புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

Showing posts with label புனிதர்கள் தகவல் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. Show all posts
Showing posts with label புனிதர்கள் தகவல் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. Show all posts

06 March 2020

தூய கொலேட் (மார்ச் 06)

இன்றைய புனிதர் :
(06-03-2020) 

தூய கொலேட் (மார்ச் 06)
நிகழ்வு

ஒரு சமயம் கொலேட் இருந்த பகுதியில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை குறைமாதக் குழந்தையாக பிறந்து உடல் நலம் குன்றியிருந்தது. இதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்தால் உடல் நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினார். ஆலயத்திற்கு சென்று, அங்கிருந்த குருவானவரிடம் காட்டியபோது, அக்குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது குருவானவருக்குத் தெரியவந்தது. எனவே குருவானார், குழந்தையின் தந்தையிடம், “குழந்தை ஏற்கனவே இறந்துபோய்விட்டது. இறந்த குழந்தைக்கு திருமுழுக்குக் கொடுப்பது நல்லதல்ல” என்றார். இதைக் கேட்டு அந்த குழந்தை தந்தை கதறி அழுதார்.

அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன குருவானவர் அவரிடம், “பக்கத்தில் கொலேட் என்ற பெண் துறவி ஒருவர் இருக்கின்றார். உன்னுடைய குழந்தையை அந்தத் துறவியிடம் நீ எடுத்துக்கொண்டு போனால், கட்டாயம் அவர் உன்னுடைய குழந்தையை உயிர்பித்துத் தருவார்” என்றார். குருவானார் சொன்னதை நம்பி, அவர் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொலேடிடம் ஓடினார். அவரைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னார். உடனே அவர் தான் அணிந்திருந்த மேலாடையை (Habit) எடுத்து, அந்தக் குழந்தையின் மீது போர்த்தி, அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் ஜெபித்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “உன்னுடைய குழந்தை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதனால் இக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் குருவானவரிடம் காட்டி, திருமுழுக்குக் கொடு” என்றார்.

கொலேட் சொன்ன வார்த்தைகளை நம்பி, அந்த மனிதர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குருவானவரிடத்தில் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை போகிற வழியிலே பிழைத்துக்கொண்டது. உயிர்பிழைத்த அந்தக் குழந்தையை குருவானவரிடத்தில் காட்டி, திருமுழுக்குக் கொடுத்தார். பின்னாளில் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி, கொலேட்டின் சபையில் சேர்ந்து துறவியானது.

வாழ்க்கை வரலாறு

கொலேட், 1381 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி, பிரான்சில் உள்ள கார்பி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர்கள் தூய நிக்கோலாசிடம் இடைவிடாது ஜெபித்துவந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களது ஜெபம் கேட்கப்பட்டது. ஆம், அவர்களது ஜெபத்தின் பயனாக கொலேட் பிறந்தார். கொலேட் பிறக்கும்போது அவருடைய தந்தைக்கு 60 வயது.

கொலேட் வளரும்போதே பக்தியோடும் ஒழுக்கத்தோடும் வளர்ந்து வந்தார். அவருடைய வளர்ச்சியைக் கண்டு, அவருடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படி எல்லாமே நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், கொலேட்டின் பெற்றோர் இருவரும் இறந்துபோனார்கள். இதனால் கொலேட் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் மனம்தளராமல், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவற மடத்தில் இருந்த சமயத்தில், ஒருநாள் அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது தூய அசிசியார் அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அசிசியார் கொலேட்டிடம், கிளாரா சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு மறைந்துபோனார். கொலேட்டுக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் புரிந்தது. உடனே அவர் கிளாரா மடத்தில் மாற்றங்களைக் கொண்டு வரத் தொடங்கினார். அதற்கு பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் கொலேட் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

கொலேட் சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற அதே வேளையில், ஏழை எளியவரிடத்திலும் மிகவும் அக்கறை கொண்டு வாழ்ந்துவந்தார். சபையில் யாரும் செய்யத் துணியாத மிகவும் சாதாரண பணிகளையும் செய்தார். இதனால் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். இப்படிப்பட்டவர் 1447 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கொலேட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்தல்

தூய கொலேட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் என்பது நமக்குப் புரியும். அவர் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், இறைவன் அவர் வழியாக பல வல்ல செயல்களைச் செய்தார் என்பதை அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.

ஒருமுறை அவர் திருத்தந்தை பெனடிக்டைச் சந்திக்க நைசை நோக்கிப் பயணம் செய்தபோது, நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். அந்த நண்பரின் மனைவியோ எப்போது வேண்டுமானால் குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் இருந்தார். இரவில் எல்லாரும் தூங்கப் போன சிறிதுநேரத்தில் நண்பரின் மனைவி பிரசவ வேதனையில் அலறினார். உடனே கொலேட் அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்று அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டதற்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடைபெற்றது. அதனால் எல்லாரும் இறைவனைப் போன்று மகிழ்ந்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் வழியாக கொலேட் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றவராய் இந்த உலகில் வலம்வந்தார். தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றபோது, இறைவனால் ஆசிர்வதிக்கப்படும் என்பது உறுதி.

ஆகவே, தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

05 March 2020

சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske march 5

இன்றைய புனிதர்
2020-03-05
சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske
பிறப்பு
29 ஜனவரி 1821,
பிரேஸ்லவ் Breslau, போலந்து
இறப்பு
5 மார்ச் 1888,
பிரேஸ்லவ் Breslau, போலந்து

இவர் தான் ஓர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஊர் ஊராகச் சென்று மறைப்பணியை ஆற்றினார். பேராலயங்களில் சிறப்பான மறையுரை ஆற்றி, பலரை மனந்திருப்பினார். திருப்பலிக்கு வராத மக்களையும் தன் அழகிய மறையுரையால் கவர்ந்து இறை இல்லம் நாடி வரச் செய்தார். இளைஞர்களின் மனதை மிக எளிதாகக் கவர்ந்தார், கைவிடப்பட்ட இளைஞர்களுக்கு இல்லம் ஒன்றை எழுப்பி, அவர்களை பராமரித்து வந்தார்.

இவர் அக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவனித்து பராமரிப்பதற்கென்று, எட்விக் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு இச்சபை, திருத்தந்தை அவர்களால் துறவறச் சபை என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ராபர்ட் ஸ்பைஸ்கே "காரித்தாஸ் அப்போஸ்தலர்" (Apostel Caritas) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இறந்தபிறகு, இவரால் தொடங்கப்பட்ட சபையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
படைப்பனைத்திற்கும் பாதுகாவலே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். இவர்கள் தெளிந்த சிந்தனையுடன் தங்களது வாழ்வை வாழ உதவி செய்யும். நல்லதோர் எதிர்காலத்தைப் பெற்று, நாட்டிற்கும் வீட்டிற்கும் எம் திருச்சபைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் ஒலிவியா Olivia
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி
இறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி


துறவி கொன்ராட் ஷோய்பர் Konrad Scheuber
பிறப்பு : 1481, ஆல்ட்பெல்லன் Altfellen
இறப்பு : 5 மார்ச் 1559 ஒல்ஃபன்சீசன் Wolfenschießen, சுவிஸ்

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)

இன்றைய புனிதர் : 
(05-03-2020) 

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)
“மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிலுவை யோவான் ஜோசப், இத்தாலியில் உள்ள இஸ்கியா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1654 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலே பக்தியிலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கிய இவர், தனது பதினாறு வயதில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, 1677 ஆம் ஆண்டு குருவானார். குருவானவராக மாறிய இவர் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு நீண்டநேரம் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார். இவருடைய ஜெபவாழ்க்கை இவரை மேலும் மேலும் உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால் தொடக்கத்தில் நவதுறவிகளுக்கு பொறுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக உயர்ந்து துறவற மடத்தின் தலைவரானார்.

துறவுவாழ்க்கையில் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்தார். பணிவிடை பெறுவதல்ல, பணிவிடை புரிவதே மேலானது என்றும் தன்னையே இறைவனுக்கு முழுமையாகக் கையளிப்பதும்தான் துறவற வாழ்வின் மேலான குறிக்கோள்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து வந்தார். இவருடைய கைகளால் நிறைய வல்ல செயல்கள் நடைபெற்றன. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரிடத்தில் வந்தபோது, இவர் தனது கைகளை வைத்து ஜெபித்தபோது அவர்கள் நோய் நீங்கி நலமடைந்தார்கள். இவர் வசதியான குடும்பத்திலிருந்து வந்தபோதுகூட எப்போதும் ஏழ்மையையே கடைப்பிடித்து வந்தார்.

ஏழ்மை, தாழ்ச்சி போன்ற புண்ணியங்களில் சிறந்துவிளங்கிய சிலுவை யோவான் ஜோசப் மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் இன்னல்களும் சூழ்ந்த நேரத்தில் மரியாளிடத்தில்தான் இவர் மிகுந்த பக்திகொண்டு ஜெபித்துவந்தார். மரியாவும் இவருக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்து வந்தார். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த சிலுவை யோவான் ஜோசப் 1734 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி, மரணப்படுக்கையில் விழுந்து அப்படியே இறந்து போனார். இவருக்கு 1839 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் பயஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்தல்

தூய சிலுவை யோவான் ஜோசப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், சேவை செய்து வாழ்ந்த வாழ்க்கையாகும். ஆண்டவர் இயேசு சொன்ன, ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்காக தம் உயிரையும் கொடுக்க வந்தார்’ என்ற வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லி அதன்படியே இவர் வாழ்வதற்கு முயற்சிகள் செய்து வந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நல்ல மனதோடு, அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்ய முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றோமோ ஒழிய, நாம் அடுத்தவருக்குச் சேவை செய்ய முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் தூய சிலுவை யோவான் ஜோசப் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார்.

