புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 June 2020

அர்ச். பொத்தாமியானாவும் துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 205).* June 28

*ஜூன் மாதம் 28-ம் தேதி* 

*Ss. Potamiana & Co., MM.*                
*அர்ச். பொத்தாமியானாவும் துணைவரும்* 
*வேதசாட்சிகள் - (கி.பி. 205).*     
பொத்தாமியானா என்பவள் சிறுவயதிலே பக்தி விசுவாசமுள்ள தாயால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு தேவையான கல்வியை ஒரிஜின் என்னும் பெயர்பெற்ற சாஸ்திரியால் கற்பிக்கப்பட்டாள். இப்புண்ணிய மாது  பிறமதத்தைச் சார்ந்த ஒருவனுக்கு அடிமையாக விற்கப்பட்டிருந்தாள். பொத்தாமியானா இளம் வயதும் அழகும் நிறைந்தவளாயிருந்ததால் இவளுடைய எஜமான் இவள் மட்டில் கெட்ட எண்ணம் கொண்டு, இவளை பாவத்திற்கு சம்மதிக்கும்படி முயற்சித்தும், இவள் அதற்கு இணங்காததினால் கோப வெறிகொண்டு இவளை நாட்டதிகாரிக்குக் கையளித்து, இவளைத் தன் ஆசைக்கு இணங்கச் செய்தால் பெரும் பணத்தை அவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவனும் அவ்வாறே பொத்தாமியானாவுக்கு நய பயத்தைக் காட்டி, உன் எஜமான் சொற்படி செய் என்றான். தெய்வ பயமுள்ள அப்புண்ணிய மாது: “நான் எப்பேர்ப்பட்ட கொடிய சாவுக்கும் தயாராயிருக்கிறேன், ஆனால் நீர் கூறும் பெரும் பாவத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்” என்றாள். அதிபதியின் கட்டளைப்படி பாசிலிதெஸ் என்னும் சேவகன் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் வேதசாட்சியைப் போட்டான். சற்று நேரத்திற்குள் பொத்தாமியானா பிரமாணிக்கமாய் ஊழியம் செய்த தன் தேவ பத்தாவிடம் போய்ச் சேர்ந்தாள். தன்னைக் கொப்பரையில் போட்ட சேவகனுக்கு வேதசாட்சி தரிசனமாகி கூறிய புத்திமதியால் அவனும் ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சி முடி பெற்றான்.             

*யோசனை*
ஒருவர் வீட்டில் வேலை செய்வதால் பாவமுண்டாகுமென்று அறிந்து, அதை விடாமல் பாவத்தில் புரளும் கிறீஸ்தவர்கள், பொத்தாமியானாவுடைய நடத்தையைக் கண்டு வெட்கி தலைகுனிவார்களாக.

No comments:

Post a Comment