புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 August 2013

12ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு



 முதல் வாசகம்

 தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவர்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 12: 10-11

ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன்.

அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்; அவனை உற்றுநோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்து போன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப் போலப் பெரிதாயிருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1ய)

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி



இரண்டாம் வாசகம்

திருமுழுக்குப் பெற்ற நீங்கள் கிறிஸ்துவை அணிந்துள்ளீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 26-29

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்.

இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல் களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-24

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறுமொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Jun 23 SUN: TWELFTH SUNDAY IN ORDINARY TIME

Zec 12: 10-11; 13: 1/ Ps 63: 2. 3-4. 5-6. 8-9 (2b)/ Gal 3: 26-29/ Lk 9: 18-24

இயேசுவின் உண்மை சீடனாக வாழ விரும்புபவா அவரைப் பற்றி ஆழமாக அறிந்து அவரது அன்பை அனுபவித்து உணர்ந்து தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள் தோறும் சுமக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார் பேதுரு. சுயநலம் மறப்போம். சிலுவையை சுமப்போம்.

உண்மை ஞானம் பெற வேண்டுமென்றால் சீடன் குருநாதனின் திருமேனியை காண வேண்டும். அவரின் திருநாமத்தை சொல்ல வேண்டும். அவரின் திருவார்த்தையை கேட்க வேண்டும். அவரின் தீருவுருவத்தை தியானிக்க வேண்டும். எல்லாரையும் மரியாவைப் போல் இயேசவின் சீடராக்குவோம்.



முன்னுரை:

பிரியமானவர்களே!

பொதுக்காலத்தின் 12ம் ஞாயிறுக்கு வந்துள்ள நாம், நம்மை அறிந்து கொள்ள முன் வருவதோடு, நம்மோடு இருப்பவர்களையும் சரியாக புரிந்து கொண்டால் மாத்திரமே நம்முடைய நட்பு உண்மையானதாக இருந்திட முடியும்.

நண்பனை சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் நட்பினையும் நரிவர தொடர்ந்திட முடியாது.

கிறிஸ்து தன்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொள்கின்றார். அப்பொழுது பேதுரு நீர் மெசியா என்று சரியாக சொல்லி, தன்னுடைய சரியான புரிதலை வெளிப்படுத்தினார் என்பதனை அறிகின்றோம்.

நாமும் நம்மோடு இருப்பவர்களை சரியாக புரிந்து அறிந்து அவர்களோடு நல்ல நட்புறவு கொண்டவர்களாக வாழ்ந்திட அருள் கேட்டு பலியிலே பங்கேற்று செபிப்போம்.



மன்றாட்டு:

திருஅவையின் தலைவர்களை ஆசீர்வதியும். பொறுப்பிலெ சந்திக்கின்ற பாரங்களை, சிலுவைகளை மகிழ்வுடனே உம் அருளோடு ஏற்றுப் பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குடும்பங்களை வழிநடத்தும் பொறுப்பேற்ற அன்பர்கள், தங்களது குடும்ப பாரங்களை சுகமான சுமைகளாக கருதி, இணைந்து ஏற்று பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் இளையவர்களை ஆசீர்வதியும். தாங்கள் தங்களது செயல்களால் யாருக்கும் சிலுவையாக இருந்து விடாமல், குடும்பத்திலும், சமூகத்திலும் பாரத்தை குறைக்க பகிர்ந்து வாழும் நல்ல உள்ளம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலியிலே பங்கேற்கும் நாங்கள் எங்களை அறிந்து தெரிந்து புரிந்து ஏற்று அன்பு செய்த வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவினை விரும்பி தேடி, உறவுகள் எங்கள் உறவினிலே எத்தகைய வளர்ச்சி வாழ்வு காண்கிறார்கள் என்பதனை அறிந்து, சரியான நட்புடனே பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment