புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 April 2020

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா April 28

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 28)

✠ புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா ✠
(St. Gianna Beretta Molla)
மனைவி, தாய், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், கருக்கலைப்பு மற்றும் கருணைக் கொலை ஆகியவற்றுக்கு எதிரானவர், பொதுநிலைப் பெண்மணி
(Wife, Mother, Pediatrician, Pro-life Witness and Laywoman)

பிறப்பு: அக்டோபர் 4, 1922
மெஜந்தா, இத்தாலி அரசு
(Magenta, Kingdom of Italy)

இறப்பு: ஏப்ரல் 28, 1962 (வயது 39)
மோன்ஸா, இத்தாலி
(Monza, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 24, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 16, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 28

பாதுகாவல்:
மெஜந்தா (Magenta)
தாய்மார்கள் (Mothers)
மருத்துவர்கள் (Physicians)
மனைவிகள் (Wives)
குடும்பங்கள் (Families)
பிறக்காத குழந்தைகள் (Unborn Children)
குடும்பங்களின் உலகக் கூட்டம் 2015 (இணை-பாதுகாவலர்) (World Meeting of Families 2015 (Co-Patron)

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா, இத்தாலிய ரோமன் கத்தோலிக்க சிறுவர் நல சிறப்பு மருத்துவர் (Italian Roman Catholic pediatrician) ஆவார். தமது நான்காவது குழந்தையை கருத்தாங்கியிருந்த காலத்தில், அதனை கருக்கலைப்பு (Abortion) செய்யவும், தமது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் (Hysterectomy) மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், பின்னர் தமக்கு மரணம் நேரிடும் என்று நன்கு அறிந்திருந்தும் அவர் அதனை மறுத்துவிட்டார்.

மொல்லாவின் மருத்துவ சேவை வாழ்க்கை, திருச்சபையின் படிப்பினைகளுடன் இணைந்து கைகோர்த்திருந்தது. அது தேவைப்படும் பிறரின் உதவிக்கு வரும் சமயத்தில் அவரது மனசாட்சியைப் பின்பற்றுவதற்கான தனது உறுதியை பலப்படுத்தியது. தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினையும் நினையாமல், தாம் கருக்கொண்ட மகவின் உயிரை காக்கவேண்டும் என இவர் எடுத்த முடிவால், இவரது மனசாட்சியும் இலட்சியமும் தீவிரமாக வெளிப்பட்டது. இவர், வயது முதிர்ந்த மக்களிடையே தர்மசிந்தையுள்ள நற்பணிகளில் தம்மை அர்ப்பணித்திருந்தார். மேலும், கத்தோலிக்க செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தியிருந்தார். அவர் தூய “வின்சென்ட் டி பவுல் குழு” (St. Vincent de Paul group) மூலமாக, உள்ளூரிலுள்ள ஏழைகளுக்கும் அதிர்ஷ்டமற்ற மக்களுக்கும் உதவினார். இக்குழு, கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு ஆகும். இது, ஏழைகளின் தனிப்பட்ட சேவையின் மூலம் அதன் உறுப்பினர்கள் பரிசுத்தப்படுத்தப்படுவதற்காக 1833ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.

1994ம் ஆண்டு, முக்திபேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, பத்து வருடங்கள் கழித்து, 2004ம் ஆண்டின் மத்தியில், "தூய பேதுரு சதுக்கத்தில்," (Saint Peter's Square) திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். 

1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 4ம் தேதி, இத்தாலி அரசின் அஜெந்தா (Magenta) நகரில் பிறந்த கியேன்னா பெரேட்டா மொல்லா, தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பத்தாவது குழந்தை ஆவார். இவரது தந்தையான "அல்பெர்ட்டோ பெரேட்டா" (Alberto Beretta), மற்றும் தாயாரான "மரியா டி மிச்சேலி" (Maria de Micheli) இருவரும், "தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின்" (Third Order of Saint Francis) உறுப்பினர்கள் ஆவர். இவரது சகோதரர்களில் அநேகரும், குடும்பத்தினர் பலரும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களாவர். இதன் காரணமாக, இவரும் கத்தோலிக்க பின்புலம் கொண்டவராவார்.

