புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

31 May 2020

தூய ஆவியார் பெருவிழா

† இது எப்படி? †

† தூய ஆவியார் பெருவிழா †
(மே 31, 2020)

† திருத்தூதர் பணிகள் 2:1-11 †
† 1 கொரிந்தியர் 12:3-7, 12-13 †
† யோவான் 20:19-23 †
வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப் பேச வைத்ததும் தூய ஆவியாரே.

அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம் மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர், வியக்கின்றனர்.

தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:

ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார். அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள், 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' எனப் பதில் தருகிறார்கள்.
இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும் இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?

இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம், 'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார். தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால் பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது' (காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும், பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.

இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா? ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)
மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது. அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது: 'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன் விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம். நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும், வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை. இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது, 'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.

இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம் இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில், ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு, நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள் வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள் காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல், கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும் அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும், வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை எழுப்புகின்றது.

ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது. அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின் முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக் 24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்? யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?

இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.

மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின் மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும், நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?

நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார் என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?

இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில் பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.' யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக, பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம். இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள். ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன் மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.

முந்தைய நிலை இப்போது இல்லை.

'இது எப்படி?' - தூய ஆவியாரால்!

இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால் கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும், பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.

என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?

சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள் இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம், குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு, பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?

என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?

என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?

என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான் என்ற எண்ணம் என்னில் வருகிறதா?

என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?

என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?

கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?

இப்படியாக,

முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும் நிலையும் மாறும்.

இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார் போலக் கேட்க முடியும்.

இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)

மரியா எலிசபெத்தை சந்தித்தால் : (31-05-2020) 


மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)
நிகழ்வு

தாவீது இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த பிறகு, பெலிஸ்தியர்கள் கைப்பற்றிச் சென்ற ஆண்டவரின் பேழையை தன்னுடைய படைவீரர்களோடு சென்று மீட்டுக்கொண்டு வந்தான். அவன் ஆண்டவரின் பேழையை மீட்டுகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரும்போது அதற்கு முன்பாக அவன் இசைக் கருவிகளை மீட்டிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தான். ஆண்டவரின் பேழை நாக்கோனின் இடைத்திற்கு வந்தபோது உசா என்பவன் ஆண்டவரின் பேழையைத் தாங்கிப் பிடித்தான். அப்போது ஆண்டவரின் சினம் அவனுக்கு எதிராக எழுந்தது. ஏனென்றால் அவன் ஆண்டவரின் பேழையை தகுதியில்லாமல் தாங்கிப் பிடித்தான். இதனால் அவன் ஆண்டவரின் பேழையருகே மடிந்து இறந்தான்.

ஆண்டவரின் பேழையைத் தொட்ட உசா இப்படி இறந்துபோனதை அறிந்த தாவீது பெரிதும் வருந்தினார். எனவே அவர் ஆண்டவரின் பேழையை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தார். அவர் ஒரு லேவியர். இறைப்பற்றுக்கொண்ட மனிதர். ஆண்டவரின் பேழை ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதம் தங்கி இருந்ததால் ஆண்டவர் அவரை நிறைவாக ஆசிர்வதித்தார். அதன்பொருட்டு ஓபேது ஏதோம் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆண்டவரின் பேழை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்ததனால் ஆண்டவரால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டார். அதைப் போன்றுதான் ஆண்டவரைத் தன்னுடைய மடி தாங்கிய அன்னை மரியாள் எலிசபெத்தின் இல்லத்தில் தங்கியிருந்ததால் எலிசபெத்து ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

