புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 April 2020

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠(St. Marcellinus) April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠
(St. Marcellinus)
29ம் திருத்தந்தை:
(29th Pope)

பிறப்பு: தெரியவில்லை 
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 304
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

திருத்தந்தை மர்செல்லீனஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் 296ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் நாள் முதல், கி.பி. 304ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாள்வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் “காயுஸ்” (Pope Caius) என்பவர் ஆவார். திருத்தந்தை புனித மர்செல்லீனஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ம் திருத்தந்தை ஆவார். மர்செல்லீனஸ் என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

ரோமப் பேரரசன் (Roman Emperor) “டையோக்ளேசியன்” (Diocletian) ஆண்ட காலத்தில் மர்செல்லீனஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302ம் ஆண்டு, மன்னனன் டையோக்ளேசியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறிஸ்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறிஸ்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனஸ் விவிலியம் மற்றும் கிறிஸ்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறிஸ்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கி.பி. 304ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 26ம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், ரோம் சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

கி.பி. 13ம் நூற்றாண்டில் மர்செல்லீனஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 26ம் நாள் அவருடைய விழா புனிதர் கிலேட்டஸ் (Saint Cletus) விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை:
மர்செல்லீனசின் மரணத்தின் பிறகு, கிறிஸ்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லஸ் (Pope Marcellus) ஆகும்.

ட்ரூட்பெர்ட் (Trutpert)மறைசாட்சி April 26

இன்றைய புனிதர்
2020-04-26
ட்ரூட்பெர்ட் (Trutpert)
மறைசாட்சி
பிறப்பு

அயர்லாந்து அல்லது ஜெர்மனி
இறப்பு
607 அல்லது 644

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல்டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறைபரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலுள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப்போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரைபூர்க்-ஐ ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத்தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.

அப்போது ட்ரூட்பெர்ட் அந்நிலத்திலிருந்த மரங்களை அழித்துவிட்டு புனித பீட்டர் மற்றும் பவுல் தேவாலயத்தை கட்டினார். அங்கு ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடித்துவிட்டு களைப்பாக தூங்கும்போது, தெரியாத நபர் ஒருவர் வந்து அவரை கொன்ற்விட்டான். பின்னர் ஓட்பெர்க்(Otbert) என்பவரால், ட்ரூட்பெர்ட் புதைக்கப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு பேராலயத்தை கட்டினார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, வேலையை செய்துள்ளார். அவர் 640 - 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டுகளில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607 - ல் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு 815 ஆம் ஆண்டு அவரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும் போது எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டரில் (Münster) உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனிதருக்கென்று பேராலயமும் உள்ளது


செபம்:
அன்பின் உருவமே எம் இறைவா! உமது சாட்சியாக மரித்த ட்ரூட்பெர்ட்டைப்போல, நாங்களும் எங்கள் வாழ்வின் வழியாக உமக்கு சான்று பகிர்ந்திட உம் அருள் தந்து எம்மை வழிநடத்தும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு ரிச்சாரியுஸ் Richarius
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, சென்லோ Centula, பிரான்சு
இறப்பு: 26 ஏப்ரல் 645 ரிக்குயர் Riquier


சபைநிறுவுநர் பேதுரூஸ் டே பெண்டாங்கூர் Petrus de Betancur
பிறப்பு: 21 மார்ச் 1626, ஸ்பெயின்
இறப்பு: 26 ஏப்ரல் 1667 குவாடமாலா Guatemala

ஏப்ரல் 26புனித ஆல்தோ (1249-1309)

ஏப்ரல் 26

புனித ஆல்தோ (1249-1309)
இவர் இத்தாலியில் உள்ள சியன்னாவில்  பிறந்தவர்.

திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே இவர் தன்னுடைய கணவரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம்  விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, சியன்னா நகருக்கு வெளியே ஒரு குடிசை அமைத்துத் தவமிருக்கத் தொடங்கினார். 

சில காலம் இப்படித் தவமிருந்து வந்த இவர், மருத்துவமனையில் உள்ள நோயாளர்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அதன்படி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வந்தார்.

இறைவன் இவரோடு இருந்ததால், இவர் யார் மீதெல்லாம் சிலுவை அடையாளம் வரைந்து மன்றாடினாரோ, அவர்கள் எல்லாரும் விரைவில் நலம்பெற்றார்கள். 

இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. இது ஏற்கெனவே மருத்துவமனையில் பணிசெய்து வந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இவர்மீது கொண்ட பொறாமையால், இவரைக் குண்டூசியால் குத்தித் துன்புறுத்தினார்கள். அவற்றை எல்லாம் இவர் பொறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்களை மனதார மன்னித்தார். 

இப்படி இவர் நோயாளர்களுக்கு நடுவில் பணிசெய்யும் போதே இவர் உயிர் பிரிந்தது.

சிந்தனை:

தன்னை வெட்டுவோருக்கும் நிழல் தருமாம் மரம். அதுபோல் நாம் நமக்குத் தீமை செய்வோரை மன்னித்து, நன்மை செய்வோம். 

அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதைக் கண்டு, பொறாமைக்காரன் உடல் மெலிவான் (ஹொரேஸ்).

நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டாரா? (இயேசு)

- மரிய அந்தோனிராஜ்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் ஏப்ரல் 26

இன்றைய புனிதர் : 
(26-04-2020) 

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் (ஏப்ரல் 26)
“நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” மத் 25: 23.

வாழ்க்கை வரலாறு

790 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே தாமே (Nonte Dame) என்ற இடத்தில் இருந்த கன்னியர் மடத்திற்கு முன்பாக ஒரு குழந்தை அனாதையாகக் கிடந்தது. அந்தக் குழந்தையை எடுத்த கன்னியர் மடத்தில் இருந்த அருட்சகோதரிகள் அதற்கு ராட்பெர்துஸ் பஸ்காசியசிஸ் என்று பெயர் வைத்தார்கள். அவர் தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ராட்பெர்துஸ் பஸ்காசியஸ்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை நோட்ரே தாமேவில் இருந்த ஒரு பள்ளியில் கற்றார். படித்துக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த துறவிகளின் வாழ்வால் தொடப்பட்டு பின்னாளில் துறவியாக மாறினார். இவருக்கு துறவிகளான அடல்ஹால்து என்பவரும் வாலா என்பவரும் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து வந்தார்கள். ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் சில ஆண்டுகளிலே தான் இருந்த துறவற மடத்தின் தலைவராக மாறினார்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் விவிலியத்தில் புலமை பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் நிறைய புத்தங்களை எழுதினார். குறிப்பாக மத்தேயு நற்செய்திக்கு விளக்கவுரையாக 12 பாகங்களை எழுதினார் அது போன்று கன்னியான மரியாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் நிறைய எழுதினார். இவர் எழுதிய புத்தகங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘The Body and Blood of Christ” என்பதாகும். இப்புத்தகம் இன்றளவும் சிறந்த ஒரு புத்தகமாகக் கருதப்படுகின்றது. இப்படி பல்வேறு புத்தங்களை அவர் எழுதி வந்தாலும் ஜெபத்திற்கும் தியானத்திற்கும் அதிகமான நேரத்தை அவர் ஒதுக்கினார். அவர் செய்து வந்த ஜெபமே பல நேரங்களில் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 860 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்வோம்.

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும் நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை, அவர் கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்வினை அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்தார் என்பதுதான். தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசை நினைவுகூரக்கூடிய நாம், அவரைப் போன்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி எடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் யோவான் நற்செய்தி 15: 8 ல் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது என்று. நாம் கனிதரக்கூடிய வாழ்க்கையினை வாழ்கின்றபோதுதான் இறைவனுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

சமீபத்தில் பார்த்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அனாதையாகக் கிடைக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அக்குழந்தைக்கு வரும் ஆபத்துகளையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையைப் பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.

