புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 April 2020

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)

இன்றைய புனிதர் : 
(22-04-2020) 

தூய சொட்டேருஸ் (ஏப்ரல் 22)
“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் ( திப 10: 38).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய சொட்டேருஸ் இத்தாலியில் உள்ள போன்டியில் பிறந்தவர். இவர் திருத்தந்தை அனிசெத்துஸ் அவர்களுக்குப் பின்னர் 12 வது திருத்தந்தையாக உயர்ந்து, திருச்சபையை கட்டிக்காத்தார்.

சொட்டேருஸ், தூய பவுலைப் போன்று, தூய கிளமென்டைப் போன்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். இவர் எழுதிய கடிதம் நமக்குக் கிடைக்காவிட்டாலும் கொரிந்து நகரில் ஆயராக இருந்த டைனிசியஸ் இவருக்கு எழுதிய பதில் கடித்தத்தைக் கொண்டு இதனை உறுதிசெய்துகொள்ளலாம். அந்தத் கடிதத்தில் ஆயர் தூய டைனிசியஸ், திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகுபட எழுதுகின்றார். திருத்தந்தை சொட்டேருஸ் நிறைய நன்மைகள் செய்யக்கூடியவர் என்றும், ஆலயங்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவர் என்றும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவக்கூடியவர் என்றும் நல்ல ஆலோசகர் என்றும் அதில் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் திருத்தந்தை சொட்டேருஸ் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

இவருடைய காலத்தில் மார்குஸ் அவுரேலியுஸ் என்பவன் உரோமையை ஆண்டுகொண்டு வந்தான். ஒரு சமயம் அவன் தன்னுடைய படைவீரர்களோடு பொகிமியான் என்ற இடத்தின் வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்த பழங்குடியினர் இவனையும் இவனுடைய படைவீரர்களையும் சூழ்ந்துகொண்டு, தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அப்போது படையில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார்கள். மறுகணமே மார்குஸ் அவுரேலியுசும் அவனுடைய படைவீரர்களும் இருந்த பகுதியில் மழையும், பழங்குடியினர் இருந்த பகுதியில் சூறாவளியும் வீசியும் வீசியது. இதனால் மார்குசும் அவனுடைய படைவீரர்களும் அதிஸ்டவசமாகக் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்விற்குப் பிறகு மன்னன் கிறிஸ்தவர்கள்மீது நல்மதிப்பு கொள்ளத் தொடங்கினான்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, ஒருசில விஷமிகள் மன்னனிடம் கிறிஸ்தவர்களைக் குறித்து தவறாகப் போட்டுக்கொடுக்க, அவன் கிறிஸ்தவர்களைக் கொலை செய்யத் தொடங்கினான். அந்த வழியில் 175 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள், மன்னன் திருத்தந்தை சொட்டேருசை கொலை செய்தான். திருத்தந்தை அவர்களோ கிறிஸ்துவுக்காக உயிர் துறந்து, மறைசாட்சியானர்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சொட்டேருசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம்

தூய சொட்டேருசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, மேலே சொல்லப்போட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய சொட்டேருஸ் எப்போதும் நன்மை செய்வதில் கருத்தாய் இருந்தார். அது திருச்சபையாக இருக்கட்டும் ஏழை எளியவர், வறியவராகட்டும் எல்லாருக்கும் அவர் நன்மையையே செய்துவந்தார். தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதற்கு முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பேரரசர் அக்பர் மந்திரிகள் குழுமியிருந்த அவையோரைப் பார்த்துக் கேட்டார். “ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம், வசந்த காலம், மழைக்காலம், கோடை காலம் என பல காலங்கள் வருகின்றனவே. இதில் எந்த காலம் மக்களுக்கு ஏற்ற நல்ல காலம்?”. பேரரசர் கேட்ட கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தி அடையாத அரசர், பீர்பாலைக் கூப்பிட்டு, உங்கள் பதில் என்ன? என்றார். அதற்கு அவர், “அரசே! எந்தக் காலத்தில் மக்கள் அனைவரும் பசியாற உண்டு உறங்குகிறார்களோ அந்தக் காலமே நல்ல காலம்” என்றார். பீர்பால் சொன்ன பதிலைக் கேட்டு, முழு திருப்தி அடைந்த அரசர் அவருக்கு நல்லதொரு சன்மானம் கொடுத்தார்.

எல்லா மக்களும் மகிழ்ச்சியுற்று இருப்பதே நல்ல காலம். அந்த நல்ல காலம் தாமாகவே வந்துவிடாது. நாம் நம்மாலான உதவிகளை ஒருவர் மற்றவருக்குச் செய்கின்றபோதே வரும். தூய சொட்டேருஸ் அப்படித்தான் தன்னால் இயன்ற நன்மைகளை மற்றவருக்குச் செய்தார்.

ஆகவே, தூய சொட்டேருசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம், அதன்வழியாக இப்புவியில் நல்ல காலம் பிறக்கச் செய்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

21 April 2020

புனிதர் கோன்ராட் ஏப்ரல் 21

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 21)

✠ புனிதர் கோன்ராட் ✠
(St. Conrad of Parzham)
ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்:
(German Franciscan Lay Brother)

பிறப்பு: டிசம்பர் 22, 1818
பேட் கிரீஸ்பச், பஸ்சவ், பவேரியா அரசு
(Bad Griesbach, Passau, Kingdom of Bavaria)

இறப்பு: ஏப்ரல் 21, 1894
அல்டோட்டிங், பவேரியா அரசு
(Altötting, Kingdom of Bavaria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
ஃபிரான்சிஸ்கன் சபை
(Roman Catholic Church)
(Franciscan Order)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: கி.பி. 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 21

புனிதர் கோன்ராட், ஒரு ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர் (German Franciscan lay brother) ஆவார். இவர், பவேரியா அரசிலுள்ள “அல்டோட்டிங்” (Altötting) எனுமிடத்திலுள்ள “கபுச்சின் துறவு மடத்தில்” (Capuchin friary) சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக, சுமை தூக்கும் பணியாளாக (Porter) பணியாற்றினார். அப்பணியின்மூலம், அவர் தனது ஞானத்திற்கும் பரிசுத்தத்திற்குமான ஒரு பரவலான புகழைப் பெற்றார். கத்தோலிக்க திருச்சபை, இவரை ஒரு புனிதராக ஏற்றுள்ளது.

1818ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று பிறந்த இப்புனிதருடைய திருமுழுக்குப் பெயர், ஜான் (John) ஆகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய தந்தையாரின் பெயர், “பர்தொலோமவுஸ் பிர்ண்டோஃபெர்” (Bartholomäus Birndorfer) ஆகும். இவருடைய தாயாரின் பெயர், “கெர்ட்ரூட் நியேடேர்மையர்” (Gertrude Niedermayer) ஆகும். இவர், தமது பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை ஆவார். இவர் பிறந்தது, அன்றைய பவேரியா அரசின் பாகமான “பேட் கிரீஸ்பச்” (Bad Griesbach) நகரிலுள்ள பண்ணை வீடாகும். இந்நகர், தற்போது ஜெர்மன் நாட்டின் பாகமாகும்.

இவரது சிறுவயது முதலே இவர் தமது மனத்தாழ்ச்சி மற்றும் தனிமையில் விருப்பம் ஆகியன மூலம் தமது எதிர்கால புனிதத்தன்மை பற்றின அறிகுறிகளைக் கொடுத்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின் அவருடைய பக்தி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தொலைதூர இடங்களில் அவர் அடிக்கடி வருகை தரும் காலநிலைக்கு வருகை தந்திருந்தார். அவர் ஆசிர்வதிக்கப்பட்ட தேவ அன்னையின்பால் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பக்தியுடன் செபமாலை செபித்தார். பண்டிகை நாட்களில், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ தாயின் சில தொலைதூர திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய திருயாத்திரைகளின்போது, நடைபயணமாகவே செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். வழி நெடுகிலும் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்த இவர், திரும்பி வந்து சேரும்வரை உண்ணா நோன்பிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமது சிறுவயதில் குடும்ப பண்ணை நிலங்களில் வேலை செய்துவந்த ஜான், தமது 14 வயதில் தமது தாயாரை இழந்தார். 31 வயதில், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மதச்சார்பற்ற உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரிடமிருந்த அவரது பரம்பரை சொத்துக்களை அப்புறப்படுத்தியபிறகு, முதலில் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) இணைந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கபுச்சின் ஃபிரான்சிஸ்கன் (Capuchin Franciscan friars) துறவியரிடையே, ஒரு உறுதிப்பாடுகள் ஏற்காத பொதுநிலை சகோதரராக இனைந்தார். அங்கே, புகுமுக பயிற்சியில் (Novitiate) இணைந்த வேளையில், “கோன்ராட்” (Conrad) எனும் ஆன்மீகப் பெயரை ஏற்றார். அப்பெயரிலேயே அவர் தமது வாழ்நாள் முழுதும் அறியப்பட்டார்.

சுமைதூக்கும் சகோதரரர் (Brother Porter) :
தமது இறுதி உறுதிப் பிரமாணங்களை ஏற்றவுடன், அவர் “அல்டோட்டிங்” (Altötting) நகரிலுள்ள “புனித ஆன்” துறவு மடத்திற்கு (Friary of St. Ann) அனுப்பப்பட்டார். இத்துறவு மடமானது, பவேரியாவின் தேசிய திருத்தலமான அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு சேவை புரிந்தது. சகோதரர் கோன்ராடுக்கு, அங்கே சுமை தூக்கும் பணி வழங்கப்பட்டது. அவர், தமது மரணகாலம் வரை அங்கே சுமை தூக்கும் பணியை செய்துவந்தார். அவர்களிருந்த “அல்டோட்டிங்” (Altötting) நகரம் ஒரு பெரிய மற்றும் பரபரப்பான நகராகையால், அங்கே துறவியரின் சுமை தூக்குபவராக பணியாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

சகோதரர் கோன்ராட், தமது பணிகளில் ஊக்கமுள்ளவராகவும், கவனமுள்ளவராகவும் இருந்தார். வார்த்தைகளிலிருந்து விலகி, ஏழைகளுக்கு ஆர்வமுடன் உழைப்பவராகவும், அன்னியரை வரவேற்பதில் ஆர்வம் காட்டினார். சகோதரர் கோன்ராட் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியிடத்தின் பணியை நிறைவேற்றினார். உடலின் மற்றும் ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்ப, நகரத்தின் மக்களுக்கு உதவினார்.

கோன்ராட் மிகவும் சிறப்பு வழியில் மெளனத்தை, அமைதியை நேசித்தார். தாம் பணியில்லாமல் இருக்கும் வேளைகளில், கதவின் மறைவில் நின்றபடி நற்கருணையாண்டவரைப் பார்த்தவாறு நின்றிருப்பார். இரவு நேரத்தில் அவர் பல மணி நேரம் உறங்காமல் ஜெபத்திற்கு நேரத்தை செலவிடுவார். அவர் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு, பக்தியின் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

41 வருடங்கள் தாம் சேவை செய்த துறவு மடத்திலேயே 1894ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, சகோதரர் கோன்ராட் மரித்தார்.

அவருடைய வாழ்நாளில், சகோதரர் கோன்ராட் தாம் சந்தித்த மக்களின் இதயங்களை வாசிக்க முடிந்ததாகக் கருதப்பட்டார். மற்றும், தீர்க்கதரிசன பரிசுகளையும் கொடுத்தார்.

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)

இன்றைய புனிதர்

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)
இயேசுவுக்காக வாழ்வோருக்கு துறவுமடம்தான் உண்மையான விண்ணகம் – தூய ஆன்செல்ம்

வாழ்க்கை வரலாறு

ஆன்செல்ம், 1033 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஆவோஸ்டா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் பக்திமிக்க பெண்மணி. அதனால் அவர் ஆன்செல்மை பக்தி நெறியில் வளர்த்து வந்தார். ஆனால் அவர் சிறுது காலத்திலேயே இறந்துபோனதால் ஆன்செல்ம் தன்னுடைய தந்தையின் பராமரிப்பில் வளரவேண்டிய சூழல் உருவானது. ஆன்செல்மின் தந்தையோ அவரை பலவாறு கொடுமைப் படுத்தினார். அதனால் அவருடைய கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஆன்செல்ம் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பெக் என்னும் இடத்தில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, துறவியாக மாறினார். ஒருசில ஆண்டுகளிலே அந்த மடத்தின் தலைவராக மாறினார். ஆன்செல்மிற்கு இறைவன் நிறைந்த அறிவையும் ஞானத்தையும் கொடுத்திருந்தார். அதனால் நிறைய புத்தகங்களை எழுதினார். குறிப்பாக இவர் எழுதிய ‘மோனோலாக்கியம்’, ‘பிராஸ்லாக்கியம்’ ‘கடவுள் ஏன் மனிதர் ஆனார்’ போன்ற புத்தகங்கள் எல்லாம் அமரத்தத்துவம் வாய்ந்தவை. இந்தப் புத்தகங்களின் வழியாக ஆன்செல்ம் இறைவனுடைய இருத்தலை இறையியல் மற்றும் மெய்யியல் சிந்தனையோடு விளங்கினார்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போது 1093 ஆம் ஆண்டு இவர் கண்டர்பரி நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு நிறைய காரியங்களை மிகத் துணிச்சலாகச் செய்தார். திருச்சபையின் புனிதத்தையும் மாண்பினை கட்டிக்காத்து உண்மையின் உரைகல்லாக விலகினார். இதனால் சினம்கொண்ட அரசன் இரண்டாம் வில்லியம் இவரை நாடு கடத்தினார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேறொரு இடத்திலிருந்த ஆன்செல்ம், மன்னன் இறந்தபிறகு மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். மறைவாட்டத்திற்குத் திரும்பி வந்த பிறகும்கூட அதன்பிறகு வந்த நான்காம் ஹென்றி என்ற மன்னன் ஆயர் ஆன்செல்முக்கு மிகப்பெரிய தலைவலியாய் இருந்து வந்தான். அவனும் ஆயரை நாடு கடத்தினான். ஒருசில ஆண்டுகள் வெளியே இருந்துவிட்டு, மீண்டுமாக மறைமாவட்டத்திற்கு வந்தார் ஆன்செல்ம். மன்னர்கள் அவருக்கு எவ்வளவுதான் தொந்தரவு கொடுத்தாலும் அவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து திருச்சபைக் கட்டிப் காத்தார். இவர் 1109 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1720 ஆண்டு புனிதர் பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஆன்செல்மின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொல்வோம்

தூய ஆன்செல்மின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் மனவுறுதி இருந்ததும் அதன்மூலம் அவர் உண்மையை உரக்கச் சொன்னதும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. ஆன்செல்ம் கண்டர்பெரி நகரின் ஆயராக இருந்தபோது நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அத்தகைய தருணங்களில் அவர் யாருக்கும் ஏன் அரசருக்குக்கூட பயப்படாமல், உண்மையை உரக்கச் சொன்னார். தூய ஆன்செல்மை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏதென்ஸ் நகரில் இருந்த இளைஞர்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி, அவர்களைத் திசை திரும்புகின்றார் என்ற குற்றத்திற்காக சாக்ரடீஸ் நீதிமன்ற விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிக்கோ சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க விருப்பமில்லை எனவே அவர் சாக்ரடீசிடம், “ஏதென்ஸ் நகரை விட்டுச் சென்றுவிடுங்கள். அல்லது உங்கள் போதனையை நிறுத்தி விடுங்கள்” என்றார். அதற்கு சாக்ரடீஸ், “ஏதென்ஸ் நகரை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது. எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்” என்றார். “அப்படியானால் மரணதண்டனை மட்டுமே வழி” என்றார் நீதிபதி.

“எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள். இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது” என்று கம்பீரமாகச் சொன்னார் சாக்ரடீஸ்.

சாவுக்கு அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்ன சாக்ரடீஸ் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய ஆன்செல்மும் அப்படித்தான் மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொன்னார்.

ஆகவே, தூய ஆன்செல்மின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

20 April 2020

புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau) April 20

இன்றைய புனிதர்
2020-04-20
புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)
பிறப்பு
1170
கொலோன் (Cologne)
இறப்பு
20 ஏப்ரல் 1188
ஷொய்னவ் (Schoenau)

ஹில்டேகுண்ட் 1170 ஆம் ஆண்டு கொலோன் மறைமாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு 12 வயது இருக்கும்போது, தன் தந்தையுடன் புண்ணிய பூமிக்கு(Holy Land) திருயாத்திரை சென்றார். கப்பலில் பயணம் செய்யும்போது இவரின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டார். இதனால் ஹில்டேகுண்ட் புனித பயணத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவரின் தந்தை ஹில்டேகுண்ட்-ஐ அழைத்து, தனக்கு நல்ல உடையுடுத்தி, தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக சொன்னார். அதோடு ஹில்டேகுண்ட்-இன் பெயரை யோசேப்பு என்று மாற்றச் சொன்னார். ஆனால் ஹில்டேகுண்டால் தன் தந்தையின் ஆசையை கப்பலில் நிறைவேற்ற முடியாமல் போனது. கப்பல் எருசலேமை அடைந்தது.

அப்போது ஹில்டேகுண்ட் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்தில் செபவழிபாடு வைத்து செபித்தார். ஆலயத்தை விட்டு ஹில்டேகுண்டும், அவரின் தந்தையும் வெளியே வந்தபோது யாரென்று அடையாளம் தெரியாத ஒருவர், இவர்களுக்கு ஆடையையும் இன்னும் அங்கு தங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, உடன் அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தார். பின்னர் தந்தையும், ஹில்டேகுண்ட்டும் அம்மனிதரோடு சென்றனர். முன்பின் தெரியாத அம்மனிதரின் உதவியால் தன் தந்தையின் நோய் குணமாக்கப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினர்.

அதன்பிறகு ஹில்டேகுண்ட் பல காரணங்களால் துறவியாக வேண்டுமென்று விரும்பினார். தன் தந்தையின் அனுமதி பெற்று 1187 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலுள்ள ஹைடல்பெர்க் –இல் (Heidelberg) இருந்த சிஸ்டர்சியன் துறவற சபையில்(Cistercian) சேர்ந்தார். அவர் துறவியாவதற்குமுன் பயிற்சி பெறுவதற்காக ஷொய்னவ்விலிருந்த பயிற்சி இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் நவதுறவகத்தில் இருக்கும்போது "யோசேப்பு" என்னும் பெயர்மாற்றம் பெற்று, புதிய துறவற உடையும் பெற்றுக்கொண்டார். யோசேப்பு நவதுறவகத்தில் இருக்கும்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு நோய் முற்றிப்போனதால், உயிரை காப்பாற்ற முடியாமல், நவதுறவகத்திலேயே 1188 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் இறந்தார்.

சிஸ்டர்சியன் துறவறசபையில் நவதுறவகத்தில் இறந்தவர்களில் இவரே முதலானவர். இவரின் ஆன்மீக வாழ்வு இன்று வரை சிஸ்டர்சியன் சபையில் பயிற்சியகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் முன்மாதிரியாக உள்ளது.


செபம்:
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா! துறவிகளாக தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, பயிற்சி இல்லத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இளம் உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை பெற்று, உம் பாதையை தொடர உம் வரம் தாரும்!

மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ் (ஏப்ரல் 20)

இன்றைய புனிதர் : 
(20-04-2020) 

மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ் (ஏப்ரல் 20)
என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர், நான் விண்ணகம் செல்வது பற்றி மகிழ்ச்சியுறுவார். – தூய ஆக்னஸ்

வாழ்க்கை வரலாறு

ஆக்னஸ் 1268 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள டாஸ்கனி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஆக்னசுக்கு ஐந்து வயது நடக்கும்போது துறவியாகப் போகப்போகிறேன் என்றார். இதைக் கேட்ட அவருடைய பெற்றோர், “இந்த வயதில் அது சாத்தியம் கிடையாது” என்று சொல்லி அவரை வீட்டிலே இருக்க வைத்தனர். ஆக்னசுக்கு ஒன்பது வயது ஆகும்போது மீண்டுமாக அவர், “நான் துறவியாகப் போகப்போகிறேன்” என்றார். உடனே ஆக்னசின் பெற்றோர் ஆக்னசிற்கு துறவற வாழ்வில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவரை துறவற வாழ்வினைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தனர்.

துறவுமடத்தில் சேர்ந்த பின்னர் ஆக்னஸ் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் தூய்மைக்கும் பிறரன்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். இவரிடத்தில் துலங்கிய தூய்மையான வாழ்வினைப் பார்த்துவிட்டு இவரை 15 வயதிலே துறவற மடத்தின் தலைவியாக ஏற்படுத்தினார்கள். அதன்பின்னரும்கூட இவர் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தார்.

ஆக்னஸ், தன்னுடைய அதிகமான நேரத்தை காட்சி தியானத்திற்கு செலவழித்து வந்தார். ஒரு சமயம் இவர் தியானம் செய்துகொண்டிருக்கும்போது அன்னை மரியா குழந்தையோடு இவருக்குக் காட்சி தந்தார். இதைச் சிறிதும் எதிர்பாராத ஆக்னஸ் மிகவும் பரவசமடைந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அன்னை மரியா ஆக்னசிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, அவர் குழந்தை இயேசுவின் காலை பிடித்துக்கொண்டு, “அன்னையே! குழந்தை இயேசுவை மட்டும் என்னோடு இருக்க அனுமதியும்” என்றார். அதற்கு அன்னை மரியா, “குழந்தை இயேசுவை உன்னிடம் விட்டுவிட்டுப் போகமுடியாது. அது சாத்தியமும் கிடையாது. வேண்டுமானால் நான் தரக்கூடிய இந்த மூன்று கற்களை வைத்துக்கொள், அது என்றைக்காவது தேவைப்படும்” என்று சொல்லிவிட்டு தன்னிடத்தில் இருந்த மூன்று கற்களை கொடுத்துவிட்டு, அன்னை மரியாவும் குழந்தை அங்கிருந்து மறைந்து போனார்கள்.

ஆக்னஸ், மடத்தின் தலைவியாகப் பொறுப்பெடுத்த இரண்டாம் ஆண்டில் ப்ரோசெனா என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்று உணர்ந்தார். அதன்படியே அவர் அங்கு சென்று, துறவற மடம் ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மொன்டே புல்சியனோ நகரில் சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. உடனே அவர் அங்கு சென்று, முன்பு அன்னை மரியா அவருக்குக் கொடுத்த மூன்று கற்களை அடித்தளமாக வைத்து துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, அதில் சபை ஒன்று ஆரம்பித்தார். அங்கு ஏராளமான பேர் வந்து சேர்ந்தார்கள்.

ஆக்னஸ் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நற்கருணை மட்டுமே நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தார். அதனால் அவருடைய உடல் பலவீனமடைந்தது. எனவே அவர், 1317 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஆக்னசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்

தூய ஆக்னசிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் சபைத் தலைவியாக உயர்ந்த பிறகும்கூட குழந்தை மனம் மாறாது இருந்தார் என்பதுதான் உண்மை. ஆகவே, அவரை இன்று நினைவுக்கூருகின்ற நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தி 18 வது அதிகாரத்தில் இயேசு, “இறையாட்சி குழந்தைகளுக்கே – குழந்தை மனம் கொண்டவர்களுக்கே” என்பார். எனவே, நாம் குழந்தை மனம் கொண்டவர்களாய் இருக்கின்றபோது இறையாட்சிக்கு உரியவர்கள் ஆவோம் என்பது உண்மை.

கல்கத்தாவில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவிய நேரம். அப்போது ஒருநாள் அன்னைத் தெரசாவைப் பார்க்க இரண்டு சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய தாயும் வந்திருந்தார். வந்த சிறுவர்கள் இருவரும் அன்னைத் தெரசாவிடம் தங்களிடம் இருந்த சக்கரைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, “அன்னையே! நாங்கள் இருவரும் இனிமேல் காப்பியே அருந்துவதில்லை என முடிவெடுத்திருக்கின்றோம். அப்படிச் சேர்த்த பணம் இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். இதைக் கேட்டு அன்னை நெகிந்து போனார். அதோடு அந்தக் குழந்தைகளிடம் இருந்த தியாக உள்ளத்திற்காக அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

ஆம், குழந்தைகள் எப்போதும் அடுத்தவருக்காக இரங்குபவர்கள்; உண்மையான தியாக உள்ளத்தோடு இருப்பவர்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களாய் நாம் இருக்கின்றபோது இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

ஆகவே, தூய ஆக்னசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

19 April 2020

தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)

இன்றைய புனிதர் : 
(19-04-2020) 

தூய ஒன்பதாம் சிங்கராயர் (ஏப்ரல் 19)
ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்” (எரே 1: 9 -10)

வாழ்க்கை வரலாறு

ஒன்பதாம் சிங்கராயர் என்ற அழைக்கப்படும் புருனோ 1002 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். புருனோக்கு ஐந்து வயது நடக்கும்போது, டோல் நகரில் ஆயராக இருந்த பெத்தோல்டு என்பவரின் கண்காணிப்பில் விடப்பாட்டார். அவர் புருனோவை பக்தி நெறியில் வளர்த்து வந்தார்.

ஒருசமயம் புருனோ ஆயர் பெத்தோல்டுவிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கொடிய விலங்குகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கின. அதனால் அவருக்கு உயிர்பிழைப்போமோ என்று அச்சம் வந்துவிட்டது. உடனே அவர் இறைவனை நோக்கி, தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். அப்போது தூய ஆசிர்வாதப்பர் அவருக்கு முன்பாகத் தோன்றி, தன்னுடைய கையில் இருந்த சிலுவையினால் அவருடைய காயங்களில் வைத்தார். மறுகணம் அவருடைய காயங்களை அனைத்தும் மறைந்தன. அடுத்த சில நொடிகளிலே தூய ஆசிர்வாதப்பரும் அங்கிருந்து மறைந்தார்.

இதைத் தொடர்ந்து புருனோ தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றியாக அன்றே இறைப்பணி செய்யப் புறப்பட்டார். குருத்துவப் படிப்புப் படித்து, குருவாகிய மாறிய புருனோ 1025 ஆம் ஆண்டு டோல் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1049 ஆம் ஆண்டு அவர் உரோமைக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் இவரை திருத்தந்தையாக உயர்த்தினார்கள். அதனை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்ட அவர், ஒன்பதாம் சிங்கராயர் என்ற பெயரைத் தாங்கி இறைப்பணியை மிகத் துணிச்சலோடு செய்யத் தொடங்கினார்.

இவர் திருத்தந்தையாக இருந்தது வெறும் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சபையில் இவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். திருச்சபைப் பொறுப்புகள் பணத்திற்காக ஏலம் விடப்பட்டன. இதனைக் கண்ட திருத்தந்தை அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார். சிமினி எனப்படும் இத்தகைய வழக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக பொராங்கர் என்பவர் நற்கருணையில் இயேசு இருக்கின்றா? என்ற கேள்வியைக் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார். அவரையும் திருத்தந்தை அவர்கள் தன்னுடைய நுட்பமான நடவடிக்கையால் பேசவிடாமலே செய்தார்.

ஒரு சமயம் நார்மன் வகுப்பைப் சார்ந்தோர் உரோமை நகரைச் சூழ்ந்துகொண்டு சூறையாட நினைத்தனர். இதனைக் கடுமையாக எதிர்த்த திருத்தந்தை அவர்களை, அவர் திருத்தந்தை என்றுகூடப் பாராமல் கைதுசெய்து ஒன்பது மாதங்கள் கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். இதனால் அவருடைய உடல் நலம் குன்றியது. ஏற்கனவே பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்த திருத்தந்தைக்கு இந்த சித்தரவதை அவருடைய உடல் நலனை மேலும் குன்றச் செய்தது. இதனால் அவர் 1054 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1087 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஒன்பதாம் சிங்கராயரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அநீதியை எதிர்த்து உண்மையை நிலை நாட்டுவோம்.

தூய ஒன்பதாம் சிங்கராயரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம்முடைய சிந்தனைக்கு தோன்றுவதெல்லாம் அவர் அநீதியை எதிர்த்து, உண்மையை நிலைநாட்டியதுதான். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம் உண்மையை இந்த உலகத்தில் நிலைநாட்ட முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே ஒரு சிறு நிகழ்வு.

பதினைந்தாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டில் மெக்டொனால்ட் என்ற பெயர்கொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன், தன் குழுவினரோடு ஓர் ஏழைப் பெண்ணின் பசுமாடுகளைத் திருடிப் போய்விட்டான். இதை அறிந்த அந்த ஏழைப் பெண்மணி, “நான் அரசனிடம் புகார் தரும்வரை என்னுடைய கால்களில் செருப்பணியப் போவதிலை” என்று சபதமிட்டாள். இதனால் கோபமடைந்த மெக்டோனால்ட், அவள் கால்களில் குதிரைக் குளம்புகளை வைத்து அடித்துவிட்டான். காயம் ஆறும்வரை காத்திருந்த பெண் அரசவையில் முறையிட்டாள். விஷயம் அறிந்த அரசன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடித்தான். மட்டுமல்லாமல் அவர்களுடைய கால்களில் குதிரை லாடமிட்டு மூன்று நாட்கள் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தான். பின்னர் மேக்டோனால்டின் தலையைத் துண்டிக்கவும், மற்றவர்களைத் தூக்கில் போடவும் செய்தான். இதனால் நாட்டில் திருட்டுத் தொழிலே நின்றுபோனது.

