புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 February 2020

சிசிலியின் புனிதர் அகதா (பெப்ரவரி 5)

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 5)

✠ சிசிலியின் புனிதர் அகதா ✠
(St. Agatha of Sicily)

கன்னி மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. 231
கேட்டனியா அல்லது பலெர்மோ, சிசிலி
(Catania or Palermo, Sicily)

இறப்பு: கி.பி. 251
கேட்டனியா, சிசிலி
(Catania, Sicily)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 5

பாதுகாவல்:
கேட்டனியா (Catania), மோலிஸ் (Molise), மால்ட்டா (Malta), சேன் மரினோ (San Marino), ஸ்பெயின் நாட்டின் செகோவியா பிராந்தியத்திலுள்ள 'ஸமர்ரமல' என்னும் ஊர்ப்பஞ்சாயத்து (Zamarramala, a municipality of the Province of Segovia in Spain), மார்பக புற்று நோயாளிகள் (Breast cancer patients), மறைசாட்சிகள் (Martyrs), செவிலியர் (Wet Nurses), கலிபோர்னியாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள "பெல்" என்ற நகரை கண்டுபிடித்தவர்கள் (Bell-Founders), ரொட்டி செய்யும் தொழிலாளி (Bakers), தீ (Fire), பூகம்பம் (Earthquakes), "எட்னா" மலையின் வெடிப்புகள் (Eruptions of Mount Etna).

சர்ச்சைகள் (Controversy):
ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்தல்
(Rejection to worship Roman Emperors)
கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழில்
(Forced prostitution)
பாலியல் வன்கொடுமை, மற்றும் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதற்கான போர்
(Rape and conflict to maintain virginity)

புனிதர் அகதா, மறைசாட்சியாக மரித்த ஒரு கன்னியரும், கிறிஸ்தவ புனிதருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலியின்போது, கடவுளை அதி தூய அன்னை, அர்ச்சிஷ்ட்ட கன்னி மரியாளுடன் சேர்ந்து நினைவுகூறப்படும் ஏழு பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பழங்கால கிறிஸ்தவ புராணத்தில், மிகவும் உயர்வாக போற்றப்படும் கன்னியராக மறைசாட்சியாக் மரித்த பெண்களுள் புனிதர் அகதாவும் ஒருவர் ஆவார். கி.பி. 249ம் ஆண்டு முதல் 253ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் "டேசியஸ்" (Full Name - Gaius Messius Quintus Trajanus Decius) என்பவன் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகளை ஆரம்பித்து வைத்த முதல் பேரரசன் ஆவான். இவனது காலத்திலேயே புனிதர் அகதா, சிசிலியில் உள்ள “கேட்டனியா” (Catania) என்னும் இடத்தில் வைத்து, தமது மிக உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வசதிவாய்ப்புகளுள்ள குடும்பமொன்றில் பிறந்த அகதா, ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தார். தமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்ற தீவிர விசுவாசம் கொண்டிருந்தார். "ஜாகொபஸ் டி வொராஜின்" (Jacobus de Voragine) என்ற கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரின் (Legenda Aurea of 1288 AD) எனும் இலக்கியத்தின்படி, அகதா தமது கன்னிமையை இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவருக்கு பதினைந்து வயதானபோது, இவர்மீது மோகம் கொண்ட ரோமன் நிர்வாக அலுவலரான (Roman prefect) "குயின்ஷியானஸ்" (Quintianus) என்பவனை தீர்க்கமாக நிராகரித்தார். ஆத்திரம் கொண்ட குயின்ஷியானஸ், இவரை இவரது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக துன்புறுத்தினான். பின்னர், "அப்ரோடிசியா" (Aphrodisia) என்ற விபச்சார விடுதி நடத்துபவனிடம் அனுப்பினான்.

அவரை எளிதில் கையாள முடியாது என்பதை கண்டுகொண்ட குயின்ஷியானஸ், அகதாவை பயமுறுத்தினான். அவருடன் வாதிட்டான். இறுதியில் அவரை சிறையில் அடைத்தான். சிறையில் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளான அகதாவின் மார்பகங்களை குறடு போன்ற இடுக்கியால் அறுத்தனர். மேற்கொண்டும் அவனுக்கு மசியாத அகதா அவனுடன் வியக்கத்தக்க வகையில் வாதிட்டு தமது மனோபலம் மற்றும் உறுதியான பக்தியைக் காண்பித்தார்.

