்டார். இவர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவரது மூத்த சகோதரியையும் கடத்தியிருந்தனர். மிகவும் குரூரமான முறையில், சுமார் 960 கிலோமீட்டர் தூரம் வெறும் கால்களுடன் "இய் ஒபேய்ட்" (El Obeid) என்ற நகரம் நோக்கி நடக்க வைக்கப்பட்டார். அந்நகரத்துக்கு சேரும்முன்னேயே அவர் இரண்டு தடவை விற்கப்பட்டார். அடிமையாக இருந்த சுமார் பன்னிரண்டு வருட காலத்தில் மீண்டும் மீண்டுமாக மூன்று முறை அவர் விற்கப்பட்டார். அவருக்கு நேர்ந்த கடத்தல்களும், அதன் காரணமான அதிர்ச்சிகளும், அவரது சொந்த பெயரைக் கூட அவர் மறக்க காரணமாயின. எதோ ஒரு அடிமை வியாபாரி அவருக்கு இட்ட பெயரான "பகிட்டா" (Bakhita) என்ற பெயரையே அவரும் தேர்ந்துகொண்டார். "பகிட்டா" (Bakhita) என்றால் அரபு மொழியில் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தமாம். ஜோசஃபின் வலுக்கட்டாயமாக இஸ்லாம் (Islam) மதத்துக்கும் மாற்றப்பட்டார்.

அடிமை வாழ்க்கை:
"இய் ஒபேய்ட்" (El Obeid) நகரில் ஜோசஃபின் ஒரு பணக்கார அரேபியரால் அடிமை வர்த்தகர்களிடமிருந்து வாங்கப்பட்டார். அவர் அங்கே அரேபியரின் இரண்டு மகள்களுக்கு சேவை செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார். அவர்கள் பகிட்டாவை நல்ல முறையில் கவனித்தனர். ஆனால், ஒரு தடவை குவளையொன்று உடைந்து போன ஒரு காரணத்துக்காக, அந்த அரேபியனின் மகன்களில் ஒருவன் பகிட்டாவை மிகவும் மோசமாக அடித்து உதைத்து துன்புறுத்தினான். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகிட்டா, ஒரு மாதத்துக்கும் மேலாக தமது வைக்கோல் படுக்கையிலிருந்து நகர இயலாமலிருந்தார்.

நான்காவது தடவியாக, இவரை ஒரு துருக்கிய இராணுவ அதிகாரி (Turkish General) வாங்கினார். இவர் தமது மனைவி மற்றும் மாமியாருக்கு சேவை செய்ய பகிட்டாவை நியமித்தார். இவரது மனைவியும், மாமியாரும் பகிட்டாவுக்கு செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. தாம் அந்த வீட்டிலிருந்த வருடங்களில், அடியோ காயமோ படாமல் கழிந்த ஒருநாளைக் கூட என்னால் நினைவு படுத்தி பார்க்க இயலவில்லை என்று ஜோசஃபின் கூறுகிறார். சாட்டை அடியால் பட்ட ஒரு காயம் ஆற ஆரம்பிக்கும் முன்னேயே அடுத்த காயம் வந்துவிடும் என்கிறார்.

தமக்கு நேர்ந்த மிகவும் திகிலூட்டும் சம்பவத்தை ஜோசஃபின் பின்வருமாறு விவரிக்கிறார்:
உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை அமைத்து தமது எஜமானியரிடம் காண்பிப்பது இவரது அன்றாட பணிகளுள் ஒன்று. வேறொரு அடிமைப்பெண் ஒரு கிண்ணத்தில் வெண்ணிற மாவும், மற்றொரு கிண்ணத்தில் உப்புத்தூளும், மிகவும் கூரிய (பிளேடு) போன்ற கத்தியும் கொண்டு வருவார். பகிட்டா, வெண்ணிற மாவினால் தம் உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை வரைவார். உடனே கூறிய கத்தியால் மாவு கோலங்களின் கோடுகள் மீது ஆழமாக கீறுவார். இரத்தம் வெளியேறும் முன்னேயே, ஆழமான தழும்புகளுக்காக உப்புத் தூளை அதில் நிரப்ப வேண்டும். ஜோசஃபினின் உடம்பில் மார்பகங்கள், வயிறு, மற்றும் வலது கரத்தில் மொத்தம் 114 சிக்கலான வடிவங்கள் இருந்தன.

கி.பி. 1882ம் ஆண்டின் இறுதியில் "இய் ஒபேய்ட்" (El Obeid) நகரம் "மாஹ்டிஸ்ட் புரட்சியாளர்களின்" (Mahdist Revolutionaries) தாக்குதலுக்கு உட்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன்காரணமாக, நகரை விட்டு குடும்பத்துடன் கிளம்பிய துருக்கிய இராணுவ அதிகாரி, பத்து அடிமைகளை மட்டும் தம்முடன் வைத்துக்கொண்டு பிறரை அங்கேயே விற்றுவிட்டான். தம்முடனிருந்தவர்களை வழியில் விற்றுவிட முடிவு செய்திருந்தான். கி.பி. 1883ம் ஆண்டு, பகிட்டாவை இத்தாலிய நாட்டின் பிரதிநிதியான (Italian Vice Consul) "கல்லிஸ்டோ லெக்னானி" (Callisto Legnani) என்பவர் வாங்கினார். அவர் பகிட்டாவை மிகவும் பிரியமாகவும் கௌரவமாகவும் நடத்தினார்.

இரண்டு வருடங்களின் பின்னர் "கல்லிஸ்டோ லெக்னானி" இத்தாலி திரும்ப முடிவெடுத்தபோது, பகிட்டா தாமும் அவருடன் வருவதாக கெஞ்சினார். கி.பி. 1884ம் ஆண்டின் இறுதியில், "அகஸ்டோ மிச்சியெலி" (Augusto Michieli) என்ற நண்பரின் உதவியால் முற்றுகையிடப்பட்டிருந்த "கார்ட்டும்" (Khartoum) நகரிலிருந்து அவர்கள் தப்பிச் சென்றார்கள். 650 கி.மீ. தூரம் ஒரு ஒட்டகத்தின்மீது ஆபத்தான பயணம் செய்து, அப்போதைய சூடான் நாட்டின் துறைமுக நகரான "சுவகின்" (Suakin) சென்றடைந்தனர். கி.பி. 1885ம் ஆண்டு, மார்ச் மாதம், அங்கிருந்து கிளம்பி ஏப்ரல் மாதம், இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவா (Genoa) சென்றடைந்தனர். அவர்கள் அங்கே "அகஸ்டோ மிச்சியெலியின்" மனைவி "சிக்னோரா மரியா டுரினா மிச்சியெலியை" (Signora Maria Turina Michieli) சந்தித்தனர். "கல்லிஸ்டோ லெக்னானி" பகிட்டாவை "சிக்னோரா மரியாவிடம்" கையளித்தார்.

பகிட்டா தமது புதிய எஜமானருடன் அவரது இருப்பிடமான "ஸியானிகோ" (Zianigo) சென்றார். அங்கே மிச்சியெலியின் புதிதாய் பிறந்த குழந்தை "அலைஸுக்கு" (Alice) செவிலித்தாயாக மூன்று வருடம் பணிபுரிந்தார். மிச்சியெலி இத்தாலி திரும்புவதன் முன்னர், ஒன்பது மாதங்களுக்காக பகிட்டாவையும் தம்முடன் சூடான் அழைத்து வந்தார்.

கத்தோலிக்க மனமாற்றமும் சுதந்திரமும்:
சூடான் நாட்டின் "சுவக்கின்" (Suakin) முற்றுகையிடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னமும் "ஆங்கிலோ-எகிப்தியர்களின்" (Anglo-Egyptian) கைகளிலேயே இருந்தது. "அகஸ்டோ மிச்சியெலி" அங்கே ஒரு பெரிய ஓட்டலை வாங்கினார். அவர் இத்தாலியிலுள்ள தமது மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு தமது குடும்பத்துடன் சுவக்கினில் தங்கிவிட முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அவரது மனைவி சிக்னோரா அவர்களது "ஸியானிகோ" இல்லத்தை விற்றுவிட்டார். மீதமுள்ள சொத்துக்களை விற்குமுன் அவர் தமது கணவரை காண சுவக்கின் சென்றார். செல்லுமுன் தமது குழந்தையையும் பகிட்டாவையும் “வெனிஸ்” (Venice) நகரிலுள்ள "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" (Canossian Sisters) பாதுகாப்பில் விட்டுச் சென்றார்.

சுவக்கினிலிருந்து திரும்பிய சிக்னோரா, பகிட்டாவுடன் தமது குழந்தையை அழைத்துச் செல்ல வந்தார். பகிட்டா அங்கிருந்து வெளியேற தீர்க்கமாக மறுத்துவிட்டார். மூன்று நாட்கள் முழுதாக அன்பாகவும், அதட்டியும், மிரட்டியும், முயற்சித்த சிக்னோரா தோற்றுப்போனார். "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" தலைமைச் சகோதரி, பிரச்சினையை இத்தாலிய அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று புகார் செய்தார். கி.பி. 1889ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் தேதி, இத்தாலிய நீதிமன்றமொன்று, ஏற்கனவே பிரிட்டிஷ் அடிமைத்தளைக்கு தடை விதிக்குமாறு சூடான் நாட்டை தூண்டிஇருந்தது. அத்துடன், இத்தாலி நாட்டில் அடிமைகளுக்கு அங்கீகாரம் கிடையாது. ஆகவே பகிட்டா அடிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

தமது வாழ்க்கையில் முதன்முதலாக சுதந்திரத்தை பகிட்டா அனுபவித்தார். அவர் "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையிலேயே" இருக்க விரும்பினார். கி.பி. 1890ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஒன்பதாம் நாள், பகிட்டா, "ஜோசஃபின் மார்கரெட் மற்றும் ஃபோர்டுனடா" (Josephine Margaret and Fortunata) ஆகிய பெயர்களுடன் திருமுழுக்கு பெற்றார். “வெனிஸ் பேராயர்-கர்தினால்” (Cardinal Patriarch of Venice) "ஜியுசெப் சர்டோ" (Giuseppe Sarto) (எதிர்கால திருத்தந்தை பத்தாம் பயஸ் - Future Pope Pius X) அவர்களது திருக்கரங்களால் உறுதிப்பூசுதலும் புதுநன்மையும் பெற்றார். 