இவருக்கு மூன்று வயதாகையில் இவரது குடும்பம் வடக்கு இத்தாலியிலுள்ள “லொம்பார்டி” (Lombardy) மாகாணத்திலுள்ள “பெர்கமோ” (Bergamo) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றது. அங்கேயே இவர் வளர்ந்தார். புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் உள்ளிட்ட அருட்சாதனங்கள் இவருக்கு பெர்கமோ ஆலயத்திலேயே (Bergamo Cathedral) தரப்பட்டது. இவருக்கு பதினைந்து வயதாகையில், இவரது சகோதரியான “அமலியா” (Amalia) மரணமடைந்ததால், இவர்களது குடும்பம் மீண்டும் புலம்பெயர்ந்து, இத்தாலியின் “லிகுரியா” (Liguria) மாகாணத்தின் தலைநகரான ஜெனோவா (Genoa) சென்று, “குயின்டோ அல் மேர்” (Quinto al Mare) எனும் குடியிருப்பில் குடியேறியது. அங்கேயே கியேன்னா தமது கல்வியை தொடர்ந்தார். மற்றும், தமது தூய பேதுரு பங்கின் (Parish of Saint Peter) நடவடிக்கைகளில் இவர் முழு ஈடுபாடு கொண்டிருந்தார்.

1941ம் ஆண்டு, “பெர்கமோவின்” (Bergamo) “சேன் விஜிலோ” (San Vigilio) நகரிலுள்ள தமது தாத்தா – பாட்டியுடன் வாழ்வதற்காக கியேன்னா சென்றார். 1942ம் ஆண்டு, “மிலன்” (Milan) நகரில் தமது மருத்துவ கல்வியை தொடங்கினார். தமது மருத்துவ கல்வியல்லாது, இத்தாலியின் “அஸியோன் கடோலிக்கா” (Azione Cattolica movement) எனப்படும் கத்தோலிக்க செயல்பாடுகளிலும் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தார். 1949ம் ஆண்டு, “பவியா பல்கலையில்” (University of Pavia) மருத்துவ பட்டம் வென்ற இவர், 1950ம் ஆண்டு, “குழந்தைகள் மருத்துவ அறிவியலில்” (Pediatrics) சிறப்பு பட்டம் வென்றார். பிரேசில் நாட்டில் மறைப்பணியில் (Brazilian missions) இருந்த கத்தோலிக்க குருவான தமது சகோதரரிடமே சென்று, அங்கேயுள்ள ஏழைப் பெண்களுக்கு “மகளிர் நோய் மருத்துவ இயல்” (Gynecological Services) சேவை புரிய எண்ணினார். இருப்பினும் அவரது நீண்டகால உடல்நலக் குறைபாடு காரணமாக, இது ஒரு நடைமுறை சாத்தியமற்ற கனவாகிப்போனது. ஆனாலும் அவர் தமது பணியைத் தொடர்ந்தார். 1952ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், “மிலன் பல்கலையில்” (University of Milan) குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1954ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு பொறியாளரான “பியெட்ரோ மொல்லா” (Pietro Molla) என்பவரை கியேன்னா பெரேட்டா சந்தித்தார். 1955ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11ம் நாளன்று, இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது. அதே வருடம் செப்டம்பர் மாதம், மெஜந்தா நகரிலுள்ள “சேன் மார்ட்டினோ” (Basilica di San Martino in Magenta) ஆலயத்தில் இருவரதும் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