இறுதியில், அகதாவை கூறிய மரக்குச்சுகளினால் தீயிட்டு எரித்துக் கொள்ள தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அவரது விதி, அவரை ஒரு பூகம்பம் மூலம் இரட்சித்தது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட அகதாவுக்கு அப்போஸ்தலரான புனிதர் பேதுரு (St. Peter the Apostle) காட்சியளித்து அவரது மார்பக மற்றும் உடலிலிருந்த காயங்களை ஆற்றினார். புனிதர் அகதா சிறையிலேயே மரித்துப் போனார். "கட்டானியா" பேராலயம் (Catania Cathedral) இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

16 August 2013

13ஆம் வாரம்

திங்கள்

முதல் ஆண்டு



முதல் வாசகம்

 தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 16-33

மூன்று மனிதர்களும் எழுந்து, சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.

அப்பொழுது ஆண்டவர், ``நான் செய்ய இருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா? ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர். ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ``சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: ``தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?'' என்றார்.

அதற்கு ஆண்டவர், ``நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, ``தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?'' என்றார்.

அதற்கு அவர், ``நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, ``ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?'' என்று கேட்க, ஆண்டவர், ``நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: ``என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?'' என, அவரும் ``முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார்.

அவர், ``என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?'' என, அதற்கு அவர், ``இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார்.

அதற்கு அவர், ``என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?'' என, அவர், ``அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.

ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 10-11 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். பல்லவி

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ``போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார்.

இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ``ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்'' என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

கடவுள் மனதை மாற்றும் சக்தி யாருக்கு உண்டு.

அவரை அணுகி செபிப்போருக்கு உண்டு.

ஆபிரகாம் சோதோமுகாக செபித்து, மனத்தை மாற்றினார். இறைவனும் வேண்டுதலை ஏற்றார். மனத்தை மாற்றினார்.

நினிவே நகர மக்கள் கோணியாடை உடுத்தி, சாம்பலிலே அமர்ந்து, மார்பிலே அறைந்து, அழுது மன்றாடி தங்களத பாவங்களுக்கு மன்னிப்பு கோரிய போது, மனத்தை மாற்றிக் கொண்டார். சொன்னபடி அவர்களை அழிக்காமல் மன்னித்தார்.

தன்னை நோக்கி கூப்பிடும் போது மனத்தை மாற்றி, தன் மக்கள் அழியாமல் பாதுகாப்பார்.

குடும்பங்களிலே பிள்ளைகள் கோரும் போது மன்னித்து ஏற்றுக் கொள்வதில்லையா? பெற்றோர் தங்களத மனத்தை மாற்றிக் கொள்வதில்லையா?

அம்மை அப்பனாக உள்ள இறைவனும் தன் மக்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றார். தண்டிக்கின்ற இறைவன் இல்லை. திருந்த விளையும் மனத்திற்கு ஆதரவாய் உள்ள இறைவனே நம் இறைவன்.

கல்லாகிப் போனதா நம்முடைய மனது. இல்லை கனிவினால் நாமும் நம்முடைய மனத்தை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவரா?

ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம்

திருப்பலி முன்னுரை
இறைத்திருமகன் அருளால் ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் பணிவான அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்வு அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே! இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள் பலர் இருந்தனர். ஆனால் இயேசு தம்மைப் பின்தொடர விரும்புவோர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டார். வீடு, நில புலம், குடும்பம், உறவு என்னும் தடைகளால் கட்டுண்டு, இயேசுவைப் பின்செல்லத் தயங்கியவர்கள் பலர் உண்டு. அவர்களைப் பார்த்து இயேசு கூறுவார்: ''மானிட மகனுக்குத் தலைசாய்க்கக் கூட இடம் இல்லை'' இயற்கையைப் படைத்த இறைவன் உயிரனிங்கள் வாழத் தேவையானவற்றை அளிக்கின்றார். நரிகள் குடியிருக்க குழிகள் உள்ளன; பறவைகளுக்கு வீடாகக் கூடுகள் இருக்கின்றன. ஆனால், இயேசுவுக்குக் குடியிருக்க வீடு என்று ஒன்று இருக்கவில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்ற நாடோடி போதகராகவே அவர் இருந்தார். இருந்தாலும். அவ்வப்போது தம் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர் விருந்து உண்டார். அப்போது கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரியதே என்பதை வெளிக்காட்டும் விதத்தில் அவர் பாவிகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் கூட பந்தியமர்ந்தார். பிறரை நம்பி வாழ்ந்தவர் இயேசு. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோரும் தமக்கென்று எதையும் சேர்த்துவைக்காமல் கடவுளை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனை.

