புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 March 2013


புதன்

முதல் வாசகம்


என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10



ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.



அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.



பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, ``எங்களைப் பார்'' என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.



பேதுரு அவரிடம், ``வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்'' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.



அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்



திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 3b)



பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!



அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!



1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி



3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி



6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி



8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி



விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.



+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35



வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள்.

இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

அவர் அவர்களை நோக்கி, ``வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ``எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!''என்றார்.

அதற்கு அவர் அவர்களிடம், ``என்ன நிகழ்ந்தது?'' என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், ``நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை'' என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, ``அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!'' என்றார்.

மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.

அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.

அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ``வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'' என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

அங்கிருந்தவர்கள், ``ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.

அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

செவ்வாய்



முதல் வாசகம்


மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41



பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.''



அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள்.



அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.

ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார்.



மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 33: 4-5. 18-19. 20. 22 (பல்லவி: 5b)



பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.



அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!



4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி



18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி



20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி



விரும்பினால், தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா 118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



நான் ஆண்டவரைக் கண்டேன்.



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18



அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.



இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள்.



அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார்.



இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.



இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார்.



மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார்.



இயேசு அவரிடம், ``மரியா'' என்றார்.



மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார்.



இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள்.



இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார்.



மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான் ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பாஸ்கா எண்கிழமை திங்கள்


முதல் வாசகம்


கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33



பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: ``யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.

கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

தாவீது அவரைக் குறித்துக் கூறியது: `நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.

ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.'

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.

அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, `அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.''



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 (பல்லவி: 1)



பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.



அல்லது: அல்லேலுயா, அல்லேலூயா, அல்லேலூயா!



1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன். பல்லவி



5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி



9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி



11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி





விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.

(காண்க: பக்கம் 443)



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



திபா 118: 24



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.





நற்செய்தி வாசகம்



என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.



+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15



அக்காலத்தில் கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.



திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்.



அப்பொழுது இயேசு அவர்களிடம், ``அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்'' என்றார்.



அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.



அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, `` `நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்' எனச் சொல்லுங்கள்.



ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்'' என்று அவர்களிடம் கூறினார்கள்.



அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

26 March 2013

புனித சனி. திருவிழிப்பு திருவழிப்பாட்டு ஆண்டு C (30-03-2013)

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித சனி. திருவிழிப்பு வழிபாட்டிற்காக ஒன்று கூடியுள்ளோம். தொடக்கத்திலிருந்தே இறைவன் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கோடு தனது மக்கள் மத்தியில் செயற்படுத்திய அவரின் வியத்தகு செயல்களை நாம் இன்று நினைவு கூருகின்றோம். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களை அற்புதமாக இறைவன் மீட்ட செயல் நமக்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாய் அமைகின்றது. இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்த வாழ்வுக்கும் இறைவன் நம்மை அழைத்துச் செல்கிறார். முழுமையான விடுதலை இறைவனிடமிருந்தே வருகின்றது. இந்த உண்மைகளை இன்றைய நாள் நமக்கு ஆழமாக எடுத்துக்கூறுகின்றது. உயிர்ப்பின் மகிமையில் நாமும் பங்குபெற அழைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும் பாஸ்காத் திருவிழிப்பு சடங்கினில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்
விடுதலைப்பயணம் 14:15-15:1

ஆண்டவர் மோசேயை நோக்கி, ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.16 கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.17 நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.18 பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர் என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர் என்றார்.19 இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.20 அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.21 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.22 வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.23 எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.24 பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.25 அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார் என்றனர்.26 ஆண்டவர் மோசேயை நோக்கி, நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு என்றார்.27 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.28 திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.29 ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.31 எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்

பல்லவி: அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
திருப்பாடல்கள் 118:1-2, 16-17, 22-23

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!


