புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

29 February 2020

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine. பெப்ரவரி 29

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine
2020-02-29
சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine)
பிறப்பு
06.01.1814
பிரான்ஸ்
இறப்பு
29.02. 1856
Kwang-si, சீனா
முத்திபேறுபட்டம்: 27.05.1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
புனிதர்பட்டம்: 01.10.2000 திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்

இவரின் தந்தை பெயர் நிக்கோலஸ் சேப்டெல்லைன். இவரின் தாயின் பெயர் மதலீன் டோட்மன். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். அகஸ்ட் இவர்களின் கடைசி குழந்தை. பள்ளிப்படிப்பு அவருக்கு சுமையாக இருந்ததால் அவர் வீட்டுவேலை மற்றும் வயல் வேலை செய்ய பணிக்கப்பட்டார். அப்போது இறையழைத்தலை உணர்ந்தார். இந்நிலையில் தனது இரண்டு சகோதரர்களின் அகால மரணம் அவரை பாதித்தது. அதனால் குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிவைத்தார். பிறகு மீண்டும் மீண்டும் இறையழைத்தலை உணர்ந்ததால் பெற்றோரின் ஒப்புதலோடு அக்டோபர் 1 ஆம் தேதி 1834 ஆம் ஆண்டு குருமடத்திற்கு சென்றார். குருமடத்தில் தன்னை விட இரண்டு மடங்கு வயது குறைந்தவர்கள் அவரோடு படித்தார்கள். அதனால் மற்றவர்கள் அப்பா என்றே அவரை அழைத்தனர். 10.06.1843 அன்று தனது 29 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 1844 முதல் 1851 வரை உதவி பங்குத்தந்தையாக பணியாற்றினார். பிறகு தனது ஆயரால் வெளிநாடுகளில் நற்செய்தி பணியாற்ற பணிக்கப்பட்டார்.

30.04.1852 அன்று பாரீசை விட்டு புறப்பட்டு சீனாவிற்கு சென்றார். செல்லும் வழியில் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. சிலரால் தாக்கப்பட்டார். இறுதியாக 1854 ஆம் ஆண்டு சீனாவின் Kwang-si என்ற இடத்தில் இருக்கும் துறவற சபையை அடைந்தார். பிறகு 20 நாட்கள் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையைவிட்டு வெளியேறிய பிறகு, நற்செய்தியை பணியை தீவிரமாக ஆற்றினார். நூற்றுக்கணக்கான மக்களை மனமாற்றினார். மீண்டும் 26.02.1856 அன்று அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பலவிதமான வேதனைகளை அனுபவித்தார். பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


செபம்:
எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, சீனாவில் நற்செய்தி பணியாற்ற அகஸ்ட் என்பவரைத் தேர்ந்தெடுத்தீர். அவரும் உமக்காக நற்செய்தி பணியாற்றி மறைசாட்சியாக மரித்தார். அதைப்போலவே எங்களோடும் நீர் பேசும். எங்கள் அழைத்தலை உணரச் செய்யும். நற்செய்தி பணியாற்ற எங்களுக்கும் வாய்ப்பு தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

முத்திபேறு பெற்ற ஃபிளாரன்ஸ் நகர் அண்டோனியோ Antonio
பிறப்பு: 1400, ஃபிளாரன்ஸ், இத்தாலி
இறப்பு: 29.02.1472
முத்திபேறுபட்டம்: 1847 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
வரலாறு: இவர் திருமணமாகி இளம்வயதிலேயே கைம்பெண் ஆனார். இவருக்கு ஓர் குழந்தையும் உண்டு. இவர் பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபை நான்காம் பிரிவில் சேர்ந்து துறவியானார். இவர் தனது வாழ்நாளில் இறுதி 15 ஆண்டுகள் மிகக்கொடிய நோயால் துன்பப்பட்டவர். வேதனையிலும் இறுதிவரை கடவுளின் அன்பை பரப்பியவர்.

பொதுவாக லீப் ஆண்டுகளில் மட்டுமே பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகின்றன. ஆகவே பிப்ரவரி 29 ஆம் நாள் நினைவு கூறப்படும் புனிதர்கள். மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28 ஆம் நாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

28 February 2020

2020-02-28குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP

இன்றைய புனிதர்
2020-02-28
குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP
பிறப்பு
7 செப்டம்பர் 1876,
பிரான்சு
இறப்பு
28 பிப்ரவரி 1936,
அவ்டேயுல் Auteuil, பிரான்சு
முத்திபேறுபட்டம் : 25 நவம்பர் 1984 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்

இவர் அவ்டேயுஸ் என்ற நகரில் கைவிடப்பட்டவர்களுக்கென இல்லம் ஒன்றை நிறுவினார். உலகின் எப்பகுதியிலும் இருந்த ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட இளைஞர்களை ஒன்று சேர்ந்து வாழ்விற்கு வழிகாட்டினார். பல்வேறு நிறுவனங்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கு தன் இரத்தத்தை ஈந்து வழிகாட்டி அவர்களின் ஆன்மீக குருவாகத் திகழ்ந்தார். இவர் கடுமையான நோயால் தாக்கப்பட்டதால் 1911 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குச் சென்று அங்கும் பல்வேறு இளைஞர்களின் குழுவை ஏற்படுத்தினார். இவர் தான் இறக்கும் வரை ஏழைக்குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவுமே வாழ்ந்தார்.


செபம்:
நோயாளர்களின் ஆரோக்கியமே எம் தந்தாய்! இவ்வுலகில் பல்வேறு நோய்களினால் தாக்கப்படுகின்ற எம் சகோதர சகோதரிகளை குணமாக்கியருளும். அவர்கள் தங்களின் நோய்களைத் தாங்கும் உடல் வலிமையையும் உள்ள பலத்தையும் தந்து, வாழ்வில் நம்பிக்கையுடன் வாழ செய்தருள நீர் உதவிட வேண்டுமென்று அருள்தந்தை தானியேல் புரோட்டியர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மறைசாட்சியாளர் சில்வானா Silvana
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 304


2. மறைசாட்சி சிரீன் அல்லது சீரா Sirin or Sira
பிறப்பு : 520, ஈரான்
இறப்பு : 28 பிப்ரவரி 559 ஈரான்

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28

இன்றைய புனிதர் :
(28-02-2020) 

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28)
நிகழ்வு

திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், அவருக்குக் கீழ் தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர் ஹிலாரியஸ். ஒருசமயம் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் சிங்கராயரின் பதிலாளாக ஹிலாரியஸ் கலந்துகொண்டார். அதில் ஹிலாரியஸ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த அந்தக் கருத்து பலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் ஹிலாரியசைப் பிடிக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை அறிந்த ஹிலாரியஸ் அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த தூய யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். இவ்வாறு அவர் தாம் உயிர் பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்தது தூய யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பின்னாளில் சிறுகோவிலைக் கட்டியெழுப்பினார். .

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஹிலாரியஸ் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சார்தீனியாவில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக் காலத்தில் ஹிலாரியஸ் அவருக்கு தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்துவந்தார். 449 ஆம் ஆண்டு இரண்டாம் எபேசு பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. அப்போது ஹிலாரியஸும், புடேயோலி ஆயரான ஜூலியசும் திருத்தந்தை சிங்கராயரின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அப்பொதுச்சங்கம் காண்ஸ்டாண்டிநோபிள் பேராயரான “ஃபிளேவியனைக் கண்டித்தது. அதனை ஹிலாரியஸ் வன்மையாக எதிர்த்தார்.

ஹிலாரியஸுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் சிங்கராயர் திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாக உயர்ந்த ஹிலாரியசும் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். ஹிலாரியஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த தப்பறைக் கொள்கைகளைக் கண்டித்தார். உரோமைத் திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். இத்தாலியில் ஆரியபதம் என்று அழைக்கப்பட்ட ஒரு தப்பறைக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியபதமோ "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" அவர் என்றும், "கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுள் ஒரு முதன்மையான படைப்பு” என்று கூறி வந்தது. இதனை அவர் கடுமையாக எதிர்த்தார். மட்டுமல்லாமல், அவர் உரோமின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் ஆரியபதத்திற்கு உரோமில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஸ்பெயின், கால் போன்ற போன்ற முக்கிய நாடுகளில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார். ஹிலாரியஸ் 465ம் ஆண்டில் ரோம் நகரின் புனித மரியா பெருங்கோவிலில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆயர் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்ததார். இவ்வாறு அவர் திருச்சபையில் கண்ணியத்தையும் ஒழுங்குமுறையையும் நிறுவினார். இதோடு கூட திருத்தந்தை ஹிலாரியஸ் உரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். தூய யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கு அர்ப்பணித்தார். அக்கோவில்தான் முன்னர் நாம் சொன்ன கோவிலாகும். :

455 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியஸ் பல நன்கொடைகளை வழங்கினார். மேலும், புனித லாரன்ஸ் பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். இப்படி பல்வேறு பணிகளை பாங்குடனே செய்துவந்த திருத்தந்தை ஹிலாரியஸ் 468 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 28ம் நாள் இறையடி சேர்ந்தார். அவர் அழகுபடுத்திய புனித லாரன்ஸ் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலாரியசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணிசெய்தல்

தூய ஹிலாரியசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்து வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் வழியில் நடக்கும் அதே மன உறுதியுடன், அஞ்சா நெஞ்சத்துடன் ஆண்டவரின் பணியைச் செய்கின்றோமா என்று சிந்துத்துப் பார்க்கவேண்டும். எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து கடவுள், “நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும், உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்றார். எரேமியாவும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அஞ்சா நெஞ்சத்தோடு பணி செய்தார். அதனால் கடவுளும் அவரோடு இருந்து அவரை வழிநடத்துவார்.

ஆகவே, தூய ஹிலாரியசைப் போன்று, இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

27 February 2020

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)

இன்றைய புனிதர் : 
(27-02-2020) 

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)
நிகழ்வு

பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலின் இயற்பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்தே வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். ஒரு சமயம் தனியாய் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை மரியா அவரிடத்தில் பேசினார், “பிரான்சிஸ்! நீ உலக வாழ்க்கையின்மீது பற்றுக் கொள்ளாமல், உண்மையான இறைவனில் பற்றுகொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்”. அன்னை மரியா அவரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துபோனார். பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு அப்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. உடனே அவர் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, அன்னை மரியா தன்னிடத்தில் சொன்னதையும் துறவியாகத் தான் மாற இருப்பதையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் அவருடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரான்சிஸ் பொசன்ட்ரி தன்னுடைய பிடியில் மிக உறுதியாக இருந்ததால், அவரை அவருடைய விருப்பம் போல் துறவு வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர். பிரான்சிஸ் பொசன்ட்ரி, தனது விருப்பம் போல் திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து பின்னாளில் பெரிய புனிதரானார்.

வாழ்க்கை வரலாறு

பிரான்சிஸ் பொசன்ட்ரி, 1838 ஆம் ஆண்டு, சாந்தே, ஆக்னஸ் என்ற தம்பதியருக்கு 11 வது மகனாகப் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல் பிரான்சிஸ் பொசன்ட்ரி, சிறுவயதிலேயே பக்தியில், அதிலும் குறிப்பாக வியாகுல அன்னையிடம் அளவு கடந்த பக்திகொண்டு விளங்கினார். இப்படி அவர் வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு ஜெபிக்கின்றபோதுதான், அன்னை மரியா அவருக்குத் தோன்றி, அவரை இறைப்பணி செய்ய அழைத்தார். உடனே அவர் தன் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு, திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து உன்னதத் துறவியாக விளங்கி வந்தார்.