ஒருசமயம் ரோட்னி ஸ்மித் என்ற வெளிநாட்டுக்காரர், அன்னை தெரசா நடத்தி வந்த அனாதை இல்லத்திற்கு சென்றிருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால், அனாதை இல்லத்தில் இருந்த ஒரு பணியாளர், அங்கிருந்த நோயாளி ஒருவர் வாந்தி எடுத்து வைத்ததை கழுவிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோட்னி ஸ்மித் அந்தப் பணியாளரிடம் சென்று, “எப்படி உங்களால் இந்த வேலையெல்லாம் செய்ய முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர், “யாராவது பிள்ளைகள் ‘அசுத்தம்’ செய்து வைத்ததை சுத்தம் செய்யும்போது அதனை வேலை என்று சொல்வார்களா? இல்லைதானே... அதுபோன்றுதான் நானும் இதை வேலையாகச் செய்யாமல் கடமையாகச் செய்கின்றேன்” என்றார். அந்தப் பணியாளர் பேசும்போது வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பையும் கண்களில் தெரிந்த ஒளியையும் கண்டு வியந்துபோய் நின்றார்.

தான் செய்த ‘பணியை’ ஏதோ கடமைக்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்புடன் செய்ய, அந்தப் பணியாளரின் செயல் உண்மையில் நமது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது. நாமும் அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்யவேண்டும் என்பதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அர்ப்பண உள்ளத்தோடு ஆண்டவருக்கும் அவரது அன்பு மக்களுக்கும் சேவை செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (05-03-2020)

St. John Joseph of the Cross

He was born on August 15, 1654, on the date of the Feast of Assumption, in the island of Ischia near Naples. His father was Joseph Calosirio and mother Garguilo. His birth name was Carlo Gaetano. He entered in to the Franciscan Order of the strictest observance or Reform of St. Peter of Alcantara, at Naples at the age of 16 years. He was happy in performing menial offices in the convent. Even at his young age he was devoted to poverty and fasting. His obedience brought him good name in the convent. He was chosen as the Master of the Novices at the young age of 24 years. He devised a cross about a foot length set with rows of sharp nails and fastened the cross tight over his shoulder so that it gives much pain to the shoulder, as a means of penance. He was appointed Vicar Province of the Alcantarine Reform of Italy in the year 1702. It seems he also knew his date of death. One week before his death, when he talked to his brother, John Joseph requested his brother to specially pray for him without fail on next Friday and he actually died on that very Friday on March 5, 1739.

St. John Joseph of the Cross was beatified in the year 1789 and canonized by pope Gregory-XVI on May 26, 1839.

---JDH---Jesus the Divine Healer---

04 March 2020

தூய கசிமிர் (மார்ச் 04)

இன்றைய புனிதர் : 
(04-03-2020) 
தூய கசிமிர் (மார்ச் 04)

“மனிதன் உலகம் முழுவதும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானெனில் அதனால் வரும் பயனென்ன? (மத் 16: 26)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், போலந்து நாட்டு மன்னர் நான்காம் கசிமிர் என்பவருக்கு மகனாக 1458 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்த கசிமிர், துளுகோஸ் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது பாடங்களை கற்று வந்தார்.

இந்த சமயத்தில் துருக்கி நாட்டவரால், ஹங்கேரி நாட்டு மக்களுக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரி நாட்டு மக்கள், மன்னர் நான்காம் கசிமிரை அணுகி வந்து அவருடைய மகனான கசிமிரை தங்களுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தன் மகன் கசிமிரை அவர்களுக்குத் தலைமை தாங்கப் பணித்தார். சில ஆண்டுகள் கசிமிர் ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று சீரும் சிறப்புமாக மக்களை வழிநடத்தி வந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அந்த சிறிய வயதிலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய திறமையை இறைவன் கசிமிருக்குக் கொடுத்திருந்தார்.

ஒருசில ஆண்டுகள் ஹங்கேரியில் இருந்து பணியாற்றிவிட்டு, கசிமிர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார். ஹங்கேரிக்கு வந்த சமயத்தில் அவருடைய தந்தை, லித்துவேனியாவில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அரச பதவியை கசிமிரிடம் கொடுத்துவிட்டு அங்கு சென்றார். அவர் திரும்பி வரும்வரை கசிமிர் மக்களை நல்லமுறையில் வழி நடத்திச் சென்றார். தன் மகனுக்கு இருக்கின்ற இந்த அசாதாரண திறமையைப் பார்த்துவிட்டு மன்னர், அவரை ஜெர்மன் நாட்டு மன்னரின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். ஆனால், அவரோ அதற்கு இசையாது, ஆண்டவருக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

கசிமிர், ஜெப வாழ்க்கையிலும் மேலோங்கி விளங்கினார். குறிப்பாக மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். ‘தினமும் வாழ்த்துவோம், ஓ அன்னையே’ என்ற பாடலை அவர் எப்போதும் பாடி ஜெபித்துக்கொண்டே இருந்தார். சில நேரங்களில் அவர் இரவில் தூங்காமல் ஜெபித்துவந்தார். இப்படி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த கசிமிர், மிகக் குறைந்த வயதிலே, அதாவது அவருக்கு 24 வயது நடந்துகொண்டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்தார். கசிமிர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கல்லறையைத் தோண்டிப் பார்த்தபோது அவருடைய உடல் அழியாது இருப்பது கண்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர் தன்னோடு வைத்திருந்த ஜெபப்புத்தகம் கூட அழியாமல் இருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கசிமிரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய கசிமிரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் மரியன்னையின் மீது கொண்டிருந்த பக்தி, அந்த பக்தியினால் அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை நம்மை வியக்க வைக்கின்றது. புனிதரைப் போன்று நாமும் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இடைக்காலத்தில் உரோமையில் பத்திரிசியா அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மரியன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அதன் பொருட்டு அவர் ஏழைகளுக்கும் பிச்சைகாரர்களுக்கும் நிறைய தான தர்மங்களைச் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் மூப்பெய்தி இறந்துபோனார்.

இதற்கிடையில் உரோமையில் இருந்த செசிலியம்மாள் ஆலயத்தில் குருவானவர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில், விண்ணகத்தில் மரியன்னை வானதூதர்கள் புடைசூழ அரியணையில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக ஒரு பிச்சைக்காரி அழுது புரண்டு மன்றாடினாள். “அன்னையே! உன் அடியாராகிய பத்திரிசியா அருளப்பர், மண்ணுலகில் செய்த ஒருசில தீயச் செயல்களுக்காக இப்போது உத்தரிக்க தளத்தில் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நிறைய தான தர்மங்களைச் செய்தவர். இதோ நான் போர்த்தியிருக்கின்றனே இந்த போர்வை, இதுகூட அவர் போர்த்தியதுதான்” என்றார். உடனே மரியன்னை அவரிடம், “பத்திரிசிய அருளப்பரை எனக்குக் காட்டும்” என்றார். அந்தப் பிச்சைக்காரியும் அவரை மரியன்னையிடம் காட்ட, மரியன்னை அவர்மீது இரக்கம்கொண்டு அவருக்கு விண்ணகத்தில் இடமளிக்க தன் மகனை வேண்ட, அவரும் அவருக்கு விண்ணகத்தில் இடமளித்தார்.

மரியன்னையிடம் வேண்டுவோருக்கும் அவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோருக்கும் இறைவன் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், மரியன்னையியம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததால்தான் என்னவோ அவருடைய உடல் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க மரியா துணைபுரிந்தார் என்று நம்பத் தோன்றுகின்றது.

ஆகவே, தூய கசிமிரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடமும் அவர் மகன் இயேசுவிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (04-03-2020)

St. Casimir

St. Casimir was born on October 3, 1458 in Krakow, Poland. He was the crown prince of the Kingdom of Poland and of the Grand Duchy of Lithuania. He was the second son of King Casimir-IV of Poland and Grand Duke of Lithuania and Queen Elizabeth Habsburg of Hungary. He was educated by the Polish priest Jan Dlugosz. His father tried to arrange the marriage of Casimir with Kunigunde of Austria but Casimir refused to marry to live a life of celibacy. In October 1471 prince Casimir with his father king Casimir-IV invaded Hungary to install Casimir as the king of Hungary. But due to unforeseen circumstances the campaign failed. This defeat pushed Casimir to religious life. As a prince Casimir rejected comforts, slept little and spend nights in prayers. He used to sleep on floor and not on royal bed. He died on March 4, 1484 of tuberculosis at the young age of 25 years.

His first miracle was his appearance before the Lithuanian Army during the siege of Polotsk in 1518, where St. Casimir showed where the Lithuanian troops could safely cross the Daugava River and relieve the city besieged by the army of Grand Duchy of Moscow. This miracle was reported to the pope by King Sigismund-I the Old, of Poland and the pope Adrian-VI canonized Casimir in the year 1522. Pope Pius-XII named saint Casimir the special patron of all youth on June 11, 1948.

---JDH---Jesus the Divine Healer---

03 March 2020

மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat march3

இன்றைய புனிதர்
2020-03-03
மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM
பிறப்பு
4 ஜனவரி 1675,
கோனெர்ஸ்ராய்த் Konnersreuth, பவேரியா
இறப்பு
3 மார்ச் 1716,
கொண்டர் Gondar, எத்தியோப்பியா
முத்திபேறுபட்டம்: 20 நவம்பர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

இவர் பிறந்த ஊர் மக்களால், அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே மறைப்பணியாற்றுவதில் அக்கறை காட்டி வந்தார். இவர் குருவான பிறகு 3 அருட்தந்தையர்களுடன் இணைந்து மறைப்பணியாற்றினார். மறைப்பணியாற்றும்போது பல இன்னல்களை எதிர்கொண்டார். இவர் அரசர் ஒருவர் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போது அவ்வரசன் இவரை கற்களால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான்.

அச்சமயத்தில் இவர் இறைவனின் அருளால் எத்தியோப்பிய நாட்டில் ஒருநாள் நடந்த திருப்பலியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் திருப்பலி நிறைவேற்றும்போது அரசரின் படைவீரர்களால் பிடிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்த சமயத்தில் அனைவராலும் கற்களால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.