இயேசுவின் சீடராக வாழ வேண்டும் என்றால் வீடு, குடும்பம், உறவுகள் அனைத்தையுமே துறந்துவிட வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். கடவுளின் ஆட்சியில் புக விரும்புவோர் அந்த உயரிய பேற்றினைப் பெற்றிட எந்த தியாகமும் செய்ய முன்வர வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. கடவுளிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும் என்பதே இயேசுவின் வேண்டுகோள். கடவுளுக்கு மேலாக எதையுமே நாம் மதிக்கலாகாது எனவும், எப்போதும் புதிய ஊக்கத்தோடு தம்மைப் பின்பற்ற நாம் முன்வரவேண்டும் எனவும் இயேசு நம்மிடம் கேட்கின்றார். இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.



முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை:

அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த எலிசாவை, ஆண்டவரின் பணிக்காக எலியா தேர்ந்தெடுக்கும் நிகழ்வை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கோருகிறார். எலியா அனுமதி அளித்ததும், எலிசா உழுத கலப்பையால் ஏர் மாடுகளை சமைத்து விருந்து பரிமாறுவதைக் காண்கிறோம். அவர் பெற்றோரிடம் விடைபெற்று, எலியாவைப் பின்பற்றி இறைவாக்கு பணியாற்றுகிறார். எலிசாவைப் போன்று, நாமும் ஆண்டவரின் அழைப்பை கால தாமதமின்றி ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.



அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16, 19-21
ஆண்டவர் கூறியது: நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் " என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! " என்றார்.எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல்கள் 16;1-2,5,7-11
1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.பல்லவி

2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே பல்லவி ;

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்பல்லவி .

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி



இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழங்கிய உரிமை வாழ்வில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஊனியல்பின் செயல்களுக்கு அடிமைகளாய் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பினால் நிறைவு காணும்படி நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து தூய ஆவியின் தூண்டுதலுக் கேற்ப வாழ பவுல் நம்மை அழைக்கிறார். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்காமல், அன்பின் சமூகமாய் ஒன்றிணைத்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய், தூய ஆவியின் கனிகளை நம் வாழ்வில் விளைவிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 13-18
சகோதர சகோதரிகளே,.கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக " என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை.நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை " என்றார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62
அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? " என்று கேட்டார்கள்.அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் " என்றார்.இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை " என்றார்.இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும் " என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் " என்றார்.இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் " என்றார்.வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்: ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் " என்றார்.இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல " என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன், ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சீடர்களின் முழு அர்ப்பணத்தையும் எதிர்பார்க்கும் இயேசுவே,
என்னுடைய அரைகுறை அர்ப்பணத்தை எண்ணி வெட்கி, மன்னிப்பு கோருகிறேன். அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேடவும், உமக்கே பணிபுரியவும், உம்மை எல்லா வேளையிலும் பின்பற்றவும் எங்களுக்குத் அருள்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாம் இறைவா,
உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திடவும், துன்பத்தின் வழியாகவே நாங்கள் நிறைவாழ்வில் பங்கேற்க இயலும் என்பதை எங்களுக்கு உணர்த்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!
எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையின் தேவா!
எம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை
வாழ்க்கையில் தாமதம் வளர்ச்சியின் தடை.

