புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 April 2020

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

இன்றைய புனிதர்

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

பிறப்பு
23 ஜனவரி 1350
வாலன்சியா(Valencia), ஸ்பெயின்

இறப்பு
05 ஏப்ரல் 1418
ஸ்பெயின்

இவர் ஓர் பக்தியான, உன்னதமான குடும்பத்தில், ஆங்கிலேயர் வில்லியம் பெரர் (William Ferrer) மற்றும் ஸ்பானிஸ் பெண் கான்ஸ்டான்ஷியா(Canstantia) என்பவருக்கும் மகனாக பிறந்தார். பிறந்த நாளிலிருந்தே இவரது வாழ்வு ஆரம்பமானது. இவர் பிறந்த அதே நாளில் வாலென்சியாவில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் தம் ஐந்தாம் வயதில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். இவரது பெற்றோர் இவரை, அன்னைமரியிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர்த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, தான் பெறும் இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற்றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங்களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். வின்சென்ட் எட்டாம் வயதில் படிப்பைத் தொடங்கினார். பன்னிரண்டு வயதில் தத்துவயியலையும் (philosophy), பதினான்காம் வயதில் இறையியலையும்(theology) யாரும் எதிர்பார்க்காத விதமாக திறமையாக படித்து முடித்தார்.

பின்னர் 1367 ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் நாள் வாலன்சியாவிலுள்ள தொமினிக்கன் ப்ரையரில் (Dominican priory) சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவறமடத்திலேயே, அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு நவதுறவு வரை (Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.

அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு(Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு 1373 ல் பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச்சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் 1376 ல் மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் 1379 ல் பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் 1385 - 1390 களில் வாலென்சியாவிற்கு வரவழைக்கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய்குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை பீட்டர் டி லூனா(Peter De Luna) என்ற திருத்தந்தை விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேசப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.

21 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதிமூச்சுவரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5 ஆம் நாள் 1418 ஆம் ஆண்டு இறந்தார்.

இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனந்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.


செபம்:

அன்பின் பரம்பொருளே எம் இறைவா! நீர் ஒவ்வொரு கிறித்தவர்களையும் நல்ல நற்செய்தியாளராகவே படைத்துள்ளீர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தூய ஆவியின் வல்லமையால் நீர் எங்களோடும், எங்களை வழிநடத்தும் குருக்களோடும் நாவிலிருந்து பேசி, நாங்களும் புனித வின்சென்ட் பெரரைப் போல நற்செய்தி பரப்புபவர்களாக வாழ்ந்து, ஒரு சிலரையேனும் பாவ வாழ்விலிருந்து மீட்டு, எல்லார்க்கும் எல்லாமுமாக வாழ வரம் தாரும்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி, திருக்காட்சியாளர் கத்தரீனா தோமாஸ் Katharina Thomas CSA

பிறப்பு :1 மே 1531, மலோர்கா தீவு Mallorca, ஸ்பெயின்
இறப்பு :5 ஏப்ரல் 1574, மலோர்கா தீவு

No comments:

Post a Comment