உம் மாபெரும் மாட்சியால் உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்
விடுதலைப்பயணம் 15:1-6, 17-18

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.2 ஆண்டவரே என் ஆற்றல்: என் பாடல். அவரே என் விடுதலை: என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.3 போரில் வல்லவர் ஆண்டவர்: ஆண்டவர் என்பது அவர் பெயராம்.4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்: அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்: ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. 6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது: ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.17 ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.18 ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்
உரோமையருக்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 6:3-11

3 திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?4 இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.5 அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.6 நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும்.7 ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?8 கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.9 இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.10 அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:1-12

1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;2 கல்லறை வாயிலிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, ' உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.7 மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே ' என்றார்கள்.8 அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு9 கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.11 அவர்கள் கூற்றுவெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.12 ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


விசுவாசிகள் மன்றாட்டுகள்:

நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இஸ்ராயேலரை விடுவிக்க மோசேக்கும், ஆரோனுக்கும் ஆற்றல் அளித்த இறைவா!

உம்மில் நம்பிக்கை கொண்டு, உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ் ஆயர்கள் , குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாகவும்; உமது திட்டங்களை சரியான நேரத்தில் சரியான முறையில் விளக்கிக் கூறுபவர்களாகவும் இருக்கவும்: தூய ஆவியின் அருளையும் உடல் நலனையும் அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உம் திருமகன் இயேசுவே உலகின் மீட்பர் என்பதை உலகம் எல்லாம் கண்டுணரவும் விடுதலையின் பாதையில் இயேசுவின் உயிர்ப்பின் ஆற்றலை அனைவரும் அனுபவமாய் பெற்றிட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

பணிவிடை செய்ய நாம் தயங்கலாகாது, என்பதை எடுத்துரைக்கத்தான் யேசு அன்று தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு தன்னுடைய சீடர்களுக்கு பணிவிடை செய்தார். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நண்பர்களுக்கு, நம்முடைய உறவினர்களுக்கு ஏன் நம்முடைய எதிரிகளுக்கும் கூட பணிவிடை செய்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை அருள்பவராம் இறைவா,

இறைத் தந்தையே உமது மக்கள் குருத்துவத்தின் மேன்மையை உணர்ந்து இறை அழைத்தலுக்குத் தம் பிள்ளைகளை அர்ப்பணிக்கவும், குருக்களை அன்புடன் இயேசுவின் சீடர்களாக மதித்து வாழ்ந்திட வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை

பெண்கள் உயிர்ப்பின் சாட்சிகள் !

பெண்களைப் பெருமைப்படுத்தும் இயேசுவின் பண்பை அவரது உயிர்ப்பின் நிகழ்விலும் பார்க்கிறோம். இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பின் வேளையில், ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, பெண்கள் மட்டுமே இறுதிவரையில் அவருடன் இருந்தனர். இறந்தபின்னும் அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் அவர்களே ஈடுபட்டனர். அன்பு சாவையும் வெல்லும் என்பதை எண்பித்த அவர்களது பேரன்புக்குப் பரிசாக, உயிர்த்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கே காட்சி தருகிறார். மகதலா மரியாவும் அப்பெண்களில் ஒருவர். தனது சீடர்களுக்கு உயிர்ப்பின் செய்தியை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக இயேசு அவர்களை அனுப்புகிறார். பெண்கள் நற்செய்தியாளர்களா, மறைபரப்புப் பணியாளர்களாகச் சிறப்புடன் பணியாற்ற முடியும் என்பதை திருச்சபை அனுபவத்தில் உணர்ந்துள்ளது. எனவேதான், கடல் கடந்து நற்செய்திப் பணியாற்றிய புனித சவேரியாருக்கு இணையாக, தனது கன்னியர் இல்லத்தின் நான்கு சுவர்களைத் தாண்டாத புனித குழந்தை தெரசாளை மறைபரப்புப் பணியின் பாதுகாவலியாக அறிவித்துள்ளது. பெண்களின் இறைப்பற்றையும், நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தையும், அவர்களின் அன்பின் ஆழத்தையும் இன்று பாராட்ட முன்வருவோம்.
மன்றாட்டு:

பெண்மையைப்; போற்றிய நாயகனே இறைவா, உமது உயிர்ப்பின் முதல் சாட்சிகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பெருமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைப் போல நாங்களும், பெண்களை மாண்புடன் நடத்த அருள்தாரும்.

ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி. திருவழிப்பாட்டு ஆண்டு C (29-03-2013)

திருப்பலி முன்னுரை
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்: உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித வெள்ளி. நம் ஆண்டவர் இயேசுவின், பாடுகள், மரணம் ஆகியவற்றை இன்று நாம் நினைவு கூருகின்றோம். இயேசு நமக்காகச் சிலுவைச் சாவை ஏற்று மரணித்த நாள், நாம் வாழ்வுபெற தன் வாழ்வையே கொடுத்த நாள்.

நமது துரோகத் தனங்களுக்காக அவமானத்தையும், வேதனைகளையும், அனுபவித்த நாள். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த நாள், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்ட நாள், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்ட நாள். பாவத்தின் விளைவு மரணம். அதிலும் இறைமகன் இயேசுவின் பாடுகளும், வேதனைகளும் நிறைந்த சிலுவை மரணம் பாவத்தின் கொடூரத்தை உலகிற்கு பகிரங்கமாய் காட்டுகின்றது.

நாமும் நம் பாவங்களுக்காய் இறப்போம். அப்போதுதான் எங்கும் பாவம் வலுவிழந்து வீழ்ந்து போகும். எனவே இறைவனின் வார்த்தையைக் கேட்டு, தேவையுள்ளோருக்கு பணிவிடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம். தொடரும் இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.


முதல் வாசகம்
அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 52:13-43:12

13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:3 அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.7 அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்: அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்: ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்: கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்: ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
பல்லவி: தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
திருப்பாடல்கள் 31:1,5, 11-12,14-15, 24
1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.

5 உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். 12 இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; 'நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.


அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:14-16; 5:7-9

14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: எனினும் பாவம் செய்யாதவர்.16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக..7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.9 அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு, ' எல்லாம் நிறைவேறிற்று ' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:1 - 19:42
1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.4 தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, ' யாரைத் தேடுகிறீர்கள்? ' என்று கேட்டார்.5 அவர்கள் மறுமொழியாக, ' நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம் ' என்றார்கள். இயேசு, ' நான்தான் ' என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.6 ' நான்தான் ' என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.7 ' யாரைத் தேடுகிறீர்கள்? ' என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், ' நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம் ' என்றார்கள்.8 இயேசு அவர்களைப் பார்த்து, ' ″ நான்தான் ″ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள் ' என்றார்.9 ' நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை ' என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.11 இயேசு பேதுருவிடம், ' வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ? ' என்றார்.

12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.14 இந்தக் கயபாதான், ' மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது ' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். 15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.16 பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.17 வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், ' நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே? ' என்று கேட்டார். பேதுரு, ' இல்லை ' என்றார்.18 அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். 19 தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார்.20 இயேசு அவரைப் பார்த்து, ' நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை.21 ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே ' என்றார்.22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ' தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ' என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.

25 சீமோன் பேதுரு அங்க நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், ' நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே ' என்று கேட்டனர். அவர் ' இல்லை ' என்று மறுதலித்தார்.26 தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், ' நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா? ' என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.27 பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.29 எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, ' நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன? ' என்று கேட்டார்.30 அதற்கு அவர்கள், ' இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம் ' என்றார்கள்.31 பிலாத்து அவர்களிடம், ' நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள் ' என்றார். யூதர்கள் அவரிடம், ' சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது ' என்றார்கள்.32 இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்.33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான்.34 இயேசு மறுமொழியாக, ' நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? ' என்று கேட்டார்.35 அதற்கு பிலாத்து, ' நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? ' என்று கேட்டான்.36 இயேசு மறுமொழியாக, ' எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல ' என்றார்.37 பிலாத்து அவரிடம், ' அப்படியானால் நீ அரசன்தானோ? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் ″ என்றார். 38 பிலாத்து அவரிடம், ' உண்மையா? அது என்ன? ' என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, ' இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே ' என்றான்.39 மேலும், ' பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன? ' என்று கேட்டான்.40 அதற்கு அவர்கள், ' இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும் ' என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