திருப்பாடுகளின் சபையின் சேர்ந்த பின்பும்கூட அவர் வியாகுல அன்னையிடம் கொண்டிருந்த அன்பில் மாறவில்லை, அன்னை மரியாவிற்கு பாடல் இயற்றுவதும் அவர் புகழை எங்கும் பரப்புவதுமாய் இருந்தார். பிரான்சிஸ் பொசன்ட்ரி சபையில் சேர்ந்தபிறகு வியாகுல அன்னையின் மீது கொண்ட அன்பினால், அவர்மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் தனது பெயரை வியாகுல அன்னையின் கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “அன்னை மரியாவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்கு, அன்னை ஏராளமான நன்மைகள் செய்வார்” என்பதாகும்.

பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு 24 வயது ஆகும்போது காச நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். இவருடைய புண்ணிய, எடுத்துகாட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு இவருக்கு 1920 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அன்னை மரியாவிடம் பக்தி

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார், அது அவருக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. நாமும் அன்னை மரியாவின் துணையை நாடி அவர் வழியில் நடக்கும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, “ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது” என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் – இசைமேதை, “E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்” என்றார்.


இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கு நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். எப்படி அந்த ஆர்மோனியம் வாசித்தவர், இசைமேதையை தன்னுடைய துணைக்கு அழைத்தாரோ அதுபோன்று நாம் நம்பிக்கையோடு அவரை, அன்னை மரியாவைத் துணைக்கு அழைத்தால், அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்கள் இன்பமாகவும், சோதனைகள் சாதனைகளாக மாறும் என்பது உண்மை.

ஆகவே, வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று அன்னை மரியாவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை அன்னை மரியா வழியாகப் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

26 February 2020

பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch. February 26

இன்றைய புனிதர்
2020-02-26
பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch
பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
பிரான்ஸ்
இறப்பு
26 பிப்ரவரி 1109,
பூக் Puch, பவேரியா
பாதுகாவல் : திருடர்கள் மற்றும் விஷபூச்சிக்கடியிலிருந்து

இவர் பவேரியாவிலுள்ள உள்ள பியூர்ஸ்டன்பெல்டுபூர்க் Fürstenfeldbruck என்ற ஊரில் எவராலும் வாழ முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். இவர் அரசர் முதலாம் ஹென்றி என்பவரின் மகள் என்று கூறப்படுகின்றது. இவர் தனது இளம் பருவ வயதில் பிரான்சு நாட்டிலிருந்து பயணம் ஒன்றை மேற்கொண்டார். எனவும், அப்பயணத்தின் போதுதான் பவேரியா வந்து சேர்ந்தார் என்றும் இவரின் வரலாறு கூறுகின்றது, அப்போது அங்கு இவர் மிக கடினமான ஓர் சூழ்நிலையில் உதவி செய்ய யாருமற்றவராய் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் கையில் ஒரு பெரிய மணியுடன் கடவுள் உருவத்துடன் ஒளி ஒன்று தென்பட்டதை கண்டுள்ளார்.

அப்போது அம்மணியானது சப்தமாக தானாகவே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் எடிக்னாவை எங்கும் நகர்ந்து செல்லாமல் அவ்விடத்திலேயே நிற்கக் கூறியுள்ளது. இவற்றைக் கண்ட எடிக்னா அது கடவுள்தான் என்பது என்பதை முழுமையாக நம்பினார். அன்றிலிருந்து இவர் எளிமையான வாழ்ந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டு தனிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார். ஏறக்குறைய 35 ஆண்டுகள் மிகச் சிறியதோர் இடத்தில் வாழ்ந்துள்ளார்.

இவர் மேலும் தான் வாழ்ந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளுக்கும் ஊர்களுக்கும் சென்று விசுவாசத்தைப் பற்றி போதித்து வந்துள்ளார். பிறகு எழுதவும், படிக்கவும் தெரிந்துக்கொண்டு விலங்குகளை பராமரிப்பது எப்படி? என்பதை பற்றி மற்றவர்களுக்க்கு கற்றுக்கொடுக்கும் கல்வியைக் கற்றுள்ளார்.


செபம்:
தூயவரானத் தந்தையே! நீர் ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றி அமைக்கின்றீர். அரசர் குடும்பத்தில் பிறந்தவரென்பதால் கால் போன போக்கில் சென்றடைந்த எடிக்னாவின் வாழ்வை மாற்றியுள்ளீர். இன்றைய உலகில் தாறுமாறான ஒழுக்கமின்றி வாழும் இளைஞர்களை நீர் தடுத்தாட்கொள்ளும். அவர்களின் தவறான வாழ்வை திசை திருப்பி உம்மை பின்செல்ல வழிகாட்டியருள் வேண்டுமென்று எடிக்னா வழியாக உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மைன்ஸ் நகர் ஆயர் ஹிலாரியஸ் Hillarius von Mainz
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு, மைன்ஸ், ஜெர்மனி


2. சபை நிறுவுநர் டேகர்ன்சே நகர் ஒட்டோகர் Ottokar von Tegernsee OSB
பிறப்பு : 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 26 பிப்ரவரி 771, டேகர்ன்சே. பவேரியா

25 February 2020

தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

இன்றைய புனிதர் : 
(25-02-2020) 
தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

நிகழ்வு

தூய போனிபசின் அழைப்பின் பேரில், நம் புனிதர் வால்பர்க்காவும் அவரோடு இணைந்து ஒருசில அருட்சகோதரிகளும் இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்குச் சென்று, இறைப்பணிசெய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் இத்தாலிக்கு செல்லத் தேர்ந்துகொண்டதோ பாய்மரக் கப்பல். அவர்கள் சென்ற நேரம் கடலில் சரியாகக் காற்று வீசவில்லை. எனவே, கப்பலானது எங்கும் செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வால்பர்க்கா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினார். அவர் வேண்டிய சில மணித்துளிகளிலேயே கடலில் காற்று வேகமாக வீசியது. அது பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது. அதனால் ஒருசில நாட்களிலேயே கப்பல் இத்தாலியை அடைந்தது.

எல்லாரும் கப்பலை விட்டு இறங்கியதும் கப்பலை ஓட்டிவந்த மாலுமி, வால்பர்க்காவிடம் வந்து, “அம்மா நீ சாதாரண பெண்மணி, இறைவனால் ஆசிர்வத்திக்கப்பவள், உண்மையில் உன்னுடைய ஜெபத்தில்னால்தான் எல்லாரும் கரையை பாதுகாப்பாக அடைந்திருந்திருக்கிறார்கள்” என்று சொல்லி வணங்கி நின்றார். வால்பர்க்கா, உண்மையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

வால்பர்க்கா, இங்கிலாந்து நாட்டில் 710 ஆம் ஆண்டு, புனித ரிச்சர்ட், புனித வின்னா என்ற தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு வில்லிபால்ட், வினிபால்ட் என்ற சகோதரர்கள் இருவர் இருந்தனர். வால்பர்க்காவிற்கு 11 ஆவது வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருக்கு இருந்த ஆர்வத்தையும், திறமையையும் பார்த்துவிட்டு, அவருடை சகோதரர்கள் அவரை விம்பார்ன் என்ற இடத்தில் இருந்த துறவுமடத்தில் சேர்த்தார்கள். அங்கே வால்பர்க்கா 26 ஆண்டுகள் தங்கியிருந்து, ஞானத்திலும் அறிவிலும் இறையன்பின்லும் தன்னையே வளர்த்துக்கொண்டார். இந்த நேரத்தில்தான் தூய போனிபஸ், இத்தாலிக்கு வந்து பணிசெய்ய ஆர்வமுள்ள அருட்சகோதரிகள் அனுப்பி வைக்குமாறு வால்பர்க்கா இருந்த துறவுமட தலைமை அருட்சகோதரியிடம் கேட்டார். உடனே அவர் வால்பர்க்காவையும் அவரோடு சேர்த்து லியோபா இன்னும் ஒருசில அருட்சகோதரிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் இத்தாலிக்கு சென்று, இறைப்பணியையும் சமூகப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து வால்பர்க்கா தங்கியிருந்த துறவுமடத்திற்கு லியோபா தலைமை அருட்சகோதரியாக மாறினார். அவருக்குப் பிறகு வால்பர்க்கா அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். வால்பர்க்கா தலைமை அருட்சகோதரியாக உயர்ந்தபிறகு பல்வேறு பணிகளைச் சிறப்புடன் செய்து வந்தார். ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், சமூகப் பணிகளையும் அவர் பாங்குடனே செய்துவந்தார். இதற்கிடையில் வால்பர்க்கா சகோதரர் வில்லிபால்ட் இறந்துபோனார். அவருடைய உடலை வால்பர்க்கா, தான் இருந்த துறவுமடத்திற்கு அருகிலேயே அடக்க செய்தார். எப்போதெல்லாம் தனிமையை உணர்ந்தாரோ, அப்போதெல்லாம் வால்பர்க்கா, தன் சகோதரரின் கல்லறைக்குச் சென்று, ஜெபித்துவிட்டு உற்சாகத்தோடு திரும்பி வந்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வால்பர்க்கா திடிரென ஒருநாள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோனார். அவருடைய உடலை அவருடைய சகோதரரின் உடலுக்கு அருகிலே அடக்கம் செய்தார்கள். வால்பர்க்காவிற்கு 870 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

வால்பர்க்காவின் கல்லறைக்கு இன்றைக்கு நிறையப்பேர் வந்து போகிறார்கள். காரணம் அவருடைய கல்லறையிலிருந்து வழிந்தோடும் எண்ணையை பூசினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இன்னலில் இறைவனைத் துணைக்கு அழைத்தல்

தூய வால்பர்க்காவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே இன்னலில் இறைவனை துணைக்கு அழைப்பதுதான். மேலே குறிப்பிட்ட நிகழ்வு ஒன்றே போதும், அவர் எப்படி, தன்னுடைய வாழ்வில் இன்னல் வந்த வேளையில் இறைவனைத் துணைக்கு அழைத்து, அதிலிருந்து மீண்டார் என்று சொல்வதற்கு. நம்முடைய வாழ்வில், நாம் எப்போதும் இறைவனைத் துணைக்கு அழைக்கின்றோமா? அல்லது நம்முடைய திறமையில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். திபா 50:15 ல் வாசிக்கின்றோம், “துன்ப வேளையில் நீங்கள் என்னைக் கூப்பிடுங்கள்; நான் உங்களை காத்திடுவேன்” என்று. ஆம், இறைவனை நம் துன்பவேளையில் அழைக்கின்றபோது, அவர் நமக்கு உதவிட விரைந்து வருவார் என்பது உண்மை.

