புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 May 2020

புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo) May16

இன்றைய புனிதர்
2020-05-16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்

புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்


சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)

இன்றைய புனிதர் :
(16-05-2020)

குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)
“அவர் காலத்தில் நீதி தலைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” (திபா 72: 7)

வாழ்க்கை வரலாறு

1110 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள குப்பியோ என்னும் இடத்தில் உபால்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதனால் இவர் இவருடைய மாமாவின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். உபால்டின் மாமா குப்பியோ நகரில் ஆயராக இருந்தார்.

உபால்டு வளர்ந்து பெரியவராகியபோது துறவுமடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இறைவனின் திருவுளமோ அவர் மறைமாவட்டக் குருவாக மாறவேண்டும் என்றாக இருந்தது. எனவே உபால்டு மறைமாவட்டக் குருவாக மாறினார்.  பின்னாளில் அவர் குப்பியோ நகரின் ஆயராகவும் உயர்ந்தார்.

ஆயர் உபால்டு பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மன்னிக்கும் மனப்பான்மைக்கும் பேர் போனவராக விளங்கினார். ஒரு சமயம் நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அப்போது உபால்டுதான் கலகக்காரர்களை ஒன்றாக ஓட்டி, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, நகரில் அமைதியான சூழல் உருவாகக் காரணமாக இருந்தார். இன்னொரு சமயம் பிரடரிக் பார்பரோசா என்ற மன்னன் குப்பியோ நகர் மீது படையெடுத்து வந்து, சூரையாட நினைத்தான். அத்தகைய சூழலில் ஆயர்  உபால்டு மிகவும் தைரியத்தோடு பிரடரிக் பார்பரோசவையும் அவனுடைய படையையும் எதிர்கொண்டார். இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆயர் உபால்டு மிகவும் துணிச்சல் மிக்கவராகும் கனிவுள்ளவராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் உடல் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு வந்த நோயானது அவருடைய உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. இதனால் அவர் 1160 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1192 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது. இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாளில் குப்பியோ நகரில் இருந்த அனைவருமே வத்திகானில் இருந்த தூய பேதுருவின் சதுக்கத்திற்குச் சென்று, தங்களுடைய நன்றியுணர்வை காணிக்கையாக்கினார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய உபால்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மன்னித்து வாழ்வோம், மாபரன் இயேசுவைப் போன்று ஆவோம். 

தூய உபால்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த மன்னிக்கும் மனப்பான்மைதான்.

ஒரு சமயம் ஆயர் உபால்டு பணிநிமித்தமாக வெளியே சென்றுகொண்டிருக்கும்போது, அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்து ஆயரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தோட்டத் தொழிலாளரைப் பிடித்து அடிக்க முயன்றார்கள். அப்போது ஆயர் உபால்டு, அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, “இவர் தெரியாமல் என்னை அடித்துவிட்டார் அதனால் இவரை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். ஆயர் இவ்வளவு பெருந்தமையாக நடந்து கொண்டதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

தன்னை அடித்தவனை மன்னிக்கக்கூடிய மனப்பான்மை தூய உபால்டுக்கு இருந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய உபால்டைப் போன்று நாம் மன்னிக்ககூடிய மனிதர்காக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அடித்தவரை திருப்பி அடிக்கின்ற போக்கும் வன்முறைக்கு வன்முறையைக் கையாளுகின்ற போக்கும்தான் நிலவிக்கொண்டிருகின்றது. இதனால் எங்கும் வன்முறைக்கு மேல் வன்முறைதான் நிலவிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய உபால்டிடம் இருந்த அந்த மன்னிக்கும் மனப்பான்மை நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

ஒருமுறை மிகப் பெரிய மறைபோதகரான பில்லி கிரகாம் இவ்வாறு குறிப்பிட்டார், “மருத்துவ மனையில் இருக்கின்ற 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிப்பது”. ஆம், நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றபோது நம்மிடத்தில் இருக்கக்கூடிய முக்கால்வாசி நோய் காணாமல் போய்விடும்.

ஆகவே, தூய உபால்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னிப்பத்திலும் பொறுமையிலும் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

15 May 2020

புனித.சோபியாமறைசாட்சி May 15

இன்றைய புனிதர்
2020-05-15
புனித.சோபியா
மறைசாட்சி

பிறப்பு

இத்தாலி
இறப்பு
137
ரோம்
இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வயது 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.
குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசாட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.


செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்னல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிருக்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிங்கன் நகர் பெர்த்தா Berta von BIngen
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிங்கன், ஜெர்மனி


மறைசாட்சி ஹால்வார்ட் Halvard
பிறப்பு: 1010, நார்வே
இறப்பு: 1043, நார்வே
பாதுகாவல்: ஒஸ்லோ நகர்


எப்ராண்ட்ஸ்ஹவ்சன் நகர் துறவி ஹென்றி Heinrich von Ebrantshausen
பிறப்பு: 1120 ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 1185, எப்ராண்ட்ஸ்ஹவுசன் Ebrantshausen, பவேரியா
பாதுகாவல்: காதுகேளாதோர், வீட்டு விலங்குகள்

தூய இசிதோர் (மே 15)

இன்றைய புனிதர் :
(15-05-2020)