பல ஆண்டுகள் கழித்து அனாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும். இப்போது குழந்தை இருப்பத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித் தனமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பான். சுவாஸ்ரயமில்லாமல் ஏதோ வேலையை செய்து கொண்டிருப்பான். சுருக்கமாகச் சொன்னால் அவன் அவன் சராசரி மனிதனாக இருப்பான். இதைப் பார்க்கும் அந்தப் பறவை வருத்தப்பட்டு மிகவும் ஏமாற்றத்தோடு செல்லும். இத்தோடு அந்த விளம்பரம் நிறைவுபெறும்.

இந்த விளம்பரம் உணர்த்தும் செய்தி மிக எளிது. நன்றாக இருக்கவேண்டிய அந்தப் பையன், சராசரியாக இருக்கின்றான். அதுதான் அந்தப் பறவைக்கு வருத்தம். கடவுளும் அப்படித்தான் நம்மை பலன் தரக்கூடிய வாழ்வு வாழ இந்த உலகில் படைத்திருக்கின்றோம். நாம் பலன்தரவில்லை என்றால், அது அவருக்கு வருத்தம்தான்.

ஆகவே, தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

25 April 2020

தூய மாற்கு (ஏப்ரல் 25)

இன்றைய புனிதர் : 
(25-04-2020) 

தூய மாற்கு (ஏப்ரல் 25)
நிகழ்வு

மாற்கு அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். அவர் அந்நகருக்குள் நுழையும்போது அவருடைய காலணிகளில் ஒன்று அறுந்துபோய்விட்டது. எனவே, அவர் அருகே இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று தன்னுடைய காலணியைத் தைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். செருப்பு தைக்கும் தொழிலாளி மாற்குவின் காலணியைத் தைக்கும்போது தவறுதலாக அவர் பயன்படுத்திய ஊசி அவருடைய இடது கையில் பட இரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தது. அப்போது அவர் ‘கடவுள் ஒருவரே’ என்று சத்தமாகக் கத்தினார். உடனே மாற்கு அருகே கிடந்த மணலைக் குழப்பி சேறு உண்டாக்கி, அதனை எடுத்து அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் காயம்பட்ட கையில் வைத்தார். அவருடைய கையிலிருந்து வழிந்த இரத்தம் முற்றிலுமாக நின்றுபோனது, அவருக்கு இருந்த வலியும் காணாமல் போனது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அம்மனிதர் மாற்குவிடம், “நீர் யார்?” என்று கேட்டார். அதற்கு மாற்கு, “நான் ஆண்டவர் இயேசுவின் ஊழியர், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக இங்கே வந்தவர்” என எடுத்துரைத்தார்.

மாற்குவின் வார்த்தைகளால் தொடப்பட்ட செருப்பும் தைக்கும் தொழிலாளி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். அவர் பெயர் அணியானுஸ் என்பதாகும். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பம் முழுவதும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். இதற்கிடையில் இச்செய்தி எப்படியோ நகரத்தவர் காதுகளை எட்ட அவர்கள் மாற்குவை கொல்லத் தீர்மானித்தார்கள். இதனால் மாற்கு அணியானுசை அலெக்ஸாண்ட்ரிய நகரின் ஆயராக திருப்பொழிவு செய்துவிட்டு வேறொரு நகருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

மாற்கு எருசலேமில் வாழ்ந்த மரியா (திப 12: 12-16) என்பவருடைய மகன். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். சிறையில் இருந்த பேதுரு அற்புதமாக தப்பித்து வெளியே வந்தபோது இவருடைய இல்லத்தில்தான் அடைக்கலம் புகுந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பர்னபாஸ் என்பவர் ஆவார். விவிலியத்தில் இவர் ஒருசில இடங்களில் ஜான் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜான் என்பது இவருடைய யூதப் பெயர். மாற்கு என்பது இவருடைய உரோமைப் பெயர்.

மாற்கு கி.பி. 46 ஆம் ஆண்டு பவுல் மேற்கொண்ட அந்தியோக்கு நகர் நோக்கி முதலாவது திருத்தூது பயணத்தில் உடன் சென்றார். ஆனால் பெர்கே என்ற நகரில் பவுலுக்கும் மாற்குவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாற்கு தனியாகப் பிரிந்துபோனார். கி.பி. 60 ஆம் ஆண்டு பவுல் உரோமை நகருக்கு வந்தபோது, மாற்கு மீண்டுமாக அவரோடு சேர்ந்துகொண்டார். பவுல் இவரைக் குறித்து குறிப்பிடும் போது “என்னுடைய பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்” (2 திமோ 4:11) என்று குறிப்பிடுகின்றார். மாற்கு பேதுருவின் சீடராகவும், செயலராகவும், விரிவுரையாளராகவும் இருந்து செயல்பட்டு இருக்கிறார். அதனால்தான் பேதுரு இவரை, “மாற்கு என்னுடைய அன்பிற்குரிய மகன்” என்று குறிப்பிடுகின்றார் (1 பேதுரு 5:13). பேதுருவிடமிருந்துதான் மாற்கு கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டார்.

மாற்கு, இரண்டாம் நற்செய்தி எனப்படும் ‘மாற்கு நற்செய்தியை’ எழுதியிருக்கிறார். இச்செய்தியை அவர் உரோமையில் இருந்த காலகட்டங்களில் உரோமைக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதினார். இது எழுதப்பட்ட காலம் கி.பி. 65 ஆகும். இந்நற்செய்தி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதலாவது இந்நற்செய்தி நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் வருகின்ற நிகழ்வுகள் தத்தூரூபமாக, கண்முன்னே நடப்பது போன்று எழுதப்பட்டிருக்கும். மாற்கு அத்தகைய ஒரு சிறப்பாற்றலைப் பெற்றிருந்தார். இரண்டாவதாக மாற்கு, ஆண்டவர் இயேசுவை ஒரு துன்புறும் ஊழியராக, இறைமகனாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது வேறு எந்த ஒரு நற்செய்தி நூலுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். மூன்றாக மாற்கு திருமுழுக்குக் யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ சுட்டிக்காட்டுகின்றார். அதனால்தான் மாற்கு நற்செய்தியாளருக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்கு அலெக்ஸ்சாண்ட்ரியா, எகிப்து போன்று இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். இவர் அலெக்ஸ்சாண்ட்ரியா நகரில் நற்செய்தி அறிவிக்கும்போது கயவர்கள் சிலர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள். அடுத்த நாள் இவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி தெருவெங்கும் இழுத்துச் சென்றார்கள். அவர் அப்படி இழுத்துச் செல்லப்படும் போதே உயிர் துறந்தார். அவர் தன்னுடைய உயிரைத் துறந்த நாள் கிபி 68 ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியாகும். பின்னர் மாற்குவின் பணியாளர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று, வெனிஸ் நகரில் அடக்கம் செய்தார்கள். அவருடைய கல்லறை வெனிஸ் நகரில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

நற்செய்தியாளர் தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

மாற்கு நற்செய்தியாளர் ஒரு மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்பு பணியாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் முதலில் அவர் பவுலோடு சேர்ந்து நற்செய்தி அறிவித்தார். அதன்பிறகு தூய பேதுருவோடு நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தார். இறுதியாக இவர் அலெக்ஸ்சாண்ட்ரிய நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுவார், “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15). ஆகவே, ஆண்டவர் இயேசு சொன்ன கட்டளையை, மாற்கு நற்செய்தியாளர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ முயல்வோம்.

