புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 February 2020

புனிதர் அபொல்லோனியா (St. Apollonia)பெப்ரவரி 12

புனிதர் அபொல்லோனியா 
(St. Apollonia)
பெப்ரவரி 12
கன்னியர்/ மறை சாட்சி:
(Virgin & Martyr)

பிறப்பு: இரண்டாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. 249
அலெக்சாண்ட்ரியா, எகிப்து
(Alexandria, Egypt)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
காப்டிக் மரபுவழி திருச்சபை
(Coptic Orthodox Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)

பாதுகாவல்:
பல் மருத்துவர்கள் (Dentists)
பல் சம்பந்தமான பிரச்சினைகள் (Tooth problems)
அச்டேர்போஸ், பெல்ஜியம் (Achterbos, Belgium)
அரிக்கியா, இத்தாலி (Ariccia, Italy)
குக்காரோ மோன்ஃபெர்ரடோ, இத்தாலி (Cuccaro Monferrato, Italy)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 12

புனிதர் அபொல்லோனியா, அலெக்சாண்ட்ரியா (Alexandria) நாட்டில், “ரோமானிய பேரரசின் பேரரசர்” (Emperor of the Roman Empire) “டேசியஸ்” (Gaius Messius Quintus Trajanus Decius) என்பவருடைய ஆட்சிகாலத்தில், கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகத்தின்போது, உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ கன்னியர்களில் ஒருவர் ஆவார். புராணங்களின்படி, துன்புறுத்தலின்போது அவருடைய பற்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. இதன்காரணமாக பல் மருத்துவம், பல் நோய்களால் துன்புறுவோர் மற்றும் இன்னபிற பல் பிரச்சினைகளால் துன்புறுவோருக்கு இவர் பாதுகாவலராவார்.

கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, “பேரரசன் பிலிப்” (Emperor Philip the Arab) ஆட்சியின் கடைசி ஆண்டில், ஒரு அலெக்சாண்ட்ரிய கவிஞர், அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகங்கள் உச்சத்தை எட்டும் என்றும் நாடே இரத்தக்களரியாகும் என்றும் தீர்க்கதரிசனம் சொன்னார். அதன்படியே கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தன. அதனை ஆட்சியாளர்களாலேயே அடக்க இயலாமல் போனது.

அலெக்சாண்ட்ரியாவின் ஆயர் "டயோனிஸிஸ்" (Dionysius, Bishop of Alexandria) அந்தியோக்கியாவின் ஆயர் "பாபியசுக்கு" (Fabius, Bishop of Antioch) எழுதிய கடிதமொன்றில் தமது மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன என்பவற்றை விளக்கி எழுதியிருந்தார். பெண் திருத்தொண்டரான அபொல்லோனியாவை பிடித்து பெண்ணென்றும் பாராமல் அடித்து துன்புறுத்தினர். மீண்டும் மீண்டும் அடித்து அவரது பற்கள் முழுவதையும் உடைத்துப் பிடுங்கினர். அவரையும் இன்னும் பல கன்னியரையும் நகருக்கு வெளியே அமைத்திருந்த விறகுக் குவியலினருகே இழுத்துச் சென்றனர். விறகுக் குவியலுக்கு தீ மூட்டினர். அவர்கள் சொல்லும் தூஷண வார்த்தைகளை சொல்லச் சொல்லி வற்புறுத்தினர். கிறிஸ்துவுக்கு எதிராக வசை பேசவோ அல்லது அவர்களது தெய்வங்களை போற்றி பிரார்த்தனை செய்யவோ வற்புறுத்தினர். அல்லது உயிருடன் தீக்கிரையாக்குவதாக பயமுறுத்தினர். அபொல்லோனியாவின் வேண்டுதலுக்கிணங்க தமது பிடியிலிருந்து அவரை சிறிதே விடுவித்தனர். அபொல்லோனியா கண்ணிமைக்கும் நேரத்தில் கொளுந்து விட்டெரியும் தீக்குள் குதித்து உயிருடன் எரிந்து உயிர்விட்டார்.

ஃபெப்ரவரி 11 புனிதர் முதலாம் பாஸ்கால் St. Paschal

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 11)

✠ புனிதர் முதலாம் பாஸ்கால் ✠
(St. Paschal I)
98ம் திருத்தந்தை:
(98th Pope)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

பிறப்பு: கி.பி. 775
ரோம், திருத்தந்தை மாநிலம்
(Rome, Papal States)

இறப்பு: ஃபெப்ரவரி 11, 824
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 11

புனிதர் முதலாம் பாஸ்கால், கி.பி. 817ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாள் முதல், கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள்வரை, கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்த இவர், கத்தோலிக்க திருச்சபையின் 98ம் திருத்தந்தை ஆவார். பாஸ்கால் என்னும் பெயர் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன். ஆகிய மொழிகளில் "உயிர்த்தெழுதல் சார்ந்த" என்று பொருள்படும்.