தூய இசிதோர் (மே 15)
“ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்” (தொநூ 2:15)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவு கூருகின்ற இசிதோர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் என்னும் இடத்தில் 1070 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். ஆனாலும் பக்தியில் முன்மாதிரியான குடும்பம். அதனால் இசிதோர் சிறுவயது முதலே பக்தியிலும் ஒழுக்கத்திலும் பிறரன்புச் சேவையிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இசிதோருக்கு திருமண வயது வந்தபோது மரியா தே லா கபெஸா என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். இவர் பின்னாளில் ஒரு புனிதையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இசிதோர் தன்னுடைய சொந்த ஊரில் இருந்த ஜான் தே வர்கீஸ் என்பவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நிலத்தை உழுவதாகட்டும், அதில் பயிரிடுவதாக இருக்கட்டும், பயிரிட்டத்தை அறுவடை செய்வதாக இருக்கட்டும் எல்லா வேலையையும் இசிதோர் மிகவும் சிறப்பாகச் செய்து வந்தார். இதனால் இவரைக் குறித்து முதலாளிக்கு நன்மதிப்பு உண்டானது.

இசிதோர் தான் செய்து வந்த விவசாய வேலைகளுக்கு மத்தியிலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும் காலைத் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் பங்காலயத்தில் நடைபெறக்கூடிய திருப்பலியில் தவறாது கலந்துகொண்டு வந்தார். இதற்கு மத்தியில் இசிதோரோடு வேலை பார்த்துவந்த மற்ற பணியாளர்கள் இசிதோர் எப்போதுமே வேலைக்கு தாமதாகவே வருகின்றார் என்று முதலாளியிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனால் சினமடைந்த முதலாளி ஜான் தே வர்கீஸ் இசிதோரை சோதித்துப் பார்க்க விரும்பினார்.

ஒருநாள் அவர் இசிதோரை நோட்டம் விடத் தொடங்கினார். இசிதோர் அதிகாலையில் திருப்பலிக்குச் செல்வதைப் பார்த்த முதலாளி, தோட்டத்திற்குத் தாமதமாகத்தான் வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருடைய இடத்தில் இன்னொருவர் அதாவது வானதூதர்  வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அதன்பிறகு தோட்டத்தின் முதலாளி  இசிதோரை சந்தேகப்படுவதில்லை. இசிதோர் எப்போதும் போல் காலைத் திருப்பலியில் கலந்துகொண்டு விட்டு சரியான நேரத்தில் தோட்டத்திற்கு வந்து வேலை பார்த்து வந்தார்.

இசிதோருக்கு வயது ஆக ஆக, அவருடைய உடல் நலம் குன்றியது. அத்தகைய சூழ்நிலையும் அவர் ஜெபிப்பதற்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கும் மறக்கவே இல்லை. இப்படிப்பட்டவர்  1130 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இசிதோர் இறந்தபிறகு அவருடைய பெயரில் நிறைய புதுமைகள் நடந்தன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்றாம் பிலிப் என்ற மன்னன் இசிதோரின் புனிதப் பொருட்களை  தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துக்கொண்டு வந்து ஜெபித்தபோது அவரிடம் இருந்த தீராத நோய் நீங்கியது. அது போல அல்போன்சோ என்ற மன்னன் எதிரி நாட்டவரோடு போர் தொடுக்கச் சென்றபோது இசிதோரின் வழிநடத்தலால் அவன் போரில் வெற்றி பெற்றான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இசிதோரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவனோடு இணைந்திருத்தல்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றுகின்ற ஒரே சிந்தனை ‘இறைவனோடு என்றும் இணைந்திருக்க வேண்டும்’ என்பதுதான்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது” (யோவா 15: 5). ஆம், இயேசுவோடு இணைந்திருக்கின்றபோது மட்டுமே நம்மால் கனிதர முடியும். இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தூய இசிதோர் எப்போதும் தான் புரிந்து வந்த ஜெபத்தினாலும் பல்வேறு பக்தி முயற்சிகளாலும் இறைவனோடு இணைந்திருந்தார். அதனால் இறைவனுடைய பாதுகாப்பு அவருக்கு எப்போதும் இருந்தது. நாமும் இறைவனோடு இணைந்திருக்கின்றபோது நம்மாலும் இறைவனின் அளப்பெரிய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. 

ஆகவே, தூய இசிதோரைப் போன்று இறைவனோடு இணைந்திருப்போம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

14 May 2020

புனித மத்தியா திருத்தூதர் : May 14

இன்றைய புனிதர் :
(14-05-2020)
புனித மத்தியா 
  திருத்தூதர் :  
  பிறப்பு : 1ம் நூற்றாண்டு  
  யூதேயா (இன்றய இசுரேல்)   
  
  இறப்பு : சுமார். 80 கி.பி  யெரூசலம் அல்லது சியார்சியா   
  
  ஏற்கும் சபை/ சமயம் :   கத்தோலிக்க திருச்சபை  கிழக்கு மரபுவழி திருச்சபை  ஆங்கிலிக்க ஒன்றியம்  லூதரனியம்   
  நினைவுத் திருநாள் :   கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் : மே 14  கிழக்கு மரபுவழி திருச்சபை : ஆகஸ்ட் 9  
  சித்தரிக்கப்படும் வகை : கோடரி   
  பாதுகாவல் :   குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா; பெரியம்மை; தையற்கலைஞர் 

  புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின் படி, யூதாசின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.   வரலாறு :  ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.    ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று மன்றாடினர்.   அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக்கொண்டனர்.   (தி.பணி 1:15-26)    அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சியாக இறந்தார்.    ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமைவாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளது.   செபம் :  மனிதர்களின் மனங்களை அறியும் இறைவா!   திருத்தூதர் மத்தியா எவ்வாறு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டு, உம்மைப் பற்றி சான்று பகர்ந்தாரோ, அதேபோல உம் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு துறவிகளும், குருக்களும் வாழ உதவி செய்தருளும். ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

13 May 2020

அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி May 13

† இன்றைய புனிதர் †
(மே 13)

✠ அருளாளர் இமெல்டா லம்பெர்ட்டினி ✠
(Blessed Imelda Lambertini)
பிறப்பு: கி.பி. 1322 
பொலோக்னா, இத்தாலி
(Bologna, Italy)

இறப்பு: மே 12, 1333 (வயது 11)
வால்டிபியேட்ரா, பொலோக்னா 
(Valdipietra, Bologna)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1826
திருத்தந்தை 12ம் லியோ
(Pope Leo XII)

நினைவுத் திருநாள்: மே 13

பாதுகாவல்: புதுநன்மை பெறுவோர்

அருளாளர் இமெல்டா, இத்தாலி (Italy) நாட்டின் பொலொக்னா (Bologna) எனும் நகரில், "இகானோ லம்பெர்ட்டினி" (Egano Lambertini) மற்றும் "காஸ்ட்ரோ கலுஸ்ஸி" (Castora Galuzzi) ஆகியோரின் ஒரே மகளாக கி.பி. 1322ம் ஆண்டு பிறந்தார்.

5 வயது நிறைந்த இமெல்டா, திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டின் காலகட்டத்தில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்தது 14 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரை காத்திருக்குமாறு கூறிவந்தார்.

தமது 9வது வயதில் சிறுமி இமெல்டா டொமினிக்கன் (Dominican community) துறவு மடத்தில் இணைந்தார். கி.பி. 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருட்சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது.

இதைக் கண்ட அருட்சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத்தந்தையையும், ஏனைய அருட்சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி ஆடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் ஆலயத்தை விட்டுச் சென்றனர்.

பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்திருந்த சிறுமியின் வதனத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்சகோதரி, சிறுமியின் பெயர் சொல்லி அழைத்தார். அவரிடம் அசைவு ஏதும் காணாததால், அவரது தோளில் மெலிதாக தட்டினார். உடனே சிறுமி நிலைகுலைந்து தரையில் வீழ்ந்தார். இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது.

சிறுமி இமெல்டா, போலோக்னா (Bologna) நகரிலுள்ள “சேன் சிகிஸ்மோன்டோ” (Church of San Sigismondo) ஆயலத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

கி.பி. 1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ (Pope Leo XII), இச்சிறுமியை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். 

புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா லம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.

புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)சபை நிறுவனர் May 13

இன்றைய புனிதர்
2020-05-13
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்

அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.

அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.


செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்


திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி

தூய பாத்திமா அன்னை (மே 13)

தூய பாத்திமா அன்னை (மே 13)
(13-05-2020) 
 
 

வரலாற்றுப் பின்னணி

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின் காட்சியானது நடைபெற்றது.

 

1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம், “நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக மன்றாடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது 1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத் தோன்றி, “நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத, உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற ஜெபத்தை அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

 

அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள். அவள் அச்சிறுமிகளிடம், “ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும். ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட அந்த மூன்று சிறுமிகளுக்கு  மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள் இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஏதோ உளறுகிறார்கள் என்று  சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.

 

காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள். ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்னர் அவர், “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும் விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்” என்ற ஜெபத்தை சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள் மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.

 

இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும் மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள். தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது, அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, “மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.

 

1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய் அப்பெண்மணி காட்சி தந்து, “நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத் தந்தார். அந்தக் காட்சிகளில், “பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும் விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில் சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப் போர் வந்தது..

 

அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.

 

பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை

 

தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

ஜெபமாலை சொல்லவேண்டும்

 

அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும். ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப் பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும் உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

 

இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சின்னப் பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும் அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசுசபை குருக்கள் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

 

அனுதினமும் ஜெபமாலை சொல்லி ஜெபிப்பதனால் எத்தகைய நன்மைகள் நடக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் ஜெபமாலை சொல்லும் மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.

 

தீய நாட்டங்களை விட்டுவிட்டு மனமாறவேண்டும்.

 

பாத்திமா அன்னை தன்னுடைய காட்சியில் வலியுறுத்திச் சொல்லும் இன்னொரு செய்தி மனமாற்றம் என்பதாகும். மக்கள் பல்வேறு தீய நாட்டங்களால் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் மனமாற்றம் பெற்று இறைவழியில் நடக்கவேண்டும் என்பது அன்னையின் அன்பான வேண்டுகோளாக இருக்கின்றது. நாம் உண்மையில் பாவ நாட்டங்களிலிருந்து விலகி மனம்மாறிய மக்களாக வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

கலிலேயாக் கடற்கரைக்கு மிக அருகே உள்ள பழமையான நகர் கொராசின். இன்றைக்கு அந்த நகர் அழிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. இதற்குக் காரணம் மக்களுடைய தீச்செயல்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அந்நகரைப் பார்த்து, “கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு, தீர்ப்பு நாளில் உனக்குக் கிடக்கும் தண்டனை மிகுதியாகும்” என்றார். (மத் 11:21,22). அவர் சொன்னது போன்று நடந்தது. ஆகவே, மனமாற்றம் பெறாத ஒவ்வொருவரும் அழிவது உறுதி என்பதே இதிலிருந்து நாம் கண்டுணரக்கூடிய செய்தி.