ஐரோப்பாக் கண்டத்தில் ருட்டெல் நோரிஸ் (Ruddell Norris) என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற ஆர்வம்தான். இருந்தாலும் அவரிடத்தில் எல்லாரிடத்திலும் எப்படிச் சென்று பேசுவது, அறிவிப்பது என்ற கூச்ச சுபாவம் இருந்தது. அதனால் அவர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். அதாவது விவிலியத்தின் சில பகுதிகளையும், அதன் விளக்க உரைகளையும் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து, அதனை மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய மருத்தவமனைகள், வழிபாட்டு மையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் வைத்துவிட்டுச் சென்றார். இதனை எடுத்து படித்தவர்கள் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அதிகமாக அறிந்துகொண்டார்கள்.

ஒருநாள் இவர் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டுத் போகும்போது பின்னாலிருந்து, “யாரோ ஒரு புண்ணியவாளன் செய்யக்கூடிய இந்த நல்ல காரியத்தினால் நான் கிறிஸ்துவைப் பற்றிய அதிகமாக அறிந்துகொண்டேன்” என்றது. இதைக் கேட்ட ருட்டெல் நோரிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தான் செய்யக்கூடிய இந்த சிறிய நற்செயலால் ஒருசிலராவது கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறார்களே என்று அவர் தன்னுடைய மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

கடல் கடந்து சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் இருக்கும் இடத்தில், நம்மால் முடிந்த அளவு நற்செய்தி அறிவிக்கலாம். அதற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். நற்செய்தியாகவே வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித எம்மா (-1038). ஏப்ரல் 19

ஏப்ரல் 19

புனித எம்மா (-1038)
இவர் பதினொன்றாம் நூற்றாண்டில், தற்போதைய பரேமன் என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.

இளம்வயதில் கடுஞ்சினம் கொள்ளக்கூடிய வராக இருந்தார் இவர்.

இவர் லியூட்ஜர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இறைவன் ஓர் ஆண்குழந்தையைத் தந்தார்.

இப்படி வாழ்க்கை நகர்கையில், இரஷ்யாவிற்குச் சென்ற இவருடைய கணவர் இறந்து போனார். இது இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் முன்கோபியாக இருந்த இவர், அமைதியின் வடிவாய் மாறினார்; தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்கும் பல கோயில்களுக்கும் வாரி வாரி வழங்கத் தொடங்கினார். 

இறுதியாக இவருடைய மகனை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டு, நிம்மதியாக இறையடி சேர்ந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, இவரது உடல் முழுவதும் சிதைந்து போயிருக்க, கொடுத்துக் கொடுத்துச் சிவந்த இவரது கைகள் மட்டும் அழியாமல் இருந்தன.

சிந்தனை:

கொடுப்பதில் இன்பம், பெறுவதில் இல்லை.

பிறருக்குக் கொடுத்து வாழும்போது, கொடுத்ததைவிட மிகுதியாக நாம் பெறுகிறோம்.

சினம் எழுகிறபோது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.

- மரிய அந்தோனிராஜ்

24 April 2020

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)

24 ஏப்ரல் 2020, வெள்ளி 
இன்றைய புனிதர்

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)
வாழ்க்கை வரலாறு

தூய பிதேலிஸ், 1577 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சிக்மரின்ஞன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து ரேபர்க் நகரில் இருந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னாளில் தான் எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே அவர் பேராசிரியராகப் பணிசெய்தார். ஒருசில ஆண்டுகளில் இவர் சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நிறைய ஏழைகள் வழக்குகளைத் தீர்த்து வைக்க போதிய பணமில்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிதேலிஸ் அவர்களுக்கு இலவசமாகவே வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இப்படி அவர் பணம் வாங்காமலே, ஏழைகளின் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைத்ததால், ‘ஏழைகளின் வழக்குரைஞர்’ என அழைக்கப்படவும் தொடங்கினார். 

தொடர்ந்து வழக்குரைஞர் பணியை செவ்வனே செய்துவந்த பிதேலிஸ், ஒரு கட்டத்தில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் 1617 ஆம் ஆண்டு, எல்லாவற்றையும் துறந்து, கப்புசியன் சபையில் துறவியாக வாழத் தொடங்கினார். வழக்குரைஞர் பணியைவிட்டு துறவியாக வாழத் தொடங்கிய காலகட்டங்களில் தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற மமதையில் எல்லாம் அவர் இருக்காமல், மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்தார். இதனால் சபையில் இருந்த எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். 

இவருடைய காலத்தில் கால்வினியன், ஸ்விங்கிளியன் போன்ற தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. பிதேலிஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கால்வினியனிசமோ முன்விதிப்படியே எல்லாமும் நடக்கும், அதாவது யார் யார் விண்ணகம் செல்வார், யார் யார் நரகம் செல்வார் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுப்விட்டது என்று சொல்லி வந்தது. அதோடு திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டு மட்டும் திருவருட்சாதனங்கள் என்று போதித்து வந்தது. இதனை பிதேலிஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். எனவே அந்த தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தவர்கள் பிதேலிசுக்கு எதிரான சதி வேளையில் இறங்கினார்கள். அந்த அடிப்படையில் 1622 ஆம் ஆண்டு, அவரைக் கொலை செய்தார்கள். பிதேலிசுக்கு 1746 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

23 April 2020

புனிதர் அடால்பர்ட். April 23

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 23)

✠ புனிதர் அடால்பர்ட் ✠
(St. Adalbert of Prague)
ஆயர் மற்றும் மறைசாட்சி:
(Bishop and Martyr)

பிறப்பு: 956
லிபைஸ் நாட் ஸிட்லினோ, பொஹேமியா, ஸ்செச்சியா
(Libice nad Cidlinou, Bohemia, Czechia)

இறப்பு: ஏப்ரல் 23, 997
ட்ரூசோ, ப்ருஷியா
(Truso, Prussia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: 999
திருத்தந்தை இரண்டாம் சில்வஸ்ட்டர்
(Pope Sylvester II)

முக்கிய திருத்தலம்: 
க்நீஸ்னோ, ப்ராக்
(Gniezno, Prague)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 23

பாதுகாவல்:
போலந்து, பொஹேமியா, எஸ்டேர்கோம் உயர்மறைமாவட்டம்
(Poland, Bohemia, Archdiocese of Esztergom)

"வோஜ்டெக்" (Vojtěch) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் அடால்பர்ட், பொஹேமியா'வின் மறை பணியாளரும், "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague), "ஹங்கேரிய" (Hungarians), "போல்ஸ்" (Poles) மற்றும் "ப்ருஷியன்" (Prussians) மக்களின் மறைபோதகரும் ஆவார். இவர், "பால்டிக் ப்ருஷியன்" (Baltic Prussians) இன மக்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றும் முயற்சியில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

தற்போது, "செக் குடியரசு” (Czech Republic), “போலந்து” (Poland), “ஹங்கேரி” (Hungary) மற்றும் “ஜெர்மனி” (Germany) ஆகிய நாடுகளால் பெரிதும் போற்றப்படும் புனிதரான அடால்பர்ட், அக்காலத்தில் கிறிஸ்துவின் நற்செய்திகளின் எதிர்ப்பு ஒருபோதும் இவரை சோர்வடையச் செய்யவில்லை.

பொஹெமியாவின் (Bohemia) பிரபுத்துவ குடும்பமொன்றில் பிறந்த இவருடைய தந்தையார் “ஸ்லாவ்னிக்” (Slavník) ஆவார். இவரது தாயார் “ஸ்ட்ரேசிஸ்லாவா” (Střezislava) ஆவார். சிறு வயதிலேயே பெரும் நோயோன்றினால் பாதிக்கப்பட்டு பிழைத்த இவரை கடவுளின் சேவையில் அர்ப்பணித்திட இவரது பெற்றோர் தீர்மானித்திருந்தனர்.

சிறந்த கல்விமானான இவர், தமது ஆரம்ப கல்வியை "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) எனும் புனிதரிடம் கற்றார். தமது “உறுதிப்பூசுதல்” (Confirmation) திருவருட்சாதனம் பெரும் நிகழ்வின்போது, தமது ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆசிரியரது பெயரையே தமது ஆன்மீக பெயராக ஏற்றார். 

