புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 April 2020

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ஏப்ரல் 18

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 18)

✠ அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ✠
(Blessed Andrés Hibernón Real)
மறைப்பணியாளர்: 
(Religious)

பிறப்பு: கி.பி. 1534
மூர்சியா, ஸ்பெயின் அரசு
(Murcia, Kingdom of Spain)

இறப்பு: ஏப்ரல் 18, 1602 (வயது 68)
காண்டியா, வலென்சியா, ஸ்பெயின் அரசு
(Gandia, Valencia, Kingdom of Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 22, 1791
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 18

பாதுகாவல்:
மூர்சியா (Murcia)
அல்கன்டரில்லா (Alcantarilla)

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல், “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையைச்” (Order of Friars Minor) சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளர் ஆவார்.

அந்நாளைய ஸ்பேனிஷ் அரசின் மூர்சியா நகரில் 1534ம் ஆண்டு வசதியான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஹிபெர்நான். பாதகமான சூழ்நிலைகளின் காரணமாக, இவரது மொத்த குடும்பமும் நிதி நிலைமையில் நொடித்துப்போனது. இவர்களது குடும்பச் சுமையை குறைக்கும் நோக்கில், இவரது மாமன் ஒருவர் இவரது கல்விப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். எனவே இவர் தமது கல்வியை வலேன்சியா (Valencia) நகரில் தொடங்கினார். இவரது இன்னொரு மாமன் ஒருவர் பாதிரியாராக இருந்த மூர்சியா பேராலயத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார்.

இவர் தமது இளமையில், கஷ்டப்படும் தமது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் உதவும் பொருட்டும், எதிர்பாராத விதமாக வரவிருக்கும் சகோதரியின் திருமணத்திற்காகவும் வெளியூர் சென்று கடினமாக உழைத்து கணிசமாக பொருள் சேர்த்தார். தாம் உழைத்துச் சேர்த்த பணத்துடன் ஊர் திரும்பும் வழியில், இவரை வழிமறித்த திருடர்கள் கும்பல் ஒன்று, இவரிடமிருந்த பணம் பொருள் முழுவதையும் கொள்ளையடித்துச் சென்றது. இதனால் தாம் அடைந்த ஏமாற்றமும் வருத்தமும், தம்மை இவ்வுலகின் பொருள் ஆசைகளில் எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கிறது என்பதனை உணர்ந்தார்.

திருட்டு போகக்கூடிய - அழிந்து போகும் இவ்வுலக செல்வங்களை சேர்க்கும் ஆசைகளுக்கு மாறாக, இனிமேல் யாராலும் கொள்ளையடிக்க இயலாத செல்வங்களை சேர்க்க முடிவு செய்தார்.

1556ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியமான "அல்பாசிட்" (Albacete) என்னுமிடத்திலுள்ள "இளம் துறவியர் சபையின்" பள்ளியில் (Convent of the Order of Friars Minor) சேர மிகவும் தாழ்ச்சியுடன் கெஞ்சி அனுமதி பெற்றார். 1557ம் ஆண்டு, நவம்பர் மாதம், முதல் தேதியன்று, தமது துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்டதுடன், அன்றுமுதல் தமது புதுமுக துறவுப் பயிற்சியையும் தொடங்கினார்.

அடிக்கடி அன்னை மரியாளின் திருத்தலங்களை நாடிச் செல்ல ஆரம்பித்த ஹிபெர்நான், மணிக்கணக்கில் நற்கருணையாண்டவரின் முன்பு முழங்கால்படியிட்டு நின்றபடி செபிக்க தொடங்கினார். இதன்மூலம் அவர் நற்கருணையாண்டவரிடம் தீவிர பக்தியை தம்மில் உருவாக்கினார். இந்த துறவி, அடிக்கடி தமது குருக்களுடன் இணைந்து நோயிற்றோரை சந்திக்க சென்றார்.

1563ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம், இவர் "எல்ச்" (Elche) என்னுமிடத்திலுள்ள "புனித ஜோஸ் 'அல்கன்டரைன்' ஃபிரான்சிஸ்கன் சீர்திருத்த பள்ளிக்கு" (Alcantarine Franciscan Reform Convent of San José) மாற்றப்பட்டார்.

