புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 August 2013

12ஆம் வாரம்

வெள்ளி

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், ``உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே. இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்'' என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ``நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆபிரகாம் கடவுளிடம், ``உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்'' என்றார்.

கடவுள் அவரிடம், ``அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்'' என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

அக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ``ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்றார்.

இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

இயேசு அவரிடம், ``இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசீர் பெறுவர்.

இரண்டு வாசகங்களிலும் அண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஆசீர் பெற்றனர் என்பதனை பார்க்கின்றோம்.

வளர்ந்த உலகில் இன்று ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் எண்ணிக்கை குறைந்த வருகின்றது. ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்போருக்கு என்ன பதில்?

படைத்தவருக்கு மாத்திரமே அஞ்சுங்கள் என்ற வார்த்தையை அறியாத உள்ளங்கள் பரிதாபத்திற்குரியவர்களே. அவரால் இயலாதது எதுவுமில்லை. எனவெ அவருக்கு மட்டும் அஞ்சி வாழ்வது தான் வாழ்வு. அஞ்சுவது என்பது பயந்து நடுங்குவத இல்லை, பணிந்து, கீழ்ப்படிந்து செயல்படுவதுவேயாகும். இவர்கள் ஆசீர் பெறுவார்கள். விவிலியமும். பராம்பரியமும், திருஅவை வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது. அறிந்து, பணிந்து, அறிக்கை செய்து, ஆசீர் பெறுவோம்.

No comments:

Post a Comment