புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 April 2020

தூய இசிதோர் (ஏப்ரல் 04)

இன்றைய புனிதர் : 
(04-04-2020) 

தூய இசிதோர் (ஏப்ரல் 04)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)

வாழ்க்கை வரலாறு

இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.

இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். “History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia” போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.

இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.

இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழைகளுக்கு உதவி செய்தல்

தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், “உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்” என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், “எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்” என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.

ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.

ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)

இன்றைய புனிதர் : 
(03-04-2020) 

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)
“இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாய் ஏற்படுத்தியுள்ளேன்” (ஏரே 9: 10)

வாழ்க்கை வரலாறு

ரிச்சர்ட், 1197 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரிச்சர்டின் தாயார் இவரை பக்தி நெறியில் வளர்த்ததால், சிறுவயதிலே இவர் இறைப்பற்றிலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்.

தொடக்கக் கல்வியை தான் பிறந்த ஊரிலே பெற்ற ரிச்சர்ட், மேற்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பாரிசிலும் அதைத் தொடர்ந்து போலோங்கோவிலும் கற்றார். இவரிடமிருந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு இவரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை ரிச்சர்ட் சிறப்புடனே செய்து வந்தார். இதற்கடையில் இவருக்கு குருவாக மாறி, இறைவாக்குப் பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எனவே அவர் தான் வகித்து வந்த துணைவேந்தர் பதவி மற்றும் பெரிய இடத்திலிருந்து வந்த திருமணத்திற்கான அழைப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குருத்துவ வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தார்.

குருத்துவப் படிப்பை நல்ல முறையில் படித்து முடித்த ரிச்சர்ட் குருவாகி, தன் சொந்த ஊருக்கு அருகிலே நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இவர் சிசெஸ்டர் நகர ஆயராக உயர்த்தப்பட்டார். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. எப்படியென்றால் அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் ஹென்றி என்ற மன்னன் தனக்கு நெருக்கமான ராபர்ட் என்பவரை ஆயராக நியமித்தான். ஏற்கனவே திருச்சபை சிசெஸ்டரில் ரிச்சர்டை ஆயராக நியமித்திருக்க, அரசன் தன் பங்குக்கு ராபர்ட் என்பவரை நியமித்ததால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூன்றாம் ஹென்றி என்ற அந்த அரசன் ரிச்சர்டை சிசெஸ்டருக்குள் வரவிடாமல் தடுத்தான். இதனால் ரிச்சர்ட் நாடோடியாகவே அங்கும் இங்கும் அலைந்து நற்செய்திப் பணி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் மனந்தளராது இறைவாக்குப் பணியைச் செய்து வந்தார்.

இந்த நேரத்தில் ரிச்சர்டுக்கு சைமன் என்ற குருவானவரின் நட்பு கிடைத்தது. அவருடைய இடத்தில் தங்கி ரிச்சர்ட் சிலகாலம் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். இப்படி நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்த தருணத்தில் திருத்தந்தை அவர்கள் மூன்றாம் ஹென்றியிடம், அவர் நியமித்த ஆயரை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை என்றால், திருச்சபையிலிருந்தே வெளியேற்றப்படுவாய் என்று சொன்னதும் பயந்துபோய், தான் நியமித்த ஆயரை திரும்பப் பெற்றுக்கொண்டான். இதனால் ரிச்சர்ட் சிசெஸ்டர் நகர ஆயராகப் பதவி ஏற்றார். ஆயராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, ரிச்சர்ட் அற்புதமான பணிகளைச் செய்தார். ஏழை எளியவரின் நலனில் அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுடைய மேம்பாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார். அது மட்டுமல்லாமல், திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் ஒருசில விசமிகளிடமிருந்தும் காப்பாற்றக் கடுமையாக உழைத்தார். இப்படி இறைவாக்குப் பணியையும் மக்கள் பணியையும் செய்து வந்த ஆயர் ரிச்சர்ட் 1253 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணியைச் செய்தல்