செபம்:
அற்புதங்களை செய்து வரும் எம் இறைவா! உம்மீது கொண்ட அன்பால் ஆர்வமுடன் இறைப்பணியை செய்ய நீர் சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றீர். இறையழைத்தல் குறைந்து வரும் இந்நாட்களில், உம் அறுவடைக்குத் தேவையான மிகுதியான ஆட்களை நீர் தேர்வு செய்து, உம் பணியை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைசாட்சி பேதுரு ரெனாட்டூஸ் ரோகுவே Petrus Renatus Rogue CM
பிறப்பு : 11 ஜூன் 1758 வானெஸ் Vannes, பிரான்ஸ்
இறப்பு : 3 மார்ச் 1796, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 10,மே 1934


பெர்சோ நகர் குரு இன்னொசென்ஸ் Innozenz von Berzo OFM
பிறப்பு : 19 மார்ச் 1844 நியார்டோ Niardo, இத்தாலி
இறப்பு : 3 மார்ச் 1890, பெர்காமோ Bergamo, இத்தாலி

தூய குணகுந்தஸ் (மார்ச் 03

இன்றைய புனிதர் :
(03-03-2020) 

தூய குணகுந்தஸ் (மார்ச் 03)
நிகழ்வு

உரோமையின் அரசியாக இருந்த குணகுந்தஸ், ஹெஸ்ஸே என்னும் பகுதியில் இருந்தபோது கடுமையாக நோயுற்றார். மக்களெல்லாம் அவர் இறந்துவிடுவார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குணகுந்தஸோ இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையுடன் ஜெபித்தார். “இறைவா நீர் மட்டும் எனக்கு உயிர்பிச்சை அளித்தால், நான் கபன்ஜெனின் பகுதியில் ஒரு துறவற மடத்தை கட்டி எழுப்புவேன்” என்று சொல்லி ஜெபித்துவந்தார். அரசியினுடைய ஜெபம் வீண்போகவில்லை. ஆம், ஆண்டவர் அவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்து, பல ஆண்டுகள் வாழ்வதற்கான ஆசீர்வாதத்தைத் வழங்கினார்.

அரசியோ தான் சொன்னதற்கேற்ப கபன்ஜெனினினில் ஒரு துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

வாழ்க்கை வரலாறு

குணகுந்தஸ், 999 ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் பிறந்தார், இப்பகுதியானது பிரான்ஸ் மட்டும் ஜெர்மனி இவற்றின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவர் சிறுவயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்தார். வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபின்பு, இவர் உரோமை மன்னர் ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

குணகுந்தஸ், ஹென்றியை மணந்துகொண்டபோதும் கற்பு நெறியில் மேலோங்கி வளர்ந்து வந்தார். “தனது உடலை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன். ஆதலால், தாம்பத்திய உறவு வேண்டாமே” என்று குணகுந்தஸ், கணவர் ஹென்றியிடம் சொன்னபோது அதனை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் குணகுந்தஸ்மீது அவர் முன்பைவிட மிகுந்த அன்பைக் காட்டி வந்தார். இதனால் இரண்டுபேருமே முன்மாதிரியான தம்பதியராக வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம் மக்களில் சிலர் குணகுந்தசை சந்தேகப்பட்டார்கள். அவர் போகிற போக்கு சரியில்லை என்றெல்லாம் அவர்மீது பழி சுமத்தினார்கள். இதைக் கேள்விப்பட்ட குணகுந்தஸ் மிகவும் வருந்தினார். தான் கடவுளுக்குப் பயந்து மிகவும் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது மக்கள் இப்படி தன்மீது அபாண்டமாகப் பழிபோடுகிறார்களே என்று, எல்லாரும் கூடியிருந்த ஓர் இடத்தில் தீ மூட்டி, ‘நான் கற்பில் சிறந்தவளாக இல்லையென்றால், இந்த நெருப்பு என்னைப் பற்றி எரிக்கட்டும்” என்று சொல்லி, அதில் விழுந்தாள். ஆச்சரியம் என்னவென்றால், நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. இதனைப் பார்த்து மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அரசி குணகுந்தஸ் உண்மையிலே கற்பில் சிறந்தவள் என்று வாயாரப் போற்றிப் புகழ்ந்தார்கள். அரசர் இதைக் கேள்விப்பட்டு இன்னும் அதிகமாய் குணகுந்தசை அன்பு செய்து வந்தார்.

எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் மன்னர் ஹென்றி திடிரென்று இறந்துபோனார். அப்போது குணகுந்தஸ் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தன் கணவரின் இறப்புக்குப் பிறகு அரசாங்கச் சொத்துகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். இப்படி அவர் எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்த பின்பு முன்பொருமுறை தான் கட்டிக்கொடுத்த ஆசிர்வாதப்பர் துறவற சபையில் துறவியாகச் சேர்ந்து, மிகத் தூய்மையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

குணகுந்தஸ் அரசி துறவற சபையில் சேர்ந்தபிறகு, தான் அரசியாக இருந்தவள் என்பதைச் சிறிதுகூட எண்ணாமல், மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். மடத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறு சிறு வேலைகளையும் கூட மிகவும் தாச்சியோடு செய்துவந்தார்; நோயாளிகள்மீது தனிப்பட்ட செலுத்தி வந்தார். இப்படி அவர் இறைவனுக்கே தன்னை முழுவதும் அர்ப்பணமாக்கி, தூய வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார். இவர் மேற்கொண்ட கடுமையான ஒறுத்தல் முயற்சிகளால் இவருடைய உடல் பலவீனமானது. இதனால் இவர் 1040 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய உடலானது இவருடைய கணவர் ஹென்றியின் உடலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய தூய வாழ்வினையும் இறப்புக்குப் பின்பாக இவருடைய புதுமைகளையும் பார்த்துவிட்டு திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்ட் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய குணகுந்தஸின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கற்புநெறியில் மேலோங்கி இருத்தல்

தூய குணகுந்தசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவருடைய தூய மாசற்ற வாழ்க்கைதான் நம் கண்முன்னால் வந்து நிற்கின்றது. மன்னர் ஹென்றியை மணமுடித்துக் கொண்டபோதும் இவர் கற்பு நெறியில் சிறந்து விளங்கினார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு உலகம் சிற்றின்பமே நிலையானது என எண்ணி அதன்பின்னாலே போய்க்கொண்டிருக்கின்றது. இத்தகைய பின்னணியில் ஆண்டவருக்காக தன்னை அர்ப்பணித்து, தூய வாழக்கை வாழ்ந்து வந்த தூய குணகுந்தஸ் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம், நாம் தூய உள்ளத்தோடு வாழ்கின்றபோது ஒருநாள் இறைவனை முகமுகமாகத் தரிசிக்கும் பேற்றினைப் பெறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய குணகுந்தசின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று தூய மாசற்ற வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

02 March 2020

பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI மார்ச் 2

இன்றைய புனிதர் : 
(02-03-2020) 

பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI
பிறப்பு  : 20, 1207, 
ப்ராக் Prag, செக் குடியரசு

இறப்பு :  2 மார்ச் 1282, ப்ராக் Prag, செக் குடியரசு

புனிதர்பட்டம்: 12 நவம்பர் 1989 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

இவர் பியோம் அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள். இவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல் முறை போலேஸ்லவ்ஸ் Boleslaus என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2 ஆம் பிரிட்ரிக் Friedrich II என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர். ஆனால் இரு முறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தன் திருமணம் நடைபெறக்கூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார்.

இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2 ஆம் பிரட்ரிக் அல்லது அரசர் 2 ஆம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234 ஆம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப்பெற்றார்.

இவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார்.


செபம்:
ஏழ்மையின் காதலனே எம் தலைவா! நீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுறு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மன நிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து, நிறைவுடன் வாழ செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (02-03-2020)

St. Agnes of Bohemia

She was born on June 20, 1211 in a royal family. Her father was King Ottokar-I of Bohemia and mother Constance of Hungary, the sister of King Andrew-II of Hungary. When she was three years old she was engaged to one Boleslaus but Boleslaus died. Then she was engaged to Henry, son of the Emperor Frederick-II, when she was nine years old. But Henry instead of marrying Agnes, he married the daughter of the Duke of Austria. After these failed engagements, Agnes offered herself to God and vowed to live a life of austerity and virginity. She was a descendent of St. Ludmila and St. Wenceslaus. She sought help from pope Gregory-IX for her spiritual life. She founded a hospital of St. Francis on the land donated by her brother King Wenceslaus-I of Bohemia. She also constructed a convent for the Friars Minor in Prague. She became a member of the Franciscan Poor Clares in 1236. As a nun she took care of lepers and other poor people. She even personally cooked for these poor people, even after becoming the Abbess of the Prague Clares. She organized a group of people dedicated to nursing known as knights of the Cross with a Red Star. She died on March 2, 1282.

She was beatified by pope Pius-IX in 1874 and canonized by pope John Paul-II on November 12, 1989 at Rome, a few days before the non-violent revolution in Czechoslovakia called Velvet Revolution that over threw the communist Government there.

---JDH---Jesus the Divine Healer---

01 March 2020

தூய டேவிட் (மார்ச் 01)

இன்றைய புனிதர் : 
(01-03-2020) 

தூய டேவிட் (மார்ச் 01)
நிகழ்வு

இன்று நாம் நினைவுகூரும் தூய டேவிட், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்புப் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய எதிரிகள் அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லத் திட்டமிட்டார்கள். இதனைக் குறிப்பால் அறிந்த குத்தூஸ் என்ற புனிதர் டேவிட்டிடம் வந்து, நிகழப்போகிற சதித்திட்டத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதன்பேரில் டேவிட், தனக்கு முன்பாக விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவை சிலுவை அடையாளம் வரைந்து உண்ண, அது அவரை ஒன்றும் செய்யவில்லை.

ஆண்டவரின் அடியாரை யாரும் அணுகமுடியாது, அவருக்கு எவரும் எத்தீங்கும் செய்ய முடியாது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

டேவிட், கேரேசிகா இளவரசர் சாட் என்பவருக்கும் புனித நன்னா என்பவருக்கும் 495 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவருக்குத் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டபோது, திருமுழுக்குக் கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பட்ட ஒரு பார்வையற்றவர் பார்வைபெற்றார். அந்தளவுக்கு இவர் சிறுவயதிலே இறைவனின் ஆசிர் பெற்றவராக விளங்கி வந்தார். தொடக்கக் கல்வியை செயார்வார்கோன் என்ற இடத்தில் பெற்ற டேவிட், அதன்பிறகு தூய பவுலினுஸ் என்பவரிடம் சென்று கல்வி கற்றார். பவுலினுஸ் என்பவரிடம் ஏறக்குறைய பத்தாண்டுகள் கல்வி கற்றபின், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டவுடன், டேவிட் அங்கு சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.