ஆரம்ப வாழ்க்கை:
“பாஸ்கால் டேய் மஸ்ஸிமி” (Pasquale dei Massimi) எனும் இயற்பெயர் கொண்ட பாஸ்கால், பிறப்பினால் ரோம் நகரைச் சார்ந்தவர். அவருடைய தந்தை பெயர் “போனோசஸ்” (Bonosus). தாயார் "எபிஸ்கோபா தியோடரா" (Episcopa Theodora) ஆவார். இளமைப் பருவத்திலேயே அவர் ரோம குருகுலத்தில் சேர்ந்தார். இலாத்தரன் அரண்மனையில் இருந்த கல்விக்கூடத்தில் திருப்பணியிலும் விவிலியப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். துணைத் திருத்தொண்டராக துறவு வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கத்தோலிக்க குருவாகவும், திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo III) காலத்தில் "புனித ஸ்டீஃபன் துறவு மடத்தின்" (Monastery of St. Stephen of the Abyssinians) மடாதிபதியாகவும் பணியாற்றினார். அப்போது ரோமுக்கு திருப்பயணமாக வந்த மக்களுக்கு அவர் பணிபுரிந்தார். திருத்தந்தை “மூன்றாம் லியோ” (Pope Leo III) இவரை கர்தினாலாக (Cardinal of Santa Prassede) உயர்த்தினார்.

திருத்தந்தையாக நியமனம்:
திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் (Stephen IV) காலமான (ஜனவரி 24, 817) உடனேயே பாஸ்கால் திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் (கி.பி. 817 ஜனவரி 25) அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்; திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.

பேரரசரோடு உறவு:
பேரரசர் லூயிஸுடன் (Emperor Louis the Pious) தமக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதைக் காட்டும் வகையில் திருத்தந்தை பாஸ்கால் பல தூதுவர்களை அனுப்பினார். பேரரசர் லூயிஸும் கி.பி. 817ல் "லூயிஸ் ஒப்பந்தம்" என்னும் ஆவணத்தை எழுதி, திருத்தந்தைக்கு அனுப்பி, திருத்தந்தை தம் ஆட்சிப்பீடத்தை முறையாக ஏற்றுக்கொண்டார் என்று அங்கீகாரம் வழங்கினார். அந்த ஆவணம் இன்றும் உள்ளது.

லூயிஸ் மகன் “லோத்தேர்” (Lothair) திருமணம் செய்துகொண்டபோது, திருத்தந்தை தூதுவர்கள் வழியாக அவருக்குப் பரிசுகள் அனுப்பினார். கி.பி. 823ம் ஆண்டு வசந்த காலத்தில் “முதலாம் லோத்தேர்” (Lothair I) ரோமுக்குச் சென்றார். அங்கு ஏப்ரல் மாதம், 5ம் நாள் திருத்தந்தை பாஸ்கால், முதலாம் லோத்தேரை இத்தாலியின் அரசனாக அறிவித்து, ஆடம்பரமாக அவருக்கு முடிசூட்டினார்.

சுருப வணக்கம் முறையானது என்னும் போதனை:
பாஸ்காலின் ஆட்சி காலத்தில், ரோம் நகரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. “பைசன்டைன் பேரரசில்” (Byzantine Empire) சொரூப வணக்கத்தை எதிர்ப்போரை எதிர்த்ததன் காரணத்தாலும், “மொசைக் கலைஞர்களை” (Mosaic artists) ரோம் வரவழைத்து தேவாலயங்களை அலங்கரிக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த ““பைசன்டைன் பேரரசன் இரண்டாம் மைக்கேல் (Byzantine Emperor Michael II), இவற்றை நிறுத்த முயற்சிக்குமாறு ஃப்ரான்கிஷ் மன்னன் லூயிசுக்கு (Frankish King Louis the Pious) கடிதம் எழுதினான்.