திருட்டை ஒழித்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்த பிரான்சு நாட்டு அரசன் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நாமும் நாம் வாழக்கூடிய சூழலில், அநீதியை ஒழித்து, உண்மையை நிலைநாட்டுகின்ற போதுதான் இயேசுவின் சீடர்களாக முடியும்.

ஆகவே, தூய ஒன்பதாம் சிங்கராயரைப் போன்று உண்மையின் வழி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

18 April 2020

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ஏப்ரல் 18

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 18)

✠ அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ✠
(Blessed Andrés Hibernón Real)
மறைப்பணியாளர்: 
(Religious)

பிறப்பு: கி.பி. 1534
மூர்சியா, ஸ்பெயின் அரசு
(Murcia, Kingdom of Spain)

இறப்பு: ஏப்ரல் 18, 1602 (வயது 68)
காண்டியா, வலென்சியா, ஸ்பெயின் அரசு
(Gandia, Valencia, Kingdom of Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 22, 1791
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 18

பாதுகாவல்:
மூர்சியா (Murcia)
அல்கன்டரில்லா (Alcantarilla)

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல், “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையைச்” (Order of Friars Minor) சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளர் ஆவார்.

அந்நாளைய ஸ்பேனிஷ் அரசின் மூர்சியா நகரில் 1534ம் ஆண்டு வசதியான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஹிபெர்நான். பாதகமான சூழ்நிலைகளின் காரணமாக, இவரது மொத்த குடும்பமும் நிதி நிலைமையில் நொடித்துப்போனது. இவர்களது குடும்பச் சுமையை குறைக்கும் நோக்கில், இவரது மாமன் ஒருவர் இவரது கல்விப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். எனவே இவர் தமது கல்வியை வலேன்சியா (Valencia) நகரில் தொடங்கினார். இவரது இன்னொரு மாமன் ஒருவர் பாதிரியாராக இருந்த மூர்சியா பேராலயத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார்.

இவர் தமது இளமையில், கஷ்டப்படும் தமது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் உதவும் பொருட்டும், எதிர்பாராத விதமாக வரவிருக்கும் சகோதரியின் திருமணத்திற்காகவும் வெளியூர் சென்று கடினமாக உழைத்து கணிசமாக பொருள் சேர்த்தார். தாம் உழைத்துச் சேர்த்த பணத்துடன் ஊர் திரும்பும் வழியில், இவரை வழிமறித்த திருடர்கள் கும்பல் ஒன்று, இவரிடமிருந்த பணம் பொருள் முழுவதையும் கொள்ளையடித்துச் சென்றது. இதனால் தாம் அடைந்த ஏமாற்றமும் வருத்தமும், தம்மை இவ்வுலகின் பொருள் ஆசைகளில் எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கிறது என்பதனை உணர்ந்தார்.

திருட்டு போகக்கூடிய - அழிந்து போகும் இவ்வுலக செல்வங்களை சேர்க்கும் ஆசைகளுக்கு மாறாக, இனிமேல் யாராலும் கொள்ளையடிக்க இயலாத செல்வங்களை சேர்க்க முடிவு செய்தார்.

1556ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியமான "அல்பாசிட்" (Albacete) என்னுமிடத்திலுள்ள "இளம் துறவியர் சபையின்" பள்ளியில் (Convent of the Order of Friars Minor) சேர மிகவும் தாழ்ச்சியுடன் கெஞ்சி அனுமதி பெற்றார். 1557ம் ஆண்டு, நவம்பர் மாதம், முதல் தேதியன்று, தமது துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்டதுடன், அன்றுமுதல் தமது புதுமுக துறவுப் பயிற்சியையும் தொடங்கினார்.

அடிக்கடி அன்னை மரியாளின் திருத்தலங்களை நாடிச் செல்ல ஆரம்பித்த ஹிபெர்நான், மணிக்கணக்கில் நற்கருணையாண்டவரின் முன்பு முழங்கால்படியிட்டு நின்றபடி செபிக்க தொடங்கினார். இதன்மூலம் அவர் நற்கருணையாண்டவரிடம் தீவிர பக்தியை தம்மில் உருவாக்கினார். இந்த துறவி, அடிக்கடி தமது குருக்களுடன் இணைந்து நோயிற்றோரை சந்திக்க சென்றார்.

1563ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம், இவர் "எல்ச்" (Elche) என்னுமிடத்திலுள்ள "புனித ஜோஸ் 'அல்கன்டரைன்' ஃபிரான்சிஸ்கன் சீர்திருத்த பள்ளிக்கு" (Alcantarine Franciscan Reform Convent of San José) மாற்றப்பட்டார்.

1574ம் ஆண்டுவரை அங்கேயே தமது செப வாழ்வினை அர்ப்பணித்த துறவி ஹிபெர்நான், "வலேன்சியா'வில்" (Valencia) ஸ்தாபிக்கப்பட்டிருந்த பள்ளியின் நடைமுறைப் பணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமது துறவு மட தலைவர்களால் "வலேன்சியா" (Valencia) அனுப்பப்பட்டார். அங்கே, இவருக்கு "வலென்சியா" உயர்மறைமாவட்ட பேராயர் புனிதர் "ஜுவான் டி ரிபெர்" (Archbishop of Valencia Saint Juan de Riber) அவர்களின் நட்பு கிட்டியது.

தாம் மரிப்பதன் நான்கு ஆண்டுகளின் முன்னேயே தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த இத்துறவி, அவர் முன்னறிவித்திருந்ததன்படியே, 1602ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18ம் நாள் செபமாலை செபித்துவிட்டு மரித்தார்.

2020-04-18புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)துறவி

இன்றைய புனிதர்
2020-04-18
புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)
துறவி
பிறப்பு
1060
ஸ்டுட்கார்ட்(Stuttgart), ஜெர்மனி
இறப்பு
1127
பெர்ன்ரீட்(Bernried)

ஹெர்லூக்கா இளமையாக இருக்கும்போது, தன் ஊரில் வில்லியம் என்ற துறவி ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். அப்போது துறவி வில்லியம் அவர்களின் பணிவாழ்வினால் தூண்டப்பட்டு, எப்போதும் அவருடன் சென்று மக்களை சந்தித்தார். அப்போது கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஹெர்லூக்கா வழிகாட்டினார். அவரின் மேல் அதிக அன்பு வைத்து, தன் ஜெபத்தினால் கண்ணிழந்தவருக்கு உதவி செய்தார். பின்னர் 1086-ல் ஜெர்மனியிலுள்ள பவேரியா (Baveria) மறைமாவட்டத்திலிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவியான பிறகு ஆக்ஸ்பூர்க் (Augsburg) ஆயராக இருந்த விக்கிட்ரீப் (Wikterp) அவர்களுக்கு எல்லா விதங்களிலும் அவரின் பணிவாழ்விற்கு தேவையான ஏராளமான உதவிகளை செய்தார். அப்போது தனது செபத்தாலும், தியாக வாழ்வினாலும், கிறிஸ்துவ பக்தியை பரப்ப பவேரியாவில் மிகவும் பாடுபட்டார். அப்போது மிக கொடூரமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஹெர்லூக்கா அங்கிருந்து தப்பி ஓடி ஜெர்மனியிலுள்ள ஸ்டன்பெர்கர் (Starnberger) ஆற்றின் அருகிலுள்ள அகஸ்டினா துறவற மடத்தில் தங்கி இருந்தார். 1122 ஆம் ஆண்டு வரை பெர்ன்ரீட் என்ற ஊரில் இருந்த, துறவற இடத்தில் வாழ்ந்து, துறவியாகவே இறந்தார்.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப உமது அரசை இம்மண்ணில் கொண்டுவர, புனித ஹெர்லூக்கா பெர்ன்ரீட் அனுபவித்த துன்பங்களை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு துறவியையும் நீர் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

தூனன் நகர் துறவி இடெஸ்பால்ட் Idesbald von Dünen
பிறப்பு: 1090 பெல்ஜியம்
இறப்பு: 1167 தூனன், பெல்ஜியம்
பாதுகாவல்: கப்பல், காய்ச்சல் மற்றும் மூட்டு நோயிலிருந்து


மறைப்பணியாளர் உர்ஸ்மார் Ursmar
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 18 ஏப்ரல் 713, லோபெஸ் Lobbes, பெல்ஜியம்

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)

இன்றைய புனிதர் : 
(18-04-2020) 

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)
“நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத் 10:10)

வாழ்க்கை வரலாறு

1100 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள மிலனில் கால்டினுஸ் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். சிறு வயதிலே அறிவிலும் ஞானத்திலும் வல்லவராக விளங்கிய கால்டினுஸ், வளர்ந்து பெரிய ஆளாக மாறியபோது குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதனடிப்படையில் அவர் குருத்துவப் படிப்புப் படித்து குருவாக மாறினார். முதலில் இரண்டு திருத்தந்தையர்களிடம் தலைமைச் செயலராகவும் திருத்தொண்டராகவும் பணியாற்றிய கால்டினுஸ் அதன்பின்னர் திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் என்பவருக்கு உதவியாளராக இருந்தார்.