மரியாள் எலிசபெத்தை சந்தித்த இந்த விழா பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பொனவெந்தூர் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா இவ்வளவு சிறப்பாக வளர்வதற்கு முக்கியக்காரணமாக இருந்தவர் பராக் (Prague) என்ற நகரில் ஆயராக இருந்த ஜான் ஜென்ஸ்டீன் என்பவர்தான். இவர்தான் மரியா எலிசபெத்தை சந்தித்ததன் முக்கியத்துவத்தை விவிலியப் பின்னணியோடு மறையுரை ஆற்றி மக்களுக்கு விளங்கச் செய்தார். மேலும் இவருடைய காலத்தில் திருச்சபையில் இரண்டு திருத்தந்தையர்கள் இருந்தார்கள். ஒருவர் (ஐந்தாம் அர்பன்) உரோமை நகரைத் தலைமைபீடமாகக்கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். இன்னொருவர் (ஏழாம் கிளமென்ட்) அவிஞ்ஞோனை தலைமைபீடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். ஜான் ஜென்ஸ்டீன் இவ்விழாக் கொண்டாடுவதன் வழியாக இரண்டு திருத்தந்தையர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நினைத்தார். இதற்கு இரண்டு திருத்தந்தையர்களும் ஒத்து வந்தார்கள். இறுதியில் திருச்சபையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட குழப்பம் தீர்ந்தபோது அதன்பிறகு திருத்தந்தையாக வந்த திருத்தந்தை ஒன்பதாம் போனிபஸ் என்பவர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1969 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் இவ்விழாவை மே மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் இவ்விழா.

ஆண்டவரின் தூதர் மரியாவுக்கு மக்கள வார்த்தை சொன்ன அதே நாளில், மரியாளிடம் அவர் எலிசபெத்து தன்னுடைய முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் எடுத்துச்சொல்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட மரியா எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து செல்கிறார் (லூக் 1: 39). அங்கே அவரோடு தங்கியிருந்து அவருக்கு பல விதங்களில் உதவிசெய்கிறார். மரியா இருந்த ஊரான நாசரேத்திற்கும் எலிசபெத்தின் ஊரான ஹெப்ரோனுக்கும் இடையே 76 கிலோமீட்டர். இருந்தாலும், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார்.
இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் நிறைவாக திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் காரணகர்த்தாவாகிய ஆண்டவர் இயேசுவும் கருவிலேயே சந்தித்துக்கொள்கிறார்கள். ஆகையில், மரியா எலிசபெத்து சந்திக்கின்ற அதே வேளையில் திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாக முடிந்துவிடாமல் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும், அருளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக மாறுவது இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உதவும் நல்ல மனம்

பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு மரியா உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மேலும் அவள் உதவும் நிலையிலும் இல்லை. ஏனென்றால் அவள் கர்ப்பிணியாக இருக்கிருக்கிறாள். அப்படி இருந்தாலும்கூட மரியா எங்கோ இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார். இது அவளிடம் இருக்கும் உதவும் நல்ல பண்பைக் காட்டுகின்றது. கானாவூர் திருமணத்திலும் மரியாள் கேளாமலே உதவிசெய்தாள் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மரியாவை நம்முடைய அன்னையாகக் கொண்டிருக்கும் நாம், அவரைப் போன்று தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவும் நல்ல பண்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய திருவிழா †
(மே 31)

✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠
(Visitation of the Blessed Virgin Mary)

திருவிழா நாள்: மே 31

மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியாள் அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மரியாள் கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாளின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மரியாள் தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.
2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாளின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே" என கன்னி மரியாளைப் பாராட்டியது.
4. "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மரியாள் சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மரியாள். ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

இன்றைய புனிதர்

2020-05-31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)


பிறப்பு
--

இறப்பு
--


இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக்குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது, வாழ்த்துகின்றது.

