புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 May 2020

அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி May 13

† இன்றைய புனிதர் †
(மே 13)

✠ அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி ✠
(Blessed Imelda Lambertini)
பிறப்பு: கி.பி. 1322 
பொலோக்னா, இத்தாலி
(Bologna, Italy)

இறப்பு: மே 12, 1333 (வயது 11)
வால்டிபியேட்ரா, பொலோக்னா 
(Valdipietra, Bologna)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1826
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

நினைவுத் திருநாள்: மே 13

பாதுகாவல்: புதுநன்மை பெறுவோர்

அருளாளர் இமெல்டா, இத்தாலி (Italy) நாட்டின் பொலொக்னா (Bologna) எனும் நகரில், "இகானோ லம்பெர்ட்டினி" (Egano Lambertini) மற்றும் "காஸ்ட்ரோ கலுஸ்ஸி" (Castora Galuzzi) ஆகியோரின் ஒரே மகளாக கி.பி. 1322ம் ஆண்டு பிறந்தார்.

5 வயது நிறைந்த இமெல்டா, திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டின் காலகட்டத்தில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்தது 14 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரை காத்திருக்குமாறு கூறிவந்தார்.

தமது 9வது வயதில் சிறுமி இமெல்டா டொமினிக்கன் (Dominican community) துறவு மடத்தில் இணைந்தார். கி.பி. 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருட்சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது.

இதைக் கண்ட அருட்சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத்தந்தையையும், ஏனைய அருட்சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி ஆடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் ஆலயத்தை விட்டுச் சென்றனர்.

பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்திருந்த சிறுமியின் வதனத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்சகோதரி, சிறுமியின் பெயர் சொல்லி அழைத்தார். அவரிடம் அசைவு ஏதும் காணாததால், அவரது தோளில் மெலிதாக தட்டினார். உடனே சிறுமி நிலைகுலைந்து தரையில் வீழ்ந்தார். இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது.

சிறுமி இமெல்டா, போலோக்னா (Bologna) நகரிலுள்ள “சேன் சிகிஸ்மோன்டோ” (Church of San Sigismondo) ஆயலத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

கி.பி. 1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ (Pope Leo XII), இச்சிறுமியை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். 

புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா லம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.

புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)சபை நிறுவனர் May 13

இன்றைய புனிதர்
2020-05-13
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்

அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.

அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.


செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்


திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி

தூய பாத்திமா அன்னை (மே 13)

தூய பாத்திமா அன்னை (மே 13)
(13-05-2020) 
 
 

வரலாற்றுப் பின்னணி

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின் காட்சியானது நடைபெற்றது.

 

1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம், “நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக மன்றாடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது 1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத் தோன்றி, “நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத, உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற ஜெபத்தை அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

 

அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள். அவள் அச்சிறுமிகளிடம், “ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும். ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட அந்த மூன்று சிறுமிகளுக்கு  மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள் இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஏதோ உளறுகிறார்கள் என்று  சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.

 

காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள். ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்னர் அவர், “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும் விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்” என்ற ஜெபத்தை சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள் மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.

 

இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும் மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள். தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது, அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, “மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.

 

1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய் அப்பெண்மணி காட்சி தந்து, “நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத் தந்தார். அந்தக் காட்சிகளில், “பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும் விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில் சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப் போர் வந்தது..

 

அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.

 

பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை

 

தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

ஜெபமாலை சொல்லவேண்டும்

 

அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும். ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப் பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும் உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

 

இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சின்னப் பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும் அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசுசபை குருக்கள் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

 

அனுதினமும் ஜெபமாலை சொல்லி ஜெபிப்பதனால் எத்தகைய நன்மைகள் நடக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் ஜெபமாலை சொல்லும் மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.

 

தீய நாட்டங்களை விட்டுவிட்டு மனமாறவேண்டும்.

 

பாத்திமா அன்னை தன்னுடைய காட்சியில் வலியுறுத்திச் சொல்லும் இன்னொரு செய்தி மனமாற்றம் என்பதாகும். மக்கள் பல்வேறு தீய நாட்டங்களால் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் மனமாற்றம் பெற்று இறைவழியில் நடக்கவேண்டும் என்பது அன்னையின் அன்பான வேண்டுகோளாக இருக்கின்றது. நாம் உண்மையில் பாவ நாட்டங்களிலிருந்து விலகி மனம்மாறிய மக்களாக வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

கலிலேயாக் கடற்கரைக்கு மிக அருகே உள்ள பழமையான நகர் கொராசின். இன்றைக்கு அந்த நகர் அழிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. இதற்குக் காரணம் மக்களுடைய தீச்செயல்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அந்நகரைப் பார்த்து, “கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு, தீர்ப்பு நாளில் உனக்குக் கிடக்கும் தண்டனை மிகுதியாகும்” என்றார். (மத் 11:21,22). அவர் சொன்னது போன்று நடந்தது. ஆகவே, மனமாற்றம் பெறாத ஒவ்வொருவரும் அழிவது உறுதி என்பதே இதிலிருந்து நாம் கண்டுணரக்கூடிய செய்தி.

 

ஆகையால், தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம். அனுதினமும் ஜெபமாலை சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.