ஆகவே, தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று, இறைவழியில் நடப்போம், இடுக்கண் வேளையில் இறைவனை அழைப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

24 February 2020

தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24

*இன்றைய புனிதர்*

         _24 பிப்ரவரி 2020_

*தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24)*
“ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33) 

*வாழ்க்கை வரலாறு*

செசாரியுஸ், 331 ஆம் ஆண்டு, நசியான்சசின் ஆயர் தூய பெரிய கிரகோரியாருக்கும் தூய நோன்னா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு கிரகோரி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. செசாரியுஸ், சிறுவயதிலே அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்ததால், இவருடைய பெற்றோர் இவரை அலெக்ஸ்சாண்ட்ரியாவிற்கு அனுப்பி வைத்து, படிக்க வைத்தனர். செசாரியுஸ் மருத்துவம், மெய்யியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கி பிற்காலத்தில் எல்லாருக்கும் பிடித்துப்போன கைராசியான மருத்துவரானார். 

இதற்கிடையில் செசாரியுசைக் குறித்து கேள்விப்பட்ட ஜூலியன் என்ற மன்னன், அவரை தன்னுடைய அரசபையில் மருத்துவராக இருக்கக்கேட்டான். இந்த ஜூலியனோ கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தியவன். இப்படிப்பட்டவனுக்கு கீழே மருத்துவராக இருந்து பணிசெய்வது நல்லதல்ல என்று செசாரியுசை, அவருடைய பெற்றோர் கேட்டுக்கொண்டபடியால், அவர் அவனிடத்தில் செல்லாமல், நசியான்சஸ் நகரிலேயே இருந்து மருத்துவச் சேவை செய்துவந்தார். இந்த நேரத்தில் வாலன்ஸ் என்ற மன்னர் பிர்த்தினியா வந்து தனக்கு ஆலோசராகவும், அரசாங்கத்தின் கருவூலப் பொறுப்பாளராகவும் இருக்கவேண்டும் என்று செசாரியுசைக் கேட்டுக்கொண்டார். உடனே செசாரியுஸ் அங்கு புறப்பட்டுச் சென்று, அவருக்குக் கீழே பணிகளைச் செவ்வனே செய்து வந்தார்.    

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 368 ஆம் ஆண்டில் ஒருநாள் திடிரென்று தன்னுடைய மேலாண்மைக்குள் இருந்த நிகாயே என்ற நகரில் பெரிய பூகம்பம் வந்தது. அது ஏராளமான உயிர்களை எடுத்துக்கொண்டது. இந்நிகழ்வு செசாரியுசின் வாழ்வைப் புரட்டிப் போட்டது. ஆம், இந்த நிகழ்விற்குப் பிறகு செசாரியுஸ் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். அவர் தன் மூத்த சகோதரரான கிரகோரியிடம் சென்று நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். உடனே அவர் செசாரியுசிடம், “நீ உன்னுடைய அரசியல் வாழ்வை விட்டு துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொள்வதுதான் தலைசிறந்தது” என்று அறிவுரை கூறினார். தன் சகோதரர் சொன்ன அறிவுரை நல்லதெனப் பட்டதும் செசாரியுஸ்  எல்லாவற்றையும் துறந்து துறவியாக மாறினார்.

செசாரியுஸ், துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவருடைய வாழ்க்கை பக்தியிலும் பிறரன்புச் செயல்பாடுகளிலும் கரைந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் அவர் வாழ்ந்து வந்த பகுதியில் கொடிய கொள்ளை நோய் பரவியது. அது அவரைப் பாதிக்க, 369 ஆம் ஆண்டு இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன் சகோதரர் கிரகோரியிடம், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போன்று கிரகோரி, தன் சகோதரர் செசாரியுசுக்குச் சொந்தமான சொத்துகளை அவருடைய இறப்புக்குப் பிறகு விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். 

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று  சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. உலக காரியங்களில் அல்ல, உண்மையான இறைவனில் பற்று கொண்டுவாழ்வோம்*

ஒரு காலத்தில் தூய செசாரியுஸ் உலக காரியங்களில் மூழ்கிக் கிடந்தார். எப்போது பூகம்பம் வந்து நிறையப் பேரைக் கொன்றொழித்ததோ அப்போதே அவர் உலகக் காரியங்கள் அல்ல, உண்மையான இறைவனால் மட்டுமே தனக்கு அமைதியையும் ஆசிர்வாதத்தையும் தரமுடியும் என்று உணர்ந்து, துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். தூய செசாரியுஸ் உணர்ந்துகொண்டதுபோன்று நாம் இறைவனால் மட்டுமே நமக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரமுடியும் என்பதை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் ஊருக்கு வெளியே இருந்த குளத்திற்குச் சென்று மீன்பிடித்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு பிழைப்பை ஒட்டி வந்தான். ஆனால், சில நாட்களாகவே அவனுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை. ஏன் என்ற காரணமும் அவனுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் ஒருநாள் துறவி ஒருவர் அந்த குளத்திற்கு குளிக்க வந்தார். அவர் குளத்திற்குள் இறங்கி குளிக்கத் தொடங்கியதும் மீன்கள் எல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளமிட்டன. இதை கரையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஆச்சரியமாக இருந்தான். தானும் துறவிக்கான ஆடையைக் தரித்து, குளித்தால், நிறைய மீன்கள் கிடைக்குமே என்று கற்பனை செய்தான். மறுநாளே துறவிக்கான ஆடையைத் தரித்து, குளத்தில் குளித்தான். அப்போது அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியாத அளவுக்கு மீன்கள் அவனைச் சூழ்ந்து கும்மாளமிட்டன. அன்றைக்கு அவன் நிறைய மீன்களைப் பிடித்தான்.

அவன் கரைக்கு வந்து, மீன்களை எல்லாம் வலையிலிருந்து கூடைக்குள் எடுத்துப் போட்டபோதுதான் திடிரென ஒரு யோசனை உதித்தது. “போலியாக துறவற ஆடை தரித்ததற்கே இவ்வளவு மீன்பாடு கிடைக்கிறது என்றால், உண்மையான துறவியாகிவிட்டால், மீன்களை பிடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததுபோல், நினைத்ததை எல்லாம் அடையக்கூடிய வைப்பு உண்டாகிவிடுமே” என்ற யோசனை இளைஞனின் உள்ளத்தில் உதித்ததும் எல்லாவற்றையும் துறந்து உண்மையான துறவியாக மாறினான். 

உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான இறையடியாராக வாழ்கின்றபோது இறைவன் தருகின்ற ஆசிர்வாதம் அளப்பெரியது என்னும் உண்மையை இந்தக் கதையானது அருமையாக எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் அவரைப் போன்று உலக காரியங்களில் பற்று கொள்ளாமல், உண்மையான இறைவன் மீது பற்று கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*

*"GOD IS LOVE"*

Rev. Fr. Amirtha Raja Sundar J,
 amirsundar@gmail.com; 
________________________

அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert பெப்ரவரி 24

இன்றைய புனிதர்
2020-02-24
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
பிறப்பு
6 ஆம் நூற்றாண்டு,
கெண்ட் Kent, இங்கிலாந்து
இறப்பு
616,
இங்கிலாந்து

இவர் பிரான்சிஸ்கன் அரசி குளோட்விக் Chlodwig என்பவரால் வளர்க்கப்பட்டார். அரசி குளோட்விக் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஏத்தல்பெர்ட்டையும் சிறு வயதிலிருந்தே ஆலயங்களுக்கு அனுப்பியும் அனுதின செபத்தின் வழியாகவும், இறைபக்தி கொண்டவராக வளர்த்தெடுத்தார். எதிலும் இறைபக்தியுடன் செயல்பட்ட ஏத்தல்பெர்ட் 596 ஆம் ஆண்டு திருத்தந்தை பெரிய கிரேகோரிடம் தன் நகருக்கு பல மறைபரப்பு பணியாளர்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.

இவர் தன் நகர் முழுவதிலும் வாழ்ந்த மக்கள் அனைவரையும் விசுவாச வாழ்வில் வளர தூண்டினார். அத்துடன் இங்கிலாந்து நாடு முழுவதிலும் மறைப்பணியாளர்களை நிரப்பி கடவுள் விசுவாசத்தை வளர்த்தெடுத்தார். 601 ஆம் ஆண்டு ஏத்தல்பெர்ட் மறைப்பணியாளர்களிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்கு பெற்றபின் இறக்கும் வரை ஏறக்குறைய 16 ஆண்டுகள் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து தன் நாட்டு மக்களுக்கு பணிவிடைச் செய்தார்.


செபம்:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! சில மறைப்பணியாளர்களின் வாயிலாக இங்கிலாந்து நாடு முழுவதிலும் நற்செய்தியின் ஒளியை பரவச் செய்தீர். அம்மக்களின் உள்ளங்களில் உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும், உண்மையான நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஒன்றுபட்டு வாழவும் வரம் தந்தீர். அரசி ஏத்தல்பெர்ட்டைப்போல அடுத்தவர்களை விசுவாச வாழ்வில் வளரச் செய்ய எம்மையும் தயாரித்து, உமது கருவியாய் மாற்றி, சான்று பகிர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

23 February 2020

தூய போலிக்கார்ப். 23 பிப்ரவரி

23 பிப்ரவரி 2020, ஞாயிறு

இன்றைய புனிதர்

தூய போலிக்கார்ப்
போலிகார்ப் வாழ்ந்த காலத்தில் தப்பறைக் கொள்கைகள் அதிகமாகப் பரவியிருந்தன. அவற்றையெல்லாம் நம் புனிதர் மிகவும் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிகொண்டார். ஒருசமயம் மார்சியோன் என்பவன் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டு வந்தான். ஒருநாள் அவன் போலிக்கார்ப் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். அவர் அவன் செய்வதையெல்லாம் மிகப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் அவன் அவரிடத்தில், “நான் யாரென்று தெரிகிறதா?” என்று மிகவும் ஆணவத்தோடு கேட்டான். அதற்கு போலிகார்ப், “நீ சாத்தானின் மூத்த மகன், உனக்கு அழிவு மிக அண்மையிலேயே உள்ளது” என்றார். இதைக் கேட்ட மார்சியோன் தலை தெறிக்க ஓடினான். அதன்பிறகு அவன் தப்பறைக் கொள்கைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு, மனம் திருந்திய மனிதனாக வாழ்ந்து வந்தான்.

வாழ்க்கை வரலாறு

போலிக்கார்ப் கி.பி.69 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நற்செய்தியாளரான தூய யோவானின் சீடர். அவராலேயே 96 ஆம் ஆண்டு ஸ்மிர்னா என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயராக உயர்ந்த பிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இறைமக்களுக்கு மறைக்கல்வியைப் போதித்து, அவர்களை இறைநம்பிக்கையில் நாளும் வளர்த்தார். இவரிடமிருந்து மறைகல்வி கற்று புனிதர்களாக உயர்ந்தவர்கள்தான் தூய எறரனியுஸ் மற்றும் பப்பியாஸ் என்பவர்கள்.

