புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 May 2020

கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா ✠
(St. Julia of Corsica)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: ஜூலை 25
கர்தாஜ், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Carthage, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு (439)
கோர்ஸிகா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Corsica, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 14

நினைவுத் திருவிழா: மே 23

பாதுகாவல்:
கோர்ஸிகா (Corsica), லிவோர்னோ (Livorno), 
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
கைகள் மற்றும் கால்களின் நோய்க்குறிகள் (Pathologies of the hands and the feet)

புனிதர் “கோர்சிகாவின் ஜூலியா” (Saint Julia of Corsica) என்றும், புனிதர் “கார்தாஜ்’ன் ஜூலியா” (Saint Julia of Carthage) என்றும், புனிதர் நோன்ஸா’வின் ஜூலியா (Saint Julia of Nonza) என்றும் அறியப்படும் புனிதர் ஜூலியா, கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரும் புனிதர் “டெவோட்டா’வும் (Saint Devota) கோர்ஸிகா’வின் (Corsica) பாதுகாவலர்களாக திருச்சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோமானிய ஆட்சியின் கீழே “கோர்சிகா” கிறிஸ்தவ மறையை தழுவியதன் முன்னர் (Pre-Christian Corsica under Roman rule) நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாக சரித்திரம் இயம்புகின்றது.

“விக்டர் விட்டேன்சிஸ்” (Victor Vitensis) எனும் ஒரு ஆபிரிக்க ஆயர் (Bishop of Africa), ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆபிரிக்க பிராந்திய நாடான “வண்டல்ஸ்” (Vandals) நாட்டின் அரசர்கள் “ஜீஸெரிக்” (Geiserici) மற்றும் “ஹனுரிக்” (Hunirici) ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் பற்றிய சரித்திர பதிவுகளை எழுதினார்.

கி,பி, 429ம் ஆண்டு, அரசன் “ஜீஸெரிக்” (Geiseric) சுமார் 80,000 பழங்குடியினருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆபிரிக்கா நோக்கி படையெடுத்தான். கி.பி. சுமார் 439ம் ஆண்டு, “கார்தாஜ்” (Carthage) நாட்டை கைப்பற்றினான். அதன் பின்னர் அவன் அங்குள்ள கிறிஸ்தவ மக்களை “ஆரியனிஸ” (Arianism) மதத்திற்கு மாற்ற எடுத்துக்கொண்ட கொடுங்கோல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அப்போதிருந்த கிறிஸ்தவ ஆயர்கள் எவராலும் மறக்கவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாததாகும்.

ஜூலியா, ஒரு “கார்தாஜ்” (Carthaginian girl) பெண்ணாவார். அவர் “யூசேபியஸ்” (Eusebius) என்பவனால் அவரது நகரிலிருந்து பிடித்து கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரை அடிமையாக விற்றான். இதுபோலவே கீழ்படியாத கிறிஸ்தவர்கள் பலரை அவர்கள் அகற்றினார்கள். “யூசேபியஸ்” (Eusebius) ஒரு பாலஸ்தீனிய நாட்டின் சிரிய (Citizen of Syria in Palestine) பிரஜை ஆவான். “கேப் கோர்ஸ்” (Cap Corse) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் போதையின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் பாவச் செயல்களுக்காக ஜூலியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கப்பலிலுள்ள ஒரு பெண், பாகனிய கடவுளர்களை பூஜிக்க மறுப்பதாகவும், ஏளனம் செய்வதாகவும் “ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) என்பவனிடம் கூறினர். ஃபெலிக்ஸ், அப்பெண்ணை நமது வழிக்கு கொண்டுவாருங்கள்; அல்லது அவளை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று யூசேபியஸிடம் சொன்னான். யூசேபியஸோ, நான் “எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான்.

“ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) நயமாகவும் பயமுறுத்தியும் முயன்று பார்த்தான். ஆனால், ஜூலியா கிறிஸ்துவின் விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். ஆகவே, சிறிதும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு ஜூலியா மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

பெர்த் நகர் புனிதர் வில்லியம் May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ பெர்த் நகர் புனிதர் வில்லியம் ✠✠
(St. William of Rochester)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி 12ம் நூற்றாண்டு
பெர்த், ஸ்காட்லாந்து
(Perth, Scotland)

இறப்பு: கி.பி 1201
ரோச்செஸ்டர், இங்கிலாந்து
(Rochester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1256
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

நினைவுத் திருநாள்: மே 23

பாதுகாவல்: தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

ரோச்செஸ்டர் நகர் வில்லியம் (Saint William of Rochester) என்றும் அழைக்கப்படும் பெர்த் நகர் புனிதர் வில்லியம் (Saint William of Perth), இங்கிலாந்தில் மறைசாட்சியாக மறைந்த ஒரு ஸ்காட்டிஷ் துறவி ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் ஆவார்.

அக்காலத்தில், ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த் (Perth) நகரில் பிறந்த இவர், இளமையில், ஓரளவு முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால், வளர வளர, அவர் கடவுளின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வர்த்தக ரீதியாக ஒரு ரொட்டி தயாரிக்கும் (Baker) தொழில் செய்து வந்த இவர், (சில ஆதாரங்கள் அவர் ஒரு மீனவர் என்று கூறுகிறார்கள்), தாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பத்தாவது ரொட்டியையும் ஏழைகளுக்காக ஒதுக்குவது அவருக்குப் பழக்கமாக இருந்தது.

வில்லியம் தினம்தோறும் காலை திருப்பலி காண ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு நாள், வெளிச்சம் கூட சரியாக விடிகாலை வேளை, தேவாலயத்தின் வாசலில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டு, அதனை தத்தெடுத்தார்.  குழந்தைக்கு டேவிட் எனும் பெயர் சூட்டிய அவர், தமது தொழிலான ரொட்டி தயாரிக்கும் பணியையும், வர்த்தகத்தை கற்பித்தார். சில காலத்தின் பின்னர், அவர் புனித திருத்தலங்களைப் பார்வையிட திட்டமிட்டார். மேலும், புனிதப்படுத்தப்பட்ட பணப்பையையும் (உண்டியல் பணம்), தமது வளர்ப்புப் பிள்ளையான டேவிட்டையும், ஊழியர்களையும்  அழைத்துக்கொண்டு, திருயாத்திரை புறப்பட்டார்.

அவர்கள் ரோச்செஸ்டர் (Rochester) நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் கேன்டர்பரி (Canterbury) நகருக்கு எண்ணினர். அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக, டேவிட் வேண்டுமென்றே தனது வரர்ப்புத் தந்தையை வேண்டுமென்றே ஒரு குறுக்கு வழியில் தவறாக வழிநடத்தினான். வழியில், அவர்கள் வழிச்செலவுக்கும், காணிக்கைகளுக்குமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுதையும் கொள்ளையடித்தான். தமது வளர்ப்புத் தந்தையான வில்லியமை தலையில் அடித்து கீழே தரையில் வீழ்த்திய அவன், அவரது தொண்டையை அறுத்து அவரை கொலை செய்தான்.