டேவிட், பிரித்தானியாப் பகுதியில் நற்செய்தியை அறிவித்து வந்தபோது பல இடங்களில் துறவுமடங்களை நிறுவினார். ஒரு சமயம் டேவிட்டும் அவருடைய நண்பர்களும் எருசலேம் சென்றபோது அங்கே பெலேஜியனிசம் என்ற தப்பறைக் கொள்கையானது திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்தார். இந்த பெலேஜியனிசம் ‘ஆதாம் ஏவாள் வழியாக வரக்கூடிய ஜென்மப் பாவத்தை மறுத்துவந்தது. மேலும் திருமுழுக்குப் பெறாமல் இறக்கக்கூடிய குழந்தைகள் எந்தவொரு தடையும் இல்லாமல் விண்ணகத்திற்குச் சென்றுவிடும் எனச் சொல்லிவந்தது. இப்படிப்பட்ட கொள்கை, இறைவனின் மீட்புத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது என்பதால் டேவிட் அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார். அத்தப்பறைக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். டேவிட்டிடம் இருந்த இத்தகைய திறமையைப் பார்த்துவிட்டு எருசலேமில் ஆயராக இருந்த டுப்ரிக் என்பவர் தன்னுடைய ஆயர் பதவியை டேவிட்டுக்குக் கொடுத்தார். அதுமுதல் டேவிட் மிக வல்லமையோடு தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து வந்தார்.

இறைவனின் ஆசிரை நிறைவாகப் பெற்றுக்கொண்ட டேவிட், ஒருசமயம் இறந்த கைம்பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். டேவிட் எப்போதுமே ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஆலயத்தில் ஜெபித்து வந்தார். அவருடைய இந்த ஜெப வாழ்வைப் பார்த்துவிட்டு மக்கள் எல்லாரும், இவரால் ஏராளமான புதுமைகளை செய்ய முடிகின்றதென்றால், அதற்குக் காரணம் இவருடைய ஜெப வாழ்வே என்று வியந்து பாராட்டினார்கள். டேவிட் தன்னுடைய 147 ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1120 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் கைகளில் வல்லமையுள்ள கருவியாய் இருந்து செயல்பட்ட தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெபத்தில் வேரூன்றி இருத்தல்

தூய டேவிட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு ஜெப மனிதராக இருந்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர் ஜெபத்தில் வேரூன்றி இருந்தார் அதனால்தான் அவரால் நிறைய புதுமைகளை செய்ய முடிந்தது. நாமும் ஜெபத்தில் வேரூன்றி இருக்கும்போது நம்மாலும் நிறைய அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது உண்மையாகின்றது.

நற்செய்தி நூல்களைப் படித்துப் பார்க்கும்போது ஆண்டவர் இயேசு கருக்கலில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஜெபித்தார் சென்று பார்க்கின்றோம். அதுபோன்று தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் இயேசு தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல்கள் எடுத்துரைக்கின்றன. இயேசு இறைமகனாக இருந்தும் ஜெபித்தார். அதன்வழியாக வல்லமையைப் பெற்றார். நாமும் நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது இறைவனிடம் நிறைவான ஆசிரைப் பெறுவது உறுதி.

ஆகவே, தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெபத்திலும் வேரூன்றி இருப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

29 February 2020

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine. பெப்ரவரி 29

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine
2020-02-29
சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine)
பிறப்பு
06.01.1814
பிரான்ஸ்
இறப்பு
29.02. 1856
Kwang-si, சீனா
முத்திபேறுபட்டம்: 27.05.1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
புனிதர்பட்டம்: 01.10.2000 திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்

இவரின் தந்தை பெயர் நிக்கோலஸ் சேப்டெல்லைன். இவரின் தாயின் பெயர் மதலீன் டோட்மன். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். அகஸ்ட் இவர்களின் கடைசி குழந்தை. பள்ளிப்படிப்பு அவருக்கு சுமையாக இருந்ததால் அவர் வீட்டுவேலை மற்றும் வயல் வேலை செய்ய பணிக்கப்பட்டார். அப்போது இறையழைத்தலை உணர்ந்தார். இந்நிலையில் தனது இரண்டு சகோதரர்களின் அகால மரணம் அவரை பாதித்தது. அதனால் குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிவைத்தார். பிறகு மீண்டும் மீண்டும் இறையழைத்தலை உணர்ந்ததால் பெற்றோரின் ஒப்புதலோடு அக்டோபர் 1 ஆம் தேதி 1834 ஆம் ஆண்டு குருமடத்திற்கு சென்றார். குருமடத்தில் தன்னை விட இரண்டு மடங்கு வயது குறைந்தவர்கள் அவரோடு படித்தார்கள். அதனால் மற்றவர்கள் அப்பா என்றே அவரை அழைத்தனர். 10.06.1843 அன்று தனது 29 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 1844 முதல் 1851 வரை உதவி பங்குத்தந்தையாக பணியாற்றினார். பிறகு தனது ஆயரால் வெளிநாடுகளில் நற்செய்தி பணியாற்ற பணிக்கப்பட்டார்.

30.04.1852 அன்று பாரீசை விட்டு புறப்பட்டு சீனாவிற்கு சென்றார். செல்லும் வழியில் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. சிலரால் தாக்கப்பட்டார். இறுதியாக 1854 ஆம் ஆண்டு சீனாவின் Kwang-si என்ற இடத்தில் இருக்கும் துறவற சபையை அடைந்தார். பிறகு 20 நாட்கள் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையைவிட்டு வெளியேறிய பிறகு, நற்செய்தியை பணியை தீவிரமாக ஆற்றினார். நூற்றுக்கணக்கான மக்களை மனமாற்றினார். மீண்டும் 26.02.1856 அன்று அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பலவிதமான வேதனைகளை அனுபவித்தார். பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


செபம்:
எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, சீனாவில் நற்செய்தி பணியாற்ற அகஸ்ட் என்பவரைத் தேர்ந்தெடுத்தீர். அவரும் உமக்காக நற்செய்தி பணியாற்றி மறைசாட்சியாக மரித்தார். அதைப்போலவே எங்களோடும் நீர் பேசும். எங்கள் அழைத்தலை உணரச் செய்யும். நற்செய்தி பணியாற்ற எங்களுக்கும் வாய்ப்பு தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

முத்திபேறு பெற்ற ஃபிளாரன்ஸ் நகர் அண்டோனியோ Antonio
பிறப்பு: 1400, ஃபிளாரன்ஸ், இத்தாலி
இறப்பு: 29.02.1472
முத்திபேறுபட்டம்: 1847 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
வரலாறு: இவர் திருமணமாகி இளம்வயதிலேயே கைம்பெண் ஆனார். இவருக்கு ஓர் குழந்தையும் உண்டு. இவர் பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபை நான்காம் பிரிவில் சேர்ந்து துறவியானார். இவர் தனது வாழ்நாளில் இறுதி 15 ஆண்டுகள் மிகக்கொடிய நோயால் துன்பப்பட்டவர். வேதனையிலும் இறுதிவரை கடவுளின் அன்பை பரப்பியவர்.

பொதுவாக லீப் ஆண்டுகளில் மட்டுமே பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகின்றன. ஆகவே பிப்ரவரி 29 ஆம் நாள் நினைவு கூறப்படும் புனிதர்கள். மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28 ஆம் நாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

28 February 2020

2020-02-28குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP

இன்றைய புனிதர்
2020-02-28
குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP
பிறப்பு
7 செப்டம்பர் 1876,
பிரான்சு
இறப்பு
28 பிப்ரவரி 1936,
அவ்டேயுல் Auteuil, பிரான்சு
முத்திபேறுபட்டம் : 25 நவம்பர் 1984 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்

இவர் அவ்டேயுஸ் என்ற நகரில் கைவிடப்பட்டவர்களுக்கென இல்லம் ஒன்றை நிறுவினார். உலகின் எப்பகுதியிலும் இருந்த ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட இளைஞர்களை ஒன்று சேர்ந்து வாழ்விற்கு வழிகாட்டினார். பல்வேறு நிறுவனங்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கு தன் இரத்தத்தை ஈந்து வழிகாட்டி அவர்களின் ஆன்மீக குருவாகத் திகழ்ந்தார். இவர் கடுமையான நோயால் தாக்கப்பட்டதால் 1911 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குச் சென்று அங்கும் பல்வேறு இளைஞர்களின் குழுவை ஏற்படுத்தினார். இவர் தான் இறக்கும் வரை ஏழைக்குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவுமே வாழ்ந்தார்.


செபம்:
நோயாளர்களின் ஆரோக்கியமே எம் தந்தாய்! இவ்வுலகில் பல்வேறு நோய்களினால் தாக்கப்படுகின்ற எம் சகோதர சகோதரிகளை குணமாக்கியருளும். அவர்கள் தங்களின் நோய்களைத் தாங்கும் உடல் வலிமையையும் உள்ள பலத்தையும் தந்து, வாழ்வில் நம்பிக்கையுடன் வாழ செய்தருள நீர் உதவிட வேண்டுமென்று அருள்தந்தை தானியேல் புரோட்டியர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மறைசாட்சியாளர் சில்வானா Silvana
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 304


2. மறைசாட்சி சிரீன் அல்லது சீரா Sirin or Sira
பிறப்பு : 520, ஈரான்
இறப்பு : 28 பிப்ரவரி 559 ஈரான்

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28

இன்றைய புனிதர் :
(28-02-2020) 

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28)
நிகழ்வு

திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், அவருக்குக் கீழ் தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர் ஹிலாரியஸ். ஒருசமயம் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் சிங்கராயரின் பதிலாளாக ஹிலாரியஸ் கலந்துகொண்டார். அதில் ஹிலாரியஸ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த அந்தக் கருத்து பலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் ஹிலாரியசைப் பிடிக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை அறிந்த ஹிலாரியஸ் அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த தூய யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். இவ்வாறு அவர் தாம் உயிர் பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்தது தூய யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பின்னாளில் சிறுகோவிலைக் கட்டியெழுப்பினார். .