 

ஆகையால், தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம். அனுதினமும் ஜெபமாலை சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

12 May 2020

புனித பங்கிராஸ்மறைசாட்சி May 12

இன்றைய புனிதர்
2020-05-12
புனித பங்கிராஸ்
மறைசாட்சி
பிறப்பு
289
சின்னாடா(Synnada), பிரிஜியா(Phrygia)
இறப்பு
304
அவுரேலியா(Aurelia), ரோம்(Rome)

கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 ஆம் வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார். கிறிஸ்துவை நெருங்கி பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். அவர் இறந்தபோது து508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் அவுரேலியா சாலையில் உள்ளது. உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது.

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழுதிய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதினார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி இமெல்டா லாம்பெர்டினி
பிறப்பு: 1321 போலோஞ்யா, இத்தாலி
இறப்பு: 12 மே 1333, போலோஞ்யா, இத்தாலி


அரசர்மகள், துறவி, போர்த்துகல் நாட்டு யோஹன்னா
பிறப்பு: 6 பிப்ரவரி 1452 லிசாபோன், போர்த்துகல்
இறப்பு: 12 மே 1490 அவைரோ, போர்த்துக்கல்


மறைசாட்சி டொமிடிலா
பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, உரோம்

11 May 2020

புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)கப்புச்சின் சகோதரர் May 11

இன்றைய புனிதர் :
(11-05-2020)

புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)
கப்புச்சின் சகோதரர்
பிறப்பு : 1701
சார்டினியன்(Sardinien), இத்தாலி
    
இறப்பு  : 1785
சார்டினியன், இத்தாலி

21 அக்டோபர் 1952
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்

இவர் இளமையாக இருக்கும்போதே தனது தந்தைக்கும், மாமாவிற்கும் வயலில் வேலை செய்வதற்கு உதவி செய்து வந்தார். தனது 18 ஆம் வயதில் நோயால் தாக்கப்பட்டு, மிகவும் வேதனை அடைந்தார். அப்போது தன் நோய் குணமானால் தான் ஓர் துறவியாகிறேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்து குணம் பெற வேண்டி தொடர்ந்து செபித்தார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பூரண குணமடைந்தார். குணமடைந்த உடன் இவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார். அதன்பிறகு ஒருநாள் குதிரையில் சவாரி செய்தார். அப்போது குதிரையின் மீதிருந்து வ்ழுக்கி கீழே விழுந்ததில் பலமாக அடிப்பட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். அப்போது தனது 20 ஆம் வயதில் கப்புச்சின் துறவற மடத்திற்கு சென்றார். பின்னர் 1736 ஆம் ஆண்டிலிருந்து கப்புச்சின் துறவறமடத்தில் உறுப்பினரானார். 

இக்னேஷியஸ் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களுடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். தனது 45 ஆம் வயதுவரை தனது குழுமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பணிவிடை செய்து வந்தார். ஆனால் அவர் மற்றவர்களை பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதுகூட மற்றவர்களிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார். தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார். 

இவரை தாக்கிய பல நோய்கள் இயேசுவின் அற்புதத்தால் குணமாவதை பார்த்த பலரும் பரவசமடைந்தனர். இறுதியாக இக்னேஷியஸ் தனது 84 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். 


செபம்:
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! மருத்துவராய் இருந்து பல அற்புதங்களை செய்து புனித லாக்கோனி இக்னேஷியசை குணப்படுத்தி வாழ்வழ்ளித்தீர். அவரைப்போலவே நாங்களும் எங்களது சிறு, சிறு நோயிலும் உம்மீது நம்பிக்கை வைத்து, உமது ஆசீரால் குணம்பெற உமதருளை தந்து எம்மை காத்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

10 May 2020

புனிதர் தமியான் May 10

† இன்றைய புனிதர் †
(மே 10)

✠ புனிதர் தமியான் ✠
(St. Damien of Molokai)
மதகுரு, மதபோதகர்:
(Religious Priest and Missionary)

பிறப்பு: ஜனவரி 3, 1840
ட்ரெமெலோ, ப்ரபன்ட், பெல்ஜியம்
(Tremelo, Brabant, Belgium)

இறப்பு: ஏப்ரல் 15, 1889 (வயது 49)
கலாவுபப்பா, மொலகாய், ஹவாயி
(Kalaupapa, Molokaʻi, Hawaiʻi)

ஏற்கும் சமயம்:  
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழைக் கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
அமெரிக்க எப்பிஸ்கோப்பல் திருச்சபை
(Episcopal Church)
ஆங்கிலிக்கத்தின் சில பிரிவுகள்
(Some Churches of Anglican Communion)
லூதரன் தனிச்சபைகள் சில
(Individual Lutheran Churches)

அருளாளர் பட்டம்: ஜூன் 4, 1995
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 11, 2009
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலங்கள்:
லுவென், பெல்ஜியம் (உடலின் மிச்சங்கள்)
(Leuven, Belgium (bodily relics)
மோலக்காய், ஹவாய் (அவரது கையின் மிச்சங்கள்)
(Molokaʻi, Hawaii (relics of his hand)

நினைவுத் திருவிழா: மே 10

பாதுகாவல்: தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்.

ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட புனிதர் தமியான், "இயேசு மற்றும் மரியாளின் திருஇருதய சபை" (Congregation of the Sacred Hearts of Jesus and Mary) என்னும் கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவியும், குருவும் ஆவார்.

பிறப்பும் துறவறமும்:
தந்தை தமியான், கி.பி 1840ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாளன்று பிறந்தார். அவர் பிறந்த இடம் பெல்ஜியம் நாட்டில் உள்ள “ட்ரெமெலோ” (Tremelo) என்னும் ஊர் ஆகும். அவருடைய இயற்பெயர் "ஜோசெஃப் டி வெய்ஸ்ட்டெர்' (Jozef De Veuster) ஆகும். அவர் "இயேசு மற்றும் மரியாள் ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவற சபையின் உறுப்பினராக இருந்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.

புனிதர் தமியான், "தொழுநோயாளரின் திருத்தூதர்" (The Apostle of the Lepers) என்னும் பெயராலும் அறியப்படுகிறார். மேலும் அவருக்கு, "தொழுநோய்த் துறவி" (Leper Priest) என்னும் பெயரும் உண்டு.

தமியானின் இளமைப் பருவம்:
"ஜோசெஃப் டி வேய்ஸ்ட்டர்" (Jozef De Veuster) எனும் இயற்பெயர் கொண்ட தந்தை தமியான், பெல்ஜியம் நாட்டில் 'ஃப்ளேமிஷ்' (Flemish) மொழி பேசும் மக்கள் குழுவைச் சார்ந்த "ஜோவான்னெஸ் ஃப்ரான்சிஸ்கஸ் டி வெய்ஸ்ட்டர்" (Joannes Franciscus De Veuster) என்பவருக்கும் அவரது மனைவி "ஆனி-காதரின் வூட்டெர்ஸ்" (Anne-Catherine Wouters) என்பவருக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது தந்தை சோளம் வியாபாரியாக இருந்தார். அவர் "ப்ரேய்ன்-லெ-கோம்த்" (Braine-le-Comte) என்னும் இடத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார்.

துறவு வாழ்க்கையைத் தழுவுதல்:
இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல விரும்பி, துறவற வாழ்க்கையைத் தழுவ எண்ணிய தமியான், "இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவறக் குழுவில் உறுப்பினராகச் சேர முன்வந்து, அச்சபைக்கான புகுமுகப் (Novitiate) பயிற்சி பெற்றார். அப்போது அவர் தேர்ந்துகொண்ட துறவறப் பெயர் "தமியானஸ்"ஆகும்.

அவருடைய குருத்துவப் படிப்புக் காலத்தின் போது அவர் ஒவ்வொரு நாளும் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித ஃபிரான்சிஸ் சவேரியாரின் படத்தின் முன் அமர்ந்து, தாமும் ஒருநாள் நாடுகடந்து சென்று கிறிஸ்தவ மறைப்பணி புரிய இறைவன் அருளவேண்டும் என்று வேண்டுதல் செய்வது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. தமியானின் சகோதரர் "அருட்தந்தை பாம்ப்பில்" (Father Pamphile) அவர்கள் நோய்வாய்ப்பட்டதால் ஹவாயி இராச்சியத்துக்கு மறைப்பணியாளராகச் செல்ல இயலாமல் போயிற்று. அவருக்குப் பதிலாக, அவருடைய தம்பி தமியானை ஹவாயிக்கு மறைப்பணியாளராக அனுப்புவது என்று சபை முடிவுசெய்தது. அண்ணனுக்குக் கிடைக்காத பேறு தம்பிக்குக் கிடைத்தது.

ஹவாயிக்கு மறைப்பணியாற்றச் செல்லுதல்:
கி.பி 1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் நாள், தமியான் மறைப்பணியாளராக ஹவாயி நாட்டின் "ஹொனலூலு" (Honolulu Harbor) துறைமுகம் வந்திறங்கினார். அங்கு, இவர் நிறுவிய சபையினர் கட்டியிருந்த "அமைதியின் அன்னை பேராலயத்தில்" (Cathedral of Our Lady of Peace), கி.பி 1864ம் ஆண்டு, மே மாதம், 21ம் நாளன்று, தமியான் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

கி.பி 1865ம் ஆண்டு, தமியானுக்கு ஹவாயியின் "வட கோஹலா" (Catholic Mission in North Kohala) பகுதியில் அமைந்திருந்த இயேசுவின் திரு இருதய ஆலய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஹவாயியில் மருத்துவ நெருக்கடி:
ஹவாயி இராச்சியத்தின் 'ஓவாஹூ' (Oahu) பகுதியில் பல பங்குகளில் மறைப்பணி செய்தார் தந்தை தமியான். அவ்வாறு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஹவாயியின் மருத்துவ சேவை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாயிற்று. வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் கடற்பயணிகளும் சுமந்துவந்த சில நோய்கள் அவர்கள் ஹவாயியின் ஆதி குடிமக்களோடு கொண்ட தொடர்பின் பயனாக அம்மக்கள் சிலரிடையே பரவின.

