புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 May 2013

திருப்பலி முன்னுரை

தந்தையாம் இறைவனின் அன்புப் பிள்ளைகளாய் திருமகன் இயேசுவோடும்; தூய ஆவியோடும் இன்றைய ஞாயிறு வழிபாட்டில் இறைவனோடு ஒன்றிணைய அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையம் மூவொரு இறைவனின் பெருவிழா வாழ்த்துக்களைக்கூறி வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

திருப்பலியில் பங்கேற்கும்போதெல்லாம் நம்மை அன்புடன் வாழ்த்தும் அன்னையாம் திருச்சபை திருமகன் இயேசுவின் அருளும்; தந்தையாம் இறைவனின் அன்பும்; தூய ஆவியின் நட்புறவும் நாம்பெற வாழ்த்தி வரவேற்கிறது.

இயேசுக் கிறீஸ்துவின் மேல்; வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். நாம் பெற்றுள்ள தூயஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்னும் ஆசீர்வாத வாக்குத்தங்களை இன்றைய வார்த்தைகள் வழியாக இறைவன் உறுதிப்படுத்துகின்றார். இத்தினத்தைக் கொண்டாடும் நாமனைவரும் நம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி இறைவனை மகிமைப்படுத்தும் சக்தியை இறைவனிடம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.


முதல் வாசகம்
தொடக்கத்தில் புவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
நீதிமொழிகள் 8;22-31

இறைவனின் ஞானம் கூறுவது ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். 23 தொடக்கத்தில் புவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். 24 கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. 25 மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். 26 அவர் ப+வுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். 27 வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். 28 உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். 29 அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, ப+வுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, 30 நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். 31 அவரது ப+வுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
பல்லவி: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
திருப்பாடல்கள் 8;3-8
3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,பல்லவி

4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.பல்லவி

6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.


நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம் - 5;1-5

சகோதர சகோதரிகளே நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2 நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3 அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4 மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5 அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:12-15

அக்காலத்தில் யேசு தம் சீடர்களுக்கு கூறியது "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

“முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்”

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்பே உருவான இறைவா,
திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

எங்களை முடிவில்லாத வகையில் அன்பு செய்யும் இயேசுவே,
உம்மைப் போற்றுகிறோம். நீர் தருகின்ற தூய ஆவி என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அந்த ஆவியால் நாங்கள் நிரப்பப்பட்டு, உம்மை மாட்சிப்படுத்தும் அருளை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான தந்தையே இறைவா!
உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது ஆவியால் இயக்கப்பட்டு, உமது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து உம் சீடர்களாக வாழ அருள்தர வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!
எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை


''இயேசு சீடர்களை நோக்கி, ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' என்றார்'' (யோவான் 16:12)

யோவான் நற்செய்தியில் இயேசு தம்மை ''உண்மை'' என அறிமுகப்படுத்துகிறார். இயேசுவைப் பற்றிய உண்மையை நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவதோடு, அந்த உண்மையை நம் வாழ்வில் இணைத்துப் பொருள் புரிந்திட அதே தூய ஆவி நமக்கு வழிகாட்டவும் செய்வார். இங்கே இயேசு தம்மை ''வழி'' என்று கூறியதையும் நாம் நினைவுகூரலாம். ஆக, ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவைப் போல நம்மிடையே இருந்து செயலாற்றுகிறார் எனலாம். எனினும் தூய ஆவி இயேசுவின் இடத்தில், இயேசுவுக்குப் பதிலாக நம்மிடையே உள்ளார் என நாம் முடிவுகட்டுதல் சரியல்ல. தூய ஆவியின் செயல் இயேசுவைப் பற்றிய உண்மையை நாம் அறிந்துகொள்ள துணையாக வரும். இயேசுவின் உடனிருப்பு நம் வாழ்வில் துலங்கிட தூய ஆவி துணையாவார். கடவுளைச் சென்றடைகின்ற வழியை இயேசு நமக்குக் காட்டியதுபோல, தூய ஆவி இயேசு பற்றிய ''உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார்''.

கடவுளின் அன்பை நமக்கு இயேசு வெறும் சொல்லால் வெளிப்படுத்தவில்லை. இயேசுவின் வாழ்வும், சாவும், உயிர்த்தெழுதலும் கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அந்த வெளிப்பாடு தொடர்ந்து நம் வாழ்விலும் உலக வரலாற்றிலும் நிகழ்ந்திட தூய ஆவி துணையாக நிற்கிறார். எனவே, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாமும் ஆழமாக அறிந்திட, அந்த அறிவின் அடிப்படையில் நடந்திட நமக்கு வழிகாட்டியாக தூய ஆவி இருக்கிறார். எனவே, தூய ஆவியின் செயல்பாட்டை நாம் வரலாற்றில் காணலாம்; திருச்சபையின் வாழ்வில் காணலாம்; நம்பிக்கை கொண்டோர், நல் மனது கொண்டோர் அனைவரின் அனுபவத்திலும் காணலாம். தூய ஆவியின் செயல்பாட்டைக் கண்டுகொள்வதும், அவர் காட்டுகின்ற வழியில் நடப்பதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு:
இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும். 
7ஆம் வாரம்

சனி

முதல் ஆண்டு

முதல் வாசகம்

கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15

ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். தமக்கு உள்ளதைப் போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.

எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.

விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். அவர்களின் உள்ளத்தைப் பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களில் மேன்மையைக் காட்டினார். தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.

அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார். அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. `எல்லா வகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்' என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 103: 13-14. 15-16. 17-18 (பல்லவி: 17ய காண்க)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். 14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. பல்லவி

15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. பல்லவி

17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். 18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

படைப்பிலே மனிதனை தன் சாயலிலே உருவாக்கினார்.

தன் அறிவிலே பங்கு கொடுத்தார். நன்மை தீமை அறியச் செய்தார்.

இச்சாயல் இன்று புதுப் பொழிவு பெற்றுள்ளதா? பகுத்து ஆய்ந்து அறிந்து உயர்வு பெற்றிருக்கின்றோமா? இல்லை பகுத்தறிவை கொண்டு படைத்தவரையே இல்லையென புறக்கணித்து வருகின்றோமா?
7ஆம் வாரம்

வெள்ளி

முதல் ஆண்டு

முதல் வாசகம்

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17

இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.

ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள். உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள். உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள். நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 119: 12,16. 18,27. 34,35 (பல்லவி: 35ய)

பல்லவி: உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். 16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். பல்லவி

18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்லவி

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி

யோவா 17:17 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.

பரிசேயர் அவரை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்'' என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நண்பர்கள் என்றும் பலமே.

அந்த நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ்வதுவே சிறப்பானது.

இதுவே நட்பினை காலமும் கொண்டு செல்லும்.

நண்பர்களாவோம். நம்பிக்கையில் உறுதி பெறுவோம்.