981ம் ஆண்டு, இவரது ஆசிரியரான "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) மரித்ததும், இவர் பொஹேமியா திரும்பினார். பிறகு, "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague) “டயட்மார்” (Dietmar of Prague) என்பவர், இவரை கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு செய்வித்தார். 982ம் ஆண்டு, ஆயர் “டயட்மார்” (Dietmar of Prague) மரித்துப் போகவே, தமது 27 வயதிலேயே ப்ராக் (Prague) மறைமாவட்டத்தின் ஆயராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது நற்பணிகளை எதிர்த்தவர்களின் வற்புறுத்தலால் எட்டு வருடங்களின் பின்னர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

காலப்போக்கில், ப்ராக் மக்கள் அவரை தங்களது ஆயராக திரும்பி வர வேண்டினார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆலயத்தின் பரிசுத்தம் கெடும் வகையில், விபச்சார குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து மான பங்கம் செய்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

ஹங்கேரியில் சிறிது காலம் மறைபோதனை செய்த பின்னர், "பால்டிக்" கடற்கரையோரம் (Baltic Sea) வசித்த மக்களுக்கு நற்செய்தி போதிக்க சென்றார். அவரும் அவருடன் சென்ற இரு நண்பர்களும் "பாகனீய குருக்களால்" (Pagan Priests) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.

தூய ஜார்ஜியார் (ஏப்ரல் 23)

இன்றைய புனிதர் : 
(23-04-2020) 

தூய ஜார்ஜியார் (ஏப்ரல் 23)
நிகழ்வு

ஜார்ஜியார் வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் லிபியா என்ற நகரில் மனிதர்களை ஒவ்வொருநாளும் நரபலி கொடுக்கும் மந்திரவாதி ஒருவன் இருந்தான். ஒருநாள் ஜார்ஜியார் அந்நகர் வழியாகச் சென்றபோது மந்திரவாதி அந்நாட்டு இளவரசியைப் பிடித்து வைத்துக்கொண்டு, அவளை நரபலி கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஜார்ஜியார் அவனோடு போர்தொடுத்து அவனை வீழ்த்தினார். பின்னர் அவர் இளவரசியை அவளுடைய தோளில் போட்டிருந்த துணியால் மந்திரவாதியைக் கட்டி வழியெங்கும் இழுத்துவரச் சொல்லி அவனை தண்டிக்கச் சொன்னார். அதன்படியே இளவரசி செய்தாள். இறுதியில் அந்த கொடிய மந்திரவாதி வரும் வழியிலே இறந்துபோனான். பின்னர் ஜார்ஜியார் அந்த இளவரசியிடம், “கடவுள் உன்னை அற்புதமாகக் காப்பாற்றி இருக்கின்றார். ஆகையால் அவரைப் பற்றிய மெய்மறையை உன்னுடைய நாடு முழுவதும் பரப்பு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

ஜார்ஜியார் இஸ்ரயேலைச் சேர்ந்த கேரேன்தியேசு மற்றும் பாலிகிரோனி என்பவருடைய மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தார். இதனால் பெற்றோர் இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டார். இளைஞனாக மாறிய பிறகு அப்போது உரோமை நகரில் அரசனாக இருத்த தியோகிளேசியன் என்பவனுடைய படையில் படைவீரராகச் சேர்ந்தார். இவருடைய நற்பண்புகளையும் திறமையையும் பார்த்த அரசன் சிறிய படைப்பிரிவிற்கு தலைவனாக ஏற்படுத்தினார். அதன்பின்னர் இவரை பாதுகாப்புப் படையின் தலைவராக உயர்ந்தார். இவ்வாறு ஒவ்வொருநாளும் ஜார்ஜியார் அரசன் தனக்குக் கொடுத்த பொறுப்புகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, நாளும் நாளும் உயர்ந்துகொண்டிருந்தார்.

ஒருமுறை அரசன் தான் வணங்கி வந்த தெய்வத்தை எல்லாரும் வணங்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தான். அப்படி வணங்காதவர்களை கொன்றுபோடுவதாகவும் எச்சரித்தான். ஆனால் நிறைய கிறிஸ்தவர்கள் அரசன் சொன்னதற்கு அடிபணியாது, கிறிஸ்து ஒருவரையே வணங்கி வந்தார்கள். இதைக் கண்டு சினம்கொண்ட அரசன் தன்னுடைய கடவுளை வணங்காத மக்களை ஒன்றாக இழுத்துவந்து அவர்களை வதைக்கச் சொன்னான். அந்தப் பொறுப்பை அரசன் ஜார்ஜியாரிடம் ஒப்படைத்தான். ஆனால் ஜார்ஜியாரோ, “நான் யாரையும் வதைக்கமாட்டேன். நானும் ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவருக்கும் வணக்கம் செலுத்தமாட்டேன்” என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் அரசன் இன்னும் சினமுற்றான். தன்னிடம் பணிசெய்யும் ஒருவன் தன்னுடைய கட்டளைக்குப் பணிந்து வாழாமல் இருப்பதா? என்று அவன் மிகவும் சினமுற்றான். ஆனாலும் ஜார்ஜியாரைப் போன்று ஒரு வீரனை அவர் இழக்க விரும்பவில்லை. அதனால் அவரை எப்படியாவது சூழ்ச்சியால் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அரசன் நினைத்தான்.

ஒருநாள் அரசன் ஜார்ஜியாரை அழைத்து, “உனக்கு வேண்டிய மட்டும் நிலபுலன்கள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் தருகிறேன். ஆனால் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னுடைய தெய்வத்தை வணங்கவேண்டும்” என்று சொன்னான். அதற்கு ஜார்ஜியார், “நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆண்டவர் இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன்” என்று மிக உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் அரசனுக்குக் கோபம். இருந்தாலும் அவன் அதனை வெளியே காட்டி கொள்ளாமல், அவரை எப்படி சூழ்ச்சியால் ஒழிக்கலாம் என திட்டம் தீட்டினான். அதற்கு அவன் ஒரு மந்திரவாதியை அழைத்து, ஜார்ஜியாரை சூழ்ச்சியால் கொன்றுபோட சொன்னான். மந்திரவாதியும் அரசனுடைய கட்டளைக்குப் பணிந்து, ஜார்ஜியார் குடிக்கும் பாலில் விஷம் கலக்கிக்கொடுத்தான். ஆனால் ஜார்ஜியார் அந்த பாலின் மீது சிலுவை அடையாளம் வரைந்து, அதனைக் குடிக்க அது ஒன்றுமே செய்யவில்லை. இப்படியாக அரசன் வைக்கும் சூழ்சிகள் அனைத்தையும் ஜார்ஜியார் இறைவல்லமையால் வெற்றிக்கொண்டார்.