1159 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த அட்ரியன் இறந்தார். எனவே அவருக்குப் பின்னர் மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரை இத்தாலியில் அரசராக இருந்த பிரெடரிக் பார்பரோசா என்பவன் ஏற்கவில்லை. அவன் தனக்குப் பிடித்தமான நான்காம் விக்டர் என்பவரை திருத்தந்தையாக அறிவித்தான். இதனால் மிகப்பெரிய குழம்பம் ஏற்பட்டது. மிலன் நகரில் இருந்த மக்கள் மன்னுடைய முடிவை ஏற்கவில்லை, அவர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பினார்கள். இதனால் சினமடைந்த மன்னன் மிலனை நகரை முற்றுகையிட்டான். அதோடு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டரையும் அவருக்கு உதவியாக இருந்த கால்டினுசையும் சிறைபிடிக்கத் திட்டமிட்டான். ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி வேறொரு இடத்திற்குச் சென்றார்கள். இதற்கிடையில் மிலன் நகரில் பஞ்சமும் நோயும் தலைவிரித்தாடியது. இதனால் மன்னன் மிலன் நகர் மீது இருந்த தன்னுடைய பிடியைத் தளர்த்தினான்.

1165 ஆம் ஆண்டு, பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபிறகு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் தனக்கு உதவியாக இருந்த கால்டினுசை கர்தினாலாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து 1166 ஆம் ஆண்டு மிலன் நகரில் ஆயராக இருந்த ஹூபர்ட் என்பவர் இறந்துபோனதால் கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக உயர்ந்த பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர், கடன்பட்டு அந்தக் கடனையெல்லாம் அடக்க முடியாமல் கஷ்டபட்ட ஏழை எளியவருடைய கடனையெல்லாம் அடைப்பதற்கு உதவியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் மன்னனுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேரையும் திருச்சபையை விட்டு நீக்கினார். இவ்வாறு ஏழைகளுக்கு ஏழையாய், எல்லாருக்கும் எல்லாமுமாய் இருந்த ஆயர் கால்டினுஸ் 1176 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் திருச்சபைக்கும் குறிப்பாக மிலன் நகருக்குச் செய்த நன்மைகளின் பொருட்டு, மிலன் நகரின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. துயருவோரின் துயர் துடைப்போம்

தூய கால்டினுசின் வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் கடன் பட்ட ஏழை எளியவரின் கடனையெல்லாம் அடைக்க உதவி செய்தார் என்று பார்த்தோம். இவ்வாறு அவர் துயருற்றோரின் துயர் துடைப்பவர் ஆனார். தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று சமூகத்தில் துயருற்றுத் தவிப்போரின் துயர் துடைக்க முன் வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் செஜடன் (Cejatan) என்ற புனிதருடைய வாழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருந்தாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஒரு சமயம் அவர் உரோமையின் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அநியாய வட்டி வாங்குவோரிடம் மாட்டிக்கொண்டு, ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைக் கண்ணால் பார்த்த செஜடன் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தார். எனவே அவர் Credit Union என்ற ஒன்றைத் தொடங்கி வட்டியில்லாக் கடன் கொடுத்து, ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். இவருடைய இந்த தன்னலமில்லா உதவியைக் கண்டு, மக்கள் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். உரோமை நகரில் இருந்த ஏழை எளியவரின் துயர் துடைக்க செஜடன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நாம் நம்மாலான உதவிகளைச் செய்து, ஏழை எளியவரின் துடைப்பதே சாலச் சிறந்த ஒன்றாகவும்.

ஆகவே, தூய கால்டினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம் அவரைப் போன்று துன்புறுவோரின் துடைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

17 April 2020

ஏப்ரல் 17 புனிதர் அனிசேட்டஸ் ✠(St. Anicetus)

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 17)

✠ புனிதர் அனிசேட்டஸ் ✠
(St. Anicetus)
11ம் திருத்தந்தை:
(11th Pope)

இயற்பெயர்: அனிசேட்டஸ்

பிறப்பு: உறுதியாகத் தெரியவில்லை

இறப்பு: கிபி சுமார் ஏப்ரல் 20, 167
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 17

திருத்தந்தை புனிதர் அனிசேட்டஸ் (Pope Saint Anicetus), ரோம் நகர ஆயராகவும், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகவும், கி.பி. சுமார் 150ம் ஆண்டிலிருந்து 167ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 11ம் திருத்தந்தை ஆவார். லூயி டுக்கேன் (Louis Duchesne) என்னும் வரலாற்றாசிரியர் கருத்துப்படி, முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த திருச்சபை வரலாற்றுச் செய்திகளைத் துல்லியமாகக் கால வரையறை செய்வது மிகக் கடினம்.

அனிசேட்டஸ் பண்டைய சிரியா நாட்டில் ஏமெசா (Emesa) என்னும் நகரில் பிறந்தார். ஏமெசா இன்று ஹோம்ஸ் (Homs) என்று அழைக்கப்படுகிறது. மரபுப்படி, அனிசேட்டசின் தந்தை, இன்றைய சுவிட்சர்லாந்து பகுதியிலிருந்து சிரியா நாட்டுக்குப் பெயர்ந்துசென்றவர் ஆவார்.

ஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு:
அனிசேட்டஸ் உரோமைக்கு ஏன் வந்தார் என்பது பற்றித் தெளிவில்லை. ஒருவேளை அவர் ஞானக்கொள்கை (Marcionism and Gnosticism) என்னும் தப்பறையை எதிர்த்ததால் கீழைத் திருச்சபையை விட்டு உரோமைக்குச் செல்லும் கட்டாயம் எழுந்திருக்கலாம்.

அந்நாட்களில் உரோமையில் மார்சியோன் (Marcion of Sinope) என்பவர் ஞானக்கொள்கையைப் (Marcionism) பரப்பிவந்தார். அதை அனிசேட்டஸ் எதிர்த்தார். உரோமையில் புனித ஜஸ்டின் நிறுவியிருந்த கல்விக்கூடம் இந்த எதிர்ப்பில் அவருக்குத் துணையாக இருந்தது. திருத்தூதர்களிடமிருந்து பெறப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ கொள்கையின் பெயரால் அவர் ஞானக்கொள்கை போன்ற தவறான மெய்யியல் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடினார்.

குருக்கள் நீண்ட முடி வளர்க்க தடை:
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, கத்தோலிக்க குருக்கள் நீண்ட முடி வளர்த்தலாகாது என்று அனிசேட்டஸ் தடைவிதித்தார். இது ஒருவேளை ஞானக்கொள்கையினர் நீண்ட முடி வளர்த்ததால் அவர்களிடமிருந்து கிறித்தவப் பணியாளர்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன் நிகழ்ந்திருக்கலாம்.

புனித பொலிக்கார்ப்போடு (Polycarp of Smyrna) சந்திப்பு:
ஸ்மிர்னா (Smirna) நகரத்தின் ஆயரும் 80 வயது நிரம்பியவருமான புனித பொலிக்கார்ப்பு ஆசிய சபைகளின் தூதுவராக உரோமைக்கு அனுப்பப்பட்டு, அங்கே திருத்தந்தை அனிசேட்டசை சந்தித்துப் பேசினார். புனித பொலிக்கார்ப்பு நற்செய்தியாளராகிய புனித யோவானின் சீடராக இருந்தார் என்பது மரபு. ஒருவேளை அவர் குரு யோவான் (John the Presbyter) என்பவரின் சீடராக இருந்திருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

பொலிக்கார்ப்பின் சீடராக இருந்த புனித லியோன் நகர இஞ்ஞாசியார் இத்தகவலைத் தருகிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள்:
பொலிக்கார்ப்பு கீழைத் திருச்சபையிலிருந்து திருத்தந்தை அனிசேட்டசைத் தேடி உரோமைக்கு வந்தது இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றித் தெளிவுபெறுவதற்கு ஆகும். பொலிக்கார்ப்பும் அவர் தலைமை வகித்த ஆசிய நாட்டு ஸ்மிர்னா பகுதியும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாடினர். அந்நாளில்தான் யூதர்கள் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நிசான் மாதத்தின் 14ஆம் நாள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம். அது ஞாயிற்றுக் கிழமையாக எல்லா ஆண்டுகளிலும் இராது. எனவே இந்நிலைப்பாடு "பதினான்காம் நாள் கொள்கை" என்னும் பெயர் பெற்றது.

இவ்வாறு கொண்டாடும் பழக்கம் திருத்தூதர் காலத்திலிருந்தே பெறப்பட்டது என்றும், குறிப்பாக, யோவான் (திருத்துதர் அல்லது குரு) சமூகத்தில் அவ்வழக்கம் நிலவியது என்றும் கீழைச் சபை வாதாடியது.

ஆனால் உரோமைத் திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ஆண்டுதோறும் ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடியது. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்ததால் அது "ஆண்டவரின் நாள்" (Day of the Lord) என்று அழைக்கப்பட்டதோடு கிறித்தவர்களின் பாஸ்கா விழாவாகவும் மாறியிருந்தது. நிசான் மாதத்தின் 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்று உயிர்த்தெழுதல் விழாக் கொண்டாடப்படும். அவ்வாறு இல்லாவிடின், நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வருகிற முதல் ஞாயிறு உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆகும்.

ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடுவதா, அல்லது நிசான் 14ஆம் நாளை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாவைக் கொண்டாடுவதா என்பது பற்றி அனிசேட்டசுக்கும் பொலிக்கார்ப்புக்கும் இடையே ஒத்த கருத்து உருவாகவில்லை. இருந்தாலும் திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைத் திருச்சபையின் வழக்கத்தைக் கீழைச் சபையின்மீது திணிக்க விரும்பவில்லை. எனவே இரு சபைகளும் தம் மரபுக்கு ஏற்ப உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடி வரலாயின.

பிற்காலத்தில் உயிர்த்தெழுதல் விழாவை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது.

வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) உரோமை வருகை:
பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவரும் திருத்தந்தை அனிசேட்டசைச் சந்திக்க உரோமை சென்றார். உரோமைப் பீடம் தொடக்க காலத்திலிருந்தே முதன்மை பெற்றதற்கு இதுவும் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

மொந்தானியக் கொள்கை (Montanism) கண்டிக்கப்படுதல்:
திருத்தந்தை அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையைக் கண்டனம் செய்தார். கீழைத் திருச்சபையில் மொந்தானுஸ் (Montanus) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் "புதிய இறைவாக்கு இயக்கம்" (New Prophecy) என்றொரு போக்கினைத் தோற்றுவித்தார். தாம் தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவாக்கு உரைத்ததாகவும், கடுமையான அறநெறி நடத்தையே கடவுளுக்கு உகந்தது என்றும் அவர் போதித்தார். கிறித்தவக் கொள்கைக்கு எதிராக அவர் போதித்தார் என்று அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையை (Montanism) கண்டனம் செய்தார்.

இறப்பு:
திருத்தந்தை அனிசேட்டஸ் ரோமப் பேரரசன் லூசியஸ் வேர்சஸ் (Lucius Verus) என்பவரின் ஆட்சியில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார் என்பது மரபு. ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. ஏப்ரல் மாதம் 16, 17, 20 ஆகிய நாள்கள் அவரது இறப்பு நாளாகக் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏப்ரல் 20ம் நாள் அவர் இறந்ததாகக் கொண்டு அன்று அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய வழக்கப்படி, ஏப்ரல் 17ம் நாள் அவர் திருநாள் கொண்டாடப்பட்டது.

(17-04-2020) புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)

இன்றைய புனிதர் : 
(17-04-2020) 

புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)
பிறப்பு  1657  நியூயார்க்

இறப்பு  17 ஏப்ரல் 1680
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா   

முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 

புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, 
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
காதேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். இத னால் இவர் தன் பெற்றோரால் கைவிடப்பட்டுஅனாதை குழந்தையாக விடப்பட்டார். இவர் நியூயார்க்கில் கிறி ஸ்துவ ஆலயத்தில் கேத்ரின் டேக்காக்விதா என்று பெயர் மாற்றி ஞானஸ்நானம் பெற்றார். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். இவர் ஓர் உலகப் பெண்ணாக இருந்தாலும், கற்பு என்னும் துற வற வார்த்தைப்பாட்டை, தன் உயிருள்ளவரை ஒழுக்க மாய் கடைபிடித்து வாழ்ந்தார். இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


செபம்:
எம்மை பாதுகாத்து, வழிநடத்தும் எம் மூவொரு இறைவா! இவ்வுலகில் அனாதைகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீரே அரணும், கோட்டையுமாய் இருந்து பாதுகாத்திட வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the the day : (17-04-2020)

Saint Kateri Tekakwitha

Daughter of a Christian Algonquin woman captured by Iroquois and married to a non-Christian Mohawk chief. Orphaned during a smallpox epidemic, which left her with a scarred face and impaired eyesight. Converted and baptized in 1676 by Father Jacques de Lamberville, a Jesuit missionary. Shunned and abused by relatives for her faith. Escaped through 200 miles of wilderness to the Christian Native American village of Sault-Sainte-Marie. Took a vow of chastity in 1679. Known for spirituality and austere lifestyle. Miracle worker. Her grave became a pilgrimage site and place of miracles for Christian Native Americans and French colonists. First Native American proposed for canonization, her cause was started in 1884 under Pope Leo XIII. The Tekakwitha Conference, an international association of Native American Catholics and those in ministry with them, was named for her.

Born : 
1656 at Osserneon (Auriesville), modern New York, USA

Died :
17 April 1680 at Caughnawaga, Canada of natural causes

Canonized :
21 October 2012 by Pope Benedict XVI
• the canonization miracle involved the cure of a boy suffering from a flesh-eating bacteria

Patronage :
ecologists, environmentalists
• ecology, environment
• environmentalism
• exiles
• against the loss of parents
• orphans
• people ridiculed for their piety
• Native Americans
• diocese of Gallup, New Mexico

---JDH---Jesus the Divine Healer---

16 April 2020

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் April 16

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 16)
✠ புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் ✠
(St. Benedict Joseph Labre)

நித்திய ஆராதனையின் யாசகர்:
(Beggar of Perpetual Adoration) 

பிறப்பு: மார்ச் 25, 1748
அமெட்டஸ், அர்ட்டாய்ஸ், ஃபிரான்ஸ் அரசு
(Amettes, Artois, Kingdom of France)

இறப்பு: ஏப்ரல் 16, 1783 (வயது 35)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(புனிதர் ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபை)
(Catholic Church)
(Third Order of St. Francis)

முக்திபேறு பட்டம்: மே 20, 1860
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
சாண்டா மரியா அய் மொண்டி, ரோம், இத்தாலி
(Church of Santa Maria ai Monti
Rome, Italy)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 16

பாதுகாவல்:
திருமணமாகாத ஆண்கள், நிராகரித்தல், மன நோய், மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள், பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், நாடோடிகள் (Hobos)

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர், ஃபிரெஞ்ச் நித்திய ஆராதனையின் யாசகரும், ஃ பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், கத்தோலிக்க புனிதருமாவார்.

வட ஃபிரான்ஸ் (North of France) நாட்டின் “அர்டாய்ஸ்” (Artois) மாகாணத்திலுள்ள “பஸ்-டி-கலாய்ஸ் டிபார்ட்மென்ட்” (Pas-de-Calais department) தலைநகரான “அர்ராஸ்” (Arras) நகரின் அருகேயுள்ள “அமெட்டஸ்” (Amettes) கிராமத்தில், 1748ம் ஆண்டு பிறந்த இவர், தமது பெற்றோரின் பதினைந்து குழந்தைகளுள் மூத்த குழந்தை ஆவார். இவரது தந்தையார், ஒரு வசதியான வியாபாரியாவார். அவரது பெயர், “ஜீன் பேப்டிஸ்ட் லேபர்” (Jean Baptist Labre) ஆகும். இவரது தாயாரின் பெயர், “அன்னி கிரேன்ட்ஷைர்” (Anne Grandsire) ஆகும்.

இவரது கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் சேவையாற்றிய கத்தோலிக்க குருவான இவாது தாய்மாமன், மகிழ்ச்சியுடன் இவரை ஏற்று, இவருக்கு குருத்துவ கல்வியில் வழி காட்டினார். இவர், தமது பதினாறு வயதில், பெனடிக்ட் சட்டங்களின்படி (Rule of St. Benedict) நடத்தப்படும் “சிஸ்டேர்சியன்” (Cistercian order) சபையின் கிளையான “ட்ரேப்பிஸ்ட்” (Trappist) துறவியாக உதவுமாறு தமது தாய்மாமனான குருவை வேண்டினார். ஆனால் அவரது பெற்றோரோ, அவரை இன்னமும் வயதாகும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

பெனடிக்டுக்கு பதினெட்டு வயதாகையில், கொள்ளை தொற்று நோயால் இவர்களது கிராமம் பாதிக்கப்பட்டபோது, மாமனும் மருமகனும் இணைந்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமானார்கள். மாமன் பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்மாக்களையும் உடல்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது, பெனடிக்ட் கால்நடைகள் கவனித்துக் கொண்டிருந்தார். இவர், அவைகளின் கொட்டில்களை சுத்திகரித்து அவற்றுக்கு உணவளித்தார். தமது மாமனின் கீழே, ஒரு மாணவனான இவர், ஒரு விவசாய கூலித் தொழிலாளியாக மாறினார். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் இறுதியானவராக இவரது மாமன் இருந்தார்.

பெனடிக்ட், (La Trappe Abbey) எனும் துறவு மடத்தில் இணைவதற்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது குறைவான வயது காரணத்தாலும், தனிப்பட்ட முறையில் இவருக்கு யாரும் பரிந்துரைக்காத காரணத்தாலும், இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் இவர், “கார்தூசியன்” (Carthusians) மற்றும் “சிஸ்டேர்சியன்” (Cistercians) சபைகளில் இணைவதற்கும் முயற்சித்தார். ஆனால், இவர் ஆன்மீக வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர் என்ற காரணம் காட்டி, இரண்டு சபைகளுமே இவரை நிராகரித்தன. இவர், சுமார் ஆறு வாரங்களாக, “நுவில்லியில்” (Neuville) உள்ள கார்தூசியர்களில் ஒருவராக இருந்தார். 1769ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர் “செப்ட்-ஃபாண்ட்ஸ்” (Sept-Fonts) எனுமிடத்திலுள்ள சிஸ்டெசியியன் மடத்தில் (Cistercian Abbey) அனுமதி பெற்றார். ஆனால், சிறிது காலத்திலேயே அவரது உடல் ஆரோக்கியம் காரணமாக, அவர் வேறு இடங்களில் பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.

கத்தோலிக்க பாரம்பரியப்படி, கடவுளால் தமக்கு அளிக்கப்பட்டது என்று இவர் நினைத்த தமது விருப்பங்களை தாம் அனுபவிப்பதாக எண்ணினார். புனிதர் அலெக்சியஸ் (Saint Alexius of Rome) அவர்களை உதாரணமாகக் கொண்டு ஈர்க்கப்பட்டார். தூய ஃபிரான்சிஸ்கன் துறவி “புனிதர் ரோச்” (Saint Roch) அவர்களின் திருயாத்திரைகளை உதாரணமாக ஏற்றார். தனது நாட்டையும் பெற்றோர்களையும் விட்டு விலக முடிவு செய்தார். மற்றும் உலகில் ஒரு புதிய வகையான வாழ்க்கை வாழ, மிகவும் வேதனைமிகுந்த, மிகுந்த தண்டனைக்குரிய வாழ்க்கையை விரும்பினார். உலகின் கிறிஸ்தவ பக்தியின் புகழ்பெற்ற இடங்களில் ஒரு யாத்திரிகனானார்.