கனோஸ்ஸியன் அருட்சகோதரி:
ஜோசஃபின் கி.பி. 1893ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஏழாம் நாள், "கனோஸ்ஸியன் சகோதரியர் துறவற" சபையில் இணைந்தார். கி.பி. 1896ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் நாள், தமது பிரமாணங்களை ஏற்றார். அவர் இத்தாலியின் வடக்குப் பிராந்தியமான "விசென்ஸாவின்" (Vicenza) "ஸ்ச்சியோ" (Schio) என்னுமிடத்திலுள்ள கனோஸ்ஸியன் பள்ளியில் சேவை செய்ய பணிக்கப்பட்டார். அவர் தமது மீதமிருந்த வாழ்நாள் முழுவதும் அங்கேயே செலவிட்டார். ஜோசஃபின் அங்கிருந்த 42 வருடங்களும் ஒரு சமையல்கார பெண்ணாகவும், தேவாலயத்தில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவராகவும், சுமை சுமப்பவராகவும், காவல்காரராகவும், வாயிற்காக்கும் பெண்ணாகவும், உள்ளூர் சமூகத்தினரிடம் அடிக்கடி தொடர்புகொள்ளும் பணியையும் செய்தார். இவ்வருட்சகோதரியின் மேன்மையான மென்மை, அமைதியான குரல் மற்றும் அவரது வதனத்திலே தங்கிவிட்ட நிரந்தர புன்னகை ஆகியன, அவரை “விசென்ஸா” (Vicenza) நகர மக்களுடன் நீக்கமற இணைத்தன. இந்நகர மக்கள் இன்றளவும் இவரை “சின்னஞ்சிறு பழுப்பு சகோதரி” (“Sor Moretta” - Little Brown Sister) என்றும், “கருப்பு அன்னை” ("Madre Moretta" - Black Mother) என்றும் குறிப்பிடுகின்றனர்.

கடவுளால் அருளப்பட்ட கொடையான இவருடைய அதிர்ந்து பேசாத சிறப்பும், புனிதமான புகழும், இவர் சார்ந்திருந்த துறவற சபையால் குறிக்கப்பட்டது. கி.பி. 1931ம் ஆண்டு வெளிவந்த அவரது சுயசரிதம் தொடர்பான பதிப்பு அவரது புகழை இத்தாலி முழுதும் பரவச் செய்தது. இரண்டாம் உலகப்போரின்போது, (கி.பி. 1939–1945) நகர மக்களின் பயத்தை போக்க ஆறுதலாக இருந்தார். நகர மக்கள் இவரின் அருகாமை, ஒரு புனிதரின் பாதுகாப்பாக உணர்வதாக கூறினர். "ஸ்ச்சியோ" (Schio) நகரமும் குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போர், ஒரு விபத்தோ அல்லது எவருக்கேனும் ஒரு காயமோ இன்றி கடந்து போனது.

ஜோசஃபினுடைய இறுதி ஆண்டுகள் நோயாலும், வேதனையாகவும் இருந்தன. அவர் ஒரு சக்கர நாற்காலியை உபயோகித்தார். ஆனால் எப்போதும் புன்முறுவலுடன் இருந்தார். எப்படி இருக்கிறீர்கள் என்று யார் கேட்டாலும் புன்முறுவலுடன் "இறைவனின் விருப்பப்படி" (As the Master’s desires) என்றே பதிலளிப்பார்.

அவரது இறுதி மணித்துளிகளில் அவர் தமது ஆரம்ப கால அடிமை வாழ்க்கையை நினைத்து மிகவும் வருந்தினார். "சங்கிலிகள் மிகவும் இறுக்குகின்றன, கொஞ்சம் தளர்த்துங்களேன்" என்று சொல்லி அழுதார்.

எவரோ ஒருவர், "இன்று சனிக்கிழமை; எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு ஜோசஃபின், "ஆமாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; என் அன்னையே, என் அன்னையே" என்றார். அவரிடமிருந்து கேட்ட இறுதி வார்த்தைகள் இவையே ஆகும்.

1947ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, இரவு 8:10 மணிக்கு, ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, நித்திய வாழ்வில் சயனித்தார். அன்னாரது பூவுடல், மூன்று நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

"சிறு வயதில் உங்களை கடத்தியவரகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?" என்று, ஒருமுறை, ஒரு இளம் மாணவன் ஜோசஃபினை நோக்கி கேட்டான்.
சிறிதும் தயங்காமலும் யோசிக்காமலும் ஜோசஃபின் கூறிய பதில்:
“என்னை கடத்தியவர்கள் மட்டுமல்லாது, என்னை துன்புறுத்தி வதைத்தவர்களையும் நான் காண நேரிட்டால், நான் அவர்கள் முன்னே முழங்கால்படியிட்டு, அவர்களின் கரங்களைப் பற்றி முத்திசெய்வேன். இவைகள் என் வாழ்வில் நிகழ்ந்திராவிடில், நான் இன்று ஒரு கிறிஸ்தவளாகவோ, மறைப்பணியாளாகவோ ஆகியிருக்க மாட்டேன்!"

தூய ஜெரோம் எமிலியானி (பிப்ரவரி 08)

இன்றைய புனிதர் : 
(08-02-2020) 

தூய ஜெரோம் எமிலியானி (பிப்ரவரி 08)

நிகழ்வு

வெனிஸ் நகரை மீட்பதற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடிய ஜெரோம் போரின்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டு கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அதுவரைக்கும் உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்த ஜெரோம் சிறையில் தனிமையாக இருந்த நேரங்களில் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்; தன்னுடைய மனதை ஆண்டவருக்ககாத் திறந்துவைத்தார்; அன்னை மரியாவிடம் அளவுகடந்த பக்தி கொள்ளத் தொடங்கினார்.