போலிகார்ப் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. அத்தகைய தருணத்தில் இவர் மக்கள் அனைவரையும் விசுவாசகத்தில் உறுதிபடுத்தினார். ஒருசிலர் இவரைக் கேட்டுக்கொண்டதால் சில காலத்திற்கு இவர் மறைவாக இருந்தார். அப்போது இவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. எதற்கு இப்படி தலையணை தீப்பற்றி எரிகிறது என்று யோசித்துப் பார்த்த அவர், தான் தீயில் போட்டு எரிக்கப்படப் போகிறோம் என்பதை அறிந்துகொண்டார். அன்றிலிருந்து அவர், தான் அடைய இருக்கும் மறைசாட்சிப் பட்டத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இவர் இருக்கும் இடத்தை ஒற்றன் ஒருவன் காட்டிக்கொடுக்க, படைவீரர்கள் இவரை சூழ்ந்துகொண்டார்கள். ஆனாலும் இவர் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கு விருந்தொன்று தயாரித்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த அந்தப் படைவீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். இருந்தாலும் அரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் இவரைக் கைதுசெய்து, அரசன் முன்பாக நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்த அரசன் போலிக்கார்ப்பிடம் “நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, சீசருக்கு வணக்கம் செலுத்து, உன்னை நான் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்” என்றார். அதற்கு இவர், எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆண்டவராகிய இயேசு ஒருதீமையும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இறைவனனை நான் எப்படி மறுதலிப்பது?” என்றார். இதைக் கேட்ட அரசன் சினமுற்று அவரை தீப் பிழம்புக்குள் தூக்கிப்போட்டான். ஆனால் தீயின் நாவுகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் அந்தத் தீயின் நடுவே இறைவனைப் பாடிப் புகழ்ந்துகொண்டிருந்தார். பின்னர் அரசர் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். பின்னர் போலிகார்பின் சீடர்கள் வந்து, அவருடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். அவர் மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் துறந்த ஆண்டு கி.பி. 155. போலிகார்பின் மறைசாட்சிய வாழ்வு குறித்து, அவருடைய இறப்புக்குப் பிறகு, அவருடைய சீடர்களால் எழுதப்பட்ட Acts Of Policarp” என்ற புத்தகத்திலிருந்து நாம் இவற்றையெல்லாம் வாசிக்கின்றோம்.

மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz பெப்ரவரி 23

இன்றைய புனிதர்
2020-02-23
மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz
பிறப்பு
10 ஆம் நூற்றாண்டு,
நீடர்சாக்சன், ஜெர்மனி
இறப்பு
23 பிப்ரவரி 1011,
மைன்ஸ் Mainz, ஜெர்மனி

இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இளம் பருவத்தைப் பற்றி குறிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. 970 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஓட்டோ என்பவர் இவரை மைசன் Meißen நகருக்கு ஆயராகத் தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு ஆயர் அரசரின் ஆலோசகராகவும் இருந்தார். பிறகு 975 ஆம் ஆண்டு மைன்ஸ் நகரின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஜெர்மனி ஆயர் என்றழைத்த திருத்தந்தை 5 ஆம் கிரகோர் வில்லிஜிஸை உரோமிற்கு மாற்றினார்.

வில்லிஜிஸ் உரோமையில் 1002 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஹென்றிக்கு அரசராக முடிசூட்டும் பட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அதன்பிறகு அரசர் ஜெர்மனியிலுள்ள பாம்பெர்க்கிற்கு தன் இருப்பிடத்தை மாற்ற தேவையான உதவிகளை வில்லிஜிஸ் செய்துக் கொடுத்தார். பின்னர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அரசரிடம் பெரிதும் பரிந்து பேசினார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30 ஏழைகள் தேவையான அளவு உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்து உதவினார். இவர் ஏழைகளின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

இவர் இறந்தபிறகு, மைன்சில் உள்ள புனித ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. செயின் ஸ்டீபன் ஆலயமானது வில்லிஜிஸ் அவர்கள்தான் ஆயராக இருக்கும் எழுப்பினார் என்று கூறப்படுகின்றது.


செபம்:
சில அப்பங்களையும், மீன்களை கொண்டு, பலரின் பசியை போக்கிய எம் தந்தையே! இன்று உணவில்லாமல் வாடும் ஒவ்வொரு மனிதர்களையும் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளையும் நீர் நினைவுகூரும். உமது அற்புதத்தாலும், அதிசயத்தாலும் ஏழைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிராற உண்ண நீர்தாமே உதவிபுரிந்திட வேண்டுமென்று தந்தையே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. ஆயர் மறைசாட்சி பொலிக்கார்ப்பு Polykarp
பிறப்பு : கிபி.70
இறப்பு : 23 பிப்ரவரி 155(?) , இஸ்மார் Izmar, துருக்கி


2. காப்பன்பெர்க் நகர் ஒட்டோ Otto von Cappenberg
பிறப்பு : 1100
இறப்பு : 23 பிப்ரவரி 1171 காப்பன்பெர்க் Cappenberg, ஜெர்மனி

22 February 2020

கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM 22 February

இன்றைய புனிதர்
2020-02-22
கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM

பிறப்பு
1247,
லவியானோ Laviano, இத்தாலி
இறப்பு
22 பிப்ரவரி 1297,
கொர்டோனா Cortona, இத்தாலி
புனிதர்பட்டம்: 1728 திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்

இவர் தனது 16 வயதிலேயே தன் பெற்றோரின் இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு செல்வந்தர் இளைஞருடன் வாழ்ந்தார். ஒரு நாள் திருடர்கள் அவ்விளைஞனின் வீட்டில் கொள்ளையடித்து சென்றதுடன், அவரையும் கொன்றனர். தன் கண்முன்னால் அக்கொலையைப் பார்த்த மர்கரேட்டா தன் வாழ்வை மாற்றினார். அன்றிலிருந்து தன் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார். கொர்டோனா என்ற ஊருக்குச் சென்று புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் மிக கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இவர் பல சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்றபின், ஒருநாள் ஒரு பெரிய கல் இவரின் காலில் மோதியது. அன்றிலிருந்து மீளாத் துயரை அடைந்தார். இதனால் இவர் தனது வார்த்தைப்பாட்டை பெறமுடியாமல் போனது. அதன்பிறகு மர்கரேட்டா, கொர்டோனாவில் ஏழைகளுக்கென்று ஒரு மருத்துவமனையை கட்டினார். அதன்பிறகு 3 ஆம் சபை என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு பலமுறை திருக்காட்சிகளைப் பெற்றார். இவர் தனது 50 ஆம் வயதிலேயே இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! உம்மீது அன்புக்கொண்டு உமக்காக வாழ்ந்த திருக்காட்சியாளர் மர்கரேட்டாவை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அவரின் வழியாக ஒரு துறவற சபையை ஏற்படுத்தினீர். அச்சபைத் துறவிகளை ஒவ்வொரு நாளும் காத்து வழிநடத்தும் தூய ஆவியின் வழிகாட்டுதலில் அருட்சகோதரிகள் செயல்பட துணைபுரியும். அச்சபையானது தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து, பணிபுரிய உதவிட வேண்டுமென்று மர்கரேடா வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிரான்சு நாட்டு சபைநிறுவுநர் எலிசபெத்து
பிறப்பு : 1225 பிரான்சு
இறப்பு : 23 பிப்ரவரி 1270 பிரான்சு

21 February 2020

தூய பீட்டர் தமியான் (பிப்ரவரி 21

இன்றைய புனிதர் : 
(21-02-2020) 

தூய பீட்டர் தமியான் (பிப்ரவரி 21)

நிகழ்வு

1035 ஆம் ஆண்டு, தூய பீட்டர் தமியான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த தருணம். ஒருநாள் பெனடிக்ட் துறவுமடத்தைச் சார்ந்த துறவிகள் சிலர் அவரைச் சந்தித்து, ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் துறவற வாழ்வு குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் தான் செய்துகொண்டிருந்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு தூய பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார், ஆண்டவர் இயேசு ஒருவரே உண்மையான சொத்து என அவரைப் பற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

பீட்டர் தமியான் 1007 ஆம் ஆண்டு இத்தாலியில் இருக்கும் ரவென்னா என்ற இடத்தில் வாழ்ந்த ஓர் ஏழைத் தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பீட்டர் என்பதுதான். பின்னாளில் தன்னுடைய மூத்த சகோதரரும் குருவாகவும் இருந்த தமியான் என்பவர் மீது கொண்டிருந்த மதிப்பினால் பெற்றோர் இட்ட பீட்டர் என்ற பெயரோடு தமியான் என்ற பெயரையும் சேர்த்துகொண்டு தன்னுடைய பெயரை பீட்டர் தமியான் என மாற்றிக்கொண்டார்.

பீட்டர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய இளைய சகோதரரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இந்த சகோதரர் மிகவும் கண்டிப்பானவர், அதே நேரத்தில் பீட்டரை சரியாகக் கவனிப்பதும் கிடையாது. தான் வைத்திருந்த பன்றிகளை மேய்ப்பதற்குத்தான் இவர் பீட்டரை அனுப்பி வைத்தார். இந்த நேரத்தில் பீட்டர் மிகவும் கஷ்டப்பட்டார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட பீட்டரின் மூத்த சகோதரரான தமியான், அவரை பன்றி மேய்க்கும் பொறுப்பிலிருந்து விடுவித்து, பள்ளிக்கூடத்திற்குச் சென்று, கல்வி கற்க கேட்டுக்கொண்டார். அதற்கான செலவீனங்கள் அனைத்தையும் தான் ஏற்பதாக உறுதிதந்தார். இவர் ஒரு குருவானவர். பின்னாளில் பீட்டர் நன்றாகப் படித்து ஒரு பேராசிரியராக உயரும்வரைக்கும் இவர் பீட்டருக்கு பேருதவியாக இருந்தார். அதனால்தான் (ஏற்கனவே சொன்னது போல) இவர் தன்னுடைய சகோதரரின் பெயரையும் தன்னுடைய பெயரோடு சேர்த்துக்கொண்டு பீட்டர் தமியான் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

பீட்டர் தமியான் பேராசிரியராக மாறிய பிறகு தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு மிகச்சிறப்பான கல்வியை வழங்கினார். இயல்பிலேயே ஞானமும், அறிவும் கொண்டவரான பீட்டர் தமியானின் வகுப்புகளுக்காக மாணவர்கள் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு இவர் சிறப்பாக பாடங்களை நடத்தி வந்தார். இத்தகைய தருணத்தில்தான் தூய ஆசிர்வாதப்பர் சபையைச் சேர்ந்த துறவிகள் இவரை வந்து சந்தித்து, இவருக்கு கிறிஸ்துவை பற்றியும் துறவு வாழ்க்கை குறித்தும் எடுத்துரைத்தார். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் எல்லாவற்றையும் துறந்து தூய ஆசிர்வாதப்பர் சபையில் துறவியாக மாறினார்.

தூய ஆசிர்வாதப்பர் – பெனடிக்ட் – சபையில் சேர்ந்த சில ஆண்டுகளுளிலேயே இவர் அச்சபையின் தலைவரானார். அதன்பிறகு இவர் சபையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக ஐந்து துறவற மடங்களை நிறுவி, நிறைய இளைஞர்கள் துறவு வாழ்வில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். குருக்கள் மற்றும் துறவிகள் தங்களுடைய கடமைகளில் கருத்தூன்றி வாழவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தினார். அதேநேரத்தில் அவர்கள் புனிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடையவேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட அரும்பணிகளை ஒவ்வொருநாளும் திருச்சபைக்கு அவர் செய்துகொண்டிருந்தார்.