ஒருமுறை ஜார்ஜியாரைக் கொல்ல நினைத்த அத்தனேசியா என்ற மந்திரவாதியும் அந்நாட்டு அரசியும் ஜார்ஜியாரை அழைத்து, அவருக்கு முன்பாக ஒரு பிணத்தை கொண்டு வைத்து, “இந்த பிணத்தை உயிர் பெற்றெழச் செய்தால் நாங்கள் அனைவரும் நீ வணங்கும் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோம்” என்றார்கள். அதன்படி ஜார்ஜியார் தனக்கு முன்பாகக் கொண்டுவந்து வைக்கப்பட்ட பிணத்தின் மீது கைகளை வைத்து ஜெபித்தார். அவர் இறைவனிடம் ஜெபித்த சில மணித்துளிகளிலேயே இறந்த மனிதர் உயிர்பெற்று எழுந்தார். இதைக் கண்டு மந்திரவாதி, அரசி என அனைவருமே ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். மக்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள. இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகியது. எல்லாவற்றையும் பார்த்து கடுஞ்சினம் அரசன் அரசி மந்திரவாதி, ஜார்ஜியார் என மூவரையும் 303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் வாளுக்கு இரையாக்கினான். 449 ஆம் ஆண்டு திருத்தந்தை கலேசியஸ் இவரைப் புனிதராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜார்ஜியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்” (லூக் 12:8) தூய ஜார்ஜியார் ஆண்டவர் இயேசுவை எல்லாருக்கும் முன்பாக, அதுவும் தன்னை கொல்ல நினைத்த கொடிய அரசனுக்கும் முன்பாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார். அவரிடமிருந்து விசுவாசம், கிறிஸ்துவுக்காக எதையும் செய்யக்கூடிய துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோது கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோம். அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோம். ஆனால் துன்பம், அச்சுறுத்தல் என்று ஏதாவது வந்தால் பின்வாங்குகின்றோம். ஆனால் தூய ஜார்ஜியார் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் கிறிஸ்துவை துணிவோடு அறிக்கையிட்டதற்கு முன்னோடி. அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வால், வார்த்தையால் எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

22 April 2020

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)

இன்றைய புனிதர் : 
(22-04-2020) 

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)
“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் ( திப 10: 38).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய சொட்டேருஸ் இத்தாலியில் உள்ள போன்டியில் பிறந்தவர். இவர் திருத்தந்தை அனிசெத்துஸ் அவர்களுக்குப் பின்னர் 12 வது திருத்தந்தையாக உயர்ந்து, திருச்சபையை கட்டிக்காத்தார்.

சொட்டேருஸ், தூய பவுலைப் போன்று, தூய கிளமென்டைப் போன்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். இவர் எழுதிய கடிதம் நமக்குக் கிடைக்காவிட்டாலும் கொரிந்து நகரில் ஆயராக இருந்த டைனிசியஸ் இவருக்கு எழுதிய பதில் கடித்தத்தைக் கொண்டு இதனை உறுதிசெய்துகொள்ளலாம். அந்தத் கடிதத்தில் ஆயர் தூய டைனிசியஸ், திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகுபட எழுதுகின்றார். திருத்தந்தை சொட்டேருஸ் நிறைய நன்மைகள் செய்யக்கூடியவர் என்றும், ஆலயங்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவர் என்றும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவக்கூடியவர் என்றும் நல்ல ஆலோசகர் என்றும் அதில் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

இவருடைய காலத்தில் மார்குஸ் அவுரேலியுஸ் என்பவன் உரோமையை ஆண்டுகொண்டு வந்தான். ஒரு சமயம் அவன் தன்னுடைய படைவீரர்களோடு பொகிமியான் என்ற இடத்தின் வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்த பழங்குடியினர் இவனையும் இவனுடைய படைவீரர்களையும் சூழ்ந்துகொண்டு, தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அப்போது படையில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார்கள். மறுகணமே மார்குஸ் அவுரேலியுசும் அவனுடைய படைவீரர்களும் இருந்த பகுதியில் மழையும், பழங்குடியினர் இருந்த பகுதியில் சூறாவளியும் வீசியும் வீசியது. இதனால் மார்குசும் அவனுடைய படைவீரர்களும் அதிஸ்டவசமாகக் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்விற்குப் பிறகு மன்னன் கிறிஸ்தவர்கள்மீது நல்மதிப்பு கொள்ளத் தொடங்கினான்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, ஒருசில விஷமிகள் மன்னனிடம் கிறிஸ்தவர்களைக் குறித்து தவறாகப் போட்டுக்கொடுக்க, அவன் கிறிஸ்தவர்களைக் கொலை செய்யத் தொடங்கினான். அந்த வழியில் 175 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள், மன்னன் திருத்தந்தை சொட்டேருசை கொலை செய்தான். திருத்தந்தை அவர்களோ கிறிஸ்துவுக்காக உயிர் துறந்து, மறைசாட்சியானர்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சொட்டேருசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம்

தூய சொட்டேருசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, மேலே சொல்லப்போட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய சொட்டேருஸ் எப்போதும் நன்மை செய்வதில் கருத்தாய் இருந்தார். அது திருச்சபையாக இருக்கட்டும் ஏழை எளியவர், வறியவராகட்டும் எல்லாருக்கும் அவர் நன்மையையே செய்துவந்தார். தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதற்கு முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பேரரசர் அக்பர் மந்திரிகள் குழுமியிருந்த அவையோரைப் பார்த்துக் கேட்டார். “ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம், வசந்த காலம், மழைக்காலம், கோடை காலம் என பல காலங்கள் வருகின்றனவே. இதில் எந்த காலம் மக்களுக்கு ஏற்ற நல்ல காலம்?”. பேரரசர் கேட்ட கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தி அடையாத அரசர், பீர்பாலைக் கூப்பிட்டு, உங்கள் பதில் என்ன? என்றார். அதற்கு அவர், “அரசே! எந்தக் காலத்தில் மக்கள் அனைவரும் பசியாற உண்டு உறங்குகிறார்களோ அந்தக் காலமே நல்ல காலம்” என்றார். பீர்பால் சொன்ன பதிலைக் கேட்டு, முழு திருப்தி அடைந்த அரசர் அவருக்கு நல்லதொரு சன்மானம் கொடுத்தார்.

எல்லா மக்களும் மகிழ்ச்சியுற்று இருப்பதே நல்ல காலம். அந்த நல்ல காலம் தாமாகவே வந்துவிடாது. நாம் நம்மாலான உதவிகளை ஒருவர் மற்றவருக்குச் செய்கின்றபோதே வரும். தூய சொட்டேருஸ் அப்படித்தான் தன்னால் இயன்ற நன்மைகளை மற்றவருக்குச் செய்தார்.

ஆகவே, தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம், அதன்வழியாக இப்புவியில் நல்ல காலம் பிறக்கச் செய்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

21 April 2020

புனிதர் கோன்ராட் ஏப்ரல் 21

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 21)

✠ புனிதர் கோன்ராட் ✠
(St. Conrad of Parzham)
ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்:
(German Franciscan Lay Brother)

பிறப்பு: டிசம்பர் 22, 1818
பேட் கிரீஸ்பச், பஸ்சவ், பவேரியா அரசு
(Bad Griesbach, Passau, Kingdom of Bavaria)

இறப்பு: ஏப்ரல் 21, 1894
அல்டோட்டிங், பவேரியா அரசு
(Altötting, Kingdom of Bavaria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
ஃபிரான்சிஸ்கன் சபை
(Roman Catholic Church)
(Franciscan Order)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: கி.பி. 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 21

புனிதர் கோன்ராட், ஒரு ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர் (German Franciscan lay brother) ஆவார். இவர், பவேரியா அரசிலுள்ள “அல்டோட்டிங்” (Altötting) எனுமிடத்திலுள்ள “கபுச்சின் துறவு மடத்தில்” (Capuchin friary) சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக, சுமை தூக்கும் பணியாளாக (Porter) பணியாற்றினார். அப்பணியின்மூலம், அவர் தனது ஞானத்திற்கும் பரிசுத்தத்திற்குமான ஒரு பரவலான புகழைப் பெற்றார். கத்தோலிக்க திருச்சபை, இவரை ஒரு புனிதராக ஏற்றுள்ளது.

1818ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று பிறந்த இப்புனிதருடைய திருமுழுக்குப் பெயர், ஜான் (John) ஆகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய தந்தையாரின் பெயர், “பர்தொலோமவுஸ் பிர்ண்டோஃபெர்” (Bartholomäus Birndorfer) ஆகும். இவருடைய தாயாரின் பெயர், “கெர்ட்ரூட் நியேடேர்மையர்” (Gertrude Niedermayer) ஆகும். இவர், தமது பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை ஆவார். இவர் பிறந்தது, அன்றைய பவேரியா அரசின் பாகமான “பேட் கிரீஸ்பச்” (Bad Griesbach) நகரிலுள்ள பண்ணை வீடாகும். இந்நகர், தற்போது ஜெர்மன் நாட்டின் பாகமாகும்.