ஒருநாள் அவர் அன்னை மரியாவிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை அவருக்குக் காட்சி தந்து, அற்புதமாக அவரை சிறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டுபோய் நிறுத்தினார். தன்னுடைய வாழ்க்கையே சிறையில் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த ஜெரோமிற்கு அன்னை மரியாவின் இவ்வுதவி பேருதவியாக அமைந்தது. அன்றிலிருந்தே அவர் இறைவனுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

ஜெரோம் எமிலியானி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் 1481 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் எல்லா இளைஞர்களையும் போன்று உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது தான் வெனிஸ் நகரை எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக இராணுவத்தில் ஆட்கள் எடுக்கும் வேலை நடந்தது. ஜெரோம் எமிலியானியும் இராணுவத்தில் சேர்ந்து வெனிஸ் நகரை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எதிரிகளால் கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் அவர் அன்னை மரியாவினால் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டார். இறைவனின் அருளால் தான் சிறையிலிருந்து மீட்கப்பட்டதால், இறைவனுக்கே தன்னுடைய வாழ்வை முழுதாய் அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் தென் வெனிசில் கொள்ளை நோய் ஏற்பட்டது. அந்நோயினால் ஏராளமான பேர் உயிரிழந்தார்கள். ஜெரோம் எமிலியானியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுப்பதுமாய் இருந்தார். மட்டுமல்லாமல் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதுமாய், பெற்றோர்கள், உற்றார் உறவினர்களை இழந்து தவித்த குழந்தைகளுக்கு தன்னுடைய இல்லத்தில் ஆதரவு தந்து அவர்களைப் பராமரித்து வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அவருடைய புகழ் ஓங்கியது.

கொள்ளைநோயின் தாக்குதல் முற்றிலுமாக ஓய்ந்தபின்னும் கூட ஜெரோம் எமிலியானி தன்னுடைய இரக்கச் செயல்களை நிறுத்தவில்லை. நகரின் பல்வேறு பகுதிகளில் அனாதை இல்லங்களைத் திறந்துவைத்து ஆதரவற்றோருக்கு பேராதரவாய் விளங்கினார். 1531 ஆம் ஆண்டு அவர் தன்னோடு மேலும் இரண்டு குருக்களை சேர்த்துக்கொண்டு ‘Company of the servants of the Poor’ என்னும் சபையை நிறுவினார். இதன்மூலம் அவர் ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், அதாரவற்ற, நோய்வாய்ப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு இல்லங்கள் திறந்து அவர்களுக்கும் சேவைகள் செய்து வந்தார். இப்படி அவர் பணிசெய்துகொண்டிருக்கும்போதுதான் நோயினால் தாக்கப்பட்டு 1537 ஆம் ஆண்டு உயிரழ்ந்தார்.

ஏழைகளின் ஏந்தலால், நோயிற்றோருக்கு அருமருந்தாய் விளங்கிய ஜெரோம் எமிலியானி 1928 ஆம் ஆண்டு புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழை எளியவர்மீது அக்கறை

தூய ஜெரோம் எமிலியானியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவர் ஏழை எளியவர், நோயாளிகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும்தான். அவரிடமிருந்த அதே அன்பும் அக்கறையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைய உலகம் ஏழை எளியவர்களை, நோயாளிகளை இழிவானவர்களாக கருதுகின்ற ஒருநிலைதான் இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசுவும் நம் புனிதர் ஜெரோம் எமிலியானியும் இவர்களுக்குத் தான் கடவுளின் அன்பும் அக்கறையும் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் வழியில் நடக்கின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர்களுக்கு நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம், “ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன்கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தருகின்றார்” என்று. ஆம், நாம் ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கின்றபோது இறைவன் நமக்கு தக்க உதவி செய்வார் என்பது உறுதி.

அந்த நகரில் பிரபல மருத்துவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும். அப்படியிருந்தாலும் அவர் தன்னிடம் வரக்கூடிய எல்லா நோயாளிகளிடமும் எந்தவொரு பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்து வந்தார். இதனால் அவரை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகப் போனதே ஒழிய, ஒருபோதும் குறையவில்லை. இதற்கிடையில் அவருக்கு வயது கூடிக்கொண்டே போனதால் எல்லாருக்கும் மருத்துவம் செய்ய முடியாமல் போனது.

ஒருநாள் இரவு அவர் அசதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது தொலைபேசி மணி ஒலித்தது. அவர் அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் ஓர் ஆண் குரல் கேட்டது. மருத்துவர் அந்த மனிதரிடம் பேசியதிலிருந்து புரிந்துகொண்டது அவருக்கு தலைவலி என்பதும் அவர் கொஞ்சம் வசதியானவர் என்பதுதான். உடனே மருத்துவர் அவரிடம், “ஐயா என்னால் படுக்கையில் இருந்து எழமுடியாத சூழல். மேலும் உங்களால்தான் வேறு ஒருத்தவரிடம் சென்று மருத்துவ உதவிபெற போதிய பணம் இருக்கின்றது அல்லவா. அதனால் சிரமம் பார்க்காமல் இன்னொரு மருத்துவரைப் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்று தொலைபேசியை வைத்துவிட்டார். தொலைப்பேசியை வைத்தபின்னர் தன்னுடைய இயலாமையை நினைத்துப் பெரிதும் வருந்தினார்.