புனித பிரான்சிஸின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையில் இணைந்த பெனடிக்ட், எளிய வாழ்க்கையையும் புனிதர் யாத்திரைகளையும் விரும்பி ஏற்றார். முதலில் ரோம் நகருக்கு நடைபயணம் சென்றார். வழியில் யாசகம் பெற்று, அவற்றைக் கொண்டே உண்டார். பின்னர் அவர் ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதான திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்றார். அர்ஜென்டினா (Argentina) நாட்டின் “லொரெட்டோ” (Loreto) எனுமிடத்திலுள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தாலி (Italy) நாட்டிலுள்ள அசிசி (Assisi), நேப்பில்ஸ் (Naples) மற்றும் “பாரி” (Bari) ஆகிய திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றார். சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டின் “ஈய்ன்சியேடேல்ன்” (Einsiedeln) திருத்தலத்திற்கு சென்றார். ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “பரே-லி-மோனியல்” (Paray-le-Monial) திருத்தலத்திற்கும் ஸ்பெயின் (Spain) நாட்டிலுள்ள “சேன்டியாகோ டி கம்போஸ்டேலா” (Santiago de Compostela) திருத்தலத்திற்கும் சென்றார். இந்த பயணங்களின்போது அவர் எப்போதும் நடைபயனமாகவே சென்றார். சேறு மற்றும் கந்தலான அவரது ஆடைகளுடன் திறந்த வெளியில் அல்லது கிடைத்த அறையின் மூளைகளிலேயே உறங்கினார். யாசித்து கிடைத்த சில உணவு வகைகளையே உண்டார். அதனையும் பிறருடன் பகிர்ந்துகொண்டார். அவர் அரிதாக பேசினார், அடிக்கடி ஜெபம் செய்தார், அவர் பெற்ற ஏச்சுபேச்சுகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறாக, பெனடிக்ட் ஒரு யாசகராகவே இறுதிவரை வாழ்ந்தார். குறிப்பாக, கடவுளின் முட்கிரீடத்தைப் பற்றி சிந்திக்கும்போது அடிக்கடி அவர் மயக்கமடைவார் என கூறப்படுகிறது. இவர், தாம் சந்தித்த பிற வீடற்ற மக்களை குணப்படுத்தியதாகவும், தமக்கு கிடைத்த ரொட்டித் துண்டுகளை பல்கிப் பெருக வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் (அவருடைய முப்பதுகளில்), அவர் ரோமில் வசித்து வந்தார். கொலோசெய்யின் (Colosseum) இடிபாடுகளில் வாழ்ந்த ஒரு காலப்பகுதிக்காக, லொரெட்டோவின் அன்னை (Shrine of Our Lady of Loreto) திருத்தலத்திற்கு ஒரு வருடாந்திர புனித யாத்ரீகத்தை மட்டுமே செய்ய முடிந்தது.

அவர் நகரத்தில் அனைவருக்கும் அறிமுகமான ஒரு நபராக இருந்தார். மற்றும் நற்கருணை ஆராதனைக்கான அவரது அர்ப்பணிப்புக்காக "நாற்பது மணி நேரத்தின் துறவி" (Saint of the Forty Hours) என அறியப்படுகிறார்.

அவர் இறப்பதற்கு ஒருநாள் முன், “சாண்டா மரியா ஆய் மோன்டி” தேவாலயத்தில் (Church of Santa Maria ai Monti) சரிந்து விழுந்தார். அவரது எதிர்ப்பையும் மீறி, அவர் ஆலயத்தின் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கு தூக்கி செல்லப்பட்டார். 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதியன்று, புனித வாரத்தின்போது (Holy Week) ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக அவர் மரித்தார். அவர், “சாண்டா மரியா ஆய் மோன்டி” (Church of Santa Maria ai Monti) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவரது சரித்திரத்தை எழுதிய இவரது ஒப்புரவாளரான “மார்கோனி” (Marconi), இவர் மறித்து மூன்றே மாத காலத்துக்குள், இவரது பரிந்துரை காரணமாக 136 பேர் நோயினின்றும் அற்புதமாக குணமானதாக எழுதியுள்ளார்.

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)

இன்றைய புனிதர்: 
(16-04-2020) 

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)
“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்” (மத் 18: 3-4)

வாழ்க்கை வரலாறு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அருகில் இருந்த நெவர்ஸ் என்னும் இடத்தில், 1844 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் பெர்னதெத் பிறந்தார். இவர்தான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. பெர்னதெத்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. பெர்னதெத்துக்கு சிறுவயதிலே ஆஸ்மா நோய் வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் பெர்னதெத் தன்னுடைய நண்பர்களோடு அருகிலிருந்த மசபெல் குகைக்கு ஆடு மேய்க்கச் சென்றார்.

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் அவர் இப்படி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து ஒரு பெண் தோன்றினார். அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தார், இடையில் ஊதா நிறக் கச்சை அணிந்திருந்தார். கையில் ஜெபமாலை வைத்திருந்தார். இக்காட்சி பெர்னதெத்துக்கு மட்டுமே தெரிந்தது. அவருடைய நண்பர்களுக்குத் தெரியவில்லை. இதை அவர் தன்னுடைய வீட்டிலும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடமும் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை. மாறாக பெர்னதெத் பிதற்றுகிறார் என்றார்கள்.

தொடர்ந்து பெர்னதெத் மசபெல் குகைக்குச் சென்று, ஆடு மேய்க்கும்போது, வானத்திலிருந்து தோன்றிய பெண்மணி தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்றும், பாவ மன்னிப்புப் பெற மனமாறவேண்டும் என்றும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்றும் அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதையும் பெர்னதெத் அங்கிருந்த பங்குத்தந்தையிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னபோது அவர்கள், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னே நம்பமுடியும் என்று சொல்லிவந்தார்கள். அதற்குள் மரியன்னை பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த செய்தி மக்களுக்குத் தெரியவர பெருந்திரளான மக்கள் அங்கு வந்தார்கள்.

இதற்கிடையில் 1868 ஆம் ஆண்டு, பெர்னதெத் நெவர்ஸ் நகரில் இருந்த துறவற சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெபத்திலும் தவத்திலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல், தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே அவர் ஆஸ்மா நோய்க்கு உள்ளாகி இருந்ததால் உடலளவில் பெரிதும் கஷ்டப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வந்த ஏப்ரல் மாதத்தில் அவருடைய நோய் முற்றிப்போனது. இதனால் அவர் படுத்த படுக்கையானார். ஏப்ரல் 16 ஆம் நாள், தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீளமுடியாமல் அப்படியே இறையடி சேர்ந்தார். இவருக்கு 1933 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னதெத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தாழ்ச்சி

தூய பெர்னதெத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அவர் சொல்வார், “நான் ஒரு துடைப்பதற்குச் சமமானவள். துடைப்பம் வீட்டைச் சுத்தமாக்குகிறது என்பதற்காக அதனை வீட்டின் நடுவே யாரும் வைப்பதில்லை, அதுபோன்றுதான் மரியா தன்னுடைய திருநாமம் விளங்க என்னைப் பயன்படுத்தினார். அவருடைய திருநாமம் பரவிவிட்டது. இப்போது என்னுடைய தேவையும் முடிந்துவிட்டது. இப்போது நான் ஒரு துடைப்பத்தைப் போன்றே கிடக்கிறேன்” என்று. மரியன்னை தனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர் தலைக்கனத்தோடு இருக்கவில்லை, தாழ்ச்சியோடுதான் இருந்தார். அவரிடமிருந்த தாழ்ச்சி நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நாம் அடுத்தவரால் உயர்வாக மதிக்கப்படவேண்டும், போற்றப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலைதான் தாழ்ச்சியோடு வாழ்ந்த தூய பெர்னதெத் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஒரு சமயம் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய லியோனார்டு பெர்ன்ஸ்டேன் என்பவரிடம் நிருபர் ஒருவர், “எந்த இசைக்கருவியை வாசிப்பது மிகவும் கஷ்டம்?” என்று கேட்டார். அதற்கு அவர், இரண்டாம் வயலின்” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நிருபர் கேட்டதற்கு அவர், “முதலாம் வயலின் வாசிப்பவர் எல்லாருடைய கவனத்தையும் பெறுவார், இரண்டாம் வயலின் வாசிப்பவர் அப்படிக் கிடையாது, அவர் யாருடைய கவனத்தையும் பெறமாட்டார். அதனாலேயே இரண்டாம் வயலின் வாசிப்பது மிகவும் கஷ்டம். அதனை வாசிப்பதற்கு உள்ளத்தில் நிறையத் தாழ்ச்சி தேவை” என்றார். ஆமாம், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரால் மட்டுமே இரண்டாம் வயலினை வாசிக்க முடியும். இன்று நாம் நினைவுகூரும் பெர்னதெத்தும் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய பெர்னதெத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (16-04-2020)

 St. Bernadette Soubirous

She was born at Lourdes, France on January 7, 1844 to Francois Soubirous and Louise Soubirous. The name given to her at the time of baptism was Mary Bernard. She and her family lived in utter poverty. On February 11, 1858 (Thursday), when she along with her sister and a friend went out to collect firewood, The Blessed Virgin Mary granted her a vision in a cave/Grotto on the banks of Gave River near Lourdes. Her sister and the other friend who accompanied her could not see anything. During the apparition Virgin Mary appeared with white robe and a blue sash and yellow roses covered her feet. She also held a large rosary in her right arm. There were altogether 18 apparitions from February 11 to July 16, 1858. On February 25, 1858 (Thursday) a spring emerged from the cave where the apparition occurred and the water from the spring was found out to be with miraculous qualities. On March 25, 1858 (Thursday), Bernadette asked Virgin Mary her name and Virgin Mary told her that Her name is 'The Immaculate Conception'. It was also reported that during this vision on March 25 Bernadette held a lighted candle in her hands. After some time, the candle burnt down and the flame was said to be in direct contact with her palm/skin for over 15 minutes but she did not experience any pain and her skin was also not affected. Bernadette later became a member of the Sisters of Notre Dame in Nevers. French authorities tried to shut the spring in the cave and also to halt the construction of the church. But the vision reached fame and Empress Eugenie, wife of Emperor Napoleon-III interfered in this matter and the work continued. She suffered from an illness and died on April 16, 1879 at Nevers. Her body was exhumed on September 22, 1909 and it was found to be incorrupt. This is one of the miracles for her canonization.