1 பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.2 வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.3 அவரிடம் வந்து, ' யூதரின் அரசே வாழ்க! ' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், ' அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள் ' என்றான்.5 இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்' என்றான்.6 அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், ' சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், ' நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ' என்றான்.7 யூதர்கள் அவரைப் பார்த்து, ' எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான் ' என்றனர்.8 பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.9 அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், ' நீ எங்கிருந்து வந்தவன்? ' என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.10 அப்போது பிலாத்து, ' என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா? ' என்றான்.11 இயேசு மறுமொழியாக, ' மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன் ' என்றார்.12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், ' நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி ' என்றார்கள்.13 இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். ' கல்தளம் ' என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ' கபதா ' என்பது பெயர்.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.15 அவர்கள், ' ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், ' உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், ' எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை ' என்றார்கள்.16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ' மண்டை ஓட்டு இடம் ' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.18 அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.23 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.24 எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ' அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம் ' என்றார்கள். ' என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள் ' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ″ அம்மா, இவரே உம் மகன் ″ என்றார்.27 பின்னர் தம் சீடரிடம், ″ இவரே உம் தாய் ″ என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.28 இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, ' தாகமாய் இருக்கிறது ' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.29 அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, ' எல்லாம் நிறைவேறிற்று ' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.35 இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.36 ' எந்த எலும்பும் முறிபடாது ' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.37 மேலும் ' தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள் ' என்றும் மறைநூல் கூறுகிறது.38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக் கொண்டு போனார்.39 முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.41 அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.42 அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இறைமக்கள் மன்றாட்டுகள்

விசுவாசிகளின் மன்றாட்டு முன்னுரை:

நமக்காக பலியாகி நம்முடைய தேவைகளுக்காக தந்தையிடம பரிந்துரைத்து செபிக்க இயேசு சிலுவையில் கரங்களை விரித்துள்ளார். எனவே இத்தகைய சக்தி வாய்ந்த இணைப்பாளராக இயேசுவைப் பெற்றுள்ள இந்த வேளையில் நம் செபம் கட்டாயம் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் திருச்சபை 10 பெரிய மன்றாட்டுகளைச் செபிக்கிறது. ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் ஆண்டவரை எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று பாடி செபிப்போம்.

1. அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்கு அமைதியும் ஒற்றுமையும் அளித்து, அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும், நாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்: நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்து, அது உலகெங்கும் பரவி, உறுதியான விசுவாசம் கொண்டு, உமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

2. நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.

தலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர் எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக. இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன. உமது அதிகாரத்தினால் ஆளப்படும் கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டு, திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி அவரைப் பரிவுடன் காத்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக:

நம் ஆயர் (பெயர்...)க்காகவும், திருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள், குருக்கள், திருத் தொண்டர்க்காகவும், விசுவாசிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோமாக. மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது. உம்முடைய திருப்பணியாளர்கள் அனைவர்க்காகவும் நாங்கள் செய்யும் செபத்தை கனிவோடு கேட்டருளும். எல்லா நிலையினரும் உமது அருள்துணையால் உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக:

திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராக் இவ்வாறு அவர்கள், புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால், பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, புதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர். திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவும் வளரச் செய்தருளும். இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்து, தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக:

கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோம். நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையும் உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, பிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே. உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும். ஒரே திருமுழுக்கினால் திருநிலைப்படுத்தப்பெற்ற அனைவரையும், விசுவாசத்தின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. யூத மக்களுக்காக மன்றாடுவோம்:

முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், தமது திருப்பெயரின் மீதுள்ள அன்பிலும் தமது உடன்படிக்கை மீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, ஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூரும். உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்து, முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள் உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்:

இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடு நடந்து, உண்மையைக் கண்டடைவார்களாக. நாங்களும் உம் வாழ்வின் மறையுண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக. மேலும் உமது அன்புக்கு இவ்வுலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு, ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவும், பிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவு கொண்டு ஒழுகவும் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

8. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்:

இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, உண்மைக் கடவுளைக் கண்டடையுமாறு மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும், உம்மை அடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர். இவ்வுலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூறுகளுக்கு நடுவிலும், அவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையும், உம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்ந்து, உம்மை ஒரே மெய்யங்கடவுள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

9. நாடுகளை ஆளும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியும் உரிமை வாழ்வும் பெறும்பொருட்டு, நம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவுளப்படி இவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர். உலகமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் வளமான வாழ்வும் சமய உரிமையும் நிலைபெறுமாறு, எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி, அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

10. அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, துன்புறும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும், பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு.