1574ம் ஆண்டுவரை அங்கேயே தமது செப வாழ்வினை அர்ப்பணித்த துறவி ஹிபெர்நான், "வலேன்சியா'வில்" (Valencia) ஸ்தாபிக்கப்பட்டிருந்த பள்ளியின் நடைமுறைப் பணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமது துறவு மட தலைவர்களால் "வலேன்சியா" (Valencia) அனுப்பப்பட்டார். அங்கே, இவருக்கு "வலென்சியா" உயர்மறைமாவட்ட பேராயர் புனிதர் "ஜுவான் டி ரிபெர்" (Archbishop of Valencia Saint Juan de Riber) அவர்களின் நட்பு கிட்டியது.

தாம் மரிப்பதன் நான்கு ஆண்டுகளின் முன்னேயே தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த இத்துறவி, அவர் முன்னறிவித்திருந்ததன்படியே, 1602ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18ம் நாள் செபமாலை செபித்துவிட்டு மரித்தார்.

2020-04-18புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)துறவி

இன்றைய புனிதர்
2020-04-18
புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)
துறவி
பிறப்பு
1060
ஸ்டுட்கார்ட்(Stuttgart), ஜெர்மனி
இறப்பு
1127
பெர்ன்ரீட்(Bernried)

ஹெர்லூக்கா இளமையாக இருக்கும்போது, தன் ஊரில் வில்லியம் என்ற துறவி ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். அப்போது துறவி வில்லியம் அவர்களின் பணிவாழ்வினால் தூண்டப்பட்டு, எப்போதும் அவருடன் சென்று மக்களை சந்தித்தார். அப்போது கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஹெர்லூக்கா வழிகாட்டினார். அவரின் மேல் அதிக அன்பு வைத்து, தன் ஜெபத்தினால் கண்ணிழந்தவருக்கு உதவி செய்தார். பின்னர் 1086-ல் ஜெர்மனியிலுள்ள பவேரியா (Baveria) மறைமாவட்டத்திலிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவியான பிறகு ஆக்ஸ்பூர்க் (Augsburg) ஆயராக இருந்த விக்கிட்ரீப் (Wikterp) அவர்களுக்கு எல்லா விதங்களிலும் அவரின் பணிவாழ்விற்கு தேவையான ஏராளமான உதவிகளை செய்தார். அப்போது தனது செபத்தாலும், தியாக வாழ்வினாலும், கிறிஸ்துவ பக்தியை பரப்ப பவேரியாவில் மிகவும் பாடுபட்டார். அப்போது மிக கொடூரமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஹெர்லூக்கா அங்கிருந்து தப்பி ஓடி ஜெர்மனியிலுள்ள ஸ்டன்பெர்கர் (Starnberger) ஆற்றின் அருகிலுள்ள அகஸ்டினா துறவற மடத்தில் தங்கி இருந்தார். 1122 ஆம் ஆண்டு வரை பெர்ன்ரீட் என்ற ஊரில் இருந்த, துறவற இடத்தில் வாழ்ந்து, துறவியாகவே இறந்தார்.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப உமது அரசை இம்மண்ணில் கொண்டுவர, புனித ஹெர்லூக்கா பெர்ன்ரீட் அனுபவித்த துன்பங்களை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு துறவியையும் நீர் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

தூனன் நகர் துறவி இடெஸ்பால்ட் Idesbald von Dünen
பிறப்பு: 1090 பெல்ஜியம்
இறப்பு: 1167 தூனன், பெல்ஜியம்
பாதுகாவல்: கப்பல், காய்ச்சல் மற்றும் மூட்டு நோயிலிருந்து


மறைப்பணியாளர் உர்ஸ்மார் Ursmar
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 18 ஏப்ரல் 713, லோபெஸ் Lobbes, பெல்ஜியம்

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)

இன்றைய புனிதர் : 
(18-04-2020) 

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)
“நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத் 10:10)

வாழ்க்கை வரலாறு

1100 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள மிலனில் கால்டினுஸ் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். சிறு வயதிலே அறிவிலும் ஞானத்திலும் வல்லவராக விளங்கிய கால்டினுஸ், வளர்ந்து பெரிய ஆளாக மாறியபோது குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதனடிப்படையில் அவர் குருத்துவப் படிப்புப் படித்து குருவாக மாறினார். முதலில் இரண்டு திருத்தந்தையர்களிடம் தலைமைச் செயலராகவும் திருத்தொண்டராகவும் பணியாற்றிய கால்டினுஸ் அதன்பின்னர் திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் என்பவருக்கு உதவியாளராக இருந்தார்.