She was beatified on June 14, 1927 by pope Pius-XI and also canonized by pope Pius-XI on December 8, 1933.

---JDH---Jesus the Divine Healer---

15 April 2020

15-04-2020 முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus)சபை நிறுவுனர்

இன்றைய புனிதர் : 
(15-04-2020) 

முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus)
சபை நிறுவுனர்
பிறப்பு 3 பிப்ரவரி 1544 கவைலன் (Cavailon), பிரான்சு

இறப்பு 15 ஏப்ரல் 1607 அவஞ்நான்(Avignon), பிரான்சு

முத்திபேறுபட்டம்: 1975 திருத்தந்தை ஆறாம் பவுல்

சீசர் 1544 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள கவைலன் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல ஆண்டுகள் ஓர் அரசனின் படையில் சேர்ந்து, படை வீரராக பணியாற்றினார். போர் முடிந்து வீடு திரும்பிய விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தன் நேரத்தை செலவழித்தார். பின்னர் பிரான்சு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட பிரெஞ்சு இராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் பஸ் தானும், கடற்படை இராணுவத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் இவர் ஒவிங்ஸ்(Owings) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார். மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படை அதிகாரி உத்தரவிட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் பஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.

பின்னர் தன் சொந்த ஊரான கவைலன்-க்கு திரும்பினார். அப்போது குருவாக பணியாற்றிய தன் உடன்பிறந்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீசர் பஸ், தான் குருவாக விரும்பி, தன் அண்ணன் ஆற்றிய இயேசுவின் சீடத்துவ பணியை தொடர விருப்பம் தெரிவித்து, உலக ஆசைகளை வெறுத்து, குருமடத்தில் சேர்ந்து 1582 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான பிறகு மறையுரை ஆற்றுவதிலும், மறைக்கல்வி போதிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

பிறகு 1592 -ல் குருமட மாணவர்கள் இறையியல் படிக்கவேண்டுமென்று, பிரான்சிலுள்ள பாரீசில், இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதன் பிறகு அக்கல்லூரியில் படித்த சில மாணவர்களைக் கொண்டு "மதச்சார்பற்ற கிறிஸ்துவ குருக்கள்" (Secular priests of Christian Doctrine) என்ற சபையை பிரான்சிலுள்ள அவிஞ்நானிலும், சுவிட்சர்லாந்திலும் நிறுவினார். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்கள் 1597 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், இச்சபை ஓர் மதசார்பற்ற சபை என்ற அங்கீகாரத்தை வழங்கினார். தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே இச்சபை நிறுவப்பட்டது. பின்னர் பெண்களுக்காகவும் கிறித்தவர்களின் மகள்கள்(Daughters of Christians) என்ற சபை நிறுவப்பட்டது. இச்சபையே சில வருடங்கள் கழித்து உருசுலின்ஸ்(Ursulines) என்று பெயர் மாற்றம் பெற்று, இன்று வரை இயங்கிவருகிறது.

சீசர் பஸ் 1607 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் பிரான்சிலுள்ள அவிஞ்நான் என்ற ஊரில் இறந்தார். 1975ஆம் ஆண்டு வத்திகானிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.

செபம்:
மன்னிப்பின் நாயகனே! தான் செய்த பாவங்களை நினைத்து மனந்திரும்பி, உம் பாதையை தொடர்ந்த சீசர் பஸ்சை போல, நாங்களும் எம் பாவங்களிலிருந்து விடுப்பட்டு, மனந்திருந்தி வாழ உம் அருளைத் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (15-04-2020)

Blessed Cesar de Bus

A middle child - the seventh of thirteen children, and raised as a pious child. Soldier at age 18, and fought in the war against the Huguenots. Joined the navy to fight in the siege of La Rochelle, but illness kept him from the fight. He lived for three years in Paris, France, devoted to poetry and painting and to wild and frivolous living. Back in his home town of Cavaillon, he took over the position of his late brother as canon of Salon, a position he wanted for its income and connections instead of its spiritual significance. One night while on his way to a masked ball, he passed a shrine where a small light was burning before an image of the Virgin Mary. He was suddenly overwhelmed by the memory that a friend, Antoinette Reveillade, had prayed fervently for his salvation. He realized that there was no way he could live a life offending God and then expect to be accepted in the end. There, on the road, he had a complete conversion.

Ordained in 1582. Canon in Avignon. He was profoundly affected reading a biography of Saint Charles Borromeo, and tried to take him as a model in all things, especially his devotion to catechesis. Worked as a catechist in Aix-in-Provence, France, an area in turmoil following the Religious Wars. Saint Francis de Sales called him “a star of the first magnitude in the firmament of Catechesis.” He founded the Ursulines of Province and the Fathers of Christian Doctrine (Doctrinarians). The Fathers were destroyed during the French Revolution, but an Italian branch, the Doctrinarian Fathers continues today with houses in Italy, France and Brazil.

Born :
3 February 1544 in Cavillon, Vaucluse, France

Died :
Easter Sunday, 15 April 1607 in Avignon, Vaucluse, France of natural causes
• interred in the church of Saint Mary in Monticelli in Rome, Italy

Beatified :
27 April 1975 by Pope Paul VI

Patronage :
catechists

---JDH---Jesus the Divine Healer---

14 April 2020

தூய லிட்வினா (ஏப்ரல் 14)

இன்றைய புனிதர் : 
(14-04-2020) 

தூய லிட்வினா (ஏப்ரல் 14)
“கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 4: 13)

வாழ்க்கை வரலாறு

லிட்வினா, 1380 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தார். இவர் சிறு வயது முதலே அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். இவரிடமிருந்த பக்தியைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

1396 ஆம் ஆண்டு லிட்வினாவின் வாழ்வில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து அவரை படுத்த படுக்கையாக்கியது. இது நடந்த சில நாட்களிலே அவருடைய முகம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டன. அந்தப் புண்கள் எல்லாம் அவருக்குத் தீராத வலியைத் தந்தது. இத்தகைய தருணங்களில் அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது தான் இவருடைய ஆன்ம ஆலோசகர் தந்தை ஜான் பாட் என்பவர் அவரிடம், இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கச் சொன்னார்.

லிட்வினா, இயேசுவின் பாடுகளை தியானிக்கத் தொடங்கியதிலிருந்து அவருடைய உடல் வேதனைகள் எல்லாம் தணிந்தன. அது மட்டுமல்லாமல், அவர் ஒருவிதமான பரவச நிலையை உணர்ந்தார். இதனால் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கத் தொடங்கி, இயேசுவுக்கு உகந்தவராக வாழத் தொடங்கினார். லிட்வினா அவ்போது காட்சிகள் கண்டார். அந்தக் காட்சிகளில் ஆண்டவர் இயேசு அவரோடு உறவாடினார், பல காரியங்களை அவருக்கு வெளிப்படுத்தினார்.

லிட்வினா, தனது கடைசிப் பத்தொன்பது ஆண்டுகளில் அவ்வளவாக உணவு உட்கொள்ளவில்லை, அதிக நேரம் ஓய்வெடுக்கவும் எப்போதும் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்தே தியானித்துக் கொண்டிருக்கவும் செய்தார். இதனால் அவர் இயேசு தன்னோடு எப்போதும் இருக்கின்றார் என்பதை உணர்ந்தார். நற்கருணை மட்டுமே உட்கொண்டு வந்தார். வேறு எந்த உணவையும் அவர் உட்கொள்ளவில்லை. நற்கருணைதான் அவருக்கு ஆன்மீக உணவாக மட்டுமல்ல, வாழ்வளிக்கும் உணவாக இருந்து வந்தது. இப்படி தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகளைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்த லிட்வினா 1433 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1890 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லிட்வினாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. வலிகளைப் பொறுத்துக்கொண்டால், வாழ்வு வசந்தமாகும்

தூய லிட்வினாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு, அதனை வாழ்விற்கான சுருதியாக மாற்றிக்கொண்டது தான் நம்முடைய வியப்புக்குரியதாக இருக்கின்றது. தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வழிகளை, துன்பங்களைப் பொறுத்துக்கொள்கின்றோமா? இல்லை அவற்றைக் கண்டு முணுமுணுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வலிகளைக் கண்டு நாம் கடவுளை சபிப்பது மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய லிட்வினாவை நம்முடைய முன்னுதாரணமாகக் கொண்டு வலிகளைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர். அவர் வரைந்த ஓவியங்கள் காலம் கடந்து பேசப்பட்டு வருகின்றன. அவர் ரூமேட்டிஸம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அப்படியிருந்தும் அந்த நோய் தந்த வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவருடைய நண்பர், “ஒனாயரே! வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் ஓவியம் வரைவது அவசியமா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவரிடம், “வலி நீடிப்பது சில மணி நேரங்கள்தான். ஆனால் வரைவதன் இன்பமோ பல நாட்கள் நீடுகள். அதைவிடவும் வரைகின்ற ஓவியமோ காலம் கடந்தும் நிற்கும். அதனால் இப்படி ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கின்றேன்” என்றார்.

ஆமாம், வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு தொடர்ந்து உழைப்பவரே, வாழ்வில் வசந்தத்தைக் காண்பார்.

ஆகவே, தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, நம்முடைய வாழ்வில் வருகின்ற வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.