இவரது சிறுவயது முதலே இவர் தமது மனத்தாழ்ச்சி மற்றும் தனிமையில் விருப்பம் ஆகியன மூலம் தமது எதிர்கால புனிதத்தன்மை பற்றின அறிகுறிகளைக் கொடுத்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின் அவருடைய பக்தி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தொலைதூர இடங்களில் அவர் அடிக்கடி வருகை தரும் காலநிலைக்கு வருகை தந்திருந்தார். அவர் ஆசிர்வதிக்கப்பட்ட தேவ அன்னையின்பால் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பக்தியுடன் செபமாலை செபித்தார். பண்டிகை நாட்களில், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ தாயின் சில தொலைதூர திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய திருயாத்திரைகளின்போது, நடைபயணமாகவே செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். வழி நெடுகிலும் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்த இவர், திரும்பி வந்து சேரும்வரை உண்ணா நோன்பிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமது சிறுவயதில் குடும்ப பண்ணை நிலங்களில் வேலை செய்துவந்த ஜான், தமது 14 வயதில் தமது தாயாரை இழந்தார். 31 வயதில், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மதச்சார்பற்ற உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரிடமிருந்த அவரது பரம்பரை சொத்துக்களை அப்புறப்படுத்தியபிறகு, முதலில் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) இணைந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கபுச்சின் ஃபிரான்சிஸ்கன் (Capuchin Franciscan friars) துறவியரிடையே, ஒரு உறுதிப்பாடுகள் ஏற்காத பொதுநிலை சகோதரராக இனைந்தார். அங்கே, புகுமுக பயிற்சியில் (Novitiate) இணைந்த வேளையில், “கோன்ராட்” (Conrad) எனும் ஆன்மீகப் பெயரை ஏற்றார். அப்பெயரிலேயே அவர் தமது வாழ்நாள் முழுதும் அறியப்பட்டார்.

சுமைதூக்கும் சகோதரரர் (Brother Porter) :
தமது இறுதி உறுதிப் பிரமாணங்களை ஏற்றவுடன், அவர் “அல்டோட்டிங்” (Altötting) நகரிலுள்ள “புனித ஆன்” துறவு மடத்திற்கு (Friary of St. Ann) அனுப்பப்பட்டார். இத்துறவு மடமானது, பவேரியாவின் தேசிய திருத்தலமான அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு சேவை புரிந்தது. சகோதரர் கோன்ராடுக்கு, அங்கே சுமை தூக்கும் பணி வழங்கப்பட்டது. அவர், தமது மரணகாலம் வரை அங்கே சுமை தூக்கும் பணியை செய்துவந்தார். அவர்களிருந்த “அல்டோட்டிங்” (Altötting) நகரம் ஒரு பெரிய மற்றும் பரபரப்பான நகராகையால், அங்கே துறவியரின் சுமை தூக்குபவராக பணியாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

சகோதரர் கோன்ராட், தமது பணிகளில் ஊக்கமுள்ளவராகவும், கவனமுள்ளவராகவும் இருந்தார். வார்த்தைகளிலிருந்து விலகி, ஏழைகளுக்கு ஆர்வமுடன் உழைப்பவராகவும், அன்னியரை வரவேற்பதில் ஆர்வம் காட்டினார். சகோதரர் கோன்ராட் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியிடத்தின் பணியை நிறைவேற்றினார். உடலின் மற்றும் ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்ப, நகரத்தின் மக்களுக்கு உதவினார்.

கோன்ராட் மிகவும் சிறப்பு வழியில் மெளனத்தை, அமைதியை நேசித்தார். தாம் பணியில்லாமல் இருக்கும் வேளைகளில், கதவின் மறைவில் நின்றபடி நற்கருணையாண்டவரைப் பார்த்தவாறு நின்றிருப்பார். இரவு நேரத்தில் அவர் பல மணி நேரம் உறங்காமல் ஜெபத்திற்கு நேரத்தை செலவிடுவார். அவர் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு, பக்தியின் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

41 வருடங்கள் தாம் சேவை செய்த துறவு மடத்திலேயே 1894ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, சகோதரர் கோன்ராட் மரித்தார்.

அவருடைய வாழ்நாளில், சகோதரர் கோன்ராட் தாம் சந்தித்த மக்களின் இதயங்களை வாசிக்க முடிந்ததாகக் கருதப்பட்டார். மற்றும், தீர்க்கதரிசன பரிசுகளையும் கொடுத்தார்.

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)

இன்றைய புனிதர்

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)
இயேசுவுக்காக வாழ்வோருக்கு துறவுமடம்தான் உண்மையான விண்ணகம் – தூய ஆன்செல்ம்

வாழ்க்கை வரலாறு

ஆன்செல்ம், 1033 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஆவோஸ்டா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் பக்திமிக்க பெண்மணி. அதனால் அவர் ஆன்செல்மை பக்தி நெறியில் வளர்த்து வந்தார். ஆனால் அவர் சிறுது காலத்திலேயே இறந்துபோனதால் ஆன்செல்ம் தன்னுடைய தந்தையின் பராமரிப்பில் வளரவேண்டிய சூழல் உருவானது. ஆன்செல்மின் தந்தையோ அவரை பலவாறு கொடுமைப் படுத்தினார். அதனால் அவருடைய கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஆன்செல்ம் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பெக் என்னும் இடத்தில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, துறவியாக மாறினார். ஒருசில ஆண்டுகளிலே அந்த மடத்தின் தலைவராக மாறினார். ஆன்செல்மிற்கு இறைவன் நிறைந்த அறிவையும் ஞானத்தையும் கொடுத்திருந்தார். அதனால் நிறைய புத்தகங்களை எழுதினார். குறிப்பாக இவர் எழுதிய ‘மோனோலாக்கியம்’, ‘பிராஸ்லாக்கியம்’ ‘கடவுள் ஏன் மனிதர் ஆனார்’ போன்ற புத்தகங்கள் எல்லாம் அமரத்தத்துவம் வாய்ந்தவை. இந்தப் புத்தகங்களின் வழியாக ஆன்செல்ம் இறைவனுடைய இருத்தலை இறையியல் மற்றும் மெய்யியல் சிந்தனையோடு விளங்கினார்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போது 1093 ஆம் ஆண்டு இவர் கண்டர்பரி நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு நிறைய காரியங்களை மிகத் துணிச்சலாகச் செய்தார். திருச்சபையின் புனிதத்தையும் மாண்பினை கட்டிக்காத்து உண்மையின் உரைகல்லாக விலகினார். இதனால் சினம்கொண்ட அரசன் இரண்டாம் வில்லியம் இவரை நாடு கடத்தினார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேறொரு இடத்திலிருந்த ஆன்செல்ம், மன்னன் இறந்தபிறகு மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். மறைவாட்டத்திற்குத் திரும்பி வந்த பிறகும்கூட அதன்பிறகு வந்த நான்காம் ஹென்றி என்ற மன்னன் ஆயர் ஆன்செல்முக்கு மிகப்பெரிய தலைவலியாய் இருந்து வந்தான். அவனும் ஆயரை நாடு கடத்தினான். ஒருசில ஆண்டுகள் வெளியே இருந்துவிட்டு, மீண்டுமாக மறைமாவட்டத்திற்கு வந்தார் ஆன்செல்ம். மன்னர்கள் அவருக்கு எவ்வளவுதான் தொந்தரவு கொடுத்தாலும் அவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து திருச்சபைக் கட்டிப் காத்தார். இவர் 1109 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1720 ஆண்டு புனிதர் பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஆன்செல்மின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொல்வோம்