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஹிலாரியஸ் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சார்தீனியாவில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக் காலத்தில் ஹிலாரியஸ் அவருக்கு தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்துவந்தார். 449 ஆம் ஆண்டு இரண்டாம் எபேசு பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. அப்போது ஹிலாரியஸும், புடேயோலி ஆயரான ஜூலியசும் திருத்தந்தை சிங்கராயரின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அப்பொதுச்சங்கம் காண்ஸ்டாண்டிநோபிள் பேராயரான “ஃபிளேவியனைக் கண்டித்தது. அதனை ஹிலாரியஸ் வன்மையாக எதிர்த்தார்.

ஹிலாரியஸுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் சிங்கராயர் திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாக உயர்ந்த ஹிலாரியசும் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். ஹிலாரியஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த தப்பறைக் கொள்கைகளைக் கண்டித்தார். உரோமைத் திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். இத்தாலியில் ஆரியபதம் என்று அழைக்கப்பட்ட ஒரு தப்பறைக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியபதமோ "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" அவர் என்றும், "கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுள் ஒரு முதன்மையான படைப்பு” என்று கூறி வந்தது. இதனை அவர் கடுமையாக எதிர்த்தார். மட்டுமல்லாமல், அவர் உரோமின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் ஆரியபதத்திற்கு உரோமில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஸ்பெயின், கால் போன்ற போன்ற முக்கிய நாடுகளில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார். ஹிலாரியஸ் 465ம் ஆண்டில் ரோம் நகரின் புனித மரியா பெருங்கோவிலில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆயர் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்ததார். இவ்வாறு அவர் திருச்சபையில் கண்ணியத்தையும் ஒழுங்குமுறையையும் நிறுவினார். இதோடு கூட திருத்தந்தை ஹிலாரியஸ் உரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். தூய யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கு அர்ப்பணித்தார். அக்கோவில்தான் முன்னர் நாம் சொன்ன கோவிலாகும். :

455 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியஸ் பல நன்கொடைகளை வழங்கினார். மேலும், புனித லாரன்ஸ் பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். இப்படி பல்வேறு பணிகளை பாங்குடனே செய்துவந்த திருத்தந்தை ஹிலாரியஸ் 468 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 28ம் நாள் இறையடி சேர்ந்தார். அவர் அழகுபடுத்திய புனித லாரன்ஸ் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலாரியசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணிசெய்தல்

தூய ஹிலாரியசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்து வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் வழியில் நடக்கும் அதே மன உறுதியுடன், அஞ்சா நெஞ்சத்துடன் ஆண்டவரின் பணியைச் செய்கின்றோமா என்று சிந்துத்துப் பார்க்கவேண்டும். எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து கடவுள், “நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும், உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்றார். எரேமியாவும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அஞ்சா நெஞ்சத்தோடு பணி செய்தார். அதனால் கடவுளும் அவரோடு இருந்து அவரை வழிநடத்துவார்.

ஆகவே, தூய ஹிலாரியசைப் போன்று, இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

27 February 2020

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)

இன்றைய புனிதர் : 
(27-02-2020) 

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)
நிகழ்வு

பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலின் இயற்பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்தே வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். ஒரு சமயம் தனியாய் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை மரியா அவரிடத்தில் பேசினார், “பிரான்சிஸ்! நீ உலக வாழ்க்கையின்மீது பற்றுக் கொள்ளாமல், உண்மையான இறைவனில் பற்றுகொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்”. அன்னை மரியா அவரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துபோனார். பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு அப்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. உடனே அவர் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, அன்னை மரியா தன்னிடத்தில் சொன்னதையும் துறவியாகத் தான் மாற இருப்பதையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் அவருடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரான்சிஸ் பொசன்ட்ரி தன்னுடைய பிடியில் மிக உறுதியாக இருந்ததால், அவரை அவருடைய விருப்பம் போல் துறவு வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர். பிரான்சிஸ் பொசன்ட்ரி, தனது விருப்பம் போல் திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து பின்னாளில் பெரிய புனிதரானார்.

வாழ்க்கை வரலாறு

பிரான்சிஸ் பொசன்ட்ரி, 1838 ஆம் ஆண்டு, சாந்தே, ஆக்னஸ் என்ற தம்பதியருக்கு 11 வது மகனாகப் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல் பிரான்சிஸ் பொசன்ட்ரி, சிறுவயதிலேயே பக்தியில், அதிலும் குறிப்பாக வியாகுல அன்னையிடம் அளவு கடந்த பக்திகொண்டு விளங்கினார். இப்படி அவர் வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு ஜெபிக்கின்றபோதுதான், அன்னை மரியா அவருக்குத் தோன்றி, அவரை இறைப்பணி செய்ய அழைத்தார். உடனே அவர் தன் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு, திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து உன்னதத் துறவியாக விளங்கி வந்தார்.

திருப்பாடுகளின் சபையின் சேர்ந்த பின்பும்கூட அவர் வியாகுல அன்னையிடம் கொண்டிருந்த அன்பில் மாறவில்லை, அன்னை மரியாவிற்கு பாடல் இயற்றுவதும் அவர் புகழை எங்கும் பரப்புவதுமாய் இருந்தார். பிரான்சிஸ் பொசன்ட்ரி சபையில் சேர்ந்தபிறகு வியாகுல அன்னையின் மீது கொண்ட அன்பினால், அவர்மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் தனது பெயரை வியாகுல அன்னையின் கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “அன்னை மரியாவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்கு, அன்னை ஏராளமான நன்மைகள் செய்வார்” என்பதாகும்.

பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு 24 வயது ஆகும்போது காச நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். இவருடைய புண்ணிய, எடுத்துகாட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு இவருக்கு 1920 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அன்னை மரியாவிடம் பக்தி

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார், அது அவருக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. நாமும் அன்னை மரியாவின் துணையை நாடி அவர் வழியில் நடக்கும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, “ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது” என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் – இசைமேதை, “E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்” என்றார்.


இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கு நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். எப்படி அந்த ஆர்மோனியம் வாசித்தவர், இசைமேதையை தன்னுடைய துணைக்கு அழைத்தாரோ அதுபோன்று நாம் நம்பிக்கையோடு அவரை, அன்னை மரியாவைத் துணைக்கு அழைத்தால், அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்கள் இன்பமாகவும், சோதனைகள் சாதனைகளாக மாறும் என்பது உண்மை.

ஆகவே, வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று அன்னை மரியாவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை அன்னை மரியா வழியாகப் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

26 February 2020

பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch. February 26

இன்றைய புனிதர்
2020-02-26
பூக் நகர் துறவி எடிக்னா, Edigna von Puch
பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
பிரான்ஸ்
இறப்பு
26 பிப்ரவரி 1109,
பூக் Puch, பவேரியா
பாதுகாவல் : திருடர்கள் மற்றும் விஷபூச்சிக்கடியிலிருந்து

இவர் பவேரியாவிலுள்ள உள்ள பியூர்ஸ்டன்பெல்டுபூர்க் Fürstenfeldbruck என்ற ஊரில் எவராலும் வாழ முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். இவர் அரசர் முதலாம் ஹென்றி என்பவரின் மகள் என்று கூறப்படுகின்றது. இவர் தனது இளம் பருவ வயதில் பிரான்சு நாட்டிலிருந்து பயணம் ஒன்றை மேற்கொண்டார். எனவும், அப்பயணத்தின் போதுதான் பவேரியா வந்து சேர்ந்தார் என்றும் இவரின் வரலாறு கூறுகின்றது, அப்போது அங்கு இவர் மிக கடினமான ஓர் சூழ்நிலையில் உதவி செய்ய யாருமற்றவராய் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் கையில் ஒரு பெரிய மணியுடன் கடவுள் உருவத்துடன் ஒளி ஒன்று தென்பட்டதை கண்டுள்ளார்.

அப்போது அம்மணியானது சப்தமாக தானாகவே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் எடிக்னாவை எங்கும் நகர்ந்து செல்லாமல் அவ்விடத்திலேயே நிற்கக் கூறியுள்ளது. இவற்றைக் கண்ட எடிக்னா அது கடவுள்தான் என்பது என்பதை முழுமையாக நம்பினார். அன்றிலிருந்து இவர் எளிமையான வாழ்ந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டு தனிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார். ஏறக்குறைய 35 ஆண்டுகள் மிகச் சிறியதோர் இடத்தில் வாழ்ந்துள்ளார்.

இவர் மேலும் தான் வாழ்ந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளுக்கும் ஊர்களுக்கும் சென்று விசுவாசத்தைப் பற்றி போதித்து வந்துள்ளார். பிறகு எழுதவும், படிக்கவும் தெரிந்துக்கொண்டு விலங்குகளை பராமரிப்பது எப்படி? என்பதை பற்றி மற்றவர்களுக்க்கு கற்றுக்கொடுக்கும் கல்வியைக் கற்றுள்ளார்.