1961ம் ஆண்டு, அவரது நான்காவது - கடைசி குழந்தை கர்ப்பத்திலிருந்த இரண்டாவது மாதம், அவரது கர்ப்பப்பையில் “ஃபைப்ரோமா” (Fibroma) எனப்படும் கட்டி உருவானது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூன்று தேர்வுகளை அளித்தனர். முதலாவது, கருக்கலைப்பு. இரண்டாவது, அவரது கர்ப்பப்பையை அறுவை மூலம் நீக்குதல். மூன்றாவதும், வளர்ந்திருந்த கட்டியை அறுவை மூலம் நீக்குதல். திருச்சபை எல்லா நேரடி கருக்கலைப்புக்கும் தடையாக இருந்தது. ஆனால் இரட்டை விளைவு கொள்கையில் போதனைகள் அவருக்கு கருப்பை நீக்கம் செய்ய அனுமதித்தது. ஆனால், அதிலும் அவரது பிறக்காத குழந்தை மரித்துப்போகும். ஆகையால் குழந்தையின் உயிரை காப்பாற்ற விரும்பிய பெரேட்டா, இவற்றை மறுத்தார். தமது கர்ப்பப்பையில் இருந்த கட்டியை மட்டும் அகற்ற சம்மதம் தெரிவித்தார். தமது உயிரைவிட குழந்தையின் உயிர் மிகவும் முக்கியமானது என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

1962ம் வருடம், ஏப்ரல் மாதம், 21ம் தேதி, புனித சனிக்கிழமையன்று (Holy Saturday), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே, அறுவை சிகிச்சை (Caesarean) மூலம் அவரது பெண் குழந்தை ”ஜியன்னா இமானுவேலா’வை” (Gianna Emanuela) பிரசவித்தார். தொடர்ந்த வலியால் அவஸ்தையுற்ற பெரேட்டா, வயிற்றின் உட்பாகங்கள் நச்சுத் தன்மை (Septic Peritonitis) அடைந்ததால் பிரசவித்த ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் மாதம் 28ம் தேதி, காலை எட்டு மணியளவில் மரித்துப்போனார். அவரது பெண் குழந்தையான “ஜியன்னா இமானுவேலா” இன்னமும் வாழ்ந்து வருகிறது. அவர், தற்போது “முதியோர் நல சிறப்பு மருத்துவராக” (Geriatrics) சேவை செய்கிறார்.

அவரது கணவர் 1971ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தனது மனைவியின் வாழ்க்கையை பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதி, அதனை தனது குழந்தைகளுக்கு அர்ப்பணித்தார். அவர், அடிக்கடி தமது மகள் ஜியன்னா இமானுவேலாவிடம், “அவரது அம்மாவின் தேர்வு, ஒரு தாய் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோரின் மனசாட்சியாக இருந்தது” என்பார்.

புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)குரு, மறைசாட்சி April 28

இன்றைய புனிதர்
2020-04-28
புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
குரு, மறைசாட்சி
பிறப்பு
1803
குவேட்(Cuet), பிரான்ஸ்
இறப்பு
1841
புத்துனா தீவு(Island of Futuna)
புனிதர் பட்டம்: 13 ஜூன் 1954
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்

பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னையிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வியைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர்ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைபரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசிபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக்கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார்.

அப்போது புத்துனாதீவை ஆட்சி செய்த அரசனின் மகன் அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட்களை அனுப்பி பீட்டர் ஷானலை கொடுமையாக கொல்லக்கூறினான். அதனால் அக்கொடிய மனிதமிருகங்கள் அருட்தந்தை பீட்டர் ஷானலை 1842 ஆம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர். இவரோடு சேர்ந்து புத்தினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்தந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் புத்தினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி கேர்பிரீட் Gerfried von St.Maur
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 9 ஆம் நூற்றாண்டு, செயிண்ட் மௌவர், பிரான்ஸ்


குளுனி துறவி ஹூகோ Hugo von Cluny OSB
பிறப்பு: 1024 பிரான்ஸ்
இறப்பு: 28 ஏப்ரல் 1109, பிரான்ஸ்
பாதுகாவல்: காய்ச்சலிலிருந்து

லூயிஸ் கிரிக்னன் (ஏப்ரல் 28)

இன்றைய புனிதர் : 
(28-04-2020) 

லூயிஸ் கிரிக்னன் (ஏப்ரல் 28)
“நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அருமடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” (மாற் 16: 17 -18)

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் மேரி என அழைக்கப்படும் லூயிஸ் கிரிக்னன் 1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மான்ட்போர்ட் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளரும்போதே மறையன்னையிடம் மிகவும் பக்திகொண்டு வளர்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தோரை ஒன்று சேர்த்துக்கொண்டு ‘Rosary Society’ என்ற பெயரில் ஜெபமாலை சொல்லிவந்தார்.