இவருடைய பணிகளை பார்த்த மேலிடம் இவரை ஒஸ்தியா (Ostia) என்ற இடத்தில் ஆயராக நியம்பித்தது. ஆயராக உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் அளப்பெரிய பணிகளைச் செய்தார். மக்களுடைய சமூக மற்றும் ஆன்மீக வாழ்விற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இவையெல்லாவற்றையும் பார்த்த அப்போதைய திருத்தந்தை ஒன்பதாம் ஸ்டீபென் என்பவர் இவரை திருத்தந்தையின் திருத்தூதராக நியமித்தார். இந்த நிலைக்கு உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் ஒரு மிகச்சிறந்த சமாதானத்தின் தூதுவராக விளங்கினார். திருச்சபையிலும் சரி, நாடுகளிடையேயும் சரி அமைதியை ஏற்படுத்த நல்ல ஒரு கருவியாக விளங்கினார். இத்தகைய பணிகளுக்கும் மத்தியிலும் இவர் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. குறிப்பாக இவர் அன்னை மரியிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

இப்படி ஒரு பேராசிரியராக, ஆயராக, திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்த பீட்டர் தமியான் ஓரிடத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்புபோது வரும்வரை வழியில் இறந்துபோனார். இவர் இறந்த நாள் பிப்ரவரி 21, 1072. 1828 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் லியோ என்பவரால் புனிதராக உயர்த்தப்பட்டார். புனிதரிடத்தில் தீராத தலைவலிக்காக மன்றாடும்போது அது விரைவிலே குணமடையும் என்பது நம்பிக்கை.


20 February 2020

துறவி ஜோர்டன் மாய் Jordan Mai OFM பெப்ரவரி 20

இன்றைய புனிதர்
2020-02-20
துறவி ஜோர்டன் மாய் Jordan Mai OFM

பிறப்பு
1 செப் 1866,
பவர், ஜெர்மனி
இறப்பு
20 பிப்ரவரி 1922,
டோர்முண்ட் Dortmund, ஜெர்மனி

இவர் 1894 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருவானார். பின்னர் 1904 ஆம் ஆண்டு தனது இறுதி வார்த்தைப்பாட்டைப் பெற்றார். அதன்பிறகு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றார். 1922 ஆம் ஆண்டு பங்கு ஒன்றில் பணிபுரிய டோர்ட்முண்டிற்கு அனுப்பப்பட்டார். அப்போது ஜனவரி மாதம் 22 ஆம் நாள் அவர் பங்கிலிருந்த துறவற இல்ல ஆலயத்திலிருந்த பலிப்பீடத்தை திருடர்கள் திருடி சென்றனர். அப்போது அவர் கடவுளை நோக்கி கண்ணீர் விட்டு மன்றாடினார். பின்னர் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களிடம் இன்னும் ஒரு மாதத்தில் நான் இறந்துவிட நேரிடும் என்று கூறினார், அவர் உரைத்தப்படியே அடுத்த ஒரு மாதத்தில் உயிர் துறந்தார். இவரின் உடல் துறவற இல்லத்திலிருந்த கல்லறையிலேயே புதைக்கப்பட்டது. பிறகு 1950 ஆம் ஆண்டு டோர்ட்முண்டில் முத்திபேறுபட்ட தயாரிப்பு விழா தொடங்கப்பட்டது. அப்போது அவ்விழாவில் ஏறக்குறைய 1,00,000 மக்கள் கலந்துகொண்டு ஆடம்பர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இவரின் நினைவுநாளில் ஏராளமான மக்கள் டோர்ட்முண்டிலுள்ள பிரான்சிஸ்கன் துறவற இல்லத்திற்கு வந்து திருப்பலியில் கலந்து கொண்டு பல அதிசயங்களைக் காண்கின்றனர்.

செபம்:
அதிசயங்களை செய்பவரே! தனது ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியால் உம்மோடு இணைந்து உமதன்பை சுவைக்க நீர் ஜோர்டன் மாய்க்கு வாய்ப்பை வழங்கியுள்ளீர். நாங்கள் ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தை தவறாமல் பெற்று தொடர்ந்து உமதன்பின் பிள்ளைகளாக வாழும் பேற்றை எமக்கருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சு மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

ஒர்லேயன்ஸ் ஆயர் எங்கேரியுஸ் Eucherius von Orleans
பிறப்பு : 694 ஒர்லேயன்ஸ், பிரான்சு
இறப்பு : 20 பிப்ரவரி 738 பெல்ஜியம்

அருளாளர்களான பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா (பிப்ரவரி 20)

இன்றைய புனிதர் : 
(20-02-2020) 

அருளாளர்களான பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா (பிப்ரவரி 20)

“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” (மத் 19: 14)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா போர்ச்சுகல் நாட்டில் இருக்கின்ற அல்ஜஸ்ட்ரல் என்னும் இடத்தில் முறையே 1908, 1910 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள். இவர்களுடைய பெற்றோர் மனுவேல் மற்றும் ஓலம்பியா என்பவர் ஆவர். இருவரும் சிறுவயது முதலே ஜெபத்திலும் ஜெபமாலை பக்தியிலும் சிறந்து விளங்கினார்கள்.

1916 ஆம் ஆண்டின் ஒரு நாளில் பிரான்சிஸ், ஜெசிந்தா மற்றும் அவர்களுடைய மாமன் மகளாகிய லூசியா ஆகிய மூன்றுபேரும் பாத்திமா நகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலையில் இருந்த ‘கோவா டா இரியா’ என்ற மலைப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் தோன்றிய தூதர் ஒருவர், அவர்களிடம் தன்னை அமைதியின் தூதர் என்றும் போர்ச்சுக்கல் நாட்டின் காவல் தூதர் என்றும் சொல்லிவிட்டு, “நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்" என்று கூறினார். அப்போது மூவரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், 1917 மே 13 ஆம் தேதி, அதே வானதூதர் மீண்டும் அவர்களுக்கு முன்பாகத் தோன்றியபோதுதான் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். அந்த வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில் மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன.

பின்னர் அவர் அவர்களுக்கு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை கற்றுக்கொடுத்தார். “என் கடவுளே, நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசிக்காதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன்” இறுதியாக, “இயேசு மற்றும் அன்னை மரியாவின் இதயங்கள் நம் மன்றாட்டுகளுக்கு செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் அவர்கள் முன்னிருந்து மறைந்தார்.

அந்த தூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், அவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவா டா இரியாவின் ஒரு புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது. அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா தோன்றி காட்சி அளித்தார். லூசியா, ஜெசிந்தா பிரான்சிஸ் ஆகிய மூன்று பேரும் அந்த காட்சியைக் கண்டனர். மரியன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று பேரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்றும் மரியா கட்டளை இட்டார். ஜூலை ஆம் தேதி, அன்னை மரியா அவர்களுக்குக் காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். "பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை செபிக்குமாறும் மரியா கற்றுக்கொடுத்தார். காட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் அவர் முன்னறிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகிய மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக, மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர். மக்கள் பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண மூவரையும் பின்தொடர்ந்தனர். மேலும் அன்னை தனது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும் இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியா காட்சி அளித்த வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார். வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார். கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே (குறிப்பாக ரஷ்யாவில்) மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மரியா மொழிந்தார்.

1917 அக்டோபர் 13 ஆம் தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது" என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார். சூரியனின் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரனை போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர்.

அன்னை மரியா கோவா டா இரியாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி 25 ஆம் தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது. அடுத்ததாக அன்னை தன்னுடைய காட்சியில் ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனடிப்படையில் திருத்தந்தை 12 ஆம் பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை ஆம் தேதி சாக்ரோ வெர்ஜென்ட்டே (Sacro Vergente) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை 2ம் ஜான் பால் உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். இதனால் 1990 களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது. நிறைவாக அன்னை தனது காட்சியில் இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார். அவர் சொன்னது அனைத்தும் அப்படியே நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதுதான் வியப்பாக இருக்கின்றது.

அன்னை மரியா பிரான்சிஸ், ஜெசிந்தா, லூசியா ஆகிய மூவருக்கும் காட்சியளித்த அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பிரான்ஸ்சிசும் ஜெசிந்தாவும் நோய்வாய்ப்பட்டு, அப்படியே இறந்துபோனார்கள். 2000 ஆம் ஆண்டில் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் அவர்களுடைய தூய, மாசற்ற வாழ்க்கையைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தாவின் விழாவைக் கொண்டாடும் நாளில், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஜெபமாலை பக்தி

பிரான்சிசும் ஜெசிந்தாவும் சிறுவயது வயது முதலே ஜெபமாலை சொல்வதில் சிறந்து விளங்கினார்கள் என்பதை அவர்களுடைய வாழ்க்கை குறிப்பு நமக்கு எடுத்துச் சொல்கிறது. கோவா டா இரியாவில் அன்னை அவர்களுக்குக் காட்சி அளித்தபோதும் ஜெபமாலை சொல்லி ஜெபிக்கவேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறார். பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தாவை நினைவுகூரும் நாம், அவர்களைப் போன்று ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான போரின்போதும் 1863 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கு இடையே நடைபெற்ற போரின்போதும் கிறிஸ்தவர்கள் தங்களது கைகளில் ஜெபமாலை ஏந்தி ஜெபித்தார்கள். அதனால் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு. நாமும் அன்றைய கிறிஸ்தவர்களைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் பிரான்சிசைப் போன்று ஜெசிந்தாவைவைப் போன்று கைகளில் ஜெபமாலை ஏந்தி ஜெபிப்போம். அதன்மூலம் இறையருளை அன்னை மரியா வழியாக நிறைவாய் பெறுவோம்.

19 February 2020

பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento

இன்றைய புனிதர்
2020-02-19
பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento
பிறப்பு

610
இறப்பு
19 பிப்ரவரி 682,
பெனவெண்ட், இத்தாலி

இவர் இத்தாலி நாட்டிலுள்ள பெனவெண்ட்டோ என்ற நகரில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு பெனவெண்ட்டோ Marcona என்ற நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மறைப்பணியாற்றி பலரை மனந்திருப்பினார். அச்சமயம் 663 ஆம் ஆண்டு பெனவெண்ட்டோ நகரானது அரசன் 2 ஆம் கொன்ஸ்டான்ஸ் என்பவரின் கீழ் கொண்டுவரப்பட்டது, இதனால் பார்பாட்டூஸ் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் இவர் அரசருடன் இணைந்து சுமுகமான முறையில் பணியாற்றி தன் மறைமாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தினார். இவர் 680 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளில் நடந்த பேரவையில் பங்குபெற்று தன் மறைமாவட்டத்திற்காக பரிந்து பேசியுள்ளார்.