தனக்கு முடியாத சூழலிலும் எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்த அந்த மருத்துவர் உண்மையிலே நம்முடைய பாராட்டுக்குரியவர். நாமும் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகள், அனாதைகள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவர், நோயாளிகள்மீது உண்மையான அக்கறை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

07 February 2020

பிப்ரவரி -07 புனித ஜூலியானா ஃபால்கோனியேரி

பிப்ரவரி -07 
புனித ஜூலியானா ஃபால்கோனியேரி
உடல் நோய் உள்ளவர்களுக்குப் பாதுகாவலர்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி. 11:26)
வானதூதர் மங்கள வார்த்தையை உரைத்ததன் நினைவாக பிளாரன்ஸ் நகரில் ஆலயம், எழுப்பிய சியாரிசிமோ மற்றும் ரிகுர்டாடா ஃபால்கோனியேரி தம்பதியினருக்கு அவர்களின் முதுமைக் காலத்தில் 1270-ஆம் ஆண்டு இந்த மகள் பிறந்தார் .இவர்களது குடும்பம் பிளாரன்ஸ் நகரின் மதிப்பு மிக்க குடும்பமாகும்.
மகிழ்வுடன் தம் சிறுவயதைக் கழித்த ஜூலியானா தன்னுடைய இளவயதில் தந்தையை இழந்தார் .இருப்பினும், மற்ற யுவதிகளைப் போல உலக நாட்டங்களில் ஈடுபாடு கொள்ளாமல் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். திருமணத்திற்குத் தாய் ஏற்பாடு செய்தபோதும் மறுத்தார் .15 வயது நடைபெற்றபோது அருள்சகோதரியாகி பணியாற்ற விருப்பம் கொண்டார் .தமது மகளை விட்டுப் பிரிய மனமில்லாத தாய் இதனை விரும்பவில்லை.

தாய்க்குக் கீழ்ப்படிதலுடன் இருந்த ஜூலியானா தமது பெரியப்பாவிடம் தன் அழைத்தலைக் கூறினார். தூய மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு பேரில் ஒருவரான புனித அலெக்சிஸ் தனது தம்பி மகனின் ஏக்கத்தைப் போக்க அவள் தாயிடம் பேசினார். பேசி தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை போல வீட்டிலேயே துறவியாக இருப்பது என்று முடிவுக்கு வந்தார்கள் .அதன் படி துறவிக்கு உரிய உடை அணிந்து வீட்டிலேயே இறைவனின் அன்புப் பிள்ளையாக ஜூலியானா வாழ்ந்தார். தாயும் மகளும் ஒருவருக்கொருவர் ஆன்ம வழிகாட்டிகளாகவும் நல்ல தோழிகளாகவும் வாழ்ந்து மகிழ்ந்தார்கள்.  

திடீரென்று 1304 ஆம் ஆண்டு தாய் இறந்ததும் தனது உற்ற தோழியைப் பிரிந்த துயரை ஜூலியானா அனுபவித்தார் .கவலை மறைய வேறொரு வீட்டில் குடியேறினார் .தூய மரியின் ஊழியர் சபையின் பணி நோக்கத்தை தமது வாழ்வில் செயல்படுத்தி, இறைவனின் அன்பைப் பிறருக்கு தமது வாழ்வால் வாழ்ந்து காட்டிய ஜூலியானா மீது பலர் நேசம் கொண்டனர். தங்களை இவருடன் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து தூய மரியின் ஊழியர் சபை பெண்கள் பிரிவை, மூன்றாம் சபையாக ஆரம்பித்தார்.
சபையின் முக்கிய நோக்கங்களாக,"இரக்கச் செயல்பாடுகள், தாராளமாக உதவுதல் , செப வாழ்வு, நற்செய்தியின்படி வாழ்தல்" என்பதாக வடிவமைத்தார். எழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஏழைகளிலும் ஏழைகளின் மீது அன்பு காட்டினார் .வசதியுள்ளவர்களுக்கு மட்டும் மற்றவர்கள் காட்டிய நெயத்தை இவர்களுக்கும் வெளிப்படுத்தினார். இதனால் பலர் இவருடன் சேர்ந்தார்கள் .35 ஆண்டுகளாக ஜூலியானா வைத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து பணி, ஒறுத்தல் முயற்சிகளால் ஜூலியானா உடல்நலமுற்றார் .சாப்பிட முடியாதபடி, நற்கருணை பெற முடியாதபடி மிகவும் பாதிக்கப்பட்டார். இயேசுவின் திருவுடலைப் பெற முடியாதமைக்யாக வருந்தினார் .தான் இறக்கப் போகும் நேரம் வந்தவுடன் திருப்பலி நிறைவேற்ற வந்த குருவிடம் நற்கருணையை தமது நெஞ்சின் மேல் வைக்கச் சொன்னார். குருவும் இசைந்தார். வைத்தவுடன் அற்புதமாக நற்கருணை மறைந்தது.
மிகுந்த சிலுவையிணை அனுபவித்த பிறகு, 1341 ஜூன் 12 அன்று தமது 71 ஆம் வயதில் ஜூலியானா இறைவனடி சேர்ந்தார். இறந்த பிறகு இவரின் நெஞ்சின் மீது நற்கருணையில் உள்ள சிலுவை அடையாளம் பதிந்திருந்ததை அருள் சகோதரிகள் பார்த்து ஆண்டவரைப் புகழ்ந்தார்கள். திருத்தந்தை 11 ஆம் இன்னொசென்ட் 1678, ஜூலை 26 அன்று அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை 12-ஆம் கிளமென்ட் 1737 ஜுன் 16 அன்று புனித நிலைக்கு உயர்த்தினார் .இவர் நற்கருணைப் புனிதர் என அழைக்கப்படுகிறார்

நற்கருணை ஆண்டவரின் நல்லாசி பெற்று நலிந்தோருக்கு உதவுகிறவர்கள் நாளெல்லாம் இறையருள் பெறுகிறார்கள்.