தூய ஆன்செல்மின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் மனவுறுதி இருந்ததும் அதன்மூலம் அவர் உண்மையை உரக்கச் சொன்னதும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. ஆன்செல்ம் கண்டர்பெரி நகரின் ஆயராக இருந்தபோது நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அத்தகைய தருணங்களில் அவர் யாருக்கும் ஏன் அரசருக்குக்கூட பயப்படாமல், உண்மையை உரக்கச் சொன்னார். தூய ஆன்செல்மை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏதென்ஸ் நகரில் இருந்த இளைஞர்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி, அவர்களைத் திசை திரும்புகின்றார் என்ற குற்றத்திற்காக சாக்ரடீஸ் நீதிமன்ற விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிக்கோ சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க விருப்பமில்லை எனவே அவர் சாக்ரடீசிடம், “ஏதென்ஸ் நகரை விட்டுச் சென்றுவிடுங்கள். அல்லது உங்கள் போதனையை நிறுத்தி விடுங்கள்” என்றார். அதற்கு சாக்ரடீஸ், “ஏதென்ஸ் நகரை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது. எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்” என்றார். “அப்படியானால் மரணதண்டனை மட்டுமே வழி” என்றார் நீதிபதி.

“எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள். இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது” என்று கம்பீரமாகச் சொன்னார் சாக்ரடீஸ்.

சாவுக்கு அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்ன சாக்ரடீஸ் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய ஆன்செல்மும் அப்படித்தான் மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொன்னார்.

ஆகவே, தூய ஆன்செல்மின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

20 April 2020

புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau) April 20

இன்றைய புனிதர்
2020-04-20
புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)
பிறப்பு
1170
கொலோன் (Cologne)
இறப்பு
20 ஏப்ரல் 1188
ஷொய்னவ் (Schoenau)

ஹில்டேகுண்ட் 1170 ஆம் ஆண்டு கொலோன் மறைமாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு 12 வயது இருக்கும்போது, தன் தந்தையுடன் புண்ணிய பூமிக்கு(Holy Land) திருயாத்திரை சென்றார். கப்பலில் பயணம் செய்யும்போது இவரின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டார். இதனால் ஹில்டேகுண்ட் புனித பயணத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவரின் தந்தை ஹில்டேகுண்ட்-ஐ அழைத்து, தனக்கு நல்ல உடையுடுத்தி, தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக சொன்னார். அதோடு ஹில்டேகுண்ட்-இன் பெயரை யோசேப்பு என்று மாற்றச் சொன்னார். ஆனால் ஹில்டேகுண்டால் தன் தந்தையின் ஆசையை கப்பலில் நிறைவேற்ற முடியாமல் போனது. கப்பல் எருசலேமை அடைந்தது.

அப்போது ஹில்டேகுண்ட் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்தில் செபவழிபாடு வைத்து செபித்தார். ஆலயத்தை விட்டு ஹில்டேகுண்டும், அவரின் தந்தையும் வெளியே வந்தபோது யாரென்று அடையாளம் தெரியாத ஒருவர், இவர்களுக்கு ஆடையையும் இன்னும் அங்கு தங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, உடன் அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தார். பின்னர் தந்தையும், ஹில்டேகுண்ட்டும் அம்மனிதரோடு சென்றனர். முன்பின் தெரியாத அம்மனிதரின் உதவியால் தன் தந்தையின் நோய் குணமாக்கப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினர்.

அதன்பிறகு ஹில்டேகுண்ட் பல காரணங்களால் துறவியாக வேண்டுமென்று விரும்பினார். தன் தந்தையின் அனுமதி பெற்று 1187 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலுள்ள ஹைடல்பெர்க் –இல் (Heidelberg) இருந்த சிஸ்டர்சியன் துறவற சபையில்(Cistercian) சேர்ந்தார். அவர் துறவியாவதற்குமுன் பயிற்சி பெறுவதற்காக ஷொய்னவ்விலிருந்த பயிற்சி இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் நவதுறவகத்தில் இருக்கும்போது "யோசேப்பு" என்னும் பெயர்மாற்றம் பெற்று, புதிய துறவற உடையும் பெற்றுக்கொண்டார். யோசேப்பு நவதுறவகத்தில் இருக்கும்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு நோய் முற்றிப்போனதால், உயிரை காப்பாற்ற முடியாமல், நவதுறவகத்திலேயே 1188 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் இறந்தார்.

சிஸ்டர்சியன் துறவறசபையில் நவதுறவகத்தில் இறந்தவர்களில் இவரே முதலானவர். இவரின் ஆன்மீக வாழ்வு இன்று வரை சிஸ்டர்சியன் சபையில் பயிற்சியகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் முன்மாதிரியாக உள்ளது.


செபம்:
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா! துறவிகளாக தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, பயிற்சி இல்லத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இளம் உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை பெற்று, உம் பாதையை தொடர உம் வரம் தாரும்!

மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ் (ஏப்ரல் 20)

இன்றைய புனிதர் : 
(20-04-2020) 

மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ் (ஏப்ரல் 20)
என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர், நான் விண்ணகம் செல்வது பற்றி மகிழ்ச்சியுறுவார். – தூய ஆக்னஸ்

வாழ்க்கை வரலாறு

ஆக்னஸ் 1268 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள டாஸ்கனி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஆக்னசுக்கு ஐந்து வயது நடக்கும்போது துறவியாகப் போகப்போகிறேன் என்றார். இதைக் கேட்ட அவருடைய பெற்றோர், “இந்த வயதில் அது சாத்தியம் கிடையாது” என்று சொல்லி அவரை வீட்டிலே இருக்க வைத்தனர். ஆக்னசுக்கு ஒன்பது வயது ஆகும்போது மீண்டுமாக அவர், “நான் துறவியாகப் போகப்போகிறேன்” என்றார். உடனே ஆக்னசின் பெற்றோர் ஆக்னசிற்கு துறவற வாழ்வில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவரை துறவற வாழ்வினைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தனர்.

துறவுமடத்தில் சேர்ந்த பின்னர் ஆக்னஸ் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் தூய்மைக்கும் பிறரன்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். இவரிடத்தில் துலங்கிய தூய்மையான வாழ்வினைப் பார்த்துவிட்டு இவரை 15 வயதிலே துறவற மடத்தின் தலைவியாக ஏற்படுத்தினார்கள். அதன்பின்னரும்கூட இவர் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தார்.

ஆக்னஸ், தன்னுடைய அதிகமான நேரத்தை காட்சி தியானத்திற்கு செலவழித்து வந்தார். ஒரு சமயம் இவர் தியானம் செய்துகொண்டிருக்கும்போது அன்னை மரியா குழந்தையோடு இவருக்குக் காட்சி தந்தார். இதைச் சிறிதும் எதிர்பாராத ஆக்னஸ் மிகவும் பரவசமடைந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அன்னை மரியா ஆக்னசிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, அவர் குழந்தை இயேசுவின் காலை பிடித்துக்கொண்டு, “அன்னையே! குழந்தை இயேசுவை மட்டும் என்னோடு இருக்க அனுமதியும்” என்றார். அதற்கு அன்னை மரியா, “குழந்தை இயேசுவை உன்னிடம் விட்டுவிட்டுப் போகமுடியாது. அது சாத்தியமும் கிடையாது. வேண்டுமானால் நான் தரக்கூடிய இந்த மூன்று கற்களை வைத்துக்கொள், அது என்றைக்காவது தேவைப்படும்” என்று சொல்லிவிட்டு தன்னிடத்தில் இருந்த மூன்று கற்களை கொடுத்துவிட்டு, அன்னை மரியாவும் குழந்தை அங்கிருந்து மறைந்து போனார்கள்.