அவரது உடல், மனநோயாளி பெண்மணி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்மணி, "ஹனிசக்கிள்" (Honeysuckle) என்றழைக்கப்படும் மலர்களாலான ஒரு மலர்மாலை பின்னி, அதனை வில்லியமின் உடலின் தலையருகே வைத்தாள். (இந்த "ஹனிசக்கிள்" வகை மலர்கள், வட அமெரிக்கா (North America) மற்றும் யூரேசியா  (Eurasia) நாடுகளில் காணப்படுகிறது.) ஒரு மலர்மாலையை தனது தலையிலும் சூடிக்கொண்டாள். அக்கணமே, அவளை பிடித்திருந்த மனநோய் அவளை விட்டகன்றது.

நடந்த சம்பவங்களை கேட்டறிந்த ரோச்செஸ்டர் நகர (Monks of Rochester) துறவிகள், வில்லியமின் உடலை ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கேயே அடக்கம் செய்தனர். அவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற காலத்தில் மரித்ததாலும், மனநோயாளி பெண்மணி குணமான காரணத்தினாலும், அவர் மறைசாட்சியாக கௌரவிக்கப்பட்டார். மனநோயாளி பெண்மணி குணமான அதிசயத்தின் விளைவாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பரிந்துரையில் செய்யப்பட்ட மற்ற அற்புதங்களின் விளைவாகவும், அவர் மக்களால் ஒரு புனிதர் என்று வணங்கப்பட்டார்.

ரோச்செஸ்டர் (Rochester) நகரில் இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் (The shrine of St William of Perth), இவரது பெயரால் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியும் (St William of Perth Primary School) உள்ளன.

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)

இன்றைய புனிதர் :
(23-05-2020)

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)
“ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” (மத் 25: 36 -37)

வாழ்க்கை வரலாறு

ஜான் பாப்டிஸ்ட், 1698 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வல்டாஜியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிக சாதாரண குடும்பம். ஆதலால் இவருடைய படிப்புச் செலவை இவருடைய குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போய், நல்லுள்ளம் கொண்ட ஒருவர்தான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவருக்குக் 13 வயது நடக்கும்போது இயேசு சபையினர் நடத்தி வந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். அதன்பின்னர் சாமிநாதர் சபையில் சேர்ந்து 1721 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். குறிப்பாக மருத்துவ மனைகளில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களைத் தேற்றினார்; கைவிடப்பட்டோரையும் அனாதைகளையும் மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வந்தார். அவர்களுக்காகப் புதிதாக ஒரு மருத்துவ மனையையும் கட்டித் தந்து உதவினார். இதனால் இவர் எல்லாருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.

ஜான் பாப்டிஸ்டுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அது அவருடைய உடல் நலத்தை நிறையவே பாதித்தது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் ஏழை எளிய மக்கள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.

சில காலத்திற்குப் பின் இவர் சிவித்தா காஸ்தலேனே என்னும் இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்த ஆயர் இவரைக் குறித்து கேள்விப்பட்டு இவரை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை செய்வதற்கென்று முழுநேரப் பணியாளராக நியமித்தார். அந்தப் பணியையும் இவர் சிறந்த விதத்திலே செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நோய் முற்றியது. இதனால் இவர் 1764 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். இவருக்கு 1881 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சமூகத்தின் மீதான அக்கறை

தூய ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் அடுத்தவர்மீதும் இந்த சமூகத்தின் மீதும் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரைப் போன்று நாம் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம், என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட மக்களாக வாழ்ந்து காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யாரைப் பற்றியும் அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே வாழ்ந்து வந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுடைய தந்தை அவனிடம் பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான மகன் தந்தைக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான். எனவே அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து தந்தையின் முன்பாகக் காட்டி, அதில் பாலை நிரப்பினான். “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை” என்றான். உடனே அவனுடைய தந்தை சிறிது சக்கரையை அதில் கலந்தார்.

பின்னர் அவர் அவனிடத்தில் சொன்னார், “சமூக அக்கறை என்னும் சக்கரையை இல்லாமல் உன் கசக்கும்”. இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்ட அவன் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.

ஆம், அடுத்தவர் மீதான அக்கறையும் இந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நமக்கு இல்லையென்றால் நமது வாழ்வு கசக்கத்தான் செய்யும்.

ஆகவே, தூய ஜான் பாப்டிஸ்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மீதான அக்கறை கொண்டு வாழ்வோம், நம்மிடத்தில் இருக்கும் சுயநலப் போக்கைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

22 May 2020

தூய ரீட்டா (மே 22)

இன்றைய புனிதர் :
(22-05-2020)

தூய ரீட்டா (மே 22)
நிகழ்வு

திருமணத்திற்கு முன்பே ரீட்டாவிற்கு அகுஸ்தினாருடைய மடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுடைய கட்டாயத்தின் பேரில் அவர் மணந்துகொண்டார். தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகள் இறந்தபிறகும் தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் துறவியாக மடத்தில் சேரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் துறவு மடத்தில் இருந்தவர்கள் திருமணமான ஒருவரை துறவுமடத்தில் சேர்ப்பது நல்லதல்ல என்று சொல்லி மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய இஷ்டப் புனிதர்களான தூய அகுஸ்தினார், தூய திருமுழுக்கு யோவான், தூய நிக்கோலாஸ் ஆகியோரிடம் இடைவிடாது மன்றாடினார் எப்படியாவது தான் துறவுமடத்தில் சேரவேண்டும் என்று.ஒருநாள் அவர் தனக்கு விருப்பமான அந்த மூன்று தூயவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மூவரும் இவரை கைபிடித்து அழைத்துக்கொண்டு போய் அகுஸ்தினாருடைய திருவுமடத்தில் இருந்த சிற்றாலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கதவை அடைத்துவிட்டுச் அங்கிருந்து போய்விட்டனர்.

அடுத்தநாள் துறவு மடத்தில் இருந்தவர்கள் சிற்றாலத்திற்கு வந்தபோது அது அடைக்கப்பட்டுக் கிடந்தது. ஒருவழியாக மடத்தில் இருந்தவர்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது அங்கே ரீட்டா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். “எப்படி இங்கே வந்தாய்?” என்று அவர்கள் அவரிடம் கேட்க அகுஸ்தினாரும் திருமுழுக்கு யோவானும் தூய நிக்கோலாசம் தன்னை இங்கு வந்து விட்டுச்சென்றதாக கூறினார். உடனே அங்கிருந்த அனைவரும் இறையருளால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை துறவுமடத்தில் துறவியாக சேர்த்துக்கொண்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