இந்த மூன்று மனிதர்களுக்கும் நல்ல வாழ்வு வேண்டும்,நான்குபேருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல ஆசை. ஆண்டவன் அருள் வேண்டும், அவர் தரும் ஆற்றலால் அன்புப் பணிபுரிந்து மகிழவேண்டும் என்ற நல்ல எண்ணம்.

ஆனால் மூவரும் மூன்று காரணங்களால், நல்ல எண்ணம் செயலாக்கம் பெறாமல் முடமாகிவிடுகின்றனர். ஆயினும், இயேசு அவர்களை முறைப்படுத்துவதைப் பார்க்கிறோம். இரு மனம் கொண்டவன் முதல் மனிதன்.அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும், இறைவனும் வேண்டும் அலகையும் வேண்டும், அருளும் வேண்டும் பொருளும் வேண்டும். வெளியே ஒன்று உள்ளே மற்றொன்று. உள்ளத்தை ஊடுறுவி கண்ட இயேசு, அவனது எண்ணமெல்லாம் சொத்து சுகம், வசதி வாய்ப்பு,பணம் பதவி இவற்றைச்சுற்றி வட்டமிடுவதை உணர்த்தி, நிவர்த்தி செய்ய அறிவுரை கூறுகிறார்.

இரண்டாமவன், கடமை உணர்வை ஒரு சாக்குப்போக்காகச் சொல்கிறான். பெற்றோரைப் பேணவேணடும், இறந்தால் அடக்கம் செய்ய வேண்டும். இப்படிச் சொல்லியே ஆண்டவனுக்கும் அயலானுக்கும் பணிசெய்யும் வாய்ப்பைக் கடத்திவிடுகிறான்.

மூன்றாமவன், ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்ததுபோல, விடைபெற்று வர அனுமதி கேட்டு வாய்ப்பை நழுவ விடுகிறான். ஓன்று தெழிவாகிறது. ஆண்டவனுக்கும் அயலானுக்கும் அன்புப் பணி செய்வது மனித இயல்பு. எனவேதான் சந்தித்த எவரிடமும் சரி, அப்படியானால் வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம், நீ வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக மூவரின் குறைகளையும் நிவர்த்திசெய்து பணிசெய்து மகிழ ஆலோசனை சொல்கிறார்.

ஏன்நிலையலும் எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்ய முன்வருவேனாக.
மன்றாட்டு:
இறைவா! எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்து வாழ அருள்தந்தருளும். ஆமென்.
சூன் 29


புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா


திருநாள் திருப்பலி


முதல் வாசகம்

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார்.

பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
12ஆம் வாரம்

வெள்ளி

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், ``உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே. இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்'' என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ``நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆபிரகாம் கடவுளிடம், ``உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்'' என்றார்.

கடவுள் அவரிடம், ``அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்'' என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

அக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ``ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்றார்.

இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

இயேசு அவரிடம், ``இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசீர் பெறுவர்.

இரண்டு வாசகங்களிலும் அண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஆசீர் பெற்றனர் என்பதனை பார்க்கின்றோம்.

வளர்ந்த உலகில் இன்று ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் எண்ணிக்கை குறைந்த வருகின்றது. ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்போருக்கு என்ன பதில்?

படைத்தவருக்கு மாத்திரமே அஞ்சுங்கள் என்ற வார்த்தையை அறியாத உள்ளங்கள் பரிதாபத்திற்குரியவர்களே. அவரால் இயலாதது எதுவுமில்லை. எனவெ அவருக்கு மட்டும் அஞ்சி வாழ்வது தான் வாழ்வு. அஞ்சுவது என்பது பயந்து நடுங்குவத இல்லை, பணிந்து, கீழ்ப்படிந்து செயல்படுவதுவேயாகும். இவர்கள் ஆசீர் பெறுவார்கள். விவிலியமும். பராம்பரியமும், திருஅவை வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது. அறிந்து, பணிந்து, அறிக்கை செய்து, ஆசீர் பெறுவோம்.
12ஆம் வாரம்

வியாழன்

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.

ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள்.

ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள். ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார்.

பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார்.

மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



 அல்லது

குறுகிய வாசகம்



ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 6b-12, 15-16

அந்நாள்களில் ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள்.

ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார்.

பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 106: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! 4ய ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி

4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர்.

அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவரை வெறுமனே அழைப்பதால் அல்ல, அவருடைய விருப்பம் ஏற்று செயல்படுபவரே நிலைவாழ்வை சுதந்தரிப்பார்கள்.

ஆபிராம் தன் வாழ்வில் தந்தையின் விரப்பத்தை நிறைவேற்றி, வாக்களித்த ஆசீரைப் பெற்று சாட்சியாக உள்ளார்.
12ஆம் வாரம்

புதன்

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12,17-18

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: ``ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.''

அப்பொழுது ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்'' என்றார்.

அதற்கு மறுமொழியாக, ``இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்'' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, ``வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், ``இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே'' என்றார்.

அதற்கு ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?'' என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், ``மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா'' என்றார்.

ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, ``எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4,5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?

நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

தம்முடைய உடன்படிக்கையை தான் செய்து கொள்ளும் உடன்படிக்கையை நிறைவு செய்யும் கடவுளே நாம் நம்பி விசுவசிக்கும் கடவுள்.

ஆபிராம் வாழ்வில் கடலின் மணலைப் போலவும், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலவும் சந்ததியை பெருகச் செய்வேன் என்றவர், செய்தார் என்பதனை நம்பம் நாம், நம்முடைய வாழ்விலும், நம்மோடு செய்யும் உடன்படிக்கையை நிறைவு செய்து தருபவர் நம் கடவுள்.

அவரே எங்கள் கடவுள், அவரு எங்கள் அண்டவர் என்று நாம் உண்மையாய் இருக்கும் போது, வாக்களித்தவாறே, நிலையான வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவராக்குவார். அவருடைய உயிர்ப்பே இதற்கு சாட்சி.  எவ்வாறு அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டாரோ, அவ்வாறே அவா வரும் நாளிலும் நாமும் ஏற்றுக் கொள்ளப்படுவோம்.
12ஆம் வாரம்

செவ்வாய்

முதல் ஆண்டு

 முதல் வாசகம்

 எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2,5-18

அந்நாள்களில் ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.

ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆபிராம் லோத்தை நோக்கி, ``எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்'' என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறு இருந்தது. லோத்து யோர்தான் சுற்றுப் பகுதி முழுவதையும் தேர்ந்து கொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர்.

ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக் கொண்டார். ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர்.

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப் போகிறேன். உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம். நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்'' என்றார்.

ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனில் இருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பு அருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3ய. 3bஉ-4யb. 5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4யb நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

மாசற்றவராய் நடப்போர் பேறுபெற்றோர்.

இன்றைக்கு திருப்பாடல் ஆசிரியர் 15ம் அத்தியாத்தில் அற்புதமாக தெரிவித்து உள்ளார்.

ஆபிராம் இத்தகைய நிலையில் வாழ்ந்து, இறையாசீர் பெற்றதாக முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம்.

கடவுளின் இல்லத்தில் வாழ்வார்கள் மாசற்றவராய் வாழ்வோர் என்கிறார்.

இடுக்கமான வாயில் வழியே தான் நுழைய முடியும், இத்தகைய மாசற்ற வாழ்வு வாழ்வோர்.

வாழ்வின் நிலையும், வாழ்வின் சூழலும் இன்றைக்கு மாறிப் போனது.

மாசற்றவர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள்.

விசாலமான வாயில் வழியாக நுழையவே முற்படுகிறோம். இதுவே விவேகமான செயல் என தெரிவிக்கின்றது உலகம். மாசற்ற நிலையில் உலகில் வாழ்ந்திடவே முடியாது என்று, சொல்லி எப்படியாகிலும் சம்பாதிக்கலாம், வாழலாம், உலகில் இருக்கும் வரை அனுபவித்து கொண்டு போகலாம், என சொல்வோர் அதிகரிக்க அதிகரிக்க, தீவிரவாதமும், வன்முறையும் அதிகரிக்கத் தான் செய்கின்றது.

மாசற்ற வாழ்வு தியாகம் நிறைந்தது,  அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் மாசற்ற வாழ்வு நம்முிலே தொடங்கிட செய்வோம்.