இதனால் ஆயிரக்கணக்கான ஹவாயி மக்கள் ஃபுளூ சளிக்காய்ச்சல், பால்வினை நோயாகிய மேகப்புண் (smallpox, cholera, influenza, syphilis, and whooping cough) போன்ற நோய்களுக்கு ஆளாகி இறந்தனர். இந்த நோய்கள் அப்பகுதிகளில் முன்னால் கண்டதில்லை. இவ்வாறு வந்து பரவிய நோய்களுள் ஒன்று "ஹான்சன் நோய்" (Hansen's disease) என்று அழைக்கப்படுகின்ற தொழுநோய்.

அச்சமயத்தில் தொழுநோய் மிகவும் பயங்கரமான தொற்றுநோயாகக் கருதப்பட்டது. ஆனால் 95% மனிதர்கள் அந்நோய்க் கிருமியைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்று அறியப்பட்டது. தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்றும் அக்காலத்தில் கருதப்பட்டது.

ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு மக்கள் நல வாரியம் உணவும் பிற பொருள்களும் கொடுத்தது. ஆனால் நாள்கள் போகப்போக அம்மக்களின் நலனைக் கவனிக்க போதுமான ஆள்களோ பொருள்களோ அனுப்பப்படவில்லை.

தந்தை தமியான் தொழுநோயாளர் நடுவே பணி செய்ய முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார். ஒதுக்கப்பட்ட இடமாகிய கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பில் தமியான், கி.பி 1873ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாள், சென்றடைந்தார். அங்கு வாழ்ந்த 816 தொழுநோயாளர் முன்னிலையில் 'ஆயர் மேக்ரே', தந்தை தமியானை அறிமுகம் செய்தார்.

தொழுநோயாளர் குடியிருப்பில் போய்ச் சேர்ந்த உடனேயே அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து தமியான் சிந்திக்கலானார். முதல் வேலையாக ஒரு கோவில் கட்டுவது என்று முடிவுசெய்து, கோவிலைக் கட்டி அதைப் புனித ஃபிலோமினாவுக்கு அர்ப்பணித்தார். ஆனால் அவரது பணி மறைசார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்கவில்லை.

தொழுநோயாளரின் புண்களைக் கட்டுவது, அவர்கள் வசதியாகத் தங்கியிருக்க வீடுகள் கட்டுவது, அவர்களுக்குத் தேவையான மரச்சாமான்களைச் செய்துகொடுப்பது, இறந்தோரை அடக்கம் செய்ய அடக்கப்பெட்டிகள் செய்வது, கல்லறைக் குழிகள் தோண்டுவது என்று பல பணிகளையும் தமியான் செய்யலானார்.

தந்தை தமியானுக்கும் தொழுநோய் தொற்றிவிட்டது. தமக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்று தெரிந்த பிறகு, தமியான் முன்னைப் போலவே ஊக்கத்தோடு தம் பணிகளில் ஈடுபட்டார்.

கி.பி 1889ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 15ம் தேதியன்று காலை 8 மணிக்குத் தந்தை தமியான் தொழுநோயால் இறந்தார். அப்போது அவருக்கு வயது 49.

புனித. அவிலா அருளப்பர் (St.John of Avila)அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien). May 10

இன்றைய புனிதர் :
(10-05-2020)

புனித. அவிலா அருளப்பர் (St.John of Avila)
அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)
பிறப்பு 
1500 
ஸ்பெயின்
    
இறப்பு 
10 மே 1569 
மோண்டில்லா (Montilla), ஸ்பெயின்
31 மே 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்

இவரின் தந்தை ஓர் யூத குலத்தை சேர்ந்தவர். இதனால் யூதரான அருளப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டார். மாணவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் மிஷினரியாக பணியாற்ற விரும்பி இறையியலை முறைப்படி கற்றார். ஆனால் இவரால் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போகவே, ஸ்பெயினில் இத்திட்டத்தை நிறைவேற்றினார். 

ஏறக்குறைய 1530 லிருந்து அருளப்பர் செவிலா நகர் (Sevilla) ஆயருடன் இணைந்து மறைபரப்பு பணியாளராக அண்டலூசியாவில் பணியாற்றினார். இவரது மறைபரப்பு பணியால் கவரப்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்தனர். பலரும் இவர் உரைத்த இறைவாக்குகளை கேட்டு தங்களின் தாறுமாறான வாழ்வை மாற்றிக் கொண்டனர். இவரின் எளிமையான வாழ்வும், போதனையும் எல்லோரையும் தன்னிடத்தில் ஈர்த்தது. இக்னேசியஸ் லயோலா தொடங்கிய இயேசு சபைக்கு அருளப்பர் பல விதங்களில் உதவி செய்தார். ஆனால் அருளப்பரிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொண்ட இயேசு சபை சகோதரர்கள், மத அடிப்படையில் அவருக்கு பல தொந்தரவுகளை கொடுத்தனர். அருளப்பரை மிகவும் துன்புறுத்தினர். இறை இயேசுவின் மறைபோதனை பணியை திறம்பட ஆற்றிய அருளப்பர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த இவரின் உடலை இயேசு சபையினர் அவர்களின் மடத்திலிருந்த கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் மாண்டிலாவில் இருந்த இயேசு சபைக்கு சொந்தமான ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 

இவர் எழுதிய பல கடிதங்களும், புத்தகங்களும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவருட்சாதனங்களைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் இவர் எழுதிய 18 நூல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நூல்களை வாசிக்கும்போதே அவிலா அருளப்பரின் மிக எளிமையான வாழ்வையும், அவரின் போதனைகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவர் ஸ்பெயின் நாடு முழுவதிலும் சென்று மிஷினரியாக பணியாற்றினார். சிறப்பாக இவர் அண்டலூசியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார். 