1159 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த அட்ரியன் இறந்தார். எனவே அவருக்குப் பின்னர் மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரை இத்தாலியில் அரசராக இருந்த பிரெடரிக் பார்பரோசா என்பவன் ஏற்கவில்லை. அவன் தனக்குப் பிடித்தமான நான்காம் விக்டர் என்பவரை திருத்தந்தையாக அறிவித்தான். இதனால் மிகப்பெரிய குழம்பம் ஏற்பட்டது. மிலன் நகரில் இருந்த மக்கள் மன்னுடைய முடிவை ஏற்கவில்லை, அவர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பினார்கள். இதனால் சினமடைந்த மன்னன் மிலனை நகரை முற்றுகையிட்டான். அதோடு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டரையும் அவருக்கு உதவியாக இருந்த கால்டினுசையும் சிறைபிடிக்கத் திட்டமிட்டான். ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி வேறொரு இடத்திற்குச் சென்றார்கள். இதற்கிடையில் மிலன் நகரில் பஞ்சமும் நோயும் தலைவிரித்தாடியது. இதனால் மன்னன் மிலன் நகர் மீது இருந்த தன்னுடைய பிடியைத் தளர்த்தினான்.

1165 ஆம் ஆண்டு, பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபிறகு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் தனக்கு உதவியாக இருந்த கால்டினுசை கர்தினாலாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து 1166 ஆம் ஆண்டு மிலன் நகரில் ஆயராக இருந்த ஹூபர்ட் என்பவர் இறந்துபோனதால் கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக உயர்ந்த பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர், கடன்பட்டு அந்தக் கடனையெல்லாம் அடக்க முடியாமல் கஷ்டபட்ட ஏழை எளியவருடைய கடனையெல்லாம் அடைப்பதற்கு உதவியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் மன்னனுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேரையும் திருச்சபையை விட்டு நீக்கினார். இவ்வாறு ஏழைகளுக்கு ஏழையாய், எல்லாருக்கும் எல்லாமுமாய் இருந்த ஆயர் கால்டினுஸ் 1176 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் திருச்சபைக்கும் குறிப்பாக மிலன் நகருக்குச் செய்த நன்மைகளின் பொருட்டு, மிலன் நகரின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. துயருவோரின் துயர் துடைப்போம்

தூய கால்டினுசின் வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் கடன் பட்ட ஏழை எளியவரின் கடனையெல்லாம் அடைக்க உதவி செய்தார் என்று பார்த்தோம். இவ்வாறு அவர் துயருற்றோரின் துயர் துடைப்பவர் ஆனார். தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று சமூகத்தில் துயருற்றுத் தவிப்போரின் துயர் துடைக்க முன் வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் செஜடன் (Cejatan) என்ற புனிதருடைய வாழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருந்தாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஒரு சமயம் அவர் உரோமையின் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அநியாய வட்டி வாங்குவோரிடம் மாட்டிக்கொண்டு, ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைக் கண்ணால் பார்த்த செஜடன் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தார். எனவே அவர் Credit Union என்ற ஒன்றைத் தொடங்கி வட்டியில்லாக் கடன் கொடுத்து, ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். இவருடைய இந்த தன்னலமில்லா உதவியைக் கண்டு, மக்கள் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். உரோமை நகரில் இருந்த ஏழை எளியவரின் துயர் துடைக்க செஜடன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நாம் நம்மாலான உதவிகளைச் செய்து, ஏழை எளியவரின் துடைப்பதே சாலச் சிறந்த ஒன்றாகவும்.

ஆகவே, தூய கால்டினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம் அவரைப் போன்று துன்புறுவோரின் துடைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.