செபம்:
தூயவரானத் தந்தையே! நீர் ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றி அமைக்கின்றீர். அரசர் குடும்பத்தில் பிறந்தவரென்பதால் கால் போன போக்கில் சென்றடைந்த எடிக்னாவின் வாழ்வை மாற்றியுள்ளீர். இன்றைய உலகில் தாறுமாறான ஒழுக்கமின்றி வாழும் இளைஞர்களை நீர் தடுத்தாட்கொள்ளும். அவர்களின் தவறான வாழ்வை திசை திருப்பி உம்மை பின்செல்ல வழிகாட்டியருள் வேண்டுமென்று எடிக்னா வழியாக உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மைன்ஸ் நகர் ஆயர் ஹிலாரியஸ் Hillarius von Mainz
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு, மைன்ஸ், ஜெர்மனி


2. சபை நிறுவுநர் டேகர்ன்சே நகர் ஒட்டோகர் Ottokar von Tegernsee OSB
பிறப்பு : 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 26 பிப்ரவரி 771, டேகர்ன்சே. பவேரியா

25 February 2020

தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

இன்றைய புனிதர் : 
(25-02-2020) 
தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

நிகழ்வு

தூய போனிபசின் அழைப்பின் பேரில், நம் புனிதர் வால்பர்க்காவும் அவரோடு இணைந்து ஒருசில அருட்சகோதரிகளும் இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்குச் சென்று, இறைப்பணிசெய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் இத்தாலிக்கு செல்லத் தேர்ந்துகொண்டதோ பாய்மரக் கப்பல். அவர்கள் சென்ற நேரம் கடலில் சரியாகக் காற்று வீசவில்லை. எனவே, கப்பலானது எங்கும் செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வால்பர்க்கா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினார். அவர் வேண்டிய சில மணித்துளிகளிலேயே கடலில் காற்று வேகமாக வீசியது. அது பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது. அதனால் ஒருசில நாட்களிலேயே கப்பல் இத்தாலியை அடைந்தது.

எல்லாரும் கப்பலை விட்டு இறங்கியதும் கப்பலை ஓட்டிவந்த மாலுமி, வால்பர்க்காவிடம் வந்து, “அம்மா நீ சாதாரண பெண்மணி, இறைவனால் ஆசிர்வத்திக்கப்பவள், உண்மையில் உன்னுடைய ஜெபத்தில்னால்தான் எல்லாரும் கரையை பாதுகாப்பாக அடைந்திருந்திருக்கிறார்கள்” என்று சொல்லி வணங்கி நின்றார். வால்பர்க்கா, உண்மையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

வால்பர்க்கா, இங்கிலாந்து நாட்டில் 710 ஆம் ஆண்டு, புனித ரிச்சர்ட், புனித வின்னா என்ற தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு வில்லிபால்ட், வினிபால்ட் என்ற சகோதரர்கள் இருவர் இருந்தனர். வால்பர்க்காவிற்கு 11 ஆவது வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருக்கு இருந்த ஆர்வத்தையும், திறமையையும் பார்த்துவிட்டு, அவருடை சகோதரர்கள் அவரை விம்பார்ன் என்ற இடத்தில் இருந்த துறவுமடத்தில் சேர்த்தார்கள். அங்கே வால்பர்க்கா 26 ஆண்டுகள் தங்கியிருந்து, ஞானத்திலும் அறிவிலும் இறையன்பின்லும் தன்னையே வளர்த்துக்கொண்டார். இந்த நேரத்தில்தான் தூய போனிபஸ், இத்தாலிக்கு வந்து பணிசெய்ய ஆர்வமுள்ள அருட்சகோதரிகள் அனுப்பி வைக்குமாறு வால்பர்க்கா இருந்த துறவுமட தலைமை அருட்சகோதரியிடம் கேட்டார். உடனே அவர் வால்பர்க்காவையும் அவரோடு சேர்த்து லியோபா இன்னும் ஒருசில அருட்சகோதரிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் இத்தாலிக்கு சென்று, இறைப்பணியையும் சமூகப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து வால்பர்க்கா தங்கியிருந்த துறவுமடத்திற்கு லியோபா தலைமை அருட்சகோதரியாக மாறினார். அவருக்குப் பிறகு வால்பர்க்கா அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். வால்பர்க்கா தலைமை அருட்சகோதரியாக உயர்ந்தபிறகு பல்வேறு பணிகளைச் சிறப்புடன் செய்து வந்தார். ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், சமூகப் பணிகளையும் அவர் பாங்குடனே செய்துவந்தார். இதற்கிடையில் வால்பர்க்கா சகோதரர் வில்லிபால்ட் இறந்துபோனார். அவருடைய உடலை வால்பர்க்கா, தான் இருந்த துறவுமடத்திற்கு அருகிலேயே அடக்க செய்தார். எப்போதெல்லாம் தனிமையை உணர்ந்தாரோ, அப்போதெல்லாம் வால்பர்க்கா, தன் சகோதரரின் கல்லறைக்குச் சென்று, ஜெபித்துவிட்டு உற்சாகத்தோடு திரும்பி வந்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வால்பர்க்கா திடிரென ஒருநாள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோனார். அவருடைய உடலை அவருடைய சகோதரரின் உடலுக்கு அருகிலே அடக்கம் செய்தார்கள். வால்பர்க்காவிற்கு 870 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

வால்பர்க்காவின் கல்லறைக்கு இன்றைக்கு நிறையப்பேர் வந்து போகிறார்கள். காரணம் அவருடைய கல்லறையிலிருந்து வழிந்தோடும் எண்ணையை பூசினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இன்னலில் இறைவனைத் துணைக்கு அழைத்தல்

தூய வால்பர்க்காவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே இன்னலில் இறைவனை துணைக்கு அழைப்பதுதான். மேலே குறிப்பிட்ட நிகழ்வு ஒன்றே போதும், அவர் எப்படி, தன்னுடைய வாழ்வில் இன்னல் வந்த வேளையில் இறைவனைத் துணைக்கு அழைத்து, அதிலிருந்து மீண்டார் என்று சொல்வதற்கு. நம்முடைய வாழ்வில், நாம் எப்போதும் இறைவனைத் துணைக்கு அழைக்கின்றோமா? அல்லது நம்முடைய திறமையில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். திபா 50:15 ல் வாசிக்கின்றோம், “துன்ப வேளையில் நீங்கள் என்னைக் கூப்பிடுங்கள்; நான் உங்களை காத்திடுவேன்” என்று. ஆம், இறைவனை நம் துன்பவேளையில் அழைக்கின்றபோது, அவர் நமக்கு உதவிட விரைந்து வருவார் என்பது உண்மை.

ஆகவே, தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று, இறைவழியில் நடப்போம், இடுக்கண் வேளையில் இறைவனை அழைப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

24 February 2020

தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24

*இன்றைய புனிதர்*

         _24 பிப்ரவரி 2020_

*தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24)*
“ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33) 

*வாழ்க்கை வரலாறு*

செசாரியுஸ், 331 ஆம் ஆண்டு, நசியான்சசின் ஆயர் தூய பெரிய கிரகோரியாருக்கும் தூய நோன்னா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு கிரகோரி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. செசாரியுஸ், சிறுவயதிலே அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்ததால், இவருடைய பெற்றோர் இவரை அலெக்ஸ்சாண்ட்ரியாவிற்கு அனுப்பி வைத்து, படிக்க வைத்தனர். செசாரியுஸ் மருத்துவம், மெய்யியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கி பிற்காலத்தில் எல்லாருக்கும் பிடித்துப்போன கைராசியான மருத்துவரானார். 

இதற்கிடையில் செசாரியுசைக் குறித்து கேள்விப்பட்ட ஜூலியன் என்ற மன்னன், அவரை தன்னுடைய அரசபையில் மருத்துவராக இருக்கக்கேட்டான். இந்த ஜூலியனோ கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தியவன். இப்படிப்பட்டவனுக்கு கீழே மருத்துவராக இருந்து பணிசெய்வது நல்லதல்ல என்று செசாரியுசை, அவருடைய பெற்றோர் கேட்டுக்கொண்டபடியால், அவர் அவனிடத்தில் செல்லாமல், நசியான்சஸ் நகரிலேயே இருந்து மருத்துவச் சேவை செய்துவந்தார். இந்த நேரத்தில் வாலன்ஸ் என்ற மன்னர் பிர்த்தினியா வந்து தனக்கு ஆலோசராகவும், அரசாங்கத்தின் கருவூலப் பொறுப்பாளராகவும் இருக்கவேண்டும் என்று செசாரியுசைக் கேட்டுக்கொண்டார். உடனே செசாரியுஸ் அங்கு புறப்பட்டுச் சென்று, அவருக்குக் கீழே பணிகளைச் செவ்வனே செய்து வந்தார்.    

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 368 ஆம் ஆண்டில் ஒருநாள் திடிரென்று தன்னுடைய மேலாண்மைக்குள் இருந்த நிகாயே என்ற நகரில் பெரிய பூகம்பம் வந்தது. அது ஏராளமான உயிர்களை எடுத்துக்கொண்டது. இந்நிகழ்வு செசாரியுசின் வாழ்வைப் புரட்டிப் போட்டது. ஆம், இந்த நிகழ்விற்குப் பிறகு செசாரியுஸ் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். அவர் தன் மூத்த சகோதரரான கிரகோரியிடம் சென்று நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். உடனே அவர் செசாரியுசிடம், “நீ உன்னுடைய அரசியல் வாழ்வை விட்டு துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொள்வதுதான் தலைசிறந்தது” என்று அறிவுரை கூறினார். தன் சகோதரர் சொன்ன அறிவுரை நல்லதெனப் பட்டதும் செசாரியுஸ்  எல்லாவற்றையும் துறந்து துறவியாக மாறினார்.

செசாரியுஸ், துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவருடைய வாழ்க்கை பக்தியிலும் பிறரன்புச் செயல்பாடுகளிலும் கரைந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் அவர் வாழ்ந்து வந்த பகுதியில் கொடிய கொள்ளை நோய் பரவியது. அது அவரைப் பாதிக்க, 369 ஆம் ஆண்டு இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன் சகோதரர் கிரகோரியிடம், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போன்று கிரகோரி, தன் சகோதரர் செசாரியுசுக்குச் சொந்தமான சொத்துகளை அவருடைய இறப்புக்குப் பிறகு விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். 

