புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 April 2020

புனித.தனிஸ்லாஸ்ஆயர், மறைசாட்சி April 11

இன்றைய புனிதர்
2020-04-11
புனித.தனிஸ்லாஸ்
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
26 ஜூலை 1030
ஜெசப்பனா (Szcepanow)
இறப்பு
11 ஏப்ரல் 1079
போலந்து
புனிதர் பட்டம்: 1253
திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்

இவர் போலந்து நாட்டில் ஜெசப்பனாவிலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் அற்புதமாக, ஓர் அதிசய குழந்தையாக இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அதன்பின் பிரான்சிலுள்ள ஓர் கன்னியர்களின் பள்ளியில் இளம் வயது படிப்பை முடித்துவிட்டு, போலந்து நாட்டிற்கு சென்று குருமடத்தில் சேர்ந்து குருவானார்.

பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின் (Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.

ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை 1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.

ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.


செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைநிறுவுநர் ஹெலேனா குவேரா Helena Guerra
பிறப்பு: 23 ஜூன் 1835 லூக்கா Lucca, இத்தாலி
இறப்பு: 11 ஏப்ரல் 1914 இத்தாலி

புனித லாங்கினஸ்

யார் இந்த புனித லாங்கினஸ்
பைபிளில் புதிய ஏற்பாட்டு கால நூல்கள் என்ற அடிப்படையில் பல புத்தகங்கள், திருமுகங்கள் உள்ளது...அவற்றில் ஒன்று ‘நிக்கோதேமுவின் திருமுகம்’.
இவ் நூல் நாம் பயன்படுத்தும் புதிய ஏற்பாடு பைபிளில் இல்லை...ஆனாலும் பல ஆதி திருச்சபை குறித்து குறிப்புகளை கொண்டுள்ளது..
அந்த நூலில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியவரின் பெயரும் அவரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இயேசுவைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஈட்டியானது தூய அல்லது புனித ஈட்டி (Relics) என அழைக்கப்படுகிறது.

ஆதி திருச்சபை எழுத்துக்களின் அடிப்படையில் அந்த வீரனின் பெயர் ‘லாங்கினஸ்’. பார்வைக் குறைபாடு உடையவர். இவரே இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்துகிறார். சிலுவைக் குற்றவாளிகளின் விலாவில் ஈட்டியால் குத்தும் வழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது. ஒருவகையில் விரைவில் குற்றவாளிகள் இறக்கவும், அவர்கள் இறந்து விட்டார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்தவும் இதைச் செய்வார்கள்.

இயேசுவின் விலாவில் இவர் குத்துகிறார். அப்போது இரத்தமும், தண்ணீரும் வடிகின்றன. தெறிக்கின்ற குருதியில் சில துளிகள் பார்வைக் குறைபாடுடைய அவனது கண்களில் விழுகின்றன. அவனது கண்கள் முழுமையாய் குணமடைகின்றன. ஈட்டியால் தன்னைக் குத்தியவருக்கும், நன்மையைச் செய்கிறது குணமளிக்கும் குருதி.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் கேள்விப்பட்டபின் அவர் இயேசுவின் சீடர்களைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் கிறிஸ்தவராக மாறுகிறார்.

தனது வேலையை உதறிவிட்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். சொந்த ஊரான கப்பதோஷியாக்குத் திரும்பி இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றி வேத சாட்சியாக மரித்தார்...

இவரின் நினைவுச்சின்னங்கள் இத்தாலியில் புனித அகுஸ்தீனார் தேவாலயத்தில் உள்ளது...

THE ROMAN SOLDIER WHO PIERCED THE SIDE OF JESUS CONVERTED AND BECAME A SAINT?
St. Longinus is the centurion who pierced the side of Our Lord while He was hanging on the Cross. St. Longinus, who was nearly blind, was healed when some of the blood and water from Jesus fell into his eyes. It was then he exclaimed "Indeed, this was the Son of God!" [Mark 15:39]. St. Longinus then converted, Left the army, took instruction from the apostles and became a monk in Cappadocia. There he was arrested for his faith, his teeth forced out and tongue cut off. However, St. Longinus miraculously continued to speak clearly and managed to destroy several idols in the presence of the governor. The governor, who was made blind by the demons that came from the idols, had his sight restored when St. Longinus was being beheaded, because his blood came in contact with the governors' eyes. St. Longinus' relics are now in the church of St Augustine, in Rome. His Lance is contained in one of the four pillars over the altar in the Basilica of St Peter's in Rome.

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)

இன்றைய புனிதர் : 
(09-04-2020) 

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)
“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றார்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5: 11-12)

வாழ்க்கை வரலாறு

வால்டேட்ரூடிஸ், பெல்ஜியம் நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய குடும்பமே புனிதர்களின் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இவரது தாய், தந்தை, இவருடைய அக்காள், கணவர், இவருடைய நான்கு பிள்ளைகள் என எல்லாரும் பின்னாளில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.

வால்டேட்ரூடிஸ், அழகில் சிறந்தவராய் இருந்தார். அதனால் இவரை மணந்து கொள்வதற்கு நிறையப் பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் வால்டேட்ரூடிசின் தந்தையோ அவருக்குப் பிடித்தாற்போல் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வால்டேட்ரூடிசை மணமுடித்துக் கொடுத்தார். அவர் பெயர் மடெல்கார் என்பது ஆகும். மடெல்கர் வால்டேட்ரூடிஸ்மீது அன்பு மழை பொழிந்து அவரை நல்ல விதமாய் பார்த்துக் கொண்டார்.