ரீட்டா 1381 ஆம் ஆண்டு இத்தாலில் உள்ள ஸ்போலேடோ என்ற ஊரில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தையே இல்லை. இடைவிடாத ஜெபத்தினால்தான் இவர்கள் ரீட்டாவைப் பெற்றெடுத்தார்கள். இவருடைய தாய் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அதனால் இவர் தன்னுடைய மகளான ரீட்டாவை இறைபக்தியில் சிறப்பாக வளர்த்தெடுத்தார். ரீட்டா சிறுவயது முதற்கொண்டே ஜெபத்திலும் ஏழைகளுக்கு உதவும் நல்ல பண்பிலும் சிறந்து விளங்கினாள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது இவர் தூய அகுஸ்தினாருடைய சபையில் துறவியாகச் சேரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய பெற்றோர் வயதானவர்கள் என்பதாலும் இவர்களைப் பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் இவர் பெற்றோருடைய கட்டாயத்தில் பேரில் பெர்டினான்ட் என்ற மனிதனை மணந்துகொண்டார். அவர் சாதாரண மனிதாக இல்லை. முரடனாகவும் ரீட்டாவை எப்போதும் அடித்துத் துன்புறுத்துபவனாகவும் இருந்தான். ரீட்டா மிகவும் பொறுமையாக தன்னுடைய கணவர் மனந்திரும்பும்படியாக இறைவனிடம் எப்போதும் வேண்டிக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் ரீட்டாவிற்கு ஜான், பால் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தைகள் பிறந்த பின்பாவது தன்னுடைய கணவர் திருந்துவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவரோ ரீட்டாவை மேலும் மேலும் அடித்துத் துன்புறுத்திக்கொண்டே இருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல ரீட்டா தன்னுடைய கணவருக்காக தொடர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். அவர் செய்த ஜெபம் வீண்போகவில்லை. ஆம், அவருடைய கணவர் மனம்மாறினார், புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று ஒருநாள் அவருடைய கணவரை மர்ம நபர்கள் சிலர் கொன்றுபோட்டார்கள். அப்போது ரீட்டா அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கியபோது தன்னுடைய பகைவர்களை மன்னித்ததுபோன்று தன்னுடைய கணவரைக் கொன்றவர்களை மன்னித்தார். அவர் மன்னித்தாலும் அவருடைய பிள்ளைகளான ஜானும் பாலும் தங்களுடைய தந்தையைக் கொன்றுபோட்ட கயவர்களைக் கொன்றுபோட துடித்துக்கொண்டிருந்தார்கள். இதை நினைத்து ரீட்டா பெரிதும் கவலைப்பட்டார். அப்போது அவர் கடவுளிடம், “இறைவா! என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மனமாறச் செய்யும்.
இல்லையென்றால் அவர்களை உம்மிடத்தில் எடுத்துக்கொள்ளும்” என்று உருக்கமாக மன்றாடினார். அடுத்த ஓராண்டில் ரீட்டாவின் இரண்டு மகன்களும் இறையடி சேர்ந்தார்கள்.

இப்படி கணவரும் பெற்ற பிள்ளைகளும் தன்னைவிட்டுப் போன அவர் தனிமைச் சிறையில் வாடினார். அப்போது அவருக்கு துறவுமடத்தில் சேர்ந்து வாழ்நாளெல்லாம் துறவியாகவே வாழலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக அவர் அகுஸ்தினாருடைய துறவுமடத்தை அணுகியபோது, திருமணமான யாரையும் உள்ளே சேர்த்துக்கொள்வது கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டனர். இதனால் அவர் மன வருத்தத்திற்கு உள்ளானார். இத்தகைய வேளைகளில் அவர் இறைவனிடமும் தன்னுடைய இஷ்ட புனிதர்களிடம் ஜெபிக்கத் தவறியதில்லை. அப்போதுதான் அவர் அவருடைய இஷ்ட புனிதர்களால் அழைத்துச்செல்லப்பட்டு அகுஸ்தினாருடைய துறவுமடத்தில் கொண்டுபோய் விடப்பட்டார். இதைப் பார்த்த துறவுமடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இவரை துறவுமடத்தில் துறவியாக ஏற்றுக்கொண்டார்கள்.

துறவுமடத்தில் சேர்ந்தபிறகு இவர் ஜெபத்திலும் கீழ்ப்படிதலிலும் நற்கருணை பக்தியிலும் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தை பார்த்து அதிகமாக தியானித்தார். அத்தகைய தருணத்தில்தான் 1441 ஆம் ஆண்டு இயேசுவின் தலையில் இருந்த முள்முடியில் இருந்த ஒரு முள்ளானது அவரது நெற்றியில் பதிந்து அவருக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. அவர் இறைவனிடத்தில் தன்னுடைய நெற்றியில் பதிந்து வேதனையை ஏற்படுத்தும் முள்ளை நீக்குமாறு எவ்வளவோ கேட்டார். ஆனால் இறைவனோ அது அவருடைய நெற்றியில் என்றைக்கும் இருக்குமாறு செய்தார். நெற்றியில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த இரத்தம் சில நேரம் நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் துறவுமடத்தில் இருந்தவர்கள் அவரை அவருடைய அறையிலிருந்தே ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதனால் அவர் தன்னுடைய அறையிலே தங்கி இறைவனிடம் ஜெபித்து வந்தார். அந்த நாட்களில் எல்லாம் (ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்) அவர் நற்கருணையை மட்டுமே உண்டு வந்தார்.

இப்படி ஜெபத்திலும் தவத்திலும் தன்னுடைய வாழ்வைச் செலவழித்த ரீட்டா 1457 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1900 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் சிங்கராயரால் இவர் புனிதையாக உயர்த்தப்பட்டார். திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்கள் தூய ரீட்டாவிடம் ஜெபித்தால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஒரு நம்பிக்கை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விடாமுயற்சி

தூய ரீட்டாவை விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகது. ஏனென்றால் அவர் இளமைப் பருவத்தில் இருந்தபோது துறவுமடத்தில் சேரவேண்டும் என்று விருப்பம் கொண்டார். அது அவருடைய பெற்றோரால் மறுக்கப்பட்டது. பின்னர் அவர் தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்துநின்றபோதும் துறவறமடத்தில் சேர விரும்பினார். அப்போதும் துறவு மடத்தில் இருந்தவர்களால் அது மறுக்கப்பட்டது. இப்படியாக துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் அவருக்குப் பலமுறை மறுக்கப்பட்டபோதும் அவர் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருந்தார். இறுதியாக அது இறையருளால் நிறைவேறியது. மத்தேயு நற்செய்தி 7:7 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கேளுங்கள் உங்களுகுக் கொடுக்கப்பட்டும், தேடுங்கள் நீங்கள் கண்டைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்று. ஆம், நாம் தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒரு காரியத்திற்காக போராடும்போது அது நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தான் தூய ரீட்டா அவருடைய அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஒரு நகரில் இருந்த மிக முக்கியான கடையின் வாசலில் ஜோடி புறாக்கள் கூடிகட்டு இருந்தன. இதைப் பார்த்த அந்த கடையில் இருந்த பணியாளர் புறக்கூண்டை அகற்றி அந்த ஜோடிப் புறாக்களை விரட்டியடித்தார். ஆனால் அந்த புறாக்கள் மீண்டும் மீண்டுமாக அதே இடத்தில் வந்து கூடுகட்டின. இதைப் பார்த்த அந்தக். கடையின் முதலாளி பணியாளிடம், “மீண்டும் மீண்டுமாக அந்தப் பறவைகள் இங்கேயே வந்து கூடுகட்டுவதால் அது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று சொல்லி, அவற்றை அங்கேயே தங்க அனுமதித்தார். விடாமுயற்சியோடு ஒரு காரியத்தை செய்தால், அது இப்போது இல்லாவிட்டாலும் ஒருநாள் கைகூடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. தூய ரீட்டாவின் வாழ்வும் நமக்கு அதைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