செபம்:
அமைதியையும் அருளையும் வழங்கும் எம் தந்தையே இறைவா! தன் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட ஆயர்கள் கடைபிடித்து தன்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவருடனும் சுமூகமான உறவுகொள்ளச் செய்தருள நீர் வழிகாட்டி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

லவ்சான்னே நகர் ஆயர் போனிபாசியுஸ் Bonifatius von Lausanne
பிறப்பு : 1180 ப்ருசல் Brüssel, பெல்ஜியம்
இறப்பு : 19 பிப்ரவரி 1260(?) ப்ருசல்

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

இன்றைய புனிதர் : 
(19-02-2020) 

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

“நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் கொன்ராட் இத்தாலியில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தவர். இவர் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வேட்டையாடுவதில் அதிக நாட்டம் கொண்ட கொன்ராட் தன்னுடைய சகாக்களோடு ஒரு சமயம் வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் குறிவைத்த விலங்கானது தப்பித்து புதருக்குள் ஓடி ஒழிந்தது. இதனால் அவர் அந்த விலங்கை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று புதருக்குத் தீ வைத்தார். அந்தத் தீயானது பரவி பெருவாரியான இடத்தை அழித்து நாசமாக்கியது. இதற்கிடையில் அந்த வழியாக வந்த ஓர் ஏழைக் குடியானவன்தான் இதற்கு காரணம் என்று சொல்லி அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றது.

இச்செய்தி கேள்விப்பட்ட கொன்ராட் மிகவும் மனம் வருந்தினார். உடனே அவர் அரசாங்கத்திடம் சென்று, “நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம், தன்னை எப்படியும் தண்டித்துக் கொள்ளலாம்” என்றார். அதற்கு அரசாங்கம் அவரிடமிருந்து பெரும் இழப்பீட்டுத் தொகையைக் கோரியது. உடனே அவர் தன்னுடைய நிலம், சொத்து பத்துகள் அனைத்தையும் விற்று இழப்பீட்டைக் கட்டினார். எல்லாவற்றையும் இழப்பீடாக் கட்டியபிறகு அவர் பரம ஏழையானார். அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானும் தன்னுடைய மனைவியும் துறவறம் பூனுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன்னுடைய மனைவியை புனித கிளாரம்மாள் சபைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைத்துக்கொண்டு, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

கொன்ராட், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தன்னுடைய தவற்றுக்காக வருந்தாத நாளே இல்லை. தன்னுடைய வாழ்வின் அடுத்த முப்பது ஆண்டுகளில் அவர் நோட்டாவிற்குச் சென்று, அங்கிருந்த திருச்சிலுவையின் முன்பு முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் வேண்டுதலால் நிறைய அற்புதங்கள் நடைபெறுவதை அறிந்து நிறைய மக்கள் அவரிடத்தில் சென்றார்கள். அவர் அவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டி ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தந்தார். அவர் மூப்படைந்ததும், அப்படியே இறையடி சேர்ந்தார்.


18 February 2020

Saint Simon February 18

Saint of the Day : (18-02-2020)

Saint Simon

A relative of Jesus, possibly a first cousin. He is mentioned in the Gospel of Matthew, and was one of the 72 disciples. He was present at the Ascension, and is one of the brethren of Christ mentioned in Acts who was present at the birth of the Church on the first Pentecost. Reported to have been at the martyrdom of Saint James the Lesser, he was chosen to succeed James as bishop of Jerusalem where he served for over 40 years. In 66, before the city fell to the Romans, the Christians received a divine warning, and evacuated to nearby Pella with Simon as their leader. In the aftermath of the destruction of Jerusalem, Simon led the Christians back to the city where they flourished, performed miracles, and converted many. Simon was eventually arrested, tortured and martyred for the twin crimes of being Jewish and Christian during the persecutions of Trajan.

புனித ஆன்கெல்பெர்ட் Angelbert

இன்றைய புனிதர்
2020-02-18
புனித ஆன்கெல்பெர்ட் Angelbert

பிறப்பு
750
இறப்பு
18 பிப்ரவரி 814,
ரிக்குயர் Riquier, பிரான்சு

இவர் பிரெஞ்சு நாட்டை பாதுகாக்கும் போர்படையில் பணிபுரிந்தவர். அப்போது டெனிஸ் Danes என்பவன் பிரெஞ்சு நாட்டின் ஆற்றங்கரை ஒன்றில் தங்கி, அந்நாட்டிற்கு எதிராகப் போர் புரிந்தான். அவனை எதிர்த்து ஆன்கெல்பெர்ட் போரிட வேண்டியிருந்தது. அச்சமயத்தில் அவர் புனித ரிக்குயர் என்ற புனிதரின் கல்லறைக்குச் சென்று இப்போரில்தான் டெனிஸ்சிற்கு எதிராக வெற்றிபெற்றால் தான் ஓர் துறவியாகிறேன் என்று செபித்தார். பிறகு இடி, மின்னல் புயல் என்று பாராமல் திடீரென்று டெனிஸ் படையெடுத்தான். ஆன்கெல்பெர்ட் அவனை எதிர்த்து போரிட்டு தன் படையுடன் வெற்றி பெற்றார்.

அவர் பெற்ற வெற்றியானது, அந்நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காமல் காப்பாற்றப்பட்டது. இதன் விளைவாக கடவுள் இவரின் மன்றாட்டை ஏற்று வெற்றிப் பெறச் செய்ததால் செயிண்ட் ரிக்குயிர் அவர்களின் துறவற இல்லத்திற்குச் சென்று துறவியானார். பின்னர் அச்சபையின் மடாதிபதி பொறுப்பையும் ஏற்று மிகச் சிறப்பாக அச்சபையை வழிநடத்தினார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இரவும் பகலும் செபம் செய்து திருப்பாடல்களைப்பாடி இறைவனை போற்றி புகழ்ந்து இறைவழியில் தன் சபையை வழிநடத்தினார்.

அதன்பிறகு இவர் 24 மணிநேரமும் துறவிகள் கட்டாயமாக செபம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தினார். கடுமையான விதிமுறை கடைப்பிடிக்கச் செய்தார். புனித கன்னிமரியாள், சூசையப்பர் இவர்களின் செப வாழ்வை வாழ தன் சபைத் துறவிகளிடத்தில் வலியுறுத்தினார். இவர் இறந்தபிறகு ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்தும் இவரின் உடல் அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


செபம்:
உலகம் முழுவதையும் படைத்து பராமரித்தாளும் எம் இறைவா! தான் செய்த பணியின் வழியாக தன்னை முழுவதும் உமக்கு அர்ப்பணமாக்கிய புனித ஆன்கெல்பெர்ட்டை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் வாழ்ந்த ஆன்மீக வாழ்வை நாங்கள் பின்பற்றி சொல் செயல் சிந்தனைகளில் என்றும் உம்மோடு இணைந்து வாழ வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ப்ரா அங்கெலிக்கா Fra Angelico
பிறப்பு : 1387 விச்சியோ டீ முகெல்லா Vicchiodi Mugello, இத்தாலி
இறப்பு : 1455 உரோம், இத்தாலி
பாதுகாவல் : கத்தோலிக்க கலைஞர்கள்

தூய சிமியோன் (பிப்ரவரி 18

இன்றைய புனிதர் : 
(18-02-2020) 

தூய சிமியோன் (பிப்ரவரி 18

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் சிமியோன், இயேசு பிறப்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.மு. 8 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் சகோதரரான கிளயோப்பாவிற்கும், இயேசுவின் தாயான மரியாவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தார். அப்படிப் பார்க்கும்போது இவரை இயேசுவின் சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எம்மாவு நோக்கிச் சென்ற இருவரில் ஒருவர் எனவும், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நிகந்த பெந்தகோஸ்தே நிகழ்வில் இவரும் இருந்தார் என்று நம்பப்படுகின்றது.

எருசலேமின் முதல் ஆயரான சின்ன யாக்கோபு கொல்லப்பட்டபோது, இவர் யூதர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார். சின்ன யாக்கோபின் மறைவிற்குப் பிறகு எருசலேமின் ஆயர் பொறுப்பானது காலியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் எருசலேமின் ஆயராக யாரை நியமிக்கலாம் என்று திருத்தூதர்கள் கலந்தாலோசித்தபோது சிமியோனின் பெயரையே பரிந்துரைத்தார்கள். திருதூதர்கள் ஒருமனதாக சிமியோனைத் தேர்ந்தெடுத்து ஆயர் பதவியில் அமர்த்தியபோது, அவர் சிறப்பாகப் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையில் உரோமை அரசாங்கம் எருசலேமின்மீது படையெடுத்து வந்து, அதனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டியது. இச்செய்தி ஆயர் சிமியோனுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. எனவே அவர் இறைமக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றுக்கு அப்பால் இருக்கின்ற பெல்லா என்று பகுதியில் போய் தங்கினார். பிரச்சனைகளெல்லாம் ஓய்ந்தபிறகு, மீண்டுமாக அவர் இறைமக்களை அழைத்துகொண்டு வந்து எருசலேமில் குடிபெயர்ந்தார்.


சிலகாலம் எல்லாமும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதது. டிரேஜனின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் மீண்டுமாகத் தலைதூக்கத் தொடங்கியது. அவன் தாவீதின் வழிவந்தவர்களை கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அப்போது ஆயர் சிமியோன், “நான் தாவீதின் வழிவந்தவர் மட்டும் கிடையாது, கிறிஸ்தவரும்கூட” என்று மிகத் துணிச்சலாகச் சொன்னார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அரசன் அவரை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டான். அப்போது அவருக்கு வயது 120. தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராத வசுவாசத்தோடு சிமியோன் இருப்பதைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள்

17 February 2020

Seven Holy Founders of the Servite OrderThirteenth Century February 17

Seven Holy Founders of the Servite Order
Thirteenth Century

February 17—Optional Memorial
Liturgical Color: White (Purple if Lenten Weekday)
Invoked to aid in the imitation of the charity and patience of Our Lady of Sorrows

Group dynamics encourage fidelity to individual good intentions

There are many reasons to join a group. To quilt, play soccer, learn chess, travel, or meet new friends. We accomplish personal goals in a group that we would never accomplish alone. Groups create positive peer pressure for their members to show up on time, read the book, do the exercise, or complete the task assigned. When we join a group we are freely creating obligations for ourselves, because we know, deep down, that accountability to others encourages fidelity to our own obligations.

The groups of the medieval world were called guilds. Craftsmen of similar skills and professions organized in guilds to learn, promote, and protect their trade. Guilds offered mutual assistance to their members that no individual could replicate. There was power in numbers. Today’s feast commemorates seven young men who belonged to a merchant guild in Florence, Italy, in the 1200s. These seven men were serious Christians. They loved God and the Church. And in addition to protecting their commercial interests by joining a guild, they also protected their souls by joining a local spiritual guild called the Confraternity of the Blessed Virgin, where their spiritual exercises were guided by a wise and educated priest who encouraged their devotion.

After the members of the Confraternity experienced mystical visions of the Virgin Mary, there was nothing left to do except abandon their worldly concerns, set aside money for their families to live without their help, and flee the busy city for a solitary life in the nearby mountains. The Seven fasted, prayed, and lived lives of such extreme austerity that a visiting cardinal admonished them to stop living like dogs. Over time they adopted a rule, accepted new recruits, elected leaders, and spread throughout Italy and beyond. They eventually took the name of the Order of Servants of the Blessed Virgin Mary, also known as the Servants of Mary, or Servites.

The Seven Holy Founders were especially devoted to the Seven Sorrows of Mary, and the Servites were instrumental in the Feast of Our Lady of Sorrows becoming part of the Church’s calendar on September 15. The Sorrows of Mary, the sword that pierced her heart, the tears she shed when witnessing Our Lord’s passion and death, motivated the Seven Holy Founders to promote devotion to Mary under this title. Mary was strong and stood at the foot of the cross. But she was also a mom who loved her boy. So she had a heavy heart that continually pondered what His suffering meant. We unite in joy at Christ’s resurrection on Easter and join with Mary’s sorrow just days before. The emotions of Scripture become the emotions of those who read it and those who live it in the liturgy and devotions of the Church.