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று  சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. உலக காரியங்களில் அல்ல, உண்மையான இறைவனில் பற்று கொண்டுவாழ்வோம்*

ஒரு காலத்தில் தூய செசாரியுஸ் உலக காரியங்களில் மூழ்கிக் கிடந்தார். எப்போது பூகம்பம் வந்து நிறையப் பேரைக் கொன்றொழித்ததோ அப்போதே அவர் உலகக் காரியங்கள் அல்ல, உண்மையான இறைவனால் மட்டுமே தனக்கு அமைதியையும் ஆசிர்வாதத்தையும் தரமுடியும் என்று உணர்ந்து, துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். தூய செசாரியுஸ் உணர்ந்துகொண்டதுபோன்று நாம் இறைவனால் மட்டுமே நமக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரமுடியும் என்பதை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் ஊருக்கு வெளியே இருந்த குளத்திற்குச் சென்று மீன்பிடித்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு பிழைப்பை ஒட்டி வந்தான். ஆனால், சில நாட்களாகவே அவனுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை. ஏன் என்ற காரணமும் அவனுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் ஒருநாள் துறவி ஒருவர் அந்த குளத்திற்கு குளிக்க வந்தார். அவர் குளத்திற்குள் இறங்கி குளிக்கத் தொடங்கியதும் மீன்கள் எல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளமிட்டன. இதை கரையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஆச்சரியமாக இருந்தான். தானும் துறவிக்கான ஆடையைக் தரித்து, குளித்தால், நிறைய மீன்கள் கிடைக்குமே என்று கற்பனை செய்தான். மறுநாளே துறவிக்கான ஆடையைத் தரித்து, குளத்தில் குளித்தான். அப்போது அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியாத அளவுக்கு மீன்கள் அவனைச் சூழ்ந்து கும்மாளமிட்டன. அன்றைக்கு அவன் நிறைய மீன்களைப் பிடித்தான்.

அவன் கரைக்கு வந்து, மீன்களை எல்லாம் வலையிலிருந்து கூடைக்குள் எடுத்துப் போட்டபோதுதான் திடிரென ஒரு யோசனை உதித்தது. “போலியாக துறவற ஆடை தரித்ததற்கே இவ்வளவு மீன்பாடு கிடைக்கிறது என்றால், உண்மையான துறவியாகிவிட்டால், மீன்களை பிடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததுபோல், நினைத்ததை எல்லாம் அடையக்கூடிய வைப்பு உண்டாகிவிடுமே” என்ற யோசனை இளைஞனின் உள்ளத்தில் உதித்ததும் எல்லாவற்றையும் துறந்து உண்மையான துறவியாக மாறினான். 

உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான இறையடியாராக வாழ்கின்றபோது இறைவன் தருகின்ற ஆசிர்வாதம் அளப்பெரியது என்னும் உண்மையை இந்தக் கதையானது அருமையாக எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் அவரைப் போன்று உலக காரியங்களில் பற்று கொள்ளாமல், உண்மையான இறைவன் மீது பற்று கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*

*"GOD IS LOVE"*

Rev. Fr. Amirtha Raja Sundar J,
 amirsundar@gmail.com; 
________________________

அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert பெப்ரவரி 24

இன்றைய புனிதர்
2020-02-24
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
பிறப்பு
6 ஆம் நூற்றாண்டு,
கெண்ட் Kent, இங்கிலாந்து
இறப்பு
616,
இங்கிலாந்து

இவர் பிரான்சிஸ்கன் அரசி குளோட்விக் Chlodwig என்பவரால் வளர்க்கப்பட்டார். அரசி குளோட்விக் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஏத்தல்பெர்ட்டையும் சிறு வயதிலிருந்தே ஆலயங்களுக்கு அனுப்பியும் அனுதின செபத்தின் வழியாகவும், இறைபக்தி கொண்டவராக வளர்த்தெடுத்தார். எதிலும் இறைபக்தியுடன் செயல்பட்ட ஏத்தல்பெர்ட் 596 ஆம் ஆண்டு திருத்தந்தை பெரிய கிரேகோரிடம் தன் நகருக்கு பல மறைபரப்பு பணியாளர்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.

இவர் தன் நகர் முழுவதிலும் வாழ்ந்த மக்கள் அனைவரையும் விசுவாச வாழ்வில் வளர தூண்டினார். அத்துடன் இங்கிலாந்து நாடு முழுவதிலும் மறைப்பணியாளர்களை நிரப்பி கடவுள் விசுவாசத்தை வளர்த்தெடுத்தார். 601 ஆம் ஆண்டு ஏத்தல்பெர்ட் மறைப்பணியாளர்களிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்கு பெற்றபின் இறக்கும் வரை ஏறக்குறைய 16 ஆண்டுகள் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து தன் நாட்டு மக்களுக்கு பணிவிடைச் செய்தார்.


செபம்:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! சில மறைப்பணியாளர்களின் வாயிலாக இங்கிலாந்து நாடு முழுவதிலும் நற்செய்தியின் ஒளியை பரவச் செய்தீர். அம்மக்களின் உள்ளங்களில் உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும், உண்மையான நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஒன்றுபட்டு வாழவும் வரம் தந்தீர். அரசி ஏத்தல்பெர்ட்டைப்போல அடுத்தவர்களை விசுவாச வாழ்வில் வளரச் செய்ய எம்மையும் தயாரித்து, உமது கருவியாய் மாற்றி, சான்று பகிர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

23 February 2020

தூய போலிக்கார்ப். 23 பிப்ரவரி

23 பிப்ரவரி 2020, ஞாயிறு

இன்றைய புனிதர்

தூய போலிக்கார்ப்
போலிகார்ப் வாழ்ந்த காலத்தில் தப்பறைக் கொள்கைகள் அதிகமாகப் பரவியிருந்தன. அவற்றையெல்லாம் நம் புனிதர் மிகவும் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிகொண்டார். ஒருசமயம் மார்சியோன் என்பவன் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டு வந்தான். ஒருநாள் அவன் போலிக்கார்ப் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். அவர் அவன் செய்வதையெல்லாம் மிகப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் அவன் அவரிடத்தில், “நான் யாரென்று தெரிகிறதா?” என்று மிகவும் ஆணவத்தோடு கேட்டான். அதற்கு போலிகார்ப், “நீ சாத்தானின் மூத்த மகன், உனக்கு அழிவு மிக அண்மையிலேயே உள்ளது” என்றார். இதைக் கேட்ட மார்சியோன் தலை தெறிக்க ஓடினான். அதன்பிறகு அவன் தப்பறைக் கொள்கைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு, மனம் திருந்திய மனிதனாக வாழ்ந்து வந்தான்.

வாழ்க்கை வரலாறு

போலிக்கார்ப் கி.பி.69 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நற்செய்தியாளரான தூய யோவானின் சீடர். அவராலேயே 96 ஆம் ஆண்டு ஸ்மிர்னா என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயராக உயர்ந்த பிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இறைமக்களுக்கு மறைக்கல்வியைப் போதித்து, அவர்களை இறைநம்பிக்கையில் நாளும் வளர்த்தார். இவரிடமிருந்து மறைகல்வி கற்று புனிதர்களாக உயர்ந்தவர்கள்தான் தூய எறரனியுஸ் மற்றும் பப்பியாஸ் என்பவர்கள்.

போலிகார்ப் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. அத்தகைய தருணத்தில் இவர் மக்கள் அனைவரையும் விசுவாசகத்தில் உறுதிபடுத்தினார். ஒருசிலர் இவரைக் கேட்டுக்கொண்டதால் சில காலத்திற்கு இவர் மறைவாக இருந்தார். அப்போது இவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. எதற்கு இப்படி தலையணை தீப்பற்றி எரிகிறது என்று யோசித்துப் பார்த்த அவர், தான் தீயில் போட்டு எரிக்கப்படப் போகிறோம் என்பதை அறிந்துகொண்டார். அன்றிலிருந்து அவர், தான் அடைய இருக்கும் மறைசாட்சிப் பட்டத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இவர் இருக்கும் இடத்தை ஒற்றன் ஒருவன் காட்டிக்கொடுக்க, படைவீரர்கள் இவரை சூழ்ந்துகொண்டார்கள். ஆனாலும் இவர் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கு விருந்தொன்று தயாரித்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த அந்தப் படைவீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். இருந்தாலும் அரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் இவரைக் கைதுசெய்து, அரசன் முன்பாக நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்த அரசன் போலிக்கார்ப்பிடம் “நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, சீசருக்கு வணக்கம் செலுத்து, உன்னை நான் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்” என்றார். அதற்கு இவர், எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆண்டவராகிய இயேசு ஒருதீமையும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இறைவனனை நான் எப்படி மறுதலிப்பது?” என்றார். இதைக் கேட்ட அரசன் சினமுற்று அவரை தீப் பிழம்புக்குள் தூக்கிப்போட்டான். ஆனால் தீயின் நாவுகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் அந்தத் தீயின் நடுவே இறைவனைப் பாடிப் புகழ்ந்துகொண்டிருந்தார். பின்னர் அரசர் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். பின்னர் போலிகார்பின் சீடர்கள் வந்து, அவருடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். அவர் மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் துறந்த ஆண்டு கி.பி. 155. போலிகார்பின் மறைசாட்சிய வாழ்வு குறித்து, அவருடைய இறப்புக்குப் பிறகு, அவருடைய சீடர்களால் எழுதப்பட்ட Acts Of Policarp” என்ற புத்தகத்திலிருந்து நாம் இவற்றையெல்லாம் வாசிக்கின்றோம்.

மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz பெப்ரவரி 23

இன்றைய புனிதர்
2020-02-23
மைன்ஸ் பேராயர் வில்லிஜிஸ் Willigis von Mainz
பிறப்பு
10 ஆம் நூற்றாண்டு,
நீடர்சாக்சன், ஜெர்மனி
இறப்பு
23 பிப்ரவரி 1011,
மைன்ஸ் Mainz, ஜெர்மனி

இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இளம் பருவத்தைப் பற்றி குறிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. 970 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஓட்டோ என்பவர் இவரை மைசன் Meißen நகருக்கு ஆயராகத் தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு ஆயர் அரசரின் ஆலோசகராகவும் இருந்தார். பிறகு 975 ஆம் ஆண்டு மைன்ஸ் நகரின் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஜெர்மனி ஆயர் என்றழைத்த திருத்தந்தை 5 ஆம் கிரகோர் வில்லிஜிஸை உரோமிற்கு மாற்றினார்.