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 07-02-2020

இன்றைய புனிதர் : 
(07-02-2020) 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX

பிறப்பு 13 மே 1792,செனிகாலியா Senigallia, இத்தாலி

இறப்பு 7 பிப்ரவரி 1878, உரோம்

முத்திபேறுபட்டம் : 1907, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம் : திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இவர் "மக்களின் பணியாளர்" என்றழைக்கப்பட்டு, மறைப்பணியா ற்றினார். பின்னர் இவர் மக்களின் தூதுவராக சிலே Chile நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்குச் சென்ற சில ஆண்டுகளிலே ஸ்போலேட்டோ என்ற மறைமாவட்டத்திற்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1833 ஆம் ஆண்டு இமோலாவிற்கு Imola பேராயராக அனுப்பப்பட்டார். 1840 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 16 ஜூன் 1846 ஆம் ஆண்டு 9 ஆம் பயஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார்.

இவர் மிகப் பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொண்டார். இவர் வாழும்போதே, புனிதராகப் புகழப்பட் டார். இவர் வாழ்ந்தபோது பல நோயாளிகளை குணமாக்கியுள் ளார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற் றிய இவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 7)

✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠
(Blessed Pius IX)

255வது திருத்தந்தை:
(255th Pope)

பிறப்பு: மே 13, 1792
செனிகல்லியா, மார்ச்சே, திருத்தந்தை நாடுகள்
(Senigallia, Marche, Papal States)

இறப்பு: பெப்ரவரி 7, 1878 (வயது 85)
திருத்தூதரக அரண்மனை, ரோம் நகரம், இத்தாலி
(Apostolic Palace, Rome, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 3, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

"ஜியோவன்னி மரிய மஸ்டாய் ஃபெர்ரெட்டி" (Giovanni Maria Mastai Ferretti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் ஒன்பதாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையின் 255வது திருத்தந்தையாக கி.பி. 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாள் முதல், 1878ல் தமது மரணம்வரை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

கி.பி. 1792ம் ஆண்டும், மே மாதம், 13ம் நாள், “செனிகல்லியா” (Senigallia) என்னுமிடத்தில், "கிரோலமோ டேய் கொண்டி ஃபெர்ரெட்டி" (Girolamo dei conti Ferretti) எனப்படும் பிரபுக்கள் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர், பிறந்த அன்றே திருமுழுக்கும் பெற்றார். "வோல்டேர்ரா" மற்றும் ரோம் (Volterra and in Rome) நகரிலுள்ள "பியாரிஸ்ட்" (Piarist College) கல்லூரியில் கல்வி கற்றார். தமது சொந்த ஊரான 'செனிகல்லியாவில்' (Senigallia) இறையியல் கற்ற இவர், கி.பி. 1814ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் சிறையிருப்பிலிருந்து (French captivity) திரும்பியிருந்த திருத்தந்தை ஏழாம் பயசை (Pope Pius VII) சந்தித்தார். கி.பி. 1815ம் ஆண்டு, திருத்தந்தையின் உயர் காவலராக இணைந்த இவர், திடீரென தமக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக வி்ரைவிலேயே அதிலிருந்து நீக்கப்பட்டார். திருத்தந்தையின் கால்களில் தஞ்சமடைந்த இவரை எழுப்பிய திருத்தந்தை இவர் இறையியல் படிப்பைத் தொடர ஆதரவு தந்தார்.

கி.பி. 1819ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் தேதி, இவர் குருத்துவம் பெற்றார்.
கி.பி. 1827ம் ஆண்டு, தமது 35 வயதில் மஸ்டாய் திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவால் (Pope Leo XII) "ஸ்போலேட்டோ" (Spoleto) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1840ம் ஆண்டு, "புனித மர்செல்லினோ ஈ பியெட்ரோவின்" கர்தினால் குருவாக (Cardinal-Priest of Santi Marcellino e Pietro) அறிவிக்கப்பட்டார்.

கி.பி. 1846ம் ஆண்டு, திருத்தந்தை பதினாறாம் கிரகோரியின் (Pope Gregory XVI ) மரணத்தின் பின்னர் நடந்த திருத்தந்தை தேர்தலில் மஸ்டாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். தமது பெயரையும் ஒன்பதாம் பயஸ் (Pius IX) என்று ஏற்றுக்கொண்டார். 

32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவ திருத்தந்தை ஆவார். இவர் கூட்டிய “முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்” (The First Vatican Council) (கி.பி. 1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாளின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாளுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870ம் ஆண்டு, அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகளின் ஆரம்ப கட்டத்திலே, அதனை இத்தாலிய அரசு தீவிரமாக எதிர்த்தது. அவருடைய சர்வாதிகாரமான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியலை காரணம் காட்டி, சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் விமர்சித்ததால், அவரது முக்திபேறு பட்டம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. திருத்தந்தை “இரண்டாம் ஜான் பவுல்” (Pope John Paul II) கி.பி. 1985ம் ஆண்டு, ஜூலை மாதம், ஆறாம் நாளன்று, இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.

கி.பி. 2000ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மூன்றாம் தேதி, திருத்தந்தை “இருபத்திமூன்றாம் யோவானோடு” (Pope John XXIII) இவருக்கும் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி 7 ஆகும்.



06 February 2020

இன்றைய புனிதர் : (06-02-2020) மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள்

இன்றைய புனிதர் : 
(06-02-2020) 

மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ

பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்

இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்

புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்

இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்


செபம்:
ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர் (பெப்ரவரி 6) ✠புனிதர் கொன்சாலோ கார்ஸியா

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 6)

✠ புனிதர் கொன்சாலோ கார்ஸியா ✠
(St. Gonsalo Garcia)

ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி:
(Franciscan Lay Brother and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 5, 1557
வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா
(Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு: ஃபெப்ரவரி 5, 1597
நாகசாகி, ஜப்பான்
(Nagasaki, Japan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 14, 1627
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 8, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை
(St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம், மும்பை
(Roman Catholic Archdiocese of Bombay, East Indian Community)

புனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார். 