The names of the Seven Holy Founders are known. But the Church celebrates them as a group, with their individuality ceding to their group identity. Together they accomplished more than seven men working separately could ever have accomplished. Their confraternity became an Order, and that Order still exists for the mutual spiritual benefit of all, a theological guild holding its members to high standards of spiritual perfection. Servite priests and brothers are still active in various countries around the world, hundreds of years after the Order’s founding. This is a testament to the immovable, rock solid, foundation on which its Seven Holy Founders constructed their spiritual and theological home.

On your feast day, our thoughts and prayers turn to you, the Seven Holy Founders of the Servite Order. Help us to find mutual support and assistance in loving God and Mary through a holy alliance with like-minded Christians. Through your intercession and example of group love of God, may our love for Him burn hotter and longer than a single flame.

லூக்காஸ் பெலூடி பெப்ரவரி 17

இன்றைய புனிதர்
2020-02-17
சபை மாநிலத்தலைவர் லூக்காஸ் பெலூடி Lukas Belludi OFM

பிறப்பு
1200,
பதுவை இத்தாலி
இறப்பு
17 பிப்ரவரி 1285,
பதுவை இத்தாலி

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். 1220 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரின் சபையில் சேர்ந்தார். பின்னர் பதுவை நகர் புனித அந்தோனியாரிடம் கல்வி பயின்றார். பெலூடி புனித பிரான்சிஸ்கன் சபையில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் தான் வாழும் போதே கடவுளின் அருளால் பல நோய்களை குணமாக்கினார். சிறப்பாக "புண்களை" குணமாக்குவதில் சிறப்பான வல்லமையைப் பெற்றிருந்தார். இவர் புனித அந்தோனியாரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். இதன் விளைவாக அந்தோனியார் இறந்தபிறகு அவரின் பெயரில் 1232 ஆம் ஆண்டு பதுவை நகரில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். அவர் இவ்வாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போதே கப்புச்சின் சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதுவை நகர் லூக்காஸ் என்று அழைக்கப்பட்டார்.

இவர் இறந்து 100 ஆண்டுகள் கழித்து 1382 ஆம் ஆண்டு பதுவை நகர் லூக்கா என்ற பெயரில் புனித அந்தோனியாரின் பேராலயத்திற்குள்ளேயே ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 1927 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் திருத்தந்தை 11 ஆம் பயஸ் திருநிலைப்படுத்தி பிரான்சிஸ்கன் சபையின் மறைப்போதகர் என்ற பெயரை அளித்தார்.


செபம்:
எல்லாம் வல்ல கடவுளே! சிறந்த மறைப்போதகரும் நோய்களை குணமாக்குபவரான லூக்காஸ் பெலூடி, உம் பணியை திறம்பட ஆற்ற அருளை வழங்கியுள்ளீர். அவர் எழுப்பிய புனித அந்தோனியாரின் பேராலயத்திற்கு வருகின்ற ஒவ்வொரு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம்மை அண்டி வரும் மக்களுக்கு அருளைப் பொழிந்து வாழ்வை வளமாக்கிட வரம் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. இஸ்னி நகர் துறவி மங்கோல்டு Mangold von Isny
பிறப்பு : 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 1150, இஸ்னி, ஜெர்மனி


2. ராட்சேபூர்க் ஆயர் எவர்மோட் Evermod von Ratzeburg
பிறப்பு : 1200 பெல்ஜியம்
இறப்பு : 1278


3. மறைசாட்சி பிரான்சு ரெஜிஸ் கிளெட் Franz Regis Clet CM
பிறப்பு : 19 ஆகஸ்ட் 1748 கிரேனொபெல் Grenoble, பிரான்சு
இறப்பு : 17 பிப்ரவரி 1829 சீனா
முத்திபேறுபட்டம்: 27 மே 1900 திருத்தந்தை 13 ஆம் லியோ

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

 (St. Claude de la Colombiere)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠

ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் (எபே 4:32)
பெர்ட்ரன்ட் லா கொலம்பியர் மற்றும் மார்க்கிரேட் காய்ன்டட் ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக 1641, பிப்ரவரி இரண்டாம் தேதி பிறந்தவர் க்ளாத்ததெ லா கொலம்பியர் .பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்த இவர், வியன்னாவிற்கு இடம் பெயர்ந்த பெற்றோருடன் சென்று அங்கே தொடக்கக் கல்வியைப் பயின்றார் .லயோன் சென்று மெய்யியல் கற்றார்.

அந்த நாட்களில் இறைவனின் அழைத்தலை உணர்ந்து இயேசு சபையில் சேர முடிவு செய்தார் .17 வயதில் அவிங்கோனில் நவதுறவி பயிற்சியை ஆரம்பித்தார். பயிற்சிக்குப் பிறகு முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார் .தொடர்ந்து ஜந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார் .1666 இல் பாரிஸ் சென்று இறையியல் படிப்பை முடித்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு லயோன் திரும்பினார்.

முழுநேர மறையுரையாளராக, வழிகாட்டியாக ,பல்வேறு வகைகளில் மறைப்பணியாற்றினார். இறையியலில் கருத்தாழ மிக்க மறையுரைகளை வழங்கினார் . நற்செய்தியின் மதிப்பீடுகளை உள்வாங்கி அதனை மக்களுக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் வசீகரித்தார் .கடவுள் எந்த அளவுக்குதத் தம் மக்களைப் பாதுகாக்கிறார் அன்பு செய்கிறார் என்பதை மக்கள் உணரச் செய்தார்.

1675 ,பிப்ரவரி இரண்டாம் தேதி நித்திய வார்த்தைப்பாடு கொடுத்து பிறகு பாரே-லெ மோனியால் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார் .எல்லாரும் சரியான தேர்வு என்று கூறி க்ளாத்தெவைப் புகழ்ந்தார்கள் .இக் கல்லூரிக்கு அருகிலேயே கன்னியர் மடம் ஒன்று இருந்தது .அந்த மடத்தில் அருள்சகோதரி மார்க்கிரேட் மேரி அலகாக் இருந்தார் .இவருக்கு திரு இருதய ஆண்டவர் காட்சி கொடுத்து தமது இருதயத்தைத் திறந்து காட்டினார் . பல்வேறு செய்திகளையும் வெளிப்படுத்தினார். யாரிடம் இதைக் கூறுவது என்று தெரியாமல் மார்க்கிரேட் தவித்து செபித்து வந்தார்.

ஆண்டவர் க்ளாத்தெவுக்கு அறிவுறுத்தி அம்மடத்திற்கு அனுப்பினார் .இருவரும் சந்தித்து உரையாடினார். 'ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் மன்றாட்டைக் கேட்டருளிளார் ' என்று மார்க்கிரேட் ஆனந்தம் அடைந்தார் .திரு இருதய ஆண்டவர் தமக்குக் கூறிய நற்செய்திகளையும் திருஇருதய பக்தி பரவ ஆண்டவர் விரும்புகிறார் என்பதையும் க்ளாத்தெயிடம் கூறினார். அதை ஆண்டவரின் காட்சி வெளிப்பாடுதான் என்பதை அவரும் நம்பினார் அதன் பிறகு ,அனைத்தையும் எழுதும்படி மார்க்கிரேட்டிடம் கேட்டுக்கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகள் பாரே-இல் வேலை செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கிருந்த டச்ச மக்களுக்கு மறையுரை ஆற்றும் கடினமான பணி இவருக்கு வழங்கப்பட்டது. புனித ஜேம்ஸ் அரண்மனையில் தங்கினார். அரண்மனையில் இருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதுடன் ,பலருக்கும் ஆன்ம வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நேரிடையாகவும் கடிதம் வழியாகவும் இப்பணியை நிறைவுடன் செய்தார்.

திருச்சபையை விட்டுச் சென்ற பலர் மனமாற்றம் வேண்டி இவரிடம் வந்து பழைய இயல்புகளைக் களைந்துவிட்டு புதிய இயல்புகளை அணிந்து கொண்டார்கள். இதைப் பற்றி குறிப்பிடும் போது, "இங்கு வந்ததில் இருந்து, நான் கண்டு மகிழ்ந்த கடவுளின் இரக்கத்தைப் பற்றி பெரிய புத்தகமே எழுதலாம் "என்றார்.

பருவ நிலையில் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது க்ளாத்தெ அடிக்கடி நோயுற்றார் .திடீரென 1678 ஆம் ஆண்டு தவறான தகவலின்படி கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உடல்நிலை மேலும் மோசமானது .1681 இல் பாரேவிற்கு வந்தவர்  1682 பிப்ரவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார். இவரைப் பற்றிக் குறிப்பிட்ட மார்க்கிரேட் மேரி ,"அன்பின் நற்செய்தி வழியாக ,கிறிஸ்து வெளிப்படுத்திய இரக்கத்தின் வழியாக, ஆன்மாக்களைக் கடவுளிடம் கொண்டு வந்து சேர்த்தவர் "என்றார் .1929, ஜூன் 16 அன்று திருத்தந்தை 11 ஆம் பக்தி நாதரால் அருளாளர் நிலைக்கு உயர்ந்த க்ளாத்தெ 1992 மே மாதம் 31-ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழியாக புனித நிலைக்கு உயர்ந்தார்.

இறையழைத்தல் பெற நம்மால் இயன்ற நலமான உதவிகளைச் செய்யும் போது நாமும் அருளில் நிறைகிறோம்.

புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி பெப்ரவரி 17

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 17)

✠ புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி
(St. Alexis Falconieri)

நிறுவனர்/ ஆன்மபலம் கொண்டவர்:
(Founder and Mystic)

பிறப்பு: கி.பி. 1200
ஃப்ளோரன்ஸ்
(Florence)

இறப்பு: ஃபெப்ரவரி 17, 1310
செனாரியோ மலை
(Mount Senario)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: டிசம்பர் 1, 1717
திருத்தந்தை பதினோராம் கிளமென்ட்
(Pope Clement XI)

புனிதர் பட்டம்: ஜனவரி 15, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலங்கள்:
சேன்டிஸ்ஸிமா அன்னுன்ஸியேடா, ஃப்ளோரன்ஸ்
(Santissima Annunziata, Florence)

பாதுகாவல்:
ஓர்வியேடோ நகர் (இத்தாலி)
(City of Orvieto (Italy)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 17

புனிதர் அலெக்ஸிஸ் ஃபல்கொனியெரி, "செர்வைட் துறவிகள்" (Servite Friars) அல்லது "மரியாளின் சேவகர்கள்" (Servants of Mary) என்றழைக்கப்படும் "செர்வைட் சபை"யை (Servite Order) நிறுவிய ஏழு தூய நிறுவனர்களுள் ஒருவராவார். இவர் மரணமடைந்த தினத்தன்று அனைத்து எழுவரினதும் நினைவுத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

அலெக்ஸிஸின் தந்தை "பெர்னார்ட் ஃபல்கொனியெரி" (Bernard Falconieri) ஃப்ளோரன்ஸ் (Florence) மாநிலத்தின் வர்த்தக இளவரசரும், குடியரசின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர்களது குடும்பம், "குவெல்ஃப்" (Guelph party) என்ற அரசியல் கட்சியை சார்ந்ததாகும். "குவெல்ஃப்" கட்சியானது, பாரம்பரியப்படி, திருத்தந்தைக்கு ஆதரவாகவும், ரோமப் பேரரசுக்கு எதிராகவும் செயல்படுவதாகும். இவர்கள், ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து வந்தனர்.