வில்லிஜிஸ் உரோமையில் 1002 ஆம் ஆண்டு அரசர் 2 ஆம் ஹென்றிக்கு அரசராக முடிசூட்டும் பட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அதன்பிறகு அரசர் ஜெர்மனியிலுள்ள பாம்பெர்க்கிற்கு தன் இருப்பிடத்தை மாற்ற தேவையான உதவிகளை வில்லிஜிஸ் செய்துக் கொடுத்தார். பின்னர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அரசரிடம் பெரிதும் பரிந்து பேசினார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30 ஏழைகள் தேவையான அளவு உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்து உதவினார். இவர் ஏழைகளின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

இவர் இறந்தபிறகு, மைன்சில் உள்ள புனித ஸ்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. செயின் ஸ்டீபன் ஆலயமானது வில்லிஜிஸ் அவர்கள்தான் ஆயராக இருக்கும் எழுப்பினார் என்று கூறப்படுகின்றது.


செபம்:
சில அப்பங்களையும், மீன்களை கொண்டு, பலரின் பசியை போக்கிய எம் தந்தையே! இன்று உணவில்லாமல் வாடும் ஒவ்வொரு மனிதர்களையும் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளையும் நீர் நினைவுகூரும். உமது அற்புதத்தாலும், அதிசயத்தாலும் ஏழைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிராற உண்ண நீர்தாமே உதவிபுரிந்திட வேண்டுமென்று தந்தையே உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. ஆயர் மறைசாட்சி பொலிக்கார்ப்பு Polykarp
பிறப்பு : கிபி.70
இறப்பு : 23 பிப்ரவரி 155(?) , இஸ்மார் Izmar, துருக்கி


2. காப்பன்பெர்க் நகர் ஒட்டோ Otto von Cappenberg
பிறப்பு : 1100
இறப்பு : 23 பிப்ரவரி 1171 காப்பன்பெர்க் Cappenberg, ஜெர்மனி

22 February 2020

கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM 22 February

இன்றைய புனிதர்
2020-02-22
கொர்டோனா நகர் திருக்காட்சியாளர் மர்கரேட்டா Margareta von Cortona OFM

பிறப்பு
1247,
லவியானோ Laviano, இத்தாலி
இறப்பு
22 பிப்ரவரி 1297,
கொர்டோனா Cortona, இத்தாலி
புனிதர்பட்டம்: 1728 திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்

இவர் தனது 16 வயதிலேயே தன் பெற்றோரின் இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு செல்வந்தர் இளைஞருடன் வாழ்ந்தார். ஒரு நாள் திருடர்கள் அவ்விளைஞனின் வீட்டில் கொள்ளையடித்து சென்றதுடன், அவரையும் கொன்றனர். தன் கண்முன்னால் அக்கொலையைப் பார்த்த மர்கரேட்டா தன் வாழ்வை மாற்றினார். அன்றிலிருந்து தன் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார். கொர்டோனா என்ற ஊருக்குச் சென்று புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் மிக கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இவர் பல சோதனைகளிலிருந்தும் வெற்றி பெற்றபின், ஒருநாள் ஒரு பெரிய கல் இவரின் காலில் மோதியது. அன்றிலிருந்து மீளாத் துயரை அடைந்தார். இதனால் இவர் தனது வார்த்தைப்பாட்டை பெறமுடியாமல் போனது. அதன்பிறகு மர்கரேட்டா, கொர்டோனாவில் ஏழைகளுக்கென்று ஒரு மருத்துவமனையை கட்டினார். அதன்பிறகு 3 ஆம் சபை என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு பலமுறை திருக்காட்சிகளைப் பெற்றார். இவர் தனது 50 ஆம் வயதிலேயே இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல தந்தையே! உம்மீது அன்புக்கொண்டு உமக்காக வாழ்ந்த திருக்காட்சியாளர் மர்கரேட்டாவை இவ்வுலகிற்கு கொடையாக தந்தீர். அவரின் வழியாக ஒரு துறவற சபையை ஏற்படுத்தினீர். அச்சபைத் துறவிகளை ஒவ்வொரு நாளும் காத்து வழிநடத்தும் தூய ஆவியின் வழிகாட்டுதலில் அருட்சகோதரிகள் செயல்பட துணைபுரியும். அச்சபையானது தொடங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து, பணிபுரிய உதவிட வேண்டுமென்று மர்கரேடா வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிரான்சு நாட்டு சபைநிறுவுநர் எலிசபெத்து
பிறப்பு : 1225 பிரான்சு
இறப்பு : 23 பிப்ரவரி 1270 பிரான்சு

21 February 2020

தூய பீட்டர் தமியான் (பிப்ரவரி 21

இன்றைய புனிதர் : 
(21-02-2020) 

தூய பீட்டர் தமியான் (பிப்ரவரி 21)

நிகழ்வு

1035 ஆம் ஆண்டு, தூய பீட்டர் தமியான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த தருணம். ஒருநாள் பெனடிக்ட் துறவுமடத்தைச் சார்ந்த துறவிகள் சிலர் அவரைச் சந்தித்து, ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் துறவற வாழ்வு குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் தான் செய்துகொண்டிருந்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு தூய பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார், ஆண்டவர் இயேசு ஒருவரே உண்மையான சொத்து என அவரைப் பற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

பீட்டர் தமியான் 1007 ஆம் ஆண்டு இத்தாலியில் இருக்கும் ரவென்னா என்ற இடத்தில் வாழ்ந்த ஓர் ஏழைத் தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பீட்டர் என்பதுதான். பின்னாளில் தன்னுடைய மூத்த சகோதரரும் குருவாகவும் இருந்த தமியான் என்பவர் மீது கொண்டிருந்த மதிப்பினால் பெற்றோர் இட்ட பீட்டர் என்ற பெயரோடு தமியான் என்ற பெயரையும் சேர்த்துகொண்டு தன்னுடைய பெயரை பீட்டர் தமியான் என மாற்றிக்கொண்டார்.

பீட்டர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய இளைய சகோதரரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இந்த சகோதரர் மிகவும் கண்டிப்பானவர், அதே நேரத்தில் பீட்டரை சரியாகக் கவனிப்பதும் கிடையாது. தான் வைத்திருந்த பன்றிகளை மேய்ப்பதற்குத்தான் இவர் பீட்டரை அனுப்பி வைத்தார். இந்த நேரத்தில் பீட்டர் மிகவும் கஷ்டப்பட்டார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட பீட்டரின் மூத்த சகோதரரான தமியான், அவரை பன்றி மேய்க்கும் பொறுப்பிலிருந்து விடுவித்து, பள்ளிக்கூடத்திற்குச் சென்று, கல்வி கற்க கேட்டுக்கொண்டார். அதற்கான செலவீனங்கள் அனைத்தையும் தான் ஏற்பதாக உறுதிதந்தார். இவர் ஒரு குருவானவர். பின்னாளில் பீட்டர் நன்றாகப் படித்து ஒரு பேராசிரியராக உயரும்வரைக்கும் இவர் பீட்டருக்கு பேருதவியாக இருந்தார். அதனால்தான் (ஏற்கனவே சொன்னது போல) இவர் தன்னுடைய சகோதரரின் பெயரையும் தன்னுடைய பெயரோடு சேர்த்துக்கொண்டு பீட்டர் தமியான் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

பீட்டர் தமியான் பேராசிரியராக மாறிய பிறகு தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு மிகச்சிறப்பான கல்வியை வழங்கினார். இயல்பிலேயே ஞானமும், அறிவும் கொண்டவரான பீட்டர் தமியானின் வகுப்புகளுக்காக மாணவர்கள் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு இவர் சிறப்பாக பாடங்களை நடத்தி வந்தார். இத்தகைய தருணத்தில்தான் தூய ஆசிர்வாதப்பர் சபையைச் சேர்ந்த துறவிகள் இவரை வந்து சந்தித்து, இவருக்கு கிறிஸ்துவை பற்றியும் துறவு வாழ்க்கை குறித்தும் எடுத்துரைத்தார். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் எல்லாவற்றையும் துறந்து தூய ஆசிர்வாதப்பர் சபையில் துறவியாக மாறினார்.

தூய ஆசிர்வாதப்பர் – பெனடிக்ட் – சபையில் சேர்ந்த சில ஆண்டுகளுளிலேயே இவர் அச்சபையின் தலைவரானார். அதன்பிறகு இவர் சபையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக ஐந்து துறவற மடங்களை நிறுவி, நிறைய இளைஞர்கள் துறவு வாழ்வில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். குருக்கள் மற்றும் துறவிகள் தங்களுடைய கடமைகளில் கருத்தூன்றி வாழவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தினார். அதேநேரத்தில் அவர்கள் புனிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடையவேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட அரும்பணிகளை ஒவ்வொருநாளும் திருச்சபைக்கு அவர் செய்துகொண்டிருந்தார்.

இவருடைய பணிகளை பார்த்த மேலிடம் இவரை ஒஸ்தியா (Ostia) என்ற இடத்தில் ஆயராக நியம்பித்தது. ஆயராக உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் அளப்பெரிய பணிகளைச் செய்தார். மக்களுடைய சமூக மற்றும் ஆன்மீக வாழ்விற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இவையெல்லாவற்றையும் பார்த்த அப்போதைய திருத்தந்தை ஒன்பதாம் ஸ்டீபென் என்பவர் இவரை திருத்தந்தையின் திருத்தூதராக நியமித்தார். இந்த நிலைக்கு உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் ஒரு மிகச்சிறந்த சமாதானத்தின் தூதுவராக விளங்கினார். திருச்சபையிலும் சரி, நாடுகளிடையேயும் சரி அமைதியை ஏற்படுத்த நல்ல ஒரு கருவியாக விளங்கினார். இத்தகைய பணிகளுக்கும் மத்தியிலும் இவர் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. குறிப்பாக இவர் அன்னை மரியிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

இப்படி ஒரு பேராசிரியராக, ஆயராக, திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்த பீட்டர் தமியான் ஓரிடத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்புபோது வரும்வரை வழியில் இறந்துபோனார். இவர் இறந்த நாள் பிப்ரவரி 21, 1072. 1828 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் லியோ என்பவரால் புனிதராக உயர்த்தப்பட்டார். புனிதரிடத்தில் தீராத தலைவலிக்காக மன்றாடும்போது அது விரைவிலே குணமடையும் என்பது நம்பிக்கை.