இதன் காரணத்தால், துன்புறுத்தப்பட்ட துறவியர் நாடுகடத்தப்பட்டனர். லியோவால் சட்டமுறைக்கு எதிராக காண்ஸ்டாண்டிநோபுளின் மறை முதுவராக நியமிக்கப்பட்ட தியோடோசியுஸ் என்பவர் அரசனின் ஆணைக்குப் பணிந்தார். ஆனால் தியொடோர் என்னும் தலைமைத் துறவி (Theodore of Studium) சுருப வணக்கம் முறையானதே என்று வலியுறுத்திக் கூறினார்.

இதை விரும்பாத மன்னன் லியோ தியொடோரை நாடு கடத்தி கொடுமைப்படுத்தினார். அதே சமயத்தில் தியோடோசியுசும் திருத்தந்தைக்குத் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் திருத்தந்தை அவருடைய போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தியொடோருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் துன்பங்களுக்கு நடுவிலும் உண்மையான கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று ஊக்குவித்தார்.

நாடுகடத்தப்பட்ட துறவியருக்கு ஆதரவு:
சுருப வணக்கம் முறையானதே என்று கூறிய பல துறவியரை மன்னன் லியோ கிரேக்க நாட்டிலிருந்து துரத்திவிட்டார். அத்துறவியரைத் திருத்தந்தை பாஸ்கால் மனமுவந்து வரவேற்றார். ரோமில் புதிதாக நிறுவப்பட்ட புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, புனிதர்கள் செர்ஜியுஸ் மற்று பாக்குஸ் ஆகிய துறவியர் இல்லங்களில் அத்துறவியரை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டார்.

ஆலயங்களைச் சீரமைத்தல்:
திருத்தந்தை முதலாம் பாஸ்கால் பல ஆலயங்களைப் புதுப்பித்துச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக, “தூய பிராஸ்செட்” (Santa Prassede), “டிரஸ்டேவரிலுள்ள தூய செசிலியா” (Santa Cecilia in Trastevere), “டொமினிக்காவிலுள்ள தூய மரியா” (Santa Maria in Domnica) ஆகிய ஆலயங்களை முற்றிலும் புதுப்பித்துக் கட்டியதைக் குறிப்பிடலாம்.

மரணம்:
ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள், திருத்தந்தை முதலாம் பாஸ்கால் காலமானார். அவருடைய உடல் புனித பிராக்சேதிஸ் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை முதலாம் பாஸ்காலின் நினைவுத் திருவிழா, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.

துறவி ஹீம்பலீனா Humbelina OSB 2020-02-12

இன்றைய புனிதர்
2020-02-12
துறவி ஹீம்பலீனா Humbelina OSB

பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
பிரான்சு
இறப்பு
1130,
ஜூலி-சுர்-சார்சே Jully-sur-Sarce

இவர் கிளேர்வாக்ஸ் Clairvaux நகரைச் சேர்ந்த்த புனித பெர்னார்டு Bernhard அவர்களின் சகோதரி. இவர் தன் இளம் வயதிலேயே தன் குடும்பத்தை விட்டு வெளியேறி, துறவற மடத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து துறவியானார். மேலும் இவரைப்பற்றிய வரலாறு, அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் தனது இறுதிவரை துறவியாகவே வாழ்ந்து இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் தலைமை பொறுப்பில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரது கல்லறையின் மேல் சிறிய கெபி ஒன்று கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. இவர் துறவிகளின் முன்மாதிரி என்று சொல்லப்பட்டார்


செபம்:
அன்புத் தந்தையே! வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்று தன்னை இறுதிவரை உமக்காக அர்ப்பணித்து வாழ்ந்த புனித ஹிம்பலீனாவை எமக்குக் கொடையாகக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவரின் வேண்டுதலால் துறவிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

லூடானுஸ்
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து (?)
இறப்பு : 12 பிப்ரவரி 1202, எல்சாஸ் Elsaß, பிரான்சு

புனித பெனடிக்ட் பிஸ்கோப் ஜனவரி - 12

ஜனவரி - 12
புனித பெனடிக்ட் பிஸ்கோப்

ஓவியர்களின் பாதுகாவலர்

மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன (லூக்.2:31)