ஆக்னஸ், மடத்தின் தலைவியாகப் பொறுப்பெடுத்த இரண்டாம் ஆண்டில் ப்ரோசெனா என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்று உணர்ந்தார். அதன்படியே அவர் அங்கு சென்று, துறவற மடம் ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மொன்டே புல்சியனோ நகரில் சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. உடனே அவர் அங்கு சென்று, முன்பு அன்னை மரியா அவருக்குக் கொடுத்த மூன்று கற்களை அடித்தளமாக வைத்து துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, அதில் சபை ஒன்று ஆரம்பித்தார். அங்கு ஏராளமான பேர் வந்து சேர்ந்தார்கள்.

ஆக்னஸ் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நற்கருணை மட்டுமே நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தார். அதனால் அவருடைய உடல் பலவீனமடைந்தது. எனவே அவர், 1317 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஆக்னசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்

தூய ஆக்னசிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் சபைத் தலைவியாக உயர்ந்த பிறகும்கூட குழந்தை மனம் மாறாது இருந்தார் என்பதுதான் உண்மை. ஆகவே, அவரை இன்று நினைவுக்கூருகின்ற நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தி 18 வது அதிகாரத்தில் இயேசு, “இறையாட்சி குழந்தைகளுக்கே – குழந்தை மனம் கொண்டவர்களுக்கே” என்பார். எனவே, நாம் குழந்தை மனம் கொண்டவர்களாய் இருக்கின்றபோது இறையாட்சிக்கு உரியவர்கள் ஆவோம் என்பது உண்மை.

கல்கத்தாவில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவிய நேரம். அப்போது ஒருநாள் அன்னைத் தெரசாவைப் பார்க்க இரண்டு சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய தாயும் வந்திருந்தார். வந்த சிறுவர்கள் இருவரும் அன்னைத் தெரசாவிடம் தங்களிடம் இருந்த சக்கரைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, “அன்னையே! நாங்கள் இருவரும் இனிமேல் காப்பியே அருந்துவதில்லை என முடிவெடுத்திருக்கின்றோம். அப்படிச் சேர்த்த பணம் இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். இதைக் கேட்டு அன்னை நெகிந்து போனார். அதோடு அந்தக் குழந்தைகளிடம் இருந்த தியாக உள்ளத்திற்காக அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

ஆம், குழந்தைகள் எப்போதும் அடுத்தவருக்காக இரங்குபவர்கள்; உண்மையான தியாக உள்ளத்தோடு இருப்பவர்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களாய் நாம் இருக்கின்றபோது இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

ஆகவே, தூய ஆக்னசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

19 April 2020

தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)

இன்றைய புனிதர் : 
(19-04-2020) 

தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)
ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்” (எரே 1: 9 -10)

வாழ்க்கை வரலாறு

ஒன்பதாம் சிங்கராயர் என்ற அழைக்கப்படும் புருனோ 1002 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். புருனோக்கு ஐந்து வயது நடக்கும்போது, டோல் நகரில் ஆயராக இருந்த பெத்தோல்டு என்பவரின் கண்காணிப்பில் விடப்பாட்டார். அவர் புருனோவை பக்தி நெறியில் வளர்த்து வந்தார்.

ஒருசமயம் புருனோ ஆயர் பெத்தோல்டுவிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கொடிய விலங்குகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கின. அதனால் அவருக்கு உயிர்பிழைப்போமோ என்று அச்சம் வந்துவிட்டது. உடனே அவர் இறைவனை நோக்கி, தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். அப்போது தூய ஆசிர்வாதப்பர் அவருக்கு முன்பாகத் தோன்றி, தன்னுடைய கையில் இருந்த சிலுவையினால் அவருடைய காயங்களில் வைத்தார். மறுகணம் அவருடைய காயங்களை அனைத்தும் மறைந்தன. அடுத்த சில நொடிகளிலே தூய ஆசிர்வாதப்பரும் அங்கிருந்து மறைந்தார்.

இதைத் தொடர்ந்து புருனோ தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றியாக அன்றே இறைப்பணி செய்யப் புறப்பட்டார். குருத்துவப் படிப்புப் படித்து, குருவாகிய மாறிய புருனோ 1025 ஆம் ஆண்டு டோல் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1049 ஆம் ஆண்டு அவர் உரோமைக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் இவரை திருத்தந்தையாக உயர்த்தினார்கள். அதனை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்ட அவர், ஒன்பதாம் சிங்கராயர் என்ற பெயரைத் தாங்கி இறைப்பணியை மிகத் துணிச்சலோடு செய்யத் தொடங்கினார்.

இவர் திருத்தந்தையாக இருந்தது வெறும் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சபையில் இவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். திருச்சபைப் பொறுப்புகள் பணத்திற்காக ஏலம் விடப்பட்டன. இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார். சிமினி எனப்படும் இத்தகைய வழக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக பொராங்கர் என்பவர் நற்கருணையில் இயேசு இருக்கின்றா? என்ற கேள்வியைக் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார். அவரையும் திருத்தந்தை அவர்கள் தன்னுடைய நுட்பமான நடவடிக்கையால் பேசவிடாமலே செய்தார்.

ஒரு சமயம் நார்மன் வகுப்பைப் சார்ந்தோர் உரோமை நகரைச் சூழ்ந்துகொண்டு சூறையாட நினைத்தனர். இதனைக் கடுமையாக எதிர்த்த திருத்தந்தை அவர்களை, அவர் திருத்தந்தை என்றுகூடப் பாராமல் கைதுசெய்து ஒன்பது மாதங்கள் கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். இதனால் அவருடைய உடல் நலம் குன்றியது. ஏற்கனவே பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்த திருத்தந்தைக்கு இந்த சித்தரவதை அவருடைய உடல் நலனை மேலும் குன்றச் செய்தது. இதனால் அவர் 1054 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1087 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஒன்பதாம் சிங்கராயரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அநீதியை எதிர்த்து உண்மையை நிலை நாட்டுவோம்.

தூய ஒன்பதாம் சிங்கராயரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய சிந்தனைக்கு தோன்றுவதெல்லாம் அவர் அநீதியை எதிர்த்து, உண்மையை நிலைநாட்டியதுதான். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம் உண்மையை இந்த உலகத்தில் நிலைநாட்ட முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே ஒரு சிறு நிகழ்வு.

பதினைந்தாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டில் மெக்டொனால்ட் என்ற பெயர்கொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன், தன் குழுவினரோடு ஓர் ஏழைப் பெண்ணின் பசுமாடுகளைத் திருடிப் போய்விட்டான். இதை அறிந்த அந்த ஏழைப் பெண்மணி, “நான் அரசனிடம் புகார் தரும்வரை என்னுடைய கால்களில் செருப்பணியப் போவதிலை” என்று சபதமிட்டாள். இதனால் கோபமடைந்த மெக்டோனால்ட், அவள் கால்களில் குதிரைக் குளம்புகளை வைத்து அடித்துவிட்டான். காயம் ஆறும்வரை காத்திருந்த பெண் அரசவையில் முறையிட்டாள். விஷயம் அறிந்த அரசன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடித்தான். மட்டுமல்லாமல் அவர்களுடைய கால்களில் குதிரை லாடமிட்டு மூன்று நாட்கள் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தான். பின்னர் மேக்டோனால்டின் தலையைத் துண்டிக்கவும், மற்றவர்களைத் தூக்கில் போடவும் செய்தான். இதனால் நாட்டில் திருட்டுத் தொழிலே நின்றுபோனது.

திருட்டை ஒழித்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பிரான்சு நாட்டு அரசன் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழலில், அநீதியை ஒழித்து, உண்மையை நிலைநாட்டுகின்ற போதுதான் இயேசுவின் சீடர்களாக முடியும்.

ஆகவே, தூய ஒன்பதாம் சிங்கராயரைப் போன்று உண்மையின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.