அலெக்ஸிஸ் ஆழ்ந்த பணிவுடன் வளர்க்கப்பட்டார். இத்தாலி நாட்டின் வசதியான, கலாச்சாரம் மிகுந்த நகரமொன்றின் வசதி வாய்ப்புள்ள பிரபுவாக வளர்ந்தார். அலெக்ஸிஸ், "லௌடெசி" (Laudesi) எனப்படும் "அதிதூய அர்ச்சிஷ்ட கன்னி மரியாளின் தோழமைக் கூட்டுறவு பக்தி"யில் இணைந்தார். அங்கே, அவர் தமது புனித வாழ்க்கையின் துணைவர்கள் ஆறு பேரை சந்தித்தார்.

கி.பி. 1233ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்றும், அலெக்ஸிஸ் மற்றும் அவரது துணைவர்கள் ஆறு பேரும் கடவுளின் அதிதூய அன்னை கன்னி மரியாளின் திருக்காட்சி காணும் பேறு பெற்றார்கள். பின்னர், ஏழு பேரும் இணைந்து "செர்வைட்" (Servites) எனப்படும் “மரியாளின் ஊழியர்கள்” எனும் துறவற சபையைத் தோற்றுவித்தனர். குடும்பம், வர்த்தகம் என, திடீரென அனைத்தையும் ஒரேநாளில் கைவிட்ட அலெக்ஸிஸ் நகருக்கு வெளியே "லா கமார்ஸியா" (La Camarzia) எனும் இடத்திலுள்ள ஒரு வீட்டில் ஓய்வு பெற சென்றார். பின்னர், ஒரு வருடத்தின் பிறகு "செனாரியோ மலை"யில் (Mount Senario) போய் தங்கினார்.

வசதி வாய்ப்புள்ள குடும்பத்து பிள்ளையாக அவர் வளர்ந்த அதே நகரின் தெருக்களில் ஒரு பிச்சைக்காரனாக அலெக்ஸிஸ் வலம்வந்தார். மிகுந்த உண்மையான தாழ்ச்சியுடன் தமது சகோதரர்களுக்காக பிச்சை வேண்டி சுற்றினார். நூற்றுபத்து வயது வரை அவர் வாழ்ந்திருந்தபோதும், குருத்துவம் பெற எப்போதும் மறுத்து வந்திருக்கிறார். தாம் அதற்கு பொருத்தமானவரில்லை என்றே இறுதிவரை கூறினார்.

ஃப்ளோரன்ஸ் நகரின் புறவழியில் உள்ள "கஃபஜ்ஜியோ" (Cafaggio) எனும் இடத்தில் இவரது நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்ட தேவாலயம் கி.பி. 1252ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இவரது சொந்த மருமகளான “புனிதர் ஜூலியானா ஃபல்கொனியெரி" (Saint Juliana Falconieri) இவரிடமே துறவற பயிற்சி பெற்றவர் ஆவார்.

மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் பெப்ரவரி 17

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 17)

✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠
(Seven Founders of the Servite Order)

வகை:
அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life)
மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society)

உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233

உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது.

கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த எழுவர், பிரார்த்தனைகள் மூலம் கடவுளுக்கு நேரடி சேவை செய்யும் நோக்கில், நகரையும் தமது குடும்பங்களையும் விட்டு விலகி, தனிமை வாழ்வு வாழ பரஸ்பரம் முடிவு செய்தனர். அவர்களது ஆரம்ப பிரச்சினையே, தம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளே. காரணம், அவர்களில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவர் திருமணமாகி, மனைவியை இழந்தவர்கள். அவர்களின் நோக்கமே, தவம் மற்றும் பிரார்த்தனைகளுடனான ஒரு வாழ்க்கை வாழ்வதேயாம். ஆனால், விரைவிலேயே அவர்கள் ஃபுளோரன்ஸ் நகரிலிருந்து தம்மை அடிக்கடி காண வந்த பார்வையாளர்களால் தொந்தரவை உணர்ந்தனர். பின்னர் அவர்கள், “வக்லியா” (Vaglia) எனுமிடத்திலுள்ள “மான்டே செனரியோ” (Monte Senario) துறவு மடத்தின் வனாந்தரமான சரிவுகளுக்கு திரும்பினர்.

கி.பி. 1244ம் ஆண்டு, தூய பீட்டரின் (Saint Peter of Verona) வழிகாட்டுதலின்படி, இச்சிறிய குழு, டொமினிக்கன் சபையினரின் துறவற சீருடையைப் போன்ற சீருடையை ஏற்றுக்கொண்டனர். தூய அகுஸ்தினாரின் (St. Augustine) சட்ட விதிகளின்படி வாழ முடிவு செய்தனர். “மரியாளின் ஊழியர்கள்” (Servants of Mary) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். அதன் குறிக்கோள்கள், அதன் உறுப்பினர்களின் புனிதத்துவமும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், கடவுளின் அதிதூய தாயாரான கன்னி மரியாளின் வியாகுலங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவரது பக்தியை பரப்புவதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே இச்சபையின் உறுப்பினர்கள், வியாகுல அன்னை மரியாளுக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். இயேசுவின் அன்னைக்கு தமது பக்தியை அர்ப்பணித்த இவர்கள், அன்னை மரியாளின் விருந்தோம்பல் மற்றும் இரக்கத்தினை தமது முத்திரையாக ஏற்றுக்கொண்டனர்.

“மரியாளின் ஊழியர்கள் சபையின்" (Servite Order) ஏழு நிறுவனர்கள் (Seven Holy Founders):
1. புனிதர் போன்ஃபிளியஸ் (St. Buonfiglio dei Monaldi (Bonfilius)
2. புனிதர் பொனஜுன்க்டா (St. Giovanni di Buonagiunta (Bonajuncta)
3. புனிதர் பார்டொலொமியஸ் (St. Amadeus of the Amidei (Bartolomeus)
4. புனிதர் ஹூக் (St. Ricovero dei Lippi-Ugguccioni (Hugh)
5. புனிதர் மனேட்டஸ் (Benedetto dell' Antella (Manettus)
6. புனிதர் சோஸ்டென் (Gherardino di Sostegno (Sostene)
7. புனிதர் அலெக்ஸியஸ் (St. Alessio de' Falconieri (Alexius)

கி.பி. 1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், பதினைந்தாம் நாளன்று, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII), இவர்களனைவரையும் புனிதர்களாக அருட்பொழிவு செய்வித்தார்.இன்றைய புனிதர் : 
(17-02-2020) 

மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)

இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

வாழ்க்கை வரலாறு

பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர் இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால், இவர்களில் நான்கு பேர் திருமணம் முடித்திருந்தார்கள். மற்ற மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ் நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில் வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும் போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப் பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று, அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர் தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார்கள்.

இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம், “நான் உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழுங்கள்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும் தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின் பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக், சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார்.

16 February 2020

புனித ஒனேசிம் பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

புனித ஒனேசிம்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)

பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை  சட்டம் ஆகும்.

ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.

பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.

சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)

திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர்  குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.

தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.

புனிதர் ஜூலியானா பெப்ரவரி 16

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)

✠ புனிதர் ஜூலியானா ✠
(St. Juliana of Nicomedia)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி. 286
“கம்பேனியா”விலுள்ள “குமாயே”
(Cumae in Campania)

இறப்பு: கி.பி. 304
நிக்கொமீடியா அல்லது நேப்பிள்ஸ்
(Nicomedia or Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

பாதுகாவல்: நோய்கள்

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 16

புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" (Roman Emperor Diocletian) என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

லத்தீன் மற்றும் கிரேக்க திருச்சபைகள் இவரது பெயரை தமது புனிதர்களின் பட்டியலில் தூய மறைசாட்சியாக வைத்துள்ளன.

ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க "பேகன்" (Pagan) குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் (Senator) ஆவார். அவரது பெயர், "அஃப்ரிகனஸ்" (Africanus) ஆகும். இவர் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் ஆவார்.

ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்" (Eleusius) என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது.

ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.

மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர்.

உயர் பதவியில் இருப்பதால் அகங்காரம் கொண்டிருந்த எலாசியஸ் ஜூலியானாவை பலி வாங்கும் நாளுக்காக காத்திருந்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான்.

ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.

காலப்போக்கில், பண பலம் கொண்ட எலாசியஸ், தமது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, "பிதினியா" (Bithynia) நாட்டின் 'ரோம ஆளுனராக' பதவி பெற்றான்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், ஜூலியானா தமது முடிவில் ஸ்திரமாக இருந்தார். திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார். ஜூலியானாவின் கணவனாக நிச்சயம் செய்யப்பட்டவனே ஜூலியானாவை தீர்ப்பிடும் நீதிபதியாக இருந்தான்.

கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். இரக்கமேயில்லாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.

சிறைச்சாலையில், ஒரு சம்மனசின் வேடமிட்டு அவரை அணுகிய பசாசு, சிலை வழிபாட்டுக்கு சம்மதித்து தியாகம் செய்யும்படி அவரை வற்புறுத்தியது. அதன் சூழ்ச்சியை அறிந்துகொண்ட ஜூலியானா, அதனை அடித்து, அதன் முகத்தில் காரி உமிழ்ந்து விரட்டினார். அதன் பிறகு, அவருக்கு தமது நிலைப்பாட்டில் உறுதியுடன் போராட புதிய சக்தி கிடைத்தது.

அவர், மீண்டும் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டார். அவர் தமது முடிவை மாற்றிக் கொண்டால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக எலாசியஸ் அறிவித்தான். மற்றும், ஜூலியானா தமது விருப்பப்படி கிறிஸ்துவையே பூஜிக்கலாம் என்றும் சம்மதித்தான். ஆனால், ஜூலியானா யாதொரு சஞ்சலத்துக்கும் ஆளாகாதிருந்தார்.

இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப் படுத்தியது. அங்கே, நூற்றுக்கணக்கான (ஆண்கள் 500 பேரும், பெண்கள் 130 பேரும்) பழமைவாதிகள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர். அவர்களனைவரும், ரோம ஆளுனர் எலாசியஸின் கட்டளைப்படி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

எலாசியஸ், அவரது முகத்தில் ஒரு பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போட்டான். பிறகு, "இப்போது போய் கண்ணாடியில் உன் அழகிய முகத்தைப் பார்த்து ரசி" என்றான். ஆனால், மென்மையாக புன்னகைத்த ஜூலியானாவோ, "இறுதித் தீர்ப்பின்போது, உயிர்த்தெழும் என் உடலிலுள்ள காயங்கள் யாவும் ஆறிவிடும்; என் ஆன்மாவை உன்னால் காயப்படுத்த முடியாது" என்றார்.

இறுதியில், ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவருடன் சேர்த்து, பார்பரா (Barbara) என்ற ஒரு புனிதரும் துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.