இப்படி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த தருணத்தில், வால்டேட்ரூடிஸ்மீது பொறமை கொண்டவர்கள் அவர் மிகவும் தவறான பெண்மணி என்று பழி போட்டார்கள். அத்தகைய தருணங்களில் வால்டேட்ரூடிஸ் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவின்மீது மக்கள் அபாண்டமாகப் பழி போட்டபோது, அவர் எப்படி அதை எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் மக்கள் தன்மீது சுமத்திய அபாண்டமான பழிகளை துணிவோடு எதிர்கொண்டார்.

இதற்கு மத்தியில் வால்டேட்ரூடிஸ் – மடெல்கர் தம்பதியினருக்கு இறைவன் நான்கு குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். நான்காவது குழந்தையைப் பெற்ற சிறுது நாட்கள் கழித்து வால்டேட்ரூடிசின் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதாக அவரிடத்தில் சொன்னார். வால்டேட்ரூடிஸ் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், தன் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கு முழு அனுமதியும் கொடுத்தார். இதற்கு பின்னர் வால்டேட்ரூடிஸ் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்த பின் வால்டேட்ரூடிசும் துறவற மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

துறவற மடத்தில் சேர்ந்த பின்பு வால்டேட்ரூடிஸ் ஏழைகள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி இறைவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின்னர் இவருடைய கல்லறையில் நிறைப் புதுமைகள் நடக்கத் தொடங்கின.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்

தூய வால்டேட்ரூடிஸ் மிகவும் அழகாக இருந்ததால், அவர்மீது பொறமை கொண்ட ஒருசில விஷமிகள் அவரைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் இயேசுவையே முன்மாதிரியாகக் கொண்டு, அவர் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டார்.

பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம் ஒவ்வொரின் மீதும் பலர் தேவையில்லாமல் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் தூய வால்டேட்ரூடிசை போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பலருக்கு நல்லத்தைப் பார்த்து பாராட்டக்கூடிய மனப்பக்குவம் வருவதில்லை. அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒரு சமயம் காட்டு வழியாகப் போன ஒருவன் அதிசய நாயைக் கண்டான். அது தண்ணீரில் சாவகாசமாய் நடந்து போகக்கூடிய நாய். மட்டுமல்லாமல் கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போடும். அந்த அதிசய நாயோடு நட்பு பாராட்டி ஊருக்குள் அழைத்து வந்து, ஆசையோடு வீட்டுக் காரியிடம் காட்டினான். அவளும் ஆசையோடு பார்த்தாள். அவளுடைய கண் முன்னாலே அந்த நாய் தண்ணீரில் நடந்து போனது; கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போட்டது. இதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னங்க இந்த நாய் தண்ணீரில் நடந்து போகிறது, இதற்கு நீந்தத் தெரியாதா?” என்றாள். இதைக் கேட்டு அவளுடைய கணவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

தண்ணீரில் நடந்து போகக்கூடிய அற்புத நாயாக அது இருக்க, அந்த நாய்க்கு நீந்தத் தெரியாது என்று நொட்டை சொன்ன அந்தப் பெண்மணியைப் போன்று நிறையப் பேர், பாராட்டுவதற்கு நிறைய இருந்தும் விமர்சிக்கவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை விவேகத்தோடு எதிர்கொள்வது சிறப்பு.

ஆகவே, தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு வெல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), April 10

இன்றைய புனிதர்
2020-04-10
புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa),
சபை நிறுவுனர்
பிறப்பு
02 மார்ச் 1774
வெரோனா, இத்தாலி
இறப்பு
10 ஏப்ரல் 1835
வெரோனா, இத்தாலி
முத்திபேறுப்பட்டம்: 1941 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

புனித மக்தலேனா கனோசா 1774 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் பிறந்தார். மார்க்கிராப்பின் ஒக்டோவியூஸ், தெரேசா ஸ்லூவா இவரின் பெற்றோர். மக்தலேனா ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் தாய் மீண்டும் ஓர் மறுமணம் செய்துகொண்டார். புதிய தந்தையால் மக்தலேனா பல துன்பங்களை அனுபவித்தார். தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மக்தலேனா குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமேன்று ஆசைப்பட்டார். மக்தலேனா தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். சிறுவயதில் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மக்தலேனா கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். தம் பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ற்றோவிசோ(Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். அப்போது அரசர் நெப்போலியன் வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்தான். இதனால் மக்தலேனா தன் சொந்த வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது.

நெப்போலியனின் ஆக்கிரமிப்பால் தன் அரண்மனையிலிருந்த பல குழந்தைகள் காயப்பட்டு, அனாதைகளாக விடப்பட்டனர். இதனால் மக்தலேனா தன் அரண்மனையிலே, ஓர் இல்லத்தில் குழந்தைகளை தங்க வைத்து, பராமரித்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். 1808 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்து ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808 ஆம் ஆண்டு அன்பின் மகள்கள்(Daughters of Love) என்ற சபையை நிறுவினார். பிறகு 1810 மற்றும் 1812 ஆம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருகுழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816 ஆம் ஆண்டு மிலானிலுள்ள பெர்காமோவிலும்(Bergamo) சபைகளை நிறுவினார். இச்சபைகளை தொடர்ந்து பராமரிக்க அப்போது ஆஸ்திரிய நாட்டில் அரசராக இருந்த முதலாம் பிரான்ஸ் அவர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசர் தொடர்ந்து எல்லா விதங்களிலும் உதவிகளை வழங்கினார். 1828 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.

மக்தலேனா 1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் வெரோனாவில் இறந்தார். 1941 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் முத்திபேறுப்பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களால் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! புனித மக்தலேனாவைப் போல, நாங்களும் ஏழை, எளியவர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ உமதருள் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அட்மோண்ட் நகர் துறவி எங்கல்பெர்ட் Engelbert von Admont
பிறப்பு: 1250, ஸ்டையர்மார்க் Steiermark, ஆஸ்திரியா