தூய ரிச்சர்ட்டிடமிருந்து நாம் கற்றுக்க்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வதாகும். ஆயராக இருக்கும்போது மன்னன் மூன்றாம் ஹென்றியிடமிருந்து ரிச்சர்ட்டுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் கண்டு அவர் பயப்படாமல், அஞ்சா நெஞ்சத்தினராய் ஆண்டவரின் பணியைச் செய்தார். அவரை நினைவுகூருகின்ற நாம் அஞ்சா நெஞ்சத்தோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர் நற்செயாளர் யோவானின் சீடரும் ஸ்மிர்னா நகர ஆயருமான போலிகார்ப். அவரிடம் எதிரிகள், “கிறிஸ்துவை மறுதலி இல்லையென்றால் உன்னை உயிரோடு எரித்துவிடுவோம்” என்றார்கள். அதற்கு அவர், “எனக்கு 86 வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் இயேசு எனக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவில்லை. மாறாக நன்மை மட்டுமே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். இதைக் கேட்டு சினம் கொண்ட எதிரிகள் அவரை உயிரோடு எரித்து கொன்றுபோட்டார்கள். போலிகார்ப், எதிரிகள் தன்னை மிரட்டியபோதும் அஞ்சாமல் தன்னுடைய விசுவாசக்தில் மிக உறுதியாக இருந்தார். அது போன்றுதான் தூய ரிச்சர்டும் தன்னுடைய விசுவாசத்தில் தளராமல் இருந்தார். அதனாலேயே இன்றைக்கு ஒரு புனிதராக உயர்ந்திருக்கின்றார்.

ஆகவே, தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)வனத்துறவி April 2

இன்றைய புனிதர் : 
(02-04-2020) 

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)
வனத்துறவி
பிறப்பு 1416 கலாப்பிரியா (Calabria

இறப்பு 02 ஏப்ரல் 1507 தூர்ஸ் (Tours)
                                         புனிதர் பட்டம் : 1529
                      திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)
இத்தாலியில் கலாப்பிரியா என்னும் பகுதியில் பவோலா என் னுமிடத்தில் 1416 ஆம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோர், ராபர்ட் என்ற பெயரை இச்சிறுவனுக்குச் சூட்டினர். புனித அசிசியாரின் மன்றாட்டினால் பிறந்த இவரை அவருடைய மடத்தில் ஓர் ஆண்டு ஒப்படைத்திருந்தபோது, இச்சிறுவனுக்கு அசிசியார் துறவு உடைஉடுத்தியிருந்தார்கள். அப்போது இச்சிறுவனுக்கு வயது 13. செபத்தில் ஆழ்ந்த பற்றும், மிகவும் தாழ்ச்சியும், ஒறுத்தலும் கொண்டு விளங்கினார். உரோமை நகர், அசிசி திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய பின் தன்பெயரை "பிரான்சிஸ்" என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் வரை தனிமையை நாடி குகைக்குச் சென்று அங்கு தவவாழ்வில் தன் நாட்களைச் செலவழித்தார். இவரின் தவவாழ்வினால் தூண்டப்பட்டு மேலும் இரு தோழ ர்கள் 1435-ல் இவரை வந்தடைந்தனர். 1454-ல் பலரும் இவரைப் பின்பற்றியதால் ஒரு துறவு மடமும், ஆலயமும் கட்டப்பட்டன. இப்பணியை சிறப்பான முறையில் நிறைவேற்ற, சாதாரண மக் களும், அதிகம் பணம் கொண்டவர்களும், தாராளமான முறை யில் உதவினர். பிரான்சிஸ், மக்களின் இதயச் சிந்தனைகளை அறியும் வரத்தையும், இறைவாக்குரைக்கும் வரத்தையும் பெற் றிருந்தார். பாறை போன்ற இதயம் படைத்த பல ஆன்மாக்களை மனந்திருப்பி இறைவனை நாடச் செய்தார். பிளேக் நோய் அதி கம் இருந்த அக்காலத்தில், இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு இடைவிடாமல் செபித்ததில் இப்புனிதரின் புனிதம் காணப்பட்டது.