       திருப்பயணங்களின் வழியாக திருச்சபையின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறவர் பெனடிக்ட். 628ஆம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்பிரியா  என்னும் இடத்தில் உயர்குடிமகனாக உதித்தவர். இவரின் இயற்பெயர்  பிஸ்கோப் பாடூசிங். அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் இவர். இளமையில் அரசர் ஓஸ்வே-யின் அரண்மனையில் அமைச்சராக அலுவலாற்றினார். இதற்காகத் தரப்பட்ட பெருதோட்டத்தில் மரியாதையுடனும், பெரும்புகழுடனும் வாழ்ந்தார்.
இந்நிலையில், எருசலேம் நோக்கி தமது முதலாவது திருப்பயணத்தைத் தொடங்கினார். எருசலேமில் இருந்து திரும்பி வந்தவுடன் தான் எருசலேமில் கண்ட வழிபாட்டு முறைகளையும், அவைகளைக் கொண்டாடிய முறைகளையும் நினைத்தபடியே இருந்தார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அதனை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அரசர் ஓஸ்வே-யிடம்  பேசினார். அவரும் தமது ஐரிஸ் பேரரசு முழுவதும் உரோமை வழிபாட்டு முறைமைகளை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்தார்.

           இரண்டாவது திருப்பயணம் மேற்கொண்ட பெனடிக்ட் திரும்பி வரும் வழியில் 666இல், பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள  லெரின்ஸ் தீவில் இறங்கினார். இங்குள்ள துறவு மடத்தில்  தனது பெயரை பெனடிக்ட் என்று மாற்றிக்கொண்டார்.துறவு  மடத்தைப் பற்றியும், உரோமை வழிபாட்டு முறைகள் பற்றியும் மேலதிக விபரங்களைச்  சேகரிக்க விரும்பினார். எனவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும்  உரோமை சென்றார். அப்போது, திருத்தந்தை விட்டாலியன், தார்சுஸ் பேராயர் தியோடோருக்கு உறுதுணையாக இருக்க அட்ரியானுடன் இங்கிலாந்துக்கு அனுப்பினார். தம்மிடம் வந்துசேர்ந்த பெனடிக்ட்டை 669இல் புனித பேதுரு மற்றும் பவுல் துறவுமடத்திற்கு மடாதிபராக தியோடோர் நியமித்தார்.
இரண்டு ஆண்டுகளில் அப்பொறுப்பை  உதறிவிட்டு மீண்டும் எருசலேமிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்திலும் இதன் பிறகு மேற்கொண்ட இரண்டு பயணத்திற்குப்  பிறகும் திரும்பி வரும்போது, எண்ணிலடங்கா புனிதப் பொருள்கள், புகழ்பெற்ற புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் விலைமதிக்க முடியாத  ஓவியங்களுடன் வந்தார். திருச்சபையின் பொக்கிசங்களால்  இங்கிலாந்துக்குப் பெருமை சேர்த்தார்.

 புதிதாக துறவு மடம் ஆரம்பிக்க ஆவல் கொண்ட பெனடிக்ட் அரசர் ஓஸ்வே-க்குப் பிறகு அரியணைக்கு வந்த அரசர் இக்ஃபிரித்திடம் அனுமதி வேண்டினார். அரசரின் அனுமதியுடன் தமது முதல் துறவு மடத்தைப் புனித பேதுருவின் பெயரில் 674இல் வேர்மத் என்னும் இடத்தில் ஆரம்பித்தார். பிறகு 681ஆம் ஆண்டு இதே இடத்திலும் மற்றும் ஜாரோ-விலும் புனித பவுலின் பெயரில் இரண்டு துறவுமடங்களைத்  தொடங்கினார்.

           தமது துறவு மடத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்ட பெனடிக்ட் புனித பேதுரு திருப்பேராலயத்தின்  தலைமைப் பாடகரும் மடாதிபதியுமான  யோவான் என்பவரை அழைத்து வந்து தமது மடத்தில் பாடல்கள் கற்றுக்கொடுக்கச் செய்தார். முதன் முதலில் இங்கிலாந்தில் அழகுமிளிரும் கற்களால் உரோமை அமைப்பில் ஆலயம் எழுப்பியதும், வண்ண வேலைப்பாடுடைய  கண்ணாடிகளால் ஜன்னல்கள் அமைத்ததுவும்  இவர்தான்.
தமது திருப்பயணங்களால் திருச்சபையின் பாரம்பரியங்களையும், வழிபாடுகளையும் நற்செய்தியாகப்  பரப்பிய பெனடிக்ட், வேர்மத்தில் உள்ள தமது துறவு மடத்தில் 690, ஜனவரி, 12ஆம் நாளில் இறந்தார்.

 மகிழ்ச்சிச் சுற்றுப்பயணமாக, வருடாந்திரக் கடமையாக இல்லாது 
திருப்பயணங்கள் அமையுமானால் திருத்தலங்களின் தூய்மையும்,
 தூயகமும் இறைவனின் இல்லமாவதைக்  காணமுடியும்