லூயிஸ் கிரிக்னன் வளர்ந்து வந்தபோது குருவாக மாறவேண்டும் என்ற ஆசை கொண்டார். எனவே, அவர் குருமடத்தில் சேர்ந்து 1700 ஆம் ஆண்டு குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்கு கழித்து இவர் டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து, மேற்கு பிரான்ஸ் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். மேலும் அவர் எங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கச் சென்றாரோ அங்கெல்லாம் மரியாவின்மீது உள்ள பக்தியை வளர்த்து வந்தார்.

இவர் ஆற்றி வந்த நற்செய்திப் பணிக்கு நிறைந்த பலன் கிடைத்தது. ஆம், ஏராளாமான மக்கள் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இது பிடிக்காத ஒருசிலர் அவருடைய உணவில் விஷம் வைத்து கொல்லப்பார்த்தனர். ஆனால், இறைவனின் அருள்துணை இவருக்கு இருந்ததால் அந்த விஷம் இவரை ஒன்றும் செய்யவில்லை. லூயின் கிரிக்னன் திருச்சபைக்கு செய்த மற்றொரு மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால் ‘True Devotion to the Blessed Virgin’ என்ற புத்தகத்தை எழுதியதுதான். இப்புத்தகம் கன்னி மரியாவின் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி முயற்சியைக் குறித்துப் பேசுகின்றது.

காலப் போக்கில் லூயிஸ் கிரிக்னன் The Missionaries of he Company of Mary என்ற சபையை இருபாலருக்கும் ஏற்படுத்தி, மரியாவின் புகழும் ஆண்டவர் இயேசுவின் புகழும் எங்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 1716 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் கிரிக்னனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய லூயிஸ் கிரிக்னனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் எழக்கூடிய சிந்தனை எல்லாம், அவரிடமிருந்த மரியன்னை மீதான பக்திதான். தூய லூயிஸ் கிரிக்னன் மரியன்னையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார், அவரிடத்தில் இருந்த மரியன்னையின் மீதான பக்தி நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருமுறை தூய பெர்னார்துவிடம் அவரது துறவறக் குழுமத்தில் வாழ்ந்து வந்த துறவி ஒருவர், “மரியாவுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா?” என்று கேட்டார். அதற்கு தூய பெர்னார்து அவரிடம், “Ascendens, Descendens” என்றார். இதைக் கேட்டு அந்தத் துறவி புரியவில்லையே என்று விழிபிதுங்கி நின்றபோது பெர்னார்து அவரிடம், “மரியன்னை நமது மன்றாட்டுகளுடன் விண்ணகம் செல்வதும், அருள்வரங்களை நமக்கெனப் பெற்றுக்கொண்டு மண்ணகம் இறங்குவதுமாக இருப்பதனாலே அவரை அப்படிக் குறிப்பிட்டேன்” என்றார்.

இது உண்மையிலும் உண்மை. ஏனென்றால் மரியா நாம் அவரிடத்தில் எழுப்புகின்ற ஜெபத்தை இறைவனிடத்தில் எடுத்துச் சென்று, அதற்கான அருள்வரங்களை அங்கிருந்து நமக்கு பெற்றுக்கொண்டு வருகின்றார். அதனால் நாம் அவரை அவ்வாறு அழைப்பதில் தவறொன்றும் இல்லை. மறைந்த திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மரியன்னையக் குறித்து, “தாய் மரியே நான் உமக்கே முழுவதும் சொந்தம்” என்றார். அவரைப் போன்று நாம் நம்மை அன்னையிடம் ஒப்படைத்து வாழும்போது நமக்கு ஒரு குறையும் வராது என்பது உண்மை.

ஆகவே, இப்படிப்பட்ட அன்னையிடம் நாம் பக்திகொண்டு வாழ்கின்றபோது, அவரை நம் தஞ்சமென நினைத்து வாழ்கின்றபோது, அவருடைய பரிந்துரையால் நாம் இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம் உறுதி.

ஆகவே, தூய லூயின் கிரிக்னனைப் போன்று, அன்னையின் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.