இப்புனிதரால் தொடங்கப்பட்ட புதிய துறவற சபைக்கு " இறை வனின் இல்லத்தில் மிகச்சிறியோர்" என்று பொருள் தரும் "மினிம்ஸ்" (Minims) என்ற பெயரைச் சூட்டினார். இது “மிகத் தாழ்நிலையினரின் சபை” என்று பிற்காலத்தில் பெயர் பெற் றது. இச்சபையைத் திருத்தந்தை பீடம் 1506 ஆம் ஆண்டில் உறுதி ப்படுத்தியது. பிறரன்பு, தாழ்ச்சி, கடுமையான ஏழ்மை இவை களே இச்சபைக்கு ஆணிவேராக அமைந்தது. இப்புனிதர் பெண் களுக்கென்றும் 3 ஆம் சபையை நிறுவினார்.

இவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தனிமையில் இருந்து செபித்தார். இறுதியில் தனது 91 ஆம் வயதில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் புனித வெள்ளிக்கிழமையன்று பிரான்சிலுள்ள தூர்ஸ் (Tours)நகரில் இறைவனடி சேர்ந்தார். இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்க ப்பட்டது. இவரது இறப்பிற்குப்பின், மிக விரைவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் 400 துறவற மடங் கள் பலுகிப் பெருகின. 1562-ல் இவரது உடல் அழியாதிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளான யூகனாட்ஸ் (Youganats) என்றழைக்கப்பட்டவர்கள், இவரது கல்லறையைத் தோண்டி புனிதரின் உடலை வெளிக்கொணர்ந்து அதைச் சுட்டெரித்தனர்.


செபம்:
எங்கள் தாயும், தந்தையுமான மூவொரு இறைவா! புனித பவோலா பிரான்சிஸைப் போல நாங்களும் செப, தவ வாழ்வினால் தூண்டப்பட்டு, அவரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றி, பல ஆன்மாக்களை மனந்திருப்பி, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)

இன்றைய புனிதர் : 
(01-04-2020) 

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக் 1:38).

வாழ்க்கை வரலாறு

கியூ, 1052 ஆம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வலன்ஸ் என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒடிலோ நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர். தாயார் குடும்பத்தை அன்பாய் வழிநடத்திய ஓர் இல்லத்தரசி.

அன்பான பெற்றார், அழகான குடும்பச் சூழல் என்று வளர்ந்த கியூ, சிறுவயது முதலே இறைவனிடத்தில் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்தார். தனது தொடக்கக் கல்வியை வலன்ஸ் நகரில் பெறும்போது இறைவனின் அழைப்பை உணர்ந்தார். படிப்பை முடித்ததும் குருமடத்தில் சேர்ந்து குருவானார். சில ஆண்டுகளிலே அவர் கிரநோபல் நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டு கிரநோபல் நகருக்குச் சென்றபிறகு சந்தித்த முதல் பிரச்சனை கிறிஸ்தவர்களுடைய பலதார மனம்தான். ஆயர் கியூ தன்னுடைய வல்லமையான போதனையால் கிறிஸ்தவர்களிடமிருந்த அந்த தீய பழக்கத்தை அப்புறப்படுத்தினார். இப்பிரச்சனையோடு ஆயர் இன்னொரு பிரச்சனையையும் சந்தித்தார். அதுதான் பாவ மன்னிப்புக்காக பெருந்தொகை வாங்குவது. இதனையும் அவர் அறவே ஒழித்தார்.