"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


நிக்கோசியா நகர் துறவி, திருக்காட்சியாளர் பெலிக்ஸ் Felix von Nicosia OFM cap

பிறப்பு:5 நவம்பர் 1715 நிக்கோசியா Nicosia, இத்தாலி
இறப்பு:31 நவம்பர் 1787, நிக்கோசியா, இத்தாலி
முத்திபேறுபட்டம்:12 பிப்ரவரி 1888


துறவி ஹில்ரூட் Hiltrud

பிறப்பு:900, நொயன் ஹெர்சே Neuenhersee, ஜெர்மனி
இறப்பு:950, நொயன்ஹெர்சே


பாசாவ் நகர் ஆயர் பில்லேக்ரினுஸ் Pilegrinus von Passau

பிறப்பு:920 ஆஸ்திரியா
இறப்பு:991 பாசாவ், ஜெர்மனி


கொலோன் நகர் பேராயர் சீகேவின் Siegewin

பிறப்பு:11 ஆம் நூற்றாண்டு
இறப்பு:31 மே 1089, கொலோன், ஜெர்மனி

புனிதர் ஹெர்மியாஸ் May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் ஹெர்மியாஸ் ✠
(St. Hermias of Comana)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 160
கொமானா, கப்படோசியா
(Comana, Cappadocia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 31

புனிதர் ஹெர்மியாஸ், ஒரு ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியும், ரோமன் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும் ஆவார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புனிதர், ரோம இராணுவத்தில் (Roman army) சிப்பாயாக நெடுங்காலம் பணியாற்றியவர் ஆவார். கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

ஹெர்மியாஸ், "போன்டஸ்" எனுமிடத்திலுள்ள (Comana in Pontus) "கொமானா" எனுமிடத்தில் ரோம இராணுவத்தின் சிப்பாயாக நீண்ட கால சேவையாற்றினார். "அன்டோனியஸ் பயஸின்" (Antoninus Pius) ஆட்சியின் கீழ் (கி.பி. 138-161) இராணுவ சேவையை நிறைவு செய்த இவர், தமது சேவைக்காக சம்பளமாகவோ ஏனைய படியாகவோ ஏதும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தமது விசுவாசத்தை கிறிஸ்துவில் அர்ப்பணித்தார்.

இவற்றை அறிந்த செபாஸ்டியன் (Sebastian) எனும் "கொமானா" எனுமிடத்தின் ஆளுநர் (Proconsul in Comana), கிறிஸ்துவில் விசுவாசத்தை மறுதலிக்கவும், ரோம பேரரசின்மேல் விசுவாசத்தை அறிக்கையிடவும் ஹெர்மியாசை அழைத்தான். அக்காலத்தில், ஆளுநர் என்பவர், பண்டைய ரோம் நாட்டில் ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட பதவியாகும்.

ரோம ஆளுநர் செபாஸ்டியனின் (Sebastian) அழைப்பினை கடுமையாக நிராகரித்த ஹெர்மியாஸ், துன்புறுத்துவதற்காக அனுப்பப்பட்டார். சித்திரவதையாளர்களால் அவரது தாடை எலும்புகள் உடைக்கப்பட்டன. அவருடைய முகத்தின் தோல் உரிக்கப்பட்டது. பின்னர், எரியும் உலையில் எறியப்பட்ட இவர் மூன்று நாட்களின் பின்னர் எவ்வித காயங்களோ பாதிப்புகளோ இன்றி வெளிவந்தார். 

இவற்றையெல்லாம் கண்டு ஆத்திரம் கொண்ட செபாஸ்டியன், கொடிய விஷம் தயாரிக்கும் மந்திரவாதியான "மாரஸ்" (Marus) என்பவனின் உதவியை நாடினான். விஷம் தயாரிக்கப்பட்டு ஹெர்மியாஸ் அருந்த கொடுக்கப்பட்டது. ஆனால், அவ்விஷம் புனிதரை தீங்கு ஏதும் செய்யவில்லை. மீண்டும் கொடிய விஷம் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. பின்னரும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றானதும், கிறிஸ்துவின் தெய்வீக சக்தியை உணர்ந்த "மாரஸ்" (Marus) கிறிஸ்துவில் தமது விசுவாசத்தை அறிக்கையிட்டு வெளிப்படுத்தினான். இதுகண்ட செபாஸ்டியன், உடனடியாக "மாரஸின்" (Marus) தலையை வெட்டிக் கொன்றான். புனிதர் "மாரஸ்" (Marus) தமது சொந்த இரத்தத்தாலேயே திருமுழுக்கு அளிக்கப்பட்டார். உடனேயே மறைசாட்சி எனவும் அறிவிக்கப்பட்டார்.