2. துன்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்தல்

தூய ரீட்டா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை (முள்ளால் ஏற்பட்ட காயத்தை) நினைத்து வருந்தவில்லை. தொடக்கத்தில் அவர் வருந்தினாலும் பின்னாளில் அதனை இறை விருப்பமாக ஏற்றுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை எப்படிப் பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பத்தை நினைத்து வருந்துகின்றோமா? அல்லது அந்தத் துன்பம் இன்பத்திற்கான நுழைவாயில் என ஏற்றுக்கொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய பவுல் தன்னுடைய உள்ளத்தைத் தைக்கும் முள்ளை நீக்குமாறு இறைவனிடம் கேட்டார். ஆனால் இறைவனோ என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில் வல்லமை சிறந்தோங்கும் என சொல்லி அதனை ஏற்றுக்கொள்ளப் பணித்தார். (2 கொரி 12:9) பவுலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டார். தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் துன்பத்தைக் குறித்த நமது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

American Anthem என்ற சிறுகதையில் வரும் நிகழ்ச்சி. இரண்டு நண்பர்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார்கள். இரண்டு பேருக்குமே காலில் சரியான அடி. அதனால் அவர்கள் தங்களுடைய காலை இழக்க வேண்டிய சூழல். இந்த விபத்துக்குப் பிறகு ஒரு நண்பன் தன்னை வீட்டுக்குள்ளே அடைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் இன்னொரு நண்பனோ தன்னுடைய கால் போனாலும் சக்கர நாற்காலில் உட்கார்ந்துகொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் தெருக்களில் பாடிக்கொண்டே சென்று மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான். அவனும் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்நான்.

நமக்கு வரும் துன்பத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் நம்முடைய வாழக்கை அடங்கி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் துணிவோம், விடாமுயற்சியோடு எதையும் செய்வோம். துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

21 May 2020

புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)குரு May 21

இன்றைய புனிதர்
2020-05-21
புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)
குரு
பிறப்பு
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில்
இறப்பு
இறப்பு: 7 ஏப்ரல் 1241
ஹோப்பன்(Hopen), ஐப்பல்(Eifel), ஜெர்மனி

இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னைமரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திருந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.

அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மாசேனோட் நகர் ஆயர், சபைநிறுவுநர் கார்ல் ஹாய்கன் Karl Eugen von Mazenod OMI
பிறப்பு: 1 ஆகஸ்ட், 1782 எயிக்ஸ் Aix, பிரான்சு
இறப்பு: 21 மே 1861 மர்செய்லே Marseille, பிரான்சு


அபோ நகர் ஆயர் ஹெம்மிங் Hemming von Abo
பிறப்பு: 1300, ஸ்வீடன்
இறப்பு: 21 மே 1366, அபோ Abo, ஸ்வீடன்


போலந்து நாட்டு அரசி ரிக்கேசா Richeza von Polen
பிறப்பு: 1000 ரைன் Rhein
இறப்பு: 1063, சால்பெல்டு Saalfeld, தூரிங்கன் Thüringen


மறைசாட்சி, குரு அலெக்சாண்டிரியா நகர் செக்குண்டூஸ் Secundus von Alexandria
பிறப்பு: 300 ஆப்ரிக்கா
இறப்பு: 356, வட ஆப்ரிக்கா

புனித இயூஜின் டி மசெனோ (Saint Eugene de Mazenod, May 21

இன்றைய புனிதர் :
(21-05-2020)

புனித இயூஜின் டி மசெனோ (Saint Eugene de Mazenod, 
ஆகத்து 1, 1782 - மே 21, 1861) என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19 இல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995, திசம்பர் 3 இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

மறைமாவட்டம் - 
மர்சேய்

ஆட்சி பீடம் - மர்சேய்

நியமனம் - 2 அக்டோபர் 1837

ஆட்சி முடிவு - 21 மே 1861

குருத்துவத் திருநிலைப்பாடு
 - 21 டிசம்பர் 1811

ஆயர்நிலை திருப்பொழிவு - 14 அக்டோபர் 1832

பிறப்பு : ஆகத்து 1, 1782
Aix-en-Provence, பிரான்சு

இறப்பு : 21 மே 1861 (அகவை 78)
மர்சேய், பிரான்சு

குடியுரிமை - பெரெஞ்சு

சமயம் - கத்தோலிக்க திருச்சபை

வகித்த பதவிகள் - அமலமரித் தியாகிகள் சபையின் தலைவர் (1816-1832)
இகோசியுமின் பட்டம் சார்ந்த ஆயர் (1832-1837)

திருவிழா - 21 மே

ஏற்கும் சபை - கத்தோலிக்கம்

முத்திப்பேறு - 19 அக்டோபர் 1975
ஆறாம் பவுல் (திருத்தந்தை)-ஆல்

புனிதர் பட்டம் - 3 டிசம்பர் 1995
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல்

பாதுகாவல் - சிதைந்த குடும்பங்கள்


வாழ்க்கைச் சுருக்கம் :

இயூஜின் டி மசெனோ பிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1790 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரான்சியப் புரட்சியை அடுத்து தன் தந்தையுடன் நாடு கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்து 1802 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு திரும்பினார். 1808 ஆம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 1811 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அமலமரியின் தியாகிகள் சபை உருவாக்கல்

ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணி செய்தார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816 ஆம் ஆண்டில் "புறொவான்சின் மறைபரப்பாளர் சபை" என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள்.

1826 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" (Missionary Oblates of Mary Immaculate) என மாற்றப்பட்டது[1]. 1832 ஆம் ஆண்டு இவர் மார்செயில் ஆயரானார்.

இலங்கையில் அமலமரித் தியாகிகள்

1847 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். பிரான்சில் அவர் ஆயர் இயுஜினை சந்தித்து அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோ மூன்று அமலமரித் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847, நவம்பர் 28 இல் அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரித் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848, பெப்ரவரி 4 இல் வடக்கே மன்னாரை வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறைக்கு சென்றார்கள். அமலமரித் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரித் தியாகிகளே 1862 இல் திருக்குடும்ப கன்னிய சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

20 May 2020

தூய சியன்னா பெர்னார்டின் (மே 20

இன்றைய புனிதர் :
(20-05-2020)

தூய சியன்னா பெர்னார்டின்  (மே 20)
“பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் இருப்பதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூயக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன” (திப 3: 6-7)

வாழ்க்கை வரலாறு

பெர்னார்டின், 1380 ஆம் அண்டு சியன்னாவில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். எனவே இவர் தனது அத்தையின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். பெர்னார்டினுக்கு 20 வயது நடக்கும்போது சியன்னாவில் பயங்கரக் கொள்ளை நோய் – பிளேக் நோய் – ஏற்பட்டு நிறையப் பேர் இறந்துபோனார்கள். இதைப்  பார்த்த பெர்னார்டின், தன்னோடு ஒருசில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பணிசெய்தார். இதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. அவருடைய தொண்டையும் பாதிக்கப்பட்டது. அப்படியிருந்தபோதும் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை உணர்ந்து, அவர்களுக்கு மத்தியில் பணிசெய்து வந்தார்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பெர்னார்டின் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே இவர் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு பிரான்சிஸ்கன் சபையில் போய் சேர்ந்தார். அங்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் செபத்திலும் தவத்திலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் நாட்களைச் செலவழித்தார். இதற்கிடையில் அவர் தொண்டை சரியாகி, நல்ல குரல்வளம் பெற்றார்.