இப்படி அவருடைய ஆயர் பணி நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், அவர் மீண்டுமாக துறவற மடத்தில் சேர்ந்து அங்கேயே ஒரு சாதாரண துறவியைப் போல் வாழத் தீர்மானித்தார். அதன்பேரில் அவர் அவெர்ணாவில் இருந்த துறவற மடத்திற்குச் சென்று அங்கு சிலகாலம் துறவற வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியார் கியூவின் சேவை கிரநோபல் மக்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து, அவரை மீண்டுமாக அந்நகரின் ஆயராக நியமித்தார். இரண்டாம் முறையாக கிரநோபல் நகரின் ஆயராக பதவியேற்றுக் கொண்டபிறகு ஆயர் கியூ இன்னும் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக துறவற சபைகளை அதிகமாக ஊக்கப்படுத்தி, அவர்களைத் தன்னுடைய மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணி செய்யப் பணித்தார். இப்படியாக ஆயர் கியூவுக்கும் தூய ப்ருனோ மற்றும் அவர்களுடைய ஆறு தோழர்களுக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

ஆயர் கியூ ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். சமயங்களில் அவர்கள் உணவின்றிப் பட்டினியாய் கிடந்தபோது திருச்சபைச் சொத்துகளையும் ஏன் ஆயருடைய மோதிரத்தையும்கூட விற்று அவர்களுடைய பசியைப் போக்கினார். அந்தளவுக்கு அவர் ஏழைகள் பால் அன்பு கொண்டிருந்தார். இப்படி அவர் இடையறாது பணி செய்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே அவர் திருத்தந்தையிடம், மீண்டுமாகத் துறவற மடத்திற்குச் சென்று, அங்கே துறவியாக வாழலாமா என்று அனுமதி கேட்டார். அதற்கு திருத்தந்தை மறுப்புச் சொல்லவே, கியூ கடைவரைக்கும் ஆயராக இருந்து 1132 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டாவது ஆண்டில் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கியூவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்ம்.

1. கீழ்படிந்து வாழ்தல்

ஆயர் தூய கியூவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த கீழ்படிதல்தான். ஆயர் பதவியை ராஜினமா செய்து அவ்வெர்ணாவில் இருந்த துறவற மடத்தில் அவர் துறவியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திருத்தந்தை ஏழாம் கிரகோரியார் மீண்டுமாக அவரை கிரநோபிலின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டபோது, எந்தவித மறுப்பும் சொல்லாமல், இறைவனின் திருவுளம் நிறைவேறட்டும் என்று கீழ்படிதலோடு ஆயர் பதவியை ஏற்றுக்கொண்டார். தூய கியூவிடமிருந்த கீழ்படிதல் என்ற பண்பு நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிலிப்பிலியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2: 6-11 ல், இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்படிந்து வாழ்ந்தனால், தந்தைக் கடவுள் அவரை மேலும் மேலும் உயர்த்தினார் என்று பவுலடியார் கூறுவார். நாமும் இறைவனின் திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்கும்போது இறைவன் நம்மை மேலும் மேலும் உயர்த்துவார் என்று உண்மை.

சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழியிடம் சென்று, “நாங்கள் எங்களுடைய வீட்டிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறோம். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தக் சிறுமி, “நான் என்னுடைய பெற்றோரிடத்தில் கேட்டுவிட்டு அவர்கள் சரியென்று சொன்னால் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பெற்றோரிடத்தில் அனுமதி கேட்கப் போனாள். போனவள் திரும்பி வந்து தன் தோழியிடம், “என் பெற்றோர் என்னை போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் வரவில்லை” என்றாள். அதற்கு முதல் சிறுமி, “நீ உன்னுடைய பெற்றோரிடத்தில் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால், அவர்கள் விட்டிருப்பார்கள். நீ அவர்களிடத்தில் அழுத்திக் கேட்கவில்லை போலும், அதனால்தான் அவர்கள் உன்னை விடவில்லை” என்றாள். “அப்படியில்லை, என்னுடைய பெற்றோருக்கு எது நல்லதெனத் தெரியும். அவர்கள் சொன்னதற்குக் கீழ்படிந்து நடப்பதே எனக்கும் நல்லது” என்றாள் இரண்டாம் சிறுமி.

ஆம் நாம் நமது பெற்றோரின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பது. இன்று நினைவுகூறும் தூய கியூவும் இறைவனுக்கு கீழ்படிந்து நடந்தார், அதனால் இறைவன் அவரைப் பன்மடங்கு உயர்த்தினார்.

ஆகவே, தூய கியூவை போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.