புனிதர் ஹெர்மியாஸ் புதிய துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் இடப்பட்டார். அவரது கண்கள் பிடுங்கப்பட்டன. தலைகீழாக மூன்று நாட்கள் தொங்கவிடப்பட்டார். ஆனாலும் அவர் கிறிஸ்துவில் தமது நன்றியை அறிவித்துக்கொண்டேயிருந்தார். இறுதியில், வெறி பிடித்த செபாஸ்டியன் இப்புனிதரின் தலையை தமது வாளால் வெட்டிக் கொன்றான்.

புனிதர் பெட்ரோனிலா May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் பெட்ரோனிலா ✠
(St. Petronilla)
கன்னியர் மறைசாட்சி:
(Virgin Martyr)

கன்னியர், மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறந்தது: 1 ஆம் நூற்றாண்டு; 3 ஆம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: மே 31

பாதுகாவல்:
ஃபிரான்சின் டாபின்கள் (The dauphins of France) (ஃபிரான்சின் சிம்மாசனத்தின் வெளிப்படையான வாரிசுக்கு வழங்கப்பட்ட தலைப்பு), மலை பயணிகள்; திருத்தந்தையர் மற்றும் ஃபிராங்கிஷ் பேரரசர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள்; காய்ச்சலுக்கு எதிராக

புனிதர் பெட்ரோனிலா ஒரு ஆதிகால கிறிஸ்தவ துறவி ஆவார். கத்தோலிக்க திருச்சபையால் அவர் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியர் மறைசாட்சியாக வணங்கப்படுகிறார். பெட்ரோனிலா "டொமிடிலா" (Domitilla family) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உன்னதப் பெண்ணாக இருந்தார். அவர் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோம் நகரில், கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர் ஆவார்.  அவர் மரித்தார்.

பெட்ரோனிலா பாரம்பரியமாக புனிதர் பேதுருவின் மகள் என்று அடையாளம் காணப்படுகிறது. இருப்பினும் இது பெயர்களின் ஒற்றுமையிலிருந்து வெறுமனே தோன்றக்கூடும். அவர் துறவியின் மதமாற்றக்காரராக இருந்திருக்கலாம் (இதனால் ஒரு "ஆன்மீக மகள்"), அல்லது பின்பற்றுபவர் அல்லது வேலைக்காரர் என்றுகூட பொருள்படும். புனிதர் பேதுரு அவரை வாத நோயிலிருந்து குணப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ரோமானிய கல்வெட்டுகள் அவளை ஒரு மறைசாட்சியாக அடையாளம் காட்டுகின்றன. அவர் புனிதர் "ஃபிளேவியா டொமிடிலா"வுடன் (Saint Flavia Domitilla) தொடர்புடையவராக இருக்கலாம்.

பெட்ரோனிலா ஒரு அழகான பெண் என்றும், பாகன் மன்னனான "ஃப்ளாக்கஸ்" (Flaccus) என்பவன் இவரை மணக்க விரும்பினான். ஃப்ளாக்கஸுடன் (Flaccus) திருமணத்தை மறுத்துவிட்ட பெட்ரோனிலா, அதற்கு பதிலாக தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். இவரைப்போன்றவர்களிடமிருந்து பெட்ரோனிலா வை காப்பதற்காக, தூய பேதுரு இவரை ஒரு ஒரு கோபுரத்தில் பூட்டி வைத்திருந்தார் என்றும், "ஃப்ளாக்கஸ்" (Flaccus) போன்றோரிடமிருந்து தப்புவதற்காக பெட்ரோனிலா உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்திக்கொண்டதாகவும், அதன் விளைவாக இவர் மரித்துப்போனதாகவும், இவர் சம்பந்தப்பட்ட புராணங்கள் கூறுகின்றன.

இவர் சம்பந்தப்பட்ட மற்றுமொரு புராண கதையில், தமது கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த காரணத்தால், இவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.