இதன்பிறகு இவர் ஊர்கள்தோறும் சென்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் வல்லமையோடு அறிவிக்கத் தொடங்கினார். இதனால் பெர்னார்டினின் போதனையைக் கேட்க ஏராளமான பேர் கூடிவந்தார்கள். பெர்னார்டின் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை வல்லமையோடு அறிவித்த தருணத்தில், இயேசுவின் திருநாமத்தைப் பற்றியும் போதிக்கத் தொடங்கினார். இயேசுவின் திருநாமம் வல்லமையானது, இதனை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தால் நிறைந்த பலன் கிடைக்கும் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார். சில நேரங்களில் இவர் இயேசுவின் திருநாமம் (IHS) பதித்த அட்டைகளை மக்களுடைய தலையில் வைத்து ஜெபித்தார். அதனால் ஏராளமான புதுமைகள் நடைபெற்றன.

பெர்னார்டினைப் பிடிக்காத ஒருசிலர், அவரைப் பற்றி திருத்தந்தையிடம் மூன்றுமுறை பத்தி வைத்தார்கள். ஆனால் அவருக்கு எதிராக எந்த சான்றும் நிருபிக்கப்படாததால், அவரை திருத்தந்தை ஒன்றும் சொல்லவில்லை. சிலநேரங்களில் பெர்னார்டின் போதிப்பதைக் கேட்பதற்காக முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவந்தார். அவர்களுக்கெல்லாம் அவர் ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைத்தார். இதனால் இறைமக்கள் அனைவரும் அவரை ‘மக்கள் போதகர்’ என்ற அழைத்து வந்தார்கள்.

இப்படி ஆண்டவருடைய கைகளில் வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட்ட பெர்னார்டின், 1444 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1450 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் திருநாமத்தை நம்பிக்கையோடு உச்சரிப்போம்

தூய பெர்னாட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரு சிந்தனை இயேசுவின் திருப்பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கவேண்டும். அப்படி நாம் உச்சரித்தால் அதனால் நிறைய ஆசிர்வாதன்களைப் பெறுவோம் என்பது உறுதி என்பதாகும்.

தூய பெர்னார்டின் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரை உலகறியச் செய்தார். அத்திருப்பெயரை கொண்டே நிறைய மக்களுக்கு ஆசிர்வாதங்களைப் பெற்றுத் தந்தார். தூய பெர்னார்டினைப் போன்று இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1274 ஆண்டு, திருத்தந்தை பத்தாம் கிரகோரியார் திருத்தந்தையாக இருந்தபோது, திருச்சபை எதிரிகளிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்தது. அத்தகைய தருணத்தில் அவர் செய்வதறியாது திகைத்தார். எனவே அவர் லயோன்ஸ் என்ற இடத்தில் ஆயர்களையும் கர்தினால்களையும் கூட்டி, பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டார். அப்போது ஒருசிலர், “இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே, அதே நேரத்தில் எளிய வழி இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்பதுதான்” என்றார்கள். திருத்தந்தையும் அதற்குச் சரி என்று சொல்ல, திருச்சபை முழுவதும் இயேசுவின் திருபெயரைச் சொல்லி, பிரச்சனைகள் ஓயுமாறு ஜெபித்தது. இதனால் அந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்தது. அதன்பிறகு திருச்சபையில் அமைதியான ஒரு சூழ்நிலை உருவானது.

இயேசுவின் திருப்பெயருக்கு எத்துனை வல்லமை இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. 

ஆகவே, தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

19 May 2020

கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ ✠
(St. Ivo of Kermartin)
ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர்:
(Advocate of the Poor)

பிறப்பு: அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)

இறப்பு: மே 19, 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)

நினைவுத் திருநாள்: மே 19

பாதுகாவல்:
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, Lawyers, Abandoned Children)

புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஏழை மக்களுக்காக பரிந்து பேசும் ஒரு கத்தோலிக்க குரு ஆவார்.

கி.பி. 1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, பிறந்த இவரது தந்தையான "ஹெலோரி" (Helori), "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis) ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris) கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும், செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.

கி.பி. 1284ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லௌன்னேக்" (Louannec) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

"லௌன்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.

டூர்ஸ் நகர விதவைப் பெண் (The Widow of Tours):
பாரிஸ் (Paris) நகரின் தென்மேற்கே, 111 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “ஒர்லியான்ஸ்” (Orléans) நகரின் அருகேயுள்ள “டூர்ஸ்” (Tours) நகரில், ஆயர் தமது நீதிமன்றத்தை நடத்திவந்தார். வழக்கறிஞரான ஈவோ, நீதிமன்றத்திற்கு வருகை தரும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விதவைப் பெண்ணுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள், நிலச்சுவான்தாரான அந்த விதவைப் பெண் கண் கலங்கி அழுவதைக் கண்டார். விசாரித்தபோது, அடுத்த நாளே தாம் ஏமாற்றப்பட்ட ஒரு பயண வணிகரின் வழக்குக்கு பதில் சொல்வதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவள் கூறினாள். தமது பயணத்தின்போது, இவ்விதவைப் பெண்ணுடன் தங்கிச் செல்லும் “டோ” மற்றும் “ரோ” (Doe and Roe) ஆகிய இரண்டு வணிகர்கள் தந்திரமாக அவளை ஏமாற்றி, அவளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அவள்மீது வழக்கு தொடுத்திருந்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய ஈவோ, மறுநாள் தமது சாதுர்யமான வாதத்தால் விதவையை ஏமாற்றிய வணிகர்களின் தந்திரத்தை வெளிக் கொணர்ந்தார்.

இவ்வாறு இவ்விளம் வழக்கறிஞர், விதவைப் பெண் ஏமாற்றப்படாமல் காப்பாற்றினார். விதவைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் வாதங்களும், அவரது புகழ் மேலும் பரவ வழிவகுத்தது.

புனிதர் தியோஃபிலஸ் May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ புனிதர் தியோஃபிலஸ் ✠
(St. Theophilus of Corte)
குரு, நிறுவனர்:
(Priest and Founder)

பிறப்பு: அக்டோபர் 30, 1676
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

இறப்பு: ஜூன் 17, 1740 (வயது 63)
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 19, 1896
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருவிழா: மே 19

புனிதர் தியோஃபிலஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், ஃபிரான்சிஸ்கன் (Order of Friars Minor) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட (Professed member) உறுப்பினருமாவார்.

மறையுரைகளாற்றுவதிலும், மறை போதனையிலும் பிரசித்தி பெற்ற இவர், வட இத்தாலிய நகரங்களிலும், தாம் பிறந்த “கோர்சிகா தீவு” (Corsica island) முழுவதும் ஃபிரான்சிஸ்கன் (Franciscans) இல்லங்களை நிறுவும் முயற்சிகளில் சீர்திருத்தவாதியாக செயல்பட்டார்.

தமது மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்காக அறியப்பட்ட இவர், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராயுமிருந்தார். அதே நேரத்தில் தனிமை, அமைதியான, மற்றும் அவரது படாடோபமற்ற அர்ப்பணிப்புக்காகவும் அவர் அறியப்பட்டார்.

“பியாஜியோ அர்ரிகி” (Biagio Arrighi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1676ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30ம் தேதியன்று, கோர்சிகா தீவுகளில் (Corsica island) பிறந்தார். கோர்சிகா தீவின் பிரபுக்களில் ஒருவரான “ஜியோவன்னி அன்டோனியோ” (Giovanni Antonio) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர், “மடலினா” (Maddalena) ஆகும்.