பின்பு குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, துயருற்றோர்க்கு ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும். இவர்கள் தங்கள் தேவைகளில் நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

இன்றைய சிந்தனை
''இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவான் 19:30)

இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல இறந்தார். சிலர் அவரை அரசியல் குற்றவாளியாக, சமயக் கொள்கைகளை மறுத்த துரோகியாகப் பார்த்தார்கள். நாட்டிற்கும் சமயத்திற்கும் எதிராகச் செயல்படுவோர் சரியான தண்டனை பெறவேண்டும் எனக் கருதியோர் இயேசுவின் சாவு பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் இயேசுவின் வரலாற்றில் மனித ஆட்கள் மட்டுமே செயல்படவில்லை. இயேசுவின் வரலாறு கடவுள் இவ்வுலகில் மக்களோடு செய்துகொண்ட அன்பு உடன்படிக்கையின் தொடர் வரலாறு. எனவே, கடவுளிடமிருந்து வந்த இயேசு தம் சொந்த விருப்பப்படி செயல்படாமல் தம்மை அனுப்பிய தந்தையின் விருப்பப்படியே செயல்பட்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசு தம் சொல், செயல், பணி வழியாக மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்து உணர்ந்த மனிதர் பலர் இருந்தனர். இயேசு யார் என்பதை அவர்கள் படிப்படியாக அறிந்துகொண்டார்கள். இயேசு ஆற்றிய பணியின் இறுதிக்கட்டம் அவருடைய சிலுவைச் சாவு ஆகும். அதே நேரத்தில் இயேசுவின் பணி முழுமைபெற்றதும் சிலுவையில்தான். எனவே, ''எல்லாம் நிறைவேறிற்று'' என இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறிய சொற்களை நாம் இரு விதங்களில் புரிந்துகொள்ளலாம். கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்தார் என்பது ஒரு பொருள். இயேசு ஆற்றிய பணி தன் முழுமையை எய்தியது சிலுவையில் என்பது மறு பொருள். ஆக, இயேசு நிறைவேற்றிய பணி தன்னிலே முழுமைபெற்றது என்றாலும் அதன் பயன்கள் நம்மை வந்தடைய வேண்டும் என்றால் நாமும் இயேசுவின் பணியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். -- சிலுவைச் சாவு இயேசு பெற்ற புதுவாழ்வுக்கு வழியாக அமைந்தது. எனவே, சிலுவையில் உயிர்துறந்த இயேசு ஏதோ ஒன்றை இழந்தவர்போல அல்லாமல் நமக்குத் தம்மையே மனமுவந்து கையளித்தார் என்பதே பொருத்தம். தம்மை நமக்குக் கையளித்த இயேசு தம் ''ஆவியை ஒப்படைத்தார்''. ஆவி என்பது உயிர்மூச்சைக் குறிக்கும். நாம் மூச்சுவிடும்போது உயிரோடு இருக்கிறோம் என்பது பொருள். மூச்சு நின்றுபோகும் வேளையில் உயிரும் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுகிறது. எனவே, இயேசு நமக்கு வழங்குகின்ற ''ஆவி'' அவர் நமக்குத் தருகின்ற உயிரைக் குறிக்கிறது. இயேசுவின் ஆவியைப் பெற்ற நாம் உயிர் வாழ்கிறோம். நமக்குப் புது வாழ்வு வழங்கப்பட்டது. எனவே இயேசுவின் சாவு குறித்து நாம் துயரப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைய வேண்டும் எனலாம். நாம் பெற்ற வாழ்வைப் பிறரோடு பகிர்வது நம் பொறுப்பு.

மன்றாட்டு:
இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற புதுவாழ்வுக்கு நன்றி!
புனித வியாழன் ஆண்டவரின் இராவுணவு
திருவழிப்பாட்டு ஆண்டு C (28-03-2013)
www.tamilcatholicnews.com
 
திருப்பலி முன்னுரை
அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள். இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று புனித வியாழன். இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார்.

தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன். நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை, நமது ஆளுமையை, பணத்தை, செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும், தேவையுள்ளோருக்கு பணிவிடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம். தொடரும் இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
 
முதல் வாசகம்
இது ஆண்டவரின் பாஸ்கா 
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14
 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.4 ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.5 ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.6 இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.7 இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.8 இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.11 நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ஆண்டவரின் பாஸ்கா .12 ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!13 இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.14 இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
 
பதிலுரைப் பாடல்
பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே 
திருப்பாடல்கள் 116:12-13, 15-18
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். 

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர். 

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்
 
இரண்டாம் வாசகம்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 11:23-26
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார்.25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார்.26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15
பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்.2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில்,3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ' ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார்.7 இயேசு மறுமொழியாக, ' நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார்.8 பேதுரு அவரிடம், ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார்.9 அப்போது சீமோன் பேதுரு, ' அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும் ' என்றார்.10 இயேசு அவரிடம், ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார்.11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார்.12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?13 நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
 
விசுவாசிகள் மன்றாட்டுகள்:

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: என்கிறார் ஆண்டவர். 

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
 
பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ், அவரோடு இணைந்து பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், இறைமக்களை ஒருவருக்கொருவர் பணிபுரிந்து வாழ்பவர்களாக வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பின் இறைவா!
நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுமையாக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வல்லமை மிகுந்தவராம் இறைவா,
நான்தான் பெரியவன், தலைவன். என்னை நீங்கள் எல்லோரும் வணங்கி நிற்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும்.. என்றெல்லாம் நம்மில் எத்தனை பேர் இறுமாப்புடன் பேசுகிறோம்? நடந்துக்கொள்கிறோம்? நமக்கு உண்மையிலேயே அதற்கு அருகதை இருக்கிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பார்த்து எங்கள் வாழ்வில் மனமாற்றம் உண்டாக வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா,
உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதன்





முதல் வாசகம்



நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9ய



நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார். என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)



பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி



20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். பல்லவி



30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்



எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே. அல்லது பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.





நற்செய்தி வாசகம்



மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.



+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

அக்காலத்தில் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ``இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.



புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள்.



இயேசு அவர்களிடம், ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், `எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்'' என்றார்.



இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.



மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.



அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ``ஆண்டவரே, அது நானோ?'' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ``என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார்.



அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ``ரபி, நானோ?'' என அவரிடம் கேட்க, இயேசு, ``நீயே சொல்லிவிட்டாய்'' என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

25 March 2013

செவ்வாய்





முதல் வாசகம்



உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6



தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார்.



அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 71: 1-2. 3-4. 5-6. 15,17 (பல்லவி: 15ய)

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.



1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி



3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி



5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி



15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்



பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.





நற்செய்தி வாசகம்



உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்... நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38



அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.



இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.



சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ``யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்'' என்றார்.

இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ``ஆண்டவரே அவன் யார்?'' என்று கேட்டார்.



இயேசு மறுமொழியாக, ``நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்'' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.



இயேசு அவனிடம், ``நீ செய்ய இருப்பதை விரைவில் செய்'' என்றார்.



இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.



யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.



அவன் வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்'' என்றார்.



சீமோன் பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்'' என்றார்.



பேதுரு அவரிடம், ``ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார்.



இயேசு அவரைப் பார்த்து, ``எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
புனித வாரம் திங்கள்


புனித வாரம் திங்கள்




முதல் வாசகம்



அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7



ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி



2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி



3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி



13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்



எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.





நற்செய்தி வாசகம்



மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11



பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.



மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.

இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, ``இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டான்.



ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.



அப்போது இயேசு, ``மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை'' என்றார்.



இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

22 March 2013

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
குருத்தோலைப் பவனி

நற்செய்தி வாசகம்

மூன்றாம் ஆண்டு

ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களிடம், ``எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், `ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்'' என்றார்.
அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், ``கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், ``இது ஆண்டவருக்குத் தேவை'' என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள்.
இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:
``ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!'' என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, ``போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்'' என்றனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, ``இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை மட்டும் வாசிக்கலாம்.
அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும் விட்டுவிடலாம்.
மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம். மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே பொருந்தும்.


முதல் வாசகம்

 நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 22: 7-8. 16-17ய. 18-19. 22-23 (பல்லவி: 1ய)

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி


இரண்டாம் வாசகம்

 கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

பிலி 2: 8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.


நற்செய்தி வாசகம்

மூன்றாம் ஆண்டு

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.

(காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண் 22)

லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 22: 14 - 23: 56

இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தபின் நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.

அப்போது அவர் அவர்களை நோக்கி, ``நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ``இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார்.

அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ``இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு'' என்றார்.

அப்பொழுது அவர்கள், ``நம்மில் இச்செயலைச் செய்யப்போகிறவர் யார்'' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், ``பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.

``சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'' என்றார்.

அதற்குப் பேதுரு, ``ஆண்டவரே, உம்மோடு சிறையிலிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்'' என்றார்.

இயேசு அவரிடம், ``பேதுருவே, இன்றிரவு, `என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இயேசு சீடர்களிடம், ``நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார்.

அவர்கள், ``ஒரு குறையும் இருந்ததில்லை'' என்றார்கள்.

அவர் அவர்களிடம், ``ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன'' என்றார்.

அவர்கள், ``ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன'' என்றார்கள்.

இயேசு அவர்களிடம், ``போதும்'' என்றார். இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார்.

சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ``சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,'' என்றார்.

பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்: ``தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.

அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர்களிடம், ``என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார்.

இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.

இயேசு அவனிடம், ``யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக்கொடுக்கப் போகிறாய்?'' என்றார்.

அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ``ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?'' என்று கேட்டார்கள்.

அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``விடுங்கள், போதும்'' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.

அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ``ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது'' என்றார்.

பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.

பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.

அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ``இவனும் அவனோடு இருந்தவன்'' என்றார்.

அவரோ, ``அம்மா, அவரை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ``நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்றார்.

பேதுரு, ``இல்லையப்பா'' என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், ``உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்'' என்று வலியுறுத்திக் கூறினார்.

பேதுருவோ, ``நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது'' என்றார்.
உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: ``இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவைப் பிடித்து வைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி, ``உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்'' என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.

பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ``நீ மெசியாதானா? எங்களிடம் சொல்'' என்று கேட்டார்கள்.

அவர் அவர்களிடம், ``நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்லமாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்'' என்றார்.

அதற்கு அவர்கள் அனைவரும், ``அப்படியானால் நீ இறைமகனா?'' என்று கேட்டனர். அவரோ, ``நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்'' என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள், ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே'' என்றார்கள்.

திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். ``இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்'' என்று அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.

பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க, அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார். பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ``இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை'' என்று கூறினான்.

ஆனால் அவர்கள், ``இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்'' என்று வலியுறுத்திக் கூறினார்கள். இதைக் கேட்ட பிலாத்து, ``இவன் கலிலேயனா?'' என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.

ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர். பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.

அவர்களை நோக்கி, ``மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.

விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.
திரண்டிருந்த மக்கள் அனைவரும், ``இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்'' என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.

பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்'' என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ``இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.

அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.

அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.

பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.

இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ``எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!'' என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, ``தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார்.
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.
``இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், ``நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
``தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்'' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )

இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ``இவர் உண்மையாகவே நேர்மையாளர்'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.
அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்துவிட்டு, திரும்பிப்போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

அல்லது

குறுகிய வாசகம்

லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 23: 1-49

மூப்பர் சங்கத்தின் முன் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். ``இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்'' என்று அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க, அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ``இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை'' என்று கூறினான்.
ஆனால் அவர்கள், ``இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்'' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, ``இவன் கலிலேயனா?'' என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, ``மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. திரண்டிருந்த மக்கள் அனைவரும், ``இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்'' என்று கத்தினர்.
பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
ஆனால் அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்'' என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ``இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ``எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!'' என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, ``தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.
``இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்'' என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், ``நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
``தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்'' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )

இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ``இவர் உண்மையாகவே நேர்மையாளர்'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


2013 Mar 24 SUN: PALM SUNDAY OF THE LORD'S PASSION

Procession: Lk 19: 28-40.
Mass: Is 50: 4-7/ Ps 22: 8-9. 17-18. 19-20. 23-24/Phil 2: 6-11/ Lk 22: 14 – 23: 56

இறைமகன் இயேசு அமைதியின், அடக்கத்தின், சமாதானத்தின் வேந்தனாய் எளிமையின் மொத்த உருவமாய் கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து எருசலேமில் பவனி வருகின்றார். ‘ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் வாழி’  என்று மக்கள் மகிழ்ச்சி ஆரவார வெள்ளத்தில் மூழ்கினர். கிறிஸ்து அரசர் வாழ்க என்று ஓசான்னா வெற்றி கீதம் பாடும் வெறும் கூட்டமாக நின்று விடாமல் இயேசுவின் மனநிலைகளான எளிமை, தாழ்ச்சி, இறைதிட்டத்தை ஏற்கும் பணிவு, எதையும் தாங்கும் துணிவு இவையனைத்தும் நம் உரிமைச் சொத்தாகட்டும். நம் சமூகத்தின் ஓருங்கிணைந்த முன்னேற்ற திட்டங்களுக்கு பாதையாகட்டும்.



முன்னுரை:

பாஸ்கா மறைபொருளை நிறைவேற்ற எருசலேம் நகருக்குள் கிறிஸ்த நுழைந்ததை தாயாம் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நாற்பது நாட்களின் தவவாழ்வுக்குப்பின்னர் இந்த பவனியை மேற்கொண்டு நாமும் கிறிஸ்துவோடு புனித வாரத்திற்குள் நுழைகின்றோம்.

பவனியாக அழைத்து சென்ற மக்களே, ஓசான்னா பாடிய திருக்கூட்டமே, இவன் வேண்டாம் என்றும், ஓழிக ஓழிக என்றும், சிலுவையில் அறையும் என்றும் கத்தி கூச்சல் எழுப்புகின்றனர். கூச்சல் வெற்றி கண்டது. இன்றும் கூச்சல் வெற்றி காண்கிறது. ஆனால் நியாயத்திற்காக, அநியாயத்திற்காகவா என்பதுவே நம்முடைய கேள்வி.  நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்கள் பொதுவாக கூச்சல் எழுப்புவது இல்லை என்பதுவும் நாம் அறிந்ததே. அப்படியென்றால் கூச்சல் நடக்கின்ற இடமெல்லாம் அநியாயம் நடக்கின்ற இடமென்று சொல்லலாமா? இந்த சிந்தனையோடு பங்கேற்று பயன் பெறுவோம்.

நாமும் இன்று ஏற்படுத்திய ஓசான்னா என்ற கீதங்கள், கூச்சல் தானா? இல்லை உணர்வுபூர்வமானதா? சிந்திப்போம்.



மன்றாட்டு:

புனித வாரத்திற்குள் பயணிக்கும் திருச்சபை துன்புறும் மக்களோடு, தங்களை ஐக்கியப்படுத்தி கொண்டு, பணிகளை அத்தகையோருக்கு துணையாக இருந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதிய தலைமையின் கீழ் பயணிக்கும் திருச்சபைக்கு உம் ஆவியின் துணை தந்து, காலத்திற்கு ஏற்பவும், உம்முடைய திருவளத்திற்கு பணிந்தும் தங்களது பயணத்தை இனிதே தொடர்ந்து ஆத்துமாக்களை உம்பாதத்தில் கொணர வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் துணை போகாமல், அறச்சினத்துடனே, ஏழை எளிய மக்களின் ஏற்றமான வாழ்விற்கு துணை நிற்கின்ற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாடுகளை தியானிக்கும் நாங்கள், கடமையென கருதாமல், இன்று பல காரணங்களால் தன்புறும் மக்களோடு துணையிருந்து ஆறுதல் தந்து உடனிருப்பின் வழி உம்முடைய அன்பினை அவர்கள் உணரச் செய்ய வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.