புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 May 2020

புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo) May16

இன்றைய புனிதர்
2020-05-16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்

புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்


சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)

இன்றைய புனிதர் :
(16-05-2020)

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)
“அவர் காலத்தில் நீதி தலைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” (திபா 72: 7)

வாழ்க்கை வரலாறு

1110 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள குப்பியோ என்னும் இடத்தில் உபால்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதனால் இவர் இவருடைய மாமாவின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். உபால்டின் மாமா குப்பியோ நகரில் ஆயராக இருந்தார்.

உபால்டு வளர்ந்து பெரியவராகியபோது துறவுமடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இறைவனின் திருவுளமோ அவர் மறைமாவட்டக் குருவாக மாறவேண்டும் என்றாக இருந்தது. எனவே உபால்டு மறைமாவட்டக் குருவாக மாறினார்.  பின்னாளில் அவர் குப்பியோ நகரின் ஆயராகவும் உயர்ந்தார்.

ஆயர் உபால்டு பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மன்னிக்கும் மனப்பான்மைக்கும் பேர் போனவராக விளங்கினார். ஒரு சமயம் நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அப்போது உபால்டுதான் கலகக்காரர்களை ஒன்றாக ஓட்டி, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, நகரில் அமைதியான சூழல் உருவாகக் காரணமாக இருந்தார். இன்னொரு சமயம் பிரடரிக் பார்பரோசா என்ற மன்னன் குப்பியோ நகர் மீது படையெடுத்து வந்து, சூரையாட நினைத்தான். அத்தகைய சூழலில் ஆயர்  உபால்டு மிகவும் தைரியத்தோடு பிரடரிக் பார்பரோசவையும் அவனுடைய படையையும் எதிர்கொண்டார். இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆயர் உபால்டு மிகவும் துணிச்சல் மிக்கவராகும் கனிவுள்ளவராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் உடல் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு வந்த நோயானது அவருடைய உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. இதனால் அவர் 1160 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1192 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது. இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாளில் குப்பியோ நகரில் இருந்த அனைவருமே வத்திகானில் இருந்த தூய பேதுருவின் சதுக்கத்திற்குச் சென்று, தங்களுடைய நன்றியுணர்வை காணிக்கையாக்கினார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய உபால்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மன்னித்து வாழ்வோம், மாபரன் இயேசுவைப் போன்று ஆவோம். 

தூய உபால்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த மன்னிக்கும் மனப்பான்மைதான்.

ஒரு சமயம் ஆயர் உபால்டு பணிநிமித்தமாக வெளியே சென்றுகொண்டிருக்கும்போது, அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்து ஆயரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தோட்டத் தொழிலாளரைப் பிடித்து அடிக்க முயன்றார்கள். அப்போது ஆயர் உபால்டு, அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, “இவர் தெரியாமல் என்னை அடித்துவிட்டார் அதனால் இவரை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். ஆயர் இவ்வளவு பெருந்தமையாக நடந்து கொண்டதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

தன்னை அடித்தவனை மன்னிக்கக்கூடிய மனப்பான்மை தூய உபால்டுக்கு இருந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய உபால்டைப் போன்று நாம் மன்னிக்ககூடிய மனிதர்காக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அடித்தவரை திருப்பி அடிக்கின்ற போக்கும் வன்முறைக்கு வன்முறையைக் கையாளுகின்ற போக்கும்தான் நிலவிக்கொண்டிருகின்றது. இதனால் எங்கும் வன்முறைக்கு மேல் வன்முறைதான் நிலவிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய உபால்டிடம் இருந்த அந்த மன்னிக்கும் மனப்பான்மை நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

ஒருமுறை மிகப் பெரிய மறைபோதகரான பில்லி கிரகாம் இவ்வாறு குறிப்பிட்டார், “மருத்துவ மனையில் இருக்கின்ற 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிப்பது”. ஆம், நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றபோது நம்மிடத்தில் இருக்கக்கூடிய முக்கால்வாசி நோய் காணாமல் போய்விடும்.

ஆகவே, தூய உபால்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னிப்பத்திலும் பொறுமையிலும் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.