ஃபிரான்சிஸ்கன் துறவியரிடம் கல்வி கற்ற இவர், கி.பி. 1693ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் நாளன்று அச்சபையிலேயே இணைந்து, தியோஃபிலஸ் எனும் ஆன்மீக பெயரை ஏற்றுக்கொண்டார்.

தனிமையையும் அமைதியையும் மிகவும் நேசித்த அவர், அதையே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான மென்மையான முறையாக கண்டார். தன்னுடைய சக ஃபிரான்சிஸ்கன் துறவியரிடமும் கடவுளுடைய நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான வழிமுறையாக இதனையே வலியுறுத்தினார்.

ரோம் நகரில் தமது இறையியல் படிப்புகளை தனித்தன்மையுடன் நிறைவு செய்த அவர், நேபிள்ஸ் (Naples) நகரிலும் தனது இறையியல் படிப்பைத் தொடங்கினார். கி.பி. 1694ம் ஆண்டு, “சலேர்னோ” (Salerno) நகரில் தமது உறுதிமொழிகளை ஏற்ற தியோபிலஸ், கி.பி. 1700ம் ஆண்டு, நவம்பர் மாதம், 30ம் நாளன்று, இத்தாலியின் நேப்பிள்ஸ் (Naples) நகரிலுள்ள “தூய மரியா லா நோவா” பள்ளியில் (Convent of Santa Maria La Nova) குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், “சுபியாகோ” (Subiaco) நகரின் அருகேயுள்ள “சிவிடெல்லா” (Civitella) எனுமிடத்திலுள்ள ஒரு புராதன பள்ளியை சீரமைப்பதற்கான அனுமதியை தமது தலைமை துறவியரிடம் கெஞ்சி பெற்றார். இத்தாலியின் டுஸ்கான் பிராந்தியம் (Tuscan Region) மற்றும் கோர்சிகா (Corscia) தீவுகளில் “ஸுவானி” (Zuani) மற்றும் “ஃபியூசெச்சியோ” (Fucecchio) ஆகிய இடங்களில், தமது சபைக்கான இல்லங்களை நிறுவினார்.

அவர் எப்போதும் சற்று நோயாக இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களின் தேவைகளுக்காக நோயாளிகளுக்காகவும், கல்லறைகளிலும் தாராளமானவராக விளங்கினார். உழைத்துக் களைத்துப்போன தியோபிலஸ், கி.பி. 1740ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் தேதியன்று, தமது 63 வயதில் மரித்தார். கி.பி. 1896ம் ஆண்டு முக்திபேறு பெற்ற தியோபிலஸ், கி.பி. 1930ம் ஆண்டு, புனிதர் பட்டம் பெற்றார்.

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)

இன்றைய புனிதர் :
(19-05-2020)

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்கின்றவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத் 20: 26-27)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய செலஸ்டின், 1215 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள அப்ருஸி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பீட்டர் டி மோரோன்.  இவர் குடும்பத்தில் இருந்த பன்னிரெண்டு குழந்தைகளுள் பதினோறாவது குழந்தை.

இவர் சிறுவனாக இருக்கும்போது இவருடைய தாயார் இவரையும் மற்ற எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகக் கூட்டி, “உங்களுள் யார் புனிதராகப் போகிறார்?” என்று கேட்டும்போது இவரே, “நான் புனிதராகப் போகிறேன்” என்று பதில் சொல்வார். அந்தளவுக்கு பீட்டர் எனப்பட்ட செலஸ்டின் சிறுவயது முதலே புனிதராக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார்.

செலஸ்டினுக்கு இருபதாவது வயது நடக்கும்போது துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, 31 வயதில் குருவாக மாறினார். ஆசிர்வாதப்பர் சபையில் இருக்கும்போது இவர் தாழ்ச்சிக்கும் தூய்மையான வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்த சமயத்தில் அப்போது திருத்தந்தையாக இருந்த நான்காம் நிக்கோலாஸ் என்பவர் இறந்துபோனார். எனவே திருத்தந்தைப் பதவியானது காலியாக இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குக் காலியாக இருந்தது. இதை அறிந்த செலஸ்டின், திருத்தந்தைப் பதவியானது இப்படி காலியாக இருப்பது நல்லதல்ல என்று திருச்சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்த கர்தினால்களிடமும் இன்னும் ஒருசிலரிடமும் எடுத்துச் சொன்னார்.

உடனே அவர்கள் யாரை திருத்தந்தையாக நியமிக்கலாம் என்று கலந்துரையாடினார்கள். இறுதியில் பீட்டர் எனப்பட்ட செலஸ்டினையே திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் திருதந்தையாக இருப்பதற்கு தகுதியற்றவன் என்று சொன்னபோதும்கூட அவர்கள் அவரைத் திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இதனால் அவர் ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று திருச்சபையை சிறந்தவிதமாய் வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தையாகப் பொறுப்பெற்றே வெறும் ஐந்து மாதங்களில் அவர், தான் திருத்தந்தையாக இருப்பதற்கு தகுதியில்லாதவன் என உணர்ந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன்பிருந்த ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து கடைசிவரைக்கும் ஒரு தூய்மையான துறவியாக வாழ்ந்து வந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஐந்தாம் செலஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தாழ்ச்சி

தூய ஐந்தாம் செலஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். அவர் எப்போதும் தான் திருத்தந்தையாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்ற தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்துவந்தார். அதனால் அவர் புனிதராக உயர்ந்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.
அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.

அவனோ துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார்.  அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஆம், உயர் பதவியில் இருப்பவனல்ல, உண்மையான பணிவோடு இருப்பவனே உண்மையான அரசன். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ஐந்தாம் செலஸ்டினைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனிதர் ஃபெலிக்ஸ் May 18

† இன்றைய புனிதர் †
(மே 18)

✠ புனிதர் ஃபெலிக்ஸ் ✠
(St. Felix of Cantalice)
கப்புச்சின் துறவி:
(Capuchin Friar)

பிறப்பு: மே 18, 1515
கேன்டலிஸ், இத்தாலி
(Cantalice, Italy)

இறப்பு: மே 18, 1587
ரோம், இத்தாலி
(Rome, Italy)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 1, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: கி.பி. 1712
திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட்
(Pope Clement XI)

நினைவுத் திருவிழா: மே 18

சித்தரிக்கப்படும் வகை: 
கப்புச்சின் திருவுடையில் 
குழந்தை இயேசுவை கரங்களில் தாங்கி

பாதுகாவல்: 
ஸ்பெல்லோ நகர் (Spello)

புனிதர் ஃபெலிக்ஸ், மத்திய இத்தாலி நாட்டின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்தின், "கேன்டலிஸ்" (Cantalice) என்ற நகரில் கி.பி. 1515ம் ஆண்டு, ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். "ஸன்ட்டி" மற்றும் "ஸன்ட்டா பொர்ரி" (Santi and Santa Porri) ஆகிய பெற்றோரின் நான்கு ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

வறுமையின் காரணமாக “சிட்டாடுகேல்” (Cittàducale) நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தமது பத்து வயதிலிருந்தே கால்நடைகளை மேய்ப்பவராகவும் பண்ணைப் பணியாளாகவும் வேலை செய்தார். தமது பணி நேரத்தின்போது செபிக்க கற்றுக்கொண்ட ஃபெலிக்ஸ், அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 28 வயது வரை அதே கால்நடைகளை மேய்க்கும் மற்றும் பண்ணைப்பணிகளைச் செய்துவந்தார்.