புனிதர் பட்டமளிப்பு:
கி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.

இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 6) ✠ புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி

குரு:
(Priest)

பிறப்பு: ஏப்ரல் 14, 1853
மிலன், லொம்பார்டி-வெனீஷியா இராச்சியம்
(Milan, Kingdom of Lombardy-Venetia)

இறப்பு: ஃபெப்ரவரி 6, 1913 (வயது 59)
ரிவோல்டா டி'அ்டா, கிரெமோனா, இத்தாலி இராச்சியம்
(Rivolta d'Adda, Cremona, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 21, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

பாதுகாவல்:
ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை
(Sisters Adorers of the Blessed Sacrament)

புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க  திருச்சபையின் குருவும், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை" (Sisters Adorers of the Blessed Sacrament) எனப்படும் சபையை நிறுவியவருமாவார். இவர், "புனிதர் கெல்ட்ரூட் காமன்சோலி"  (Saint Geltrude Comensoli) மற்றும் அருளாளர் "லுய்கி மரியா பலஸ்ஸோலோ" (Blessed Luigi Maria Palazzolo) ஆகியோரின் சமகாலத்தவராவார். மேலும், இவருக்கு காமன்சோலியுடன் முந்தைய ஒத்துழைப்பு இருந்தது. ஐவரும் காமன்சோலியும் இணைந்து "பெர்கமோ" (Bergamo) நகரில் ஒரு மத கல்வி நிறுவனத்தை நிறுவினார்கள். அதற்கு முன்னரே, இவர்களின் உறுப்பினர்களிடையே இரட்டை பிளவு காரணமாக, ஸ்பைனெல்லி தமது பணிகளை விட்டு விலக நேர்ந்தது.

கி.பி. 1853ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வடக்கு இத்தாலியின் "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் தலைநகரான "மிலன்" (Milan) நகரில் பிறந்த ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லிக்கு அவர் பிறந்த மறுதினம் திருமுழுக்கு தரப்பட்டது. அவர் தமது சிறு வயதில், தமது பெற்றோருடனும், உடன்பிறந்தோருடனும் மிலனிலிருந்து (Milan) "கிரெமோனா" (Cremona) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர், கி.பி. 1871ம் ஆண்டின் கோடை காலத்தில், "வர்கோ" நகரில், தமக்கிருந்த கடுமையான முதுகெலும்பு பிரச்சனைக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். தனது குழந்தைப் பருவத்தில், ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அடிக்கடி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது அம்மாவுடன் சேர்ந்து, சக தோழர்களுக்கு பொம்மை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட விரும்பினார்.

அவரது ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்புக்கு, அவரது தாயாரும், குருவாக இருந்த அவரது மாமா "பியேட்ரோ காக்ளியரொளி" (Pietro Cagliaroli) என்பவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். பெர்கமோ நகரில் இறையியல் கற்கத் தொடங்கிய இவரை இவரது நண்பர் "அருளாளர் லுய்கி மரிய பலஸ்ஸோ"  (Blessed Luigi Maria Palazzolo) என்பவரும் ஊக்கப்படுத்தினார். கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். விரைவிலேயே, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களின் பொது அழைப்பினை ஏற்று, யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்க ரோம் நகர் பயணமானார்.

அங்கே, மரிய அன்னை பேராலயத்திற்கும் சென்ற ஸ்பைநெல்லி, அங்கிருந்த குழந்தை இயேசு கெபியினருகே, மறையுரைச் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அத்துடன், நற்கருணை ஆராதணையில் பெண்கள் ஈடுபடுவதாக இவர் கண்ட திருக்காட்சி, தாம் சொந்தமாக ஒரு சபையை நிறுவ இவருக்கு உந்துசக்தியாக விளங்கியது. ரோமிலிருந்து திரும்பியதும் ஒரு மாலை பள்ளியில் கல்விப் பணிகளை நடத்தினார்.

கி.பி. 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, பெர்கமோ (Bergamo) நகரில், புனிதர் கெல்ட்ருட் காமென்சோலி (Saint Geltrude Comensoli) உடன் இணைந்து "நற்கருணை அருட்சகோதரியார்" (Sacramentine Sisters) சபையை தொடங்கினார். இது, நற்கருணைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இச்சபை, நற்கருணை ஆராதனைப் பணிகளில் மட்டுமே ஈடுபடும். சபையின் முதல் கான்வென்ட், "வயா சான் அன்டோனினோ'வில்" (Via San Antonino) திறக்கப்பட்டது. நகரில் ஏற்பட்ட தொடர் பேரழிவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக, இந்த இல்லம் தோல்வியடைந்த காரணத்தால், கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் தேதியன்று, அதை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஸ்பைநெல்லிக்கு ஏற்பட்டது.

பெர்மாமோவில் நடந்ததை எண்ணி மன வேதனையடைந்த ஸ்பைநெல்லி, "கிரெமோனா" (Cremona) நகரிலுள்ள "ரிவோல்டா டி'அ்ட்டா" (Rivolta d'Adda) எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது குருத்துவ கடமைகளை நிறைவேற்றுவதற்காக கிரெமோனாவுக்கு வருமாறும், மறைமாவட்ட ஆயர் அவரை அழைத்திருந்தார். கி.பி. 1892ம் ஆண்டு, அவர், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபையை" (Sisters Adorers of the Blessed Sacrament) நிறுவினார். இச்சபைக்கு, பின்னாளில் கி.பி. 1897ம் ஆண்டு, "கிரெமோனா ஆயர்" (Bishop of Cremona) "கெரேமியா பொனோமெல்லி" (Geremia Bonomelli) அவர்களின் மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது.

ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, கி.பி. 1913ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் தேதி மரித்தார்.

கி.பி. 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாளன்று, இவரது சபைக்கு, திருத்தந்தை அவையின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1932ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) முழு அங்கீகாரம் வழங்கினார். இவர்களது சபை, "அர்ஜென்ட்டினா" (Argentina) மற்றும் "செனெகல்" (Senegal) உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்தமிருந்த 59 இல்லங்களில், 436 மறைப்பணியாளர்கள் இருந்தனர்.

05 February 2020

சிசிலியின் புனிதர் அகதா (பெப்ரவரி 5)

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 5)

✠ சிசிலியின் புனிதர் அகதா ✠
(St. Agatha of Sicily)

கன்னி மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. 231
கேட்டனியா அல்லது பலெர்மோ, சிசிலி
(Catania or Palermo, Sicily)

இறப்பு: கி.பி. 251
கேட்டனியா, சிசிலி
(Catania, Sicily)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 5

பாதுகாவல்:
கேட்டனியா (Catania), மோலிஸ் (Molise), மால்ட்டா (Malta), சேன் மரினோ (San Marino), ஸ்பெயின் நாட்டின் செகோவியா பிராந்தியத்திலுள்ள 'ஸமர்ரமல' என்னும் ஊர்ப்பஞ்சாயத்து (Zamarramala, a municipality of the Province of Segovia in Spain), மார்பக புற்று நோயாளிகள் (Breast cancer patients), மறைசாட்சிகள் (Martyrs), செவிலியர் (Wet Nurses), கலிபோர்னியாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள "பெல்" என்ற நகரை கண்டுபிடித்தவர்கள் (Bell-Founders), ரொட்டி செய்யும் தொழிலாளி (Bakers), தீ (Fire), பூகம்பம் (Earthquakes), "எட்னா" மலையின் வெடிப்புகள் (Eruptions of Mount Etna).

சர்ச்சைகள் (Controversy):
ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்தல்
(Rejection to worship Roman Emperors)
கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழில்
(Forced prostitution)
பாலியல் வன்கொடுமை, மற்றும் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதற்கான போர்
(Rape and conflict to maintain virginity)

புனிதர் அகதா, மறைசாட்சியாக மரித்த ஒரு கன்னியரும், கிறிஸ்தவ புனிதருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலியின்போது, கடவுளை அதி தூய அன்னை, அர்ச்சிஷ்ட்ட கன்னி மரியாளுடன் சேர்ந்து நினைவுகூறப்படும் ஏழு பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பழங்கால கிறிஸ்தவ புராணத்தில், மிகவும் உயர்வாக போற்றப்படும் கன்னியராக மறைசாட்சியாக் மரித்த பெண்களுள் புனிதர் அகதாவும் ஒருவர் ஆவார். கி.பி. 249ம் ஆண்டு முதல் 253ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் "டேசியஸ்" (Full Name - Gaius Messius Quintus Trajanus Decius) என்பவன் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகளை ஆரம்பித்து வைத்த முதல் பேரரசன் ஆவான். இவனது காலத்திலேயே புனிதர் அகதா, சிசிலியில் உள்ள “கேட்டனியா” (Catania) என்னும் இடத்தில் வைத்து, தமது மிக உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வசதிவாய்ப்புகளுள்ள குடும்பமொன்றில் பிறந்த அகதா, ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தார். தமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்ற தீவிர விசுவாசம் கொண்டிருந்தார். "ஜாகொபஸ் டி வொராஜின்" (Jacobus de Voragine) என்ற கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரின் (Legenda Aurea of 1288 AD) எனும் இலக்கியத்தின்படி, அகதா தமது கன்னிமையை இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவருக்கு பதினைந்து வயதானபோது, இவர்மீது மோகம் கொண்ட ரோமன் நிர்வாக அலுவலரான (Roman prefect) "குயின்ஷியானஸ்" (Quintianus) என்பவனை தீர்க்கமாக நிராகரித்தார். ஆத்திரம் கொண்ட குயின்ஷியானஸ், இவரை இவரது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக துன்புறுத்தினான். பின்னர், "அப்ரோடிசியா" (Aphrodisia) என்ற விபச்சார விடுதி நடத்துபவனிடம் அனுப்பினான்.

அவரை எளிதில் கையாள முடியாது என்பதை கண்டுகொண்ட குயின்ஷியானஸ், அகதாவை பயமுறுத்தினான். அவருடன் வாதிட்டான். இறுதியில் அவரை சிறையில் அடைத்தான். சிறையில் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளான அகதாவின் மார்பகங்களை குறடு போன்ற இடுக்கியால் அறுத்தனர். மேற்கொண்டும் அவனுக்கு மசியாத அகதா அவனுடன் வியக்கத்தக்க வகையில் வாதிட்டு தமது மனோபலம் மற்றும் உறுதியான பக்தியைக் காண்பித்தார்.

இறுதியில், அகதாவை கூறிய மரக்குச்சுகளினால் தீயிட்டு எரித்துக் கொள்ள தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அவரது விதி, அவரை ஒரு பூகம்பம் மூலம் இரட்சித்தது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட அகதாவுக்கு அப்போஸ்தலரான புனிதர் பேதுரு (St. Peter the Apostle) காட்சியளித்து அவரது மார்பக மற்றும் உடலிலிருந்த காயங்களை ஆற்றினார். புனிதர் அகதா சிறையிலேயே மரித்துப் போனார். "கட்டானியா" பேராலயம் (Catania Cathedral) இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.