செபம்:
எங்களோடு இருந்து எம்மை நாளும் வழிநடத்திவரும் எல்லாம் வல்ல இறைவா! புனித அவிலா அருளப்பரின் மறைபோதனையின் வழியாக ஏராளமான மக்களை உம்பால் ஈர்த்தீர். இப்புனிதரின் வழியாக நீர் உம் மக்களோடு பேசினீர். உமக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரையும் நீர் மனந்திருப்பி, உமது சாட்சிகளாக வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

08 May 2020

டரென்டைஸ் நகர் புனிதர் பீட்டர் May 8

† இன்றைய புனிதர் †
(மே 8)

✠ டரென்டைஸ் நகர் புனிதர் பீட்டர் ✠
(St. Peter of Tarentaise)
டரென்டைஸ் பேராயர்:
(Archbishop of Tarentaise)

பிறப்பு: கி.பி. 1102
புனித மௌரிஸ்-இ'எக்ஸில், ஃபிரான்ஸ்
(Saint-Maurice-l'Exil, France)

இறப்பு: செப்டம்பர் 14, 1174 (வயது 72)
பெல்லேவாக்ஸ் துறவுமடம், ஃபிரான்ஸ்
(Bellevaux Abbey, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: மே 10, 1191
திருத்தந்தை மூன்றாம் செலேஸ்டின்
(Pope Celestine III)

நினைவுத் திருநாள்: மே 8

பாதுகாவல்:
டரென்டைஸ் (Tarentaise)

புனிதர் பீட்டர் (Saint Peter of Tarentaise) ஒரு ஃபிரெஞ்ச் ரோமன் கத்தோலிக்க துறவு மடாதிபதியும் (French Roman Catholic abbot), கி.பி. 1141ம் ஆண்டு முதல், தமது மரணம் வரை “டரென்டைஸ்” (Tarentaise) உயர்மறைமாவட்ட பேராயராக பணியாற்றியவருமாவார்.

அவரது குழந்தை பருவத்திலும், இளமை பருவத்திலும் அவர் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார். அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் அனைவருமே மத வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினர். அவர் ஒரு புதிய துறவு மடத்தின் மடாதிபதியாக பணியாற்றினார். புனிதர் பெர்னார்ட் (Saint Bernard of Clairvaux) உள்ளிட்ட உயர் பொருப்பிலிருந்தவர்கள் இவரை உயர் பதவிகளை ஏற்குமாறு வற்புறுத்தினர். ஆனால் இவர் அவற்றையெல்லாம் மறுத்தார். ஆனால் அவரது இதயம், அவரது எளிய மற்றும் பக்தியான வாழ்க்கைக்காக, ஒரு துறவி என்ற இழப்புக்காக துபுற்றது. அவர் ஒருமுறை கான்வென்ட் வரை ஓடி வந்து, மறைந்து வாழ முயற்சித்தார். அவர் ஊழல் மற்றும் ஒழுக்கங்கெட்ட குருக்கள் அனைவரையும் அகற்றினார். ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும் உதவும் நல்லெண்ணத்தில், அவர் கடுமையான வானிலைகளின்போது, தனது சொந்த வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கி இருந்துள்ளார்.

பியர்ரே (Pierre) எனும் இயற்பெயர் கொண்ட பீட்டர், கி.பி. 1102ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் "ரோன்-ஆல்ப்ஸ்" மலைகளின் (Rhône-Alpes mountains) நகர்ப் பகுதியொன்றில் பிறந்தார். "சிஸ்டர்சியன் துறவியர் சபையில்" (Cistercian monastic order) இணைந்த இவர், கி.பி. 1132ம் ஆண்டு, "டமீ" (Tamié) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்தின் மடாதிபதியானார்.

1142ம் ஆண்டு, "டரென்டைஸ்" உயர் மறை மாவட்டத்தின் (Archbishop of Tarentaise) பேராயர் பதவியை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒரு துறவு மடாதிபதியாக தாம் கற்றுக்கொண்ட "சிஸ்டர்சியன் கொள்கைகளை" (Cistercian principles) சிதைந்து கொண்டிருந்த தமது மறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

இவர் ஸ்விட்சர்லாந்து (Switzerland) மற்றும் இத்தாலி (Italy) நாடுகளினிடையே பயணம் செய்பவர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார். பொதுவாகவே, பீட்டர் தமது ஆயர் பதவியினால் மகிழ்ச்சியுடன் காணப்படவில்லை. அவர் அடிக்கடி காணாமலும் போனார். இடையில் ஒரு வருடம் (1155) அவர் காணாமல் போய் ஸ்விட்சர்லாந்தின் ஒரு தொலைதூர துறவியர் மடத்தில் காணப்பட்டார் என்பர்.

ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் ஏழாம் லூயிஸ் (King Louis VII of France) மற்றும் இங்கிலாந்தின் அரசன் இரண்டாம் ஹென்றி (King Henry II of England) ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரின் (Pope Alexander III) சார்பில் பீட்டர் கலந்துகொண்டார். ஒருமுறை அதேபோன்றதொரு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு திரும்புகையில், ஃபிரான்ஸின் "பெல்லேவாக்ஸ்" (Monastery at Bellevaux) துறவு மடத்தில் மரித்தார்.

புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy) துறவி, சபை நிறுவுனர் May 8

இன்றைய புனிதர் : 
(08-05-2020)                       

புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy)  
துறவி, சபை நிறுவுனர் 
பிறப்பு : 11 ஏப்ரல் 1815 ஆஹன்(Aachen), ஜெர்மனி  

இறப்பு : 8 மே 1848 சிம்பல்பெல்டு(Simpelfeld), ஹாலந்து

இவர் தனது கல்வியை முடித்தபின் துறவற சபைகளை பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை படித்தார். ஆஹனில் பிற ந்த இவர், தனது பங்குதந்தை பவுல் உதவியுடன், பல சமூக பணி களில் தன்னை ஈடுபடுத்தினார். சிறப்பாக இளைஞர்களிடத்தில் அதிக அன்பு காட்டினார். 1837 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் ஆஹனில் இளைஞர்களுக்கென்று ஓர் பள்ளியை நிறுவினார். இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு, இவரின் சமூக சேவை பணிக்குழுவில் இருந்தவர்கள் முன் வந்தனர். இவ ர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமூக சேவையோடு, 1844 ஆம் ஆண்டு இறைவனின் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திகொ ண்டனர். இதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு கிளாரா ஃபாய் அவ ர்கள் "குழந்தை இயேசுவின் ஏழைகள்" என்ற சபையை நிறுவி னார். ஏராளமான ஏழை குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர் களை பராமரித்தார்கள் இச்சபை கன்னியர்கள். அதோடு கல்வி கற்றுக் கொடுத்து, வாழ்விற்கு வழிகாட்டி, தாய்க்குத் தாயாக இருந்து பராமரித்தார்கள். நாளடைவில் குழந்தைகளின் எண் ணிக்கை பெருகவே மீண்டும் ஓர் துறவற இல்லத்தை நிறுவி னார். இதில் பல கைவிடப்பட்ட பெண்களும், விதவைகளும் வந்து சேர்ந்தனர். கிளாரா இச்சபையை தொடங்கிய 15 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி முழுவதும் 19 துறவற மடங்களை துவ ங்கினார். சில கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில் இவ ரது சபை ஹாலந்து நாட்டிலும் தொடங்கப்படவேண்டியதாக இருந்தது. இதனால் ஹாலந்து நாட்டில் ஓர் துறவற மடம் தொடங் கப்பட்டு, அந்த மடமே பிற்காலத்தில் இச்சபையின் தலைமை இல்லமாகவும் அமைந்தது. இச்சபையின் முதல் சபைத்தலைவி யாக கிளாரா ஃபாய் அவர்களே பொறுப்பேற்றார். பல ஏழை குழ ந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக் கும் தாயான இவர் இறந்தபிறகு ஹாலந்து நாட்டிலுள்ள சிம்பல் பெல்டு என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, இவரை முன் மாதி ரியாக கொண்டு இன்றுவரை இச்சபைத்துறவிகள் பணியா ற்றிவருகிறார்கள். 

செபம்:

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று மொழிந்த இயேசுவே! பெண்களின் மேல் அக்கறை கொண்டு, ஓர் சபையை நிறுவி இன்று வரை பணியாற்றிகொண்டிருக்கும் இச்சபையை நீர் நிறைவாக ஆசிர்வதியும். பெண்களின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்களை தந்து, எல்லா இடையூறுகளையும் எதிர் கொள்ள உமது சக்தியை தந்து, ஆசீர்வதித்து வழிநடத்தி யருள வேண்டுமென்று தந்தையாம் இயேசுவே உம்மை வேண்டு கிறோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

07 May 2020

புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) May 7

இன்றைய புனிதர் : 
(07-05-2020) 
 
புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) 
துறவி , ஹங்கேரி நாட்டு அரசி
பிறப்பு : 985 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி

இறப்பு : 7 மே 1060 பாசாவ் (Passau), ஜெர்மனி
இவர் ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் இவரை ஹங்கேரி நாட்டை சேர்ந்த அரசர் முதலாம் ஸ்டீபன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 1003 ஆம் ஆண்டு இவர்களுக்கு எமரிச் (Emmerich) என்ற ஓர் மகன் பிறந்தார். கீசலா ஆன்மீக காரியங்களில் மிகவும் அக்கறை காட்டிவந்தார். ஹங்கேரியில் இருந்தபோது தினமும் தவறாமல் திருப்பலிக்கு செல்வதிலும், ஆலய பணிகளில் ஈடுபடுவதிலும் முழுகவனம் செலுத்திவந்தார். அப்போது அவர் தனது அரண்மனை அருகிலேயே ஓர் ஆலயம் எழுப்பினார்.

1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.