கி.பி. 1543ம் ஆண்டு, இலையுதிர் காலம் முடிவடையும் சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த கப்புச்சின் துறவு இல்லத்தில் "பொதுநிலை சகோதரராக" (Lay Brother) இணைந்தார். எழுத படிக்க தெரியாத ஃபெலிக்ஸ், செபங்களை மனப்பாடம் செய்துகொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். 1547ம் ஆண்டு, ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட ஃபெலிக்ஸ், தமது வாழ்வின் மீதமுள்ள சுமார் நாற்பது வருட காலத்தை அங்கேயே கப்புச்சின் துரவியரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக யாசகம் செய்து கழித்தார். யாசகத்திற்காக செல்லும் இவர் காலணிகள் அணிவதில்லை. மாறாக, தமது தோள்களில் ஒரு பெரிய சாக்குப் பையை சுமது செல்வார்.

இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள், இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஓவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிப்பறிவு இல்லாத ஃபெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார். பலவிதமான மக்களின் பிரச்சனைகளுக்கு சாதுரியமான முடிவை அள்ளித்தந்து ரோம் நகர தெருக்களின் ஞானி எனப் போற்றப்பட்டார். 

ஒளிவு மறைவின்றி பேசும் வழக்கமுள்ள சகோதரர் ஃபெலிக்ஸ், புனிதர் சார்லஸ் போரோமியோ (Charles Borromeo), புனிதர் பிலிப் நேரி (St. Philip Neri) மற்றும் சில கர்தினால்களின் அறிமுகமானதுடன் நண்பராகவும் ஆனார்.

புனிதர் பதுவை அந்தோணியாரைப் போல, இவரும் குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்துவதைப் போன்று ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை இவருக்கு காட்சியளித்த இறை அன்னை அதிதூய கன்னி மரியாள் இவரது கைகளில் குழந்தை இயேசுவை தந்தார் என்பர்.

சகோதரர் ஃபெலிக்ஸ் கி.பி. 1587ம் ஆண்டு, தமது 72 வயதான பிறந்த தினத்தன்றே தமது இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். 

ஃபிரான்சிஸ்கன் சபையின் ஒரு கிளையாக கி.பி. 1528ம் ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712ம் ஆண்டு, சகோதரர் ஃபெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.

18 May 2020

முதலாம் யோவான் (மே 18)

இன்றைய புனிதர் :
(18-05-2020)

முதலாம் யோவான் (மே 18)
“அதற்குப் பேதுருவும் திருத்தூதர்களும், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட  கடவுளுக்கு அல்லவா கீழ்படிய வேண்டும்” என்றார்கள். (திப 5: 29)

வாழ்க்கை வரலாறு

யோவான், தஸ்கனி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து இளைஞனானபோது திருத்தந்தை சிமாக்கூஸ் என்பவரிடத்தில் முதன்மைத் திருத்தொண்டராக பணி செய்து வந்தார். 523 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஹார்மித்தாஸ் என்பவர் இறந்தபிறகு, திருத்தந்தைக்கான போட்டி நடைபெற்றது. அதில் யோவான் ஏகமனதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யோவான் திருத்தந்தையாக உயர்ந்த பிறகு சந்தித்த முதல் சவால் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைதான். இது இயேசுவின் இறைத்தன்மையை மறுத்து வந்தது. ‘தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒரே இயல்பை அல்ல, ஒத்த இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்” என்று இந்தத் தப்பறை கொள்கை சொல்லி வந்தது. இதனை கொன்ஸ்டண்டிநோபிளில் ஆயராக இருந்த ஜஸ்டின் என்பவர் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட இத்தாலியில் அரசராக இருந்த தியோடரிக் என்ற மன்னன், திருத்தந்தையைக் கூப்பிட்டு, ஜஸ்டின் ஆரிய பதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை நிறுத்தச் சொன்னார். திருத்தந்தை யோவானும் அரசன் சொன்னதைக் கேட்டு, கொன்ஸ்டண்டிநோபிளில் இருந்த ஜஸ்டினைச் சந்தித்து மன்னன் சொன்னதைச் சொன்னார். இதனால் ஆயர் ஜஸ்டின் ஆரியபதத்தைப் பின்பற்றுவோரை ஒடுக்குவதை ஓரளவுக்கு நிறுத்திக் கொண்டார்.

பிரச்சனையை ஓரளவுக்கு முடித்துவிட்டு, திருத்தந்தை யோவான் உரோமை நகருக்கு வந்தபோது, மன்னன் தியோடரிக்கோ திருத்தந்தை அவர்களும் ஆயர் ஜஸ்டினும் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை சிறையில் அடைத்து பலவாறாகச் சித்ரவதை செய்தான். அத்தகைய தருணங்களில் திருத்தந்தை அவர்கள் மனந்தளராமல், அதே நேரத்தில் அவன் சொன்னதைக் கேட்டு நடக்காமல், இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவர் 526 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனுக்குக் மட்டுமே கீழ்ப்படிந்து நடத்தல்

தூய முதலாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பாரக்கும்போது அவர்   அரசனுக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசன் அவரை எவ்வளவோ தனக்கு இணங்க வைக்க முயன்றபோதும் அவர் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய முதலாம் யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள்வேண்டி விளம்பரம் செயதிருந்தார். விளம்பரத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் மட்டும் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லிக்கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.

திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை, சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து நின்றான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அதனால் அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் வாலிபன் தன் எஜமானன் என்ன சொன்னாரோ அதற்கு அப்படியே கீழ்படிந்து நடந்தான். அதனால் அவன் தன் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்தான். நாமும் இறைவனுக்கு எப்போதும் கீழ்படிந்து நடக்கின்றபோது வாழ்வில் உயர்வது உறுதி.

ஆகவே, தூய முதலாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

17 May 2020

தூய பாஸ்கல் பைலோன் (மே 17

இன்றைய புனிதர் :
(17-05-2020)

தூய பாஸ்கல் பைலோன் (மே 17)
“தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (மத் 11:25)

வாழ்க்கை வரலாறு

பாஸ்கல் பைலோன் 1540 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள, டோரேஹர்மோசா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் மார்டின் மற்றும் எலிசபெத் என்பவர் ஆவர். பைலோனின் குடும்பம் சாதாரண ஒரு விவசாயக் குடும்பம். ஆனால் பக்தியில் சிறந்த குடும்பம் எனவே பைலோனும் பக்தியில் சிறந்து விளங்கிவந்தார்.

பைலோன் 7 வயது முதல் 24 வயது ஆடுமேயத்து வந்தார். அப்படி அவர் ஆடு மேய்க்கச் செல்லும்போது புத்தங்களையும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார். போகிற வழியில் இருக்கும் படித்தவர்களிடம் அந்தப் புத்தகங்களைக் கொடுத்து, அதை வாசித்துக் காட்டச் சொல்லி, அதன்மூலம் தன்னுடைய வாசிக்கும் பழக்கத்தையும் அறிவையும் பெருக்கிக் கொண்டார். பைலோனுக்கு 24 வயது நடக்கும் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து சகோதரராக வாழத் தொடங்கினார்.

இவர் பிரான்சிஸ்கன் சபையில் சகோதராக இருந்த நாட்களில் எல்லாம் நற்கருணை ஆண்டவரிடத்திலும் அன்னை மரியாவிடமும் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். குறிப்பாக இவர் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக இரவு நேரங்களில் மணிக்கணக்காக முழந்தாள் படியிட்டு ஜெபித்து வந்தார். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

1570 ஆம் ஆண்டு இவர் பிரான்சில் உள்ள ஹியூகோனாட் என்னும் பகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கச் சென்றார். அப்பகுதியில் கால்வினியன் சபையைச் சார்ந்தோர் அதிகமாக இருந்தார்கள். கால்வினியன் சபையைச் சார்ந்தவர்களோ நற்கருணையில் இயேசு இருக்கின்றார் என்று ஏற்றுக்கொள்வது கிடையாது. பைலோனோ நற்கருணையில் ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று எடுத்துச் சொன்னபோது, அவர்கள் பைலோனைக் கொலைசெய்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் பைலோனோ அதிர்டவசமாக அவர்களிடமிருந்து தப்பித்து வேறோர் இடத்திற்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். இதற்கு மத்தியில் பைலோன் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்துவந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 1592 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

பைலோன் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள்: நம்முடைய ஆன்மாவை அழிவிலிருந்து காத்துக்கொள்ள மூன்று வகையான இதயங்களை நாம் கொண்டிருக்கவேண்டும். ஒன்று தந்தைக் கடவுளிடம் இரஞ்சி நிற்கக்கூடிய மகனுடைய இதயம். இரண்டு அருகில் இருப்பவர்கள் மீது அன்பு கொள்ளக்கூடிய தாயின் இதயம். மூன்று நம்மையே நாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கக்கூடிய நீதிபதியின் இதயம். இந்த மூன்று இதயங்களையும் ஒரு மனிதன் கொண்டிருக்கின்றபோது, அவன் தன்னுடைய ஆன்மாவை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக்கொள்வான்”.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்  

தூய பாஸ்கல் பைலோனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன படத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி

தூய பைலோனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய மனதில் தோன்றுகின்ற சிந்தனை எல்லாம், அவர் நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவுகடந்த பக்திகொண்டு வாழ்ந்ததுதான். தூய பைலோனைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நற்கருணையை கிறிஸ்தவர்களுடைய வாழ்வின் ஊற்றும் உச்சமும்” என்று சொல்கின்றது. இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? அதற்கு உரிய முக்கியத்துவத்தை நம்முடைய வாழ்வில் கொடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் சீனாவில் பேராயராக பணியாற்றி  21 ஆண்டுகளாக சிறையிலிருந்து சித்ரவதையை அனுபவித்த பேராயர் டோமினிக் டாங் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகின்றது. சிறையில் அவர் மிகக் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டு மணிநேரம், தான் விரும்பியதை செய்ய அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் வேறு எதையும் கேட்கவில்லை, திருப்பலி நிறைவேற்றி, நற்கருணை ஆண்டவரை உட்கொள்ள வேண்டும் என்றே கேட்டார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். பேராயர் டோமினிக் டாங் நற்கருணை ஆண்டவரிடத்தில் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைக்கின்றது.

ஆகவே, தூய பைலோனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

16 May 2020

புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo) May16

இன்றைய புனிதர்
2020-05-16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்

புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்


சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)

இன்றைய புனிதர் :
(16-05-2020)

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)
“அவர் காலத்தில் நீதி தலைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” (திபா 72: 7)

வாழ்க்கை வரலாறு

1110 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள குப்பியோ என்னும் இடத்தில் உபால்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதனால் இவர் இவருடைய மாமாவின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். உபால்டின் மாமா குப்பியோ நகரில் ஆயராக இருந்தார்.

உபால்டு வளர்ந்து பெரியவராகியபோது துறவுமடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இறைவனின் திருவுளமோ அவர் மறைமாவட்டக் குருவாக மாறவேண்டும் என்றாக இருந்தது. எனவே உபால்டு மறைமாவட்டக் குருவாக மாறினார்.  பின்னாளில் அவர் குப்பியோ நகரின் ஆயராகவும் உயர்ந்தார்.

ஆயர் உபால்டு பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மன்னிக்கும் மனப்பான்மைக்கும் பேர் போனவராக விளங்கினார். ஒரு சமயம் நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அப்போது உபால்டுதான் கலகக்காரர்களை ஒன்றாக ஓட்டி, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, நகரில் அமைதியான சூழல் உருவாகக் காரணமாக இருந்தார். இன்னொரு சமயம் பிரடரிக் பார்பரோசா என்ற மன்னன் குப்பியோ நகர் மீது படையெடுத்து வந்து, சூரையாட நினைத்தான். அத்தகைய சூழலில் ஆயர்  உபால்டு மிகவும் தைரியத்தோடு பிரடரிக் பார்பரோசவையும் அவனுடைய படையையும் எதிர்கொண்டார். இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆயர் உபால்டு மிகவும் துணிச்சல் மிக்கவராகும் கனிவுள்ளவராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் உடல் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு வந்த நோயானது அவருடைய உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. இதனால் அவர் 1160 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1192 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது. இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாளில் குப்பியோ நகரில் இருந்த அனைவருமே வத்திகானில் இருந்த தூய பேதுருவின் சதுக்கத்திற்குச் சென்று, தங்களுடைய நன்றியுணர்வை காணிக்கையாக்கினார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய உபால்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மன்னித்து வாழ்வோம், மாபரன் இயேசுவைப் போன்று ஆவோம். 

தூய உபால்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த மன்னிக்கும் மனப்பான்மைதான்.

ஒரு சமயம் ஆயர் உபால்டு பணிநிமித்தமாக வெளியே சென்றுகொண்டிருக்கும்போது, அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்து ஆயரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தோட்டத் தொழிலாளரைப் பிடித்து அடிக்க முயன்றார்கள். அப்போது ஆயர் உபால்டு, அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, “இவர் தெரியாமல் என்னை அடித்துவிட்டார் அதனால் இவரை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். ஆயர் இவ்வளவு பெருந்தமையாக நடந்து கொண்டதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

தன்னை அடித்தவனை மன்னிக்கக்கூடிய மனப்பான்மை தூய உபால்டுக்கு இருந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய உபால்டைப் போன்று நாம் மன்னிக்ககூடிய மனிதர்காக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அடித்தவரை திருப்பி அடிக்கின்ற போக்கும் வன்முறைக்கு வன்முறையைக் கையாளுகின்ற போக்கும்தான் நிலவிக்கொண்டிருகின்றது. இதனால் எங்கும் வன்முறைக்கு மேல் வன்முறைதான் நிலவிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய உபால்டிடம் இருந்த அந்த மன்னிக்கும் மனப்பான்மை நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

ஒருமுறை மிகப் பெரிய மறைபோதகரான பில்லி கிரகாம் இவ்வாறு குறிப்பிட்டார், “மருத்துவ மனையில் இருக்கின்ற 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிப்பது”. ஆம், நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றபோது நம்மிடத்தில் இருக்கக்கூடிய முக்கால்வாசி நோய் காணாமல் போய்விடும்.

ஆகவே, தூய உபால்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னிப்பத